5/19/2018

பொசிவு


டொண்ட்டடொய்ங்

கொங்குதமிழ்ப் பேசலாம் நிகழ்ச்சியில்
உங்கள் பழமைபேசி.

முன்பொரு காலம்.
கோயமுத்தூர் சேலம் செல்லும்
விரைவுச் சாலை NH 47.
அச்சாலையில்
இராணிலட்சுமி மில்,
தெக்காலூர்ப் பிரிவு
அரசூர்ப் பிரிவு
ஆகியவை தனித்தன்மை
கொண்ட இடங்களாகும்.
ஓப் காலேச் துவக்கம்
கருமத்தம்பட்டி வரையிலும்
அவ்வப்போது சாலையோரத்தில்
பிணம் இருப்பதைக் காணலாம்.
அப்படித்தான் ஒருநாள்
தெக்காலூர்ப் பிரிவு
(செங்கோட கவுண்டன் புதூர்)
வண்டித்தடத்துக்கும்
இராணிலட்சுமி மில்லுக்கும்
இடையே ஒரு உடல் கிடந்தது.
வருவோர் போவோர் எல்லாம்
நடந்து போவோர் கூட
கண்டு கொள்ளாமல்
சென்று கொண்டிருந்தனர்.
மொய்ப்பதைக் கண்ட ஒருவர்
தென்னங்கீற்றை அந்த உடலின்மேலே
போட்டு விட்டுச் சென்றார்.
பீடி வாங்குவதற்காக
இராணிலட்சுமி மில் கேட்
சென்ற சுந்தரான் மட்டும்
சைக்கிளை விட்டுக் கீழிறங்கி
தென்னங்கீற்றை ஒதுக்கிப் பார்த்து
அரசூரில் இருக்கும்
கம்பவுண்டரை
வரச் சொல்லிச் சோதித்து
நாடி துடிப்பதையறிந்து
கால்கடுக்க நின்று
கைகாட்டிக் கைகாட்டி
எப்படியோ கோயமுத்தூர்
பெரியாசுபத்திரிக்கு
உடல் சென்று சேர
பிழைத்தவர் யாரோ
சிவகங்கைப் பக்கம்
பெரிய தொழிலதிபராம்.
இந்த சுந்தரானுக்கு
ஊரில் பெயர் பொசக்கெட்டவன்.

அமெரிக்காவில்
ஒரு நண்பர் இருக்கிறார்.
தமிழ்ச்சங்க வேலைகள்
எதுவானாலும்
முதல் ஆளாக இருப்பார்.
ஊருக்கு எந்த
புதுத்தமிழ்க் குடும்பமாவது
புதிதாய்க் குடி வந்திருந்தது
தெரிந்தால் போதும்
இவர் வலியச் சென்று
அவர்களை அணுகி
வேண்டியது எல்லாம்
செய்து கொடுப்பார்.
தமிழ்ச்சங்க வட்டாரத்தில்
அன்னாரைக்
கிண்டல் செய்வார்கள்
கேலி செய்வார்கள்
வந்து சேரும்
தமிழ்க்குடும்பங்களும்
ஓரள்வுக்கு ஊரில்
நிலை கொண்டவுடன்
மற்றவர்களோடு சேர்ந்து
அன்னாரைக் கிண்டல்
செய்யும் பட்டியலில்
இணைந்து கொள்வது
வாடிக்கை.
ஆனாலும் அவர்
தன் வழக்கத்தை
மாற்றிக் கொண்டதாய்த்
தெரிய வில்லை.
ஊரில் இருந்திருந்தால்
இவருக்கும் பொசக்கெட்டவன்
சூட்டப்பட்டிருந்திருக்கும்.

பொதுவாக இந்த
பொசுக்கெட்டவர்கள்
பொதுப்புத்தியினின்று
விலகியவர்களாக
வித்தியாசமாக இருப்பர்.
இப்படியான வேலைகளைச்
செய்வதன் மூலம்
தன் வசதி வாய்ப்புகளை
பெருக்கிக் கொள்ளாத
பொந்து கெட்டவன்
என்பது பொதுப்பார்வை.
எனவேதான் பொசக்கெட்டவன்
பட்டமும் சூட்டப்பட்டு
ஏளனத்துக்கு ஆளாகின்றனர்.
அதாவது பொசிவினால் கெட்டவன்.
பொசிவு என்றால்
மனத்தில் ஏற்படும் கசிவு, இரக்கம்.
அதுவே பொசுக்கெட்டவன்.

இவர் எத்தனையோ
உடல்களைச் சென்று
பார்த்திருக்கக் கூடும்.
பார்த்தவையெல்லாமும்
உயிரற்றதாய் இருந்து
இவருக்கு நேரவிரயமாகத்தான்
இருந்திருக்கக் கூடும்.
அதற்காக பொசக்கெட்டவர்கள்
சோர்ந்து விடுவதில்லை!
தோல்விகளென்றும்
பாராமல்
மனக்கசிவு கொண்டு
செயலாற்றும் இவர்கள்
மாமனிதர்கள்!
பொசிவால் கெட்டவர்கள் அல்லர்!!

டடடடாடா...

-பழமைபேசி.