2/22/2018

செங்குருதி பொங்கி வழியும், தமிழன் வாழ்ந்த ஐராவதி நதிக்கரையோரம்! பாகம் – 2




பர்மாவின் மக்கட்தொகையில் 60% பேர், உயிர்கொடுக்கும் ஐராவதியின் இருகரையோரப் பகுதிகளில்தான் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். கிபி பதினேழாம் நூற்றாண்டில் பர்மாவுக்கு பஞ்சத்தின் காரணமாகவும் வணிகப் பெருக்கத்துக்காகவும் சென்ற தமிழர்கள், நாட்டினை வளப்படுத்தினார்கள். பர்மாவின் பெருங்குடியான பாமர்களுக்கு வேளாண்மை தெரிந்திருக்கவில்லை. இதர இனக்குழுவினரும் காடுகளில் கிடைத்ததை வேட்டையாடி உயிர் வாழ்ந்து கொண்டிருந்தனர். பயன்பாடற்றிருந்த நிலங்களைச் செம்மைப்படுத்தி, இருக்கும் விளைநிலத்தில் தோராயமாக எழுபது விழுக்காட்டு நிலம் தமிழர்களுடையதாய் இருந்தது.

1930ஆம் ஆண்டு பிரிட்டிசு ஆட்சியை எதிர்த்து நாடெங்கும் பல்கலைக்கழக, பாடசாலை மாணவர்கள் போராட்டங்களை நடத்தினர். 1941ஆம் ஆண்டு துவக்கம், போராட்டக்காரர்கள் ஜப்பானிய இராணுவத்தின் உதவியோடு பர்மா விடுதலைப்படையைத் துவக்கி, ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடத் துவங்கினர். அதே காலகட்டத்தில் சுபாசு சந்திர போசும் பர்மாவில் பல கூட்டங்களில் கலந்து கொண்டு, இந்திய தேசியப் படையை நிறுவி இந்திய விடுதலைக்கான போராட்டங்களை முன்னெடுத்தார். 1942ஆம் ஆண்டு, பர்மா ஜப்பானின் கைகளுக்குச் சென்று சேர்ந்தது. உடனே அருகில் இருந்த அந்தமான் நிகோபார் தீவுகளையும் ஜப்பான் கைப்பற்றியது. இவற்றைக் கைப்பற்றிய கையோடு, இவற்றையும் பர்மாவின் அண்டைப் பகுதியான மிசோராம், மணிப்பூர் போன்றவற்றை சுபாசு சந்திர போசின் இந்திய தேசிய விடுதலைப்படையின் நிர்வாகத்துக்குக் கொடுத்தது ஜப்பான்.

பர்மாவில் ரெயில்வே பாதைகளை அமைக்கும் பணியில் ஜப்பான் ஈடுபட்டது. சின்னஞ்சிறுவர்கள் உட்பட பர்மாவில் இருந்த அத்தனை பேரையும் ரெயில்வே பணியில் ஈடுபடுத்திக் கொடுங்கோல் ஆட்சி நடத்தியது ஜப்பான். பசி பட்டினியாலும், கொடுமைகளாலும் ஆயிரக்கணக்கானோர் மாண்டனர். நாடெங்கும் அழுகுரல். தமிழர்களும் தப்பவில்லை. உயிர்பிழைக்க இந்தியாவுக்குள் ஓடி வந்தனர். எந்த போராட்டக்காரர்கள் ஜப்பானுக்கு ஆதரவாகப் போராடினார்களோ, அவர்களே இப்போது பிரிட்டிசுக்கு ஆதரவாகப் போராட முன்வந்ததன் பொருட்டும், உலகப்போர் முடிவுக்கு வந்ததன் பொருட்டும் மீண்டும் பிரிட்டிசு ஆட்சியின் கீழ் வந்தது பர்மா.

1947ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் நாள், பர்மிய ஆட்சி பிரிட்டிசாரின் மேற்பார்வையில் மலர்ந்தது.  அதே ஆண்டு, 1947, ஜூலை 19ஆம் நாள், பர்மியத் தலைவர் ஆங் சன், அவரது அமைச்சர்களில் பெரும்பாலானோர் கொல்லப்பட்டனர். இடைக்கால ஆட்சி நிறுவப்பட்டது. 24 செப்டம்பர் 1947இல், கிட்டத்தட்ட பத்து மாகாணங்கள், அடுத்த பத்து ஆண்டுகள் கழித்து, தனித்தனி விடுதலை நாடுகளாகப் பிரிந்து கொள்ளலாமென்பது உட்பட பல வரைவுகளைக் கொண்ட நாட்டின் முதலாவது அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. 1948, ஜனவரி நான்காம் நாள் யு நூ பிரதம அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டதும் பிரிட்டிசு அரசாங்கம் முற்றாக விலகிக் கொண்டது.

துயரநாடு என வர்ணிக்கப்படும் பர்மாவில், 1949ஆம் ஆண்டு நாடு முழுதும் இனக்கலவரங்கள் தோன்றின. இருக்கும் பாமர், சான், கரென், ராக்கைன், மான், இன்னுமுள்ள எல்லா இனக்குழுக்களும் ஒன்றையொன்று தாக்கி வேட்டையாடி, உடைமைகளைச் சூறையாடிக் கொள்வதும் கொல்வதும் நடந்தேறின. இதை முன்னின்று நடத்தியதே சீனாதான் எனக் குற்றம் சாட்டப்பட்டது. சீன அரசாங்கமோ, தங்களுடைய யுன்னான் மாகாணத்திலிருக்கும் கம்யூனிச எதிர்ப்பாளர்களை பர்மாவுக்கு எதிராக மேற்குலக நாடுகள்தான் தூண்டிவிடுகின்றன எனக் குற்றம் சாட்டியது. 1950ஆம் ஆண்டிலிருந்து 1961ஆம் ஆண்டு வரையிலும் பர்மியப் படைகளுக்கும், சான் மாநிலத்தை ஆக்கிரமித்துக் கொண்ட சீனப்படைகளுக்கும் இடையே போர் வெடித்தது. ஆயிரக்கணக்கான பேர் அங்கே செத்துக் கொண்டிருக்கும் போதே, மற்ற இடங்களிலும் ஒருவரையொருவர் தாக்கி அழித்துக் கொண்டிருந்தனர். 1955ஆம் ஆண்டு வாக்கில், இராணுவம் ஆட்சியைக் கையிலெடுத்துக் கொண்டது.

1960ஆம் ஆண்டு தேர்தல் நடத்த இராணுவம் ஒப்புக் கொண்டதையடுத்து, யு நூ மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைத்ததும் நிலைமை மேலும் துன்பகரமாக மாறியது. இராணுவத்துக்கும் ஆட்சியாளர்களுக்குமிடையே பிணக்கு உருவானது. 1962ஆம் ஆண்டு முற்று முழுதுமாக நாட்டினை இராணுவம் கையிலெடுத்துக் கொண்டது. நாட்டில் இருந்த நிலபுலன்கள், கடைகள், வண்டி வாகனங்கள் எல்லாமும் அரசுடைமையாக்கப்பட்டன. நாடு, புத்த சமய நாடாக அறிவிக்கப்பட்டது. எல்லாரும் அரசுக்கு வேலைபார்க்கும் கூலிகள் ஆக்கப்பட்டார்கள். பாமர் எனும் பெரும்பான்மை இனத்தைச் சார்ந்த பர்மியர்கள் மற்ற இனத்தைச் சார்ந்தவர்களைத் தேடித் தேடிக் கொன்றார்கள், குறிப்பாக செல்வந்தர்களாகவும் கல்வியில் ஒருபடி மேலே இருந்தவர்களுமான தமிழர்களைத் துரத்தித் துரத்திக் கொன்றார்கள். பர்மிய மொழி தவிர வேறெந்த மொழியும் பேசவும் கற்றுக் கொடுக்கவும் தடை விதிக்கப்பட்டது. உயிருக்கு அஞ்சிய தமிழர்கள் ரங்கூனிலிருந்து கப்பல் கப்பலாக சென்னை வந்து சேர்ந்தனர். ஊடகத்துறை முற்றிலுமாக முடக்கப்பட்டது. இரும்புத்திரை நாடாக மாறியது பர்மா. சாவுகணக்குக்கு அளவேயில்லை. 1962 ஜூலை ஏழாம் நாள், பாடசாலை மாணவர்கள் கொத்துக்கொத்தாக சுட்டு வீழ்த்தப்பட்டனர். 1974ஆம் ஆண்டு வரை நீ வின் எனும் இராணுவத்தளபதியின் கட்டுப்பாட்டில் இருந்தது பர்மா. சீனாவின் உதவியோடு, உலகநாடுகளின் எதிர்ப்பினைப் புறந்தள்ளினார் நீ வின்.

1974ஆம் ஆண்டு இராணுவமே ஒரு கட்சியைக் கட்டமைத்து, ஒரு புதிய அரசியலமைப்புச் சட்டத்தையும் நிறுவி, 1988ஆம் ஆண்டு வரையிலும் இராணுவ அலுவலர்களே ஒருவர் மாற்றி ஒருவர் ஆண்டு கொண்டனர். எல்லாச் சொத்துகளும் இவர்களுக்குள்ளாகவே பங்கு போடப்பட்டு, உலகின் மிகவும் ஏழைநாடுகளுள் முதலாம் நாடு என ஆக்கப்பட்டது பர்மா. பொதுமக்கள் பசி பட்டினியால் வாடினர். ஐந்து வயதுக் குழந்தைகளையும் வேலைக்கு அனுப்பச் சொல்லியது இராணுவம்.

அண்டைநாடான சீனாவில் இலைமறை காயாக மாணவர்களும் மருத்துவர்களும் மக்களாட்சிக்கான வேலைகளில் ஈடுபடத்துவங்கியிருந்த காலம் 1988. அதன் நீட்சி பர்மாவுக்குள்ளும் பரவியது. ’8888 போராட்டம்’ எனப் பெயரிட்டு, 1988ஆம் ஆண்டு எட்டாவது மாதம், எட்டாம் நாளன்று போராட்டம் வெடித்தது. இராணுவத்தின் சில அலுவலர்களும் இப்போராட்டத்துக்கு ஆதரவளித்தனர். பத்தாயிரம் பேர் மாண்டதாக அறிவிக்கப்பட்டது. இரங்கூன் பல்கலைக்கழகம் சுற்று வட்டாரத்தில் மட்டுமே 3000 பேர் கொல்லப்பட்டனர். எல்லா இனக்குழுக்களுக்களும் அவரவருக்கான தனித்தனி படைகளை அமைத்துக் கொண்டு ஒருவருக்கொருவர் போரிட்டுக் கொண்டனர். சீனாவிலும் இதே போன்ற போரட்டமொன்றுக்காக தினமென் வளாக முற்றுகையில் 10500 பேர் கொல்லப்பட்டு, போராட்டம் ஒடுக்கப்பட்டது. ஆனால் இங்கே, நிலைமை கை மீறிப் போவதை அறிந்த இராணுவத்தளபதி நீ வின் ஆட்சியை பல கட்சி ஆட்சிமுறைக்கு விட்டுக் கொடுப்பதாக அறிவித்தார். வந்தோருக்கெல்லாம் அரிசியை உண்ணக் கொடுத்துக் கொண்டிருந்த ஐராவதிக் கரைகளில் குருதிப் பெருக்கம் கூடுதல் வேகம் கொண்டு ஓடிக் கொண்டிருந்தது.

1990ஆம் ஆண்டு பலகட்சி ஆட்சிமுறைத் தேர்தல் இடம் பெற்று, ஆங் சான் சூ கீ அம்மையார் அவர்கள் 82% இடங்களுடன் பெருவெற்றி பெற்றார். இவர் மேற்குலக நாடுகளின் ஆதரவு பெற்றவர். உலகமே பெருமூச்சு விட்டுக் கொண்டது. இனி பர்மாவுக்கு நிரந்தர விடுதலை. மக்கள் கொண்டாட்டத்தோடு உறங்கப் போனார்கள்.

தேர்தல் முடிவுகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது; இராணுவமே ஆட்சியைத் தொடருமென அறிவித்துக் கொண்டது இராணுவ உயர்மட்டக் குழு. மேற்குலக நாடுகளும் ஜப்பானும் பர்மாவின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது. ஆங் சான் சூ கீ அம்மையார் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டு, நாட்டின் அதிபர் ஆவதற்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. கூடவே, 1991ஆம் ஆண்டு அம்மையாருக்கு நோபல் விருதும் வழங்கப்பட்டது. இனக்குழுக்களின் போராட்டங்களும், புத்தபிக்குகளின் சமயவெறிகளும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்க, நாட்டில் பிணங்கள் வீழ்ந்து கொண்டே இருந்தன.

2008ஆம் ஆண்டு மே 2ஆம் நாள் இயற்கையும் பர்மிய மக்களைத் துன்பத்திற்காளாக்கியது. ஆழிப்பேரலையில், ஐராவதிக் கழிமுகத்தில் வாழ்ந்து கொண்டிருந்த இரண்டு இலட்சம் பேர் மரணமடைந்தார்கள் அல்லது காணாமற் போனார்கள். இந்தியா உட்பட பல நாடுகளும் உணவும் உரிய பொருட்களும் வழங்கி உதவிக்கரத்தை நீட்டின. இதற்கிடையேயும் சீனா, தாய்லாந்து, லாவோசு போன்ற நாடுகளில் இருந்து ஊடுருவும் போராளிகளின் துப்பாக்கிகள் ஓயவில்லை. தொடர்ந்து மரணங்கள் ஐராவதியின் கிழக்குக்கரைக்கு கிழக்கே இருக்கும் மலைத்தொடர்களில் நிகழ்ந்து கொண்டே இருந்தன. நாட்டில் வறுமை கோர தாண்டவம் ஆடியது.

2010ஆம் ஆண்டு, ஆங் சான் சூ கீ விடுதலை செய்யப்பட்டார். அரசியற் சீர்திருத்தத்திற்கான அறிகுறிகள் தென்படத் துவங்கின. நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளும் கொஞ்சம் கொஞ்சமாக விலகத் துவங்கின. ஆனாலும் இராணுவக்குழுவின் ஆட்சியே நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆங் சான் சூ கீ விடுதலையானதுமே சீனா விறுவிறுப்பாகக் களத்தில் இறங்கி, ஐராவதிக்கழிமுகத் துறைமுகத்திலிருந்து சீனாவுக்கு சாலை, குழாய் பதிப்பு, ஐராவதி, துணையாறுகளின் குறுக்கே அணைகள், ராக்கெய்ன் நிலப்பகுதி முழுமைக்குமான இயற்கைவள அறுவடை போன்றவற்றுக்கான ஒப்பந்தங்களைப் போட்டுக் கொண்டு, இராணுவத்திலும் தம் பங்களிப்பு இருக்கும்படியாகப் பார்த்துக் கொண்டது சீனா.

2012ஆம் நாள் மீண்டும் பாராளுமன்ற உறுப்பினரானார் ஆங் சான் சூ கீ.  அதே காலகட்டத்தில் ராக்கெய்ன் நிலப்பகுதியைக் கைப்பற்றும் நடவடிக்கைகளும் துவங்கப்பட்டிருந்தன. புத்த பிக்குகளைத் தூண்டிவிட்டு கலவரத்துக்கு வித்திட்டு, ரோகிஞ் இன இசுலாமியர்களை அப்புறப்படுத்தும் வன்முறைகள் துவங்கின. மனிதவுரிமை என்பதெல்லாம் கடந்த இரு நூற்றாண்டுகளாகவே பர்மாவில் இருந்ததில்லை. ராக்கெய்ன் மாநிலம் முழுதும் வன்முறை கோரதாண்டவம் ஆடத் துவங்கியது. ஆயிரமாயிரம் பேர் மண்ணோடு மண்ணாகப் புதைக்கப்பட்டனர். அங்கு வாழும் இலட்சோப இலட்சம் மக்கள் அந்நிலத்தை விட்டு அகலவேண்டுமெனும் சூட்சுமத்துக்கு சூத்திரதாரி சீனாவாயெனக் கேள்வி எழுப்பினார் பன்னாட்டு சபைகளின் தலைவர் கோபி அன்னான். தொடர்ந்து இராணுவத்தின் கையே மேலோங்கியது. ஆங் சான் சூ கி அதிபர் ஆகமுடியாது என்பதால், பொறுப்புப் பிரதமராக 2016ஆம் ஆண்டு அமர்த்தப்பட்டார். பொருளாதாரம் மேம்பட்டு வருகிறது.  எனினும் வன்முறைகள் ஓயவில்லை. ஐராவதியின் குருதிக்கரைகள் காயவில்லை. நாட்டின் வளம் மட்டும் பிரிட்டன், ஜப்பான், சீனாவென அந்நிய நாடுகளால் சூறையாடப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

(முற்றும்)

பழமைபேசி.

https://www.amnesty.org/en/latest/news/2017/12/un-china-fails-to-scupper-resolution-on-myanmars-persecution-of-rohingya/

2/21/2018

செங்குருதி பொங்கி வழியும், தமிழன் வாழ்ந்த ஐராவதி நதிக்கரையோரம்!



இமயமலையின் ஒவ்வொரு பனிக்குன்றுக்குப் பாறைக்குப் பின்னாலும் ஓர் ஆறு, அந்த ஆற்றுப்பிறப்புக்கான ஒரு நாடோடிக் கதை உண்டு. பொன், நவரத்தினங்கள், தேக்கு, ஆயிரமாயிரம் வகை மலர்கள் நிறைந்த பெருவனத்தில் இலட்சக்கணக்கான யானைகளும் புலிகளும் கரடிகளும் மான்களும் இருந்தனவாம். ஒரு கட்டத்தில் குடிக்கத்தண்ணீரின்றிப் போகவே, எல்லாமும் ஒவ்வொரு மலையாகக் கடந்து கடைசியில் இமயமலையின் கீழைப்பகுதியில் இருக்கும் பனிமலையைச் சென்று சேர்ந்து ஓவென முறையிட, அது மனமிரங்கி உருகத் துவங்க, அது அலாதி சுவைபட இருக்கவே, அந்நீரோடை ‘சுவையாறு (மாய் கா(Nmai Kha))’ எனவும், தாவரங்கள் எல்லாம் பச்சைதட்டிப் பரவத்துவங்க அந்தப்பக்கமாக ஓடிய மற்றொரு நீரோடைக்கு ’பூஞ்சோலையாறு (மாலி கா(Mali Kha))’ எனவும், இரண்டு ஆறுகள் இமயமலையிலிருந்து மலைகளினூடாகக் கீழிறங்கி பாயத் துவங்கினவாம். இவற்றில், சுவையாற்றில் பெருமளவு தண்ணீர் பெருவேகங்கொண்டு கீழிறங்குகிறது. ஆற்றின் கரைகளில் வானுயர்ந்த மலைகளும் மலைகளில் தேக்கு மரங்களும் செண்பக மலர்களும் ஆயிரமாயிரம் மான்களும் புலிகளும் கரடிகளும் இருந்து வந்தன. இந்நதிகள் பாய்ந்தோடுகிற நாடு மியான்மா(ர்). மியான்மா எனும் பர்மியச் சொல்லுக்கு, வேகமும் வலுவும் கொண்ட மக்களென்பதாகப் பொருட்படுகிறது. பர்மிய மொழி பேசும் பாமர் இன மக்கள் வாழும் நாடு பர்மா என்பதாக இருந்து, அந்நிலத்தில் இன்னபிற இன மக்களும் மொழிகளும் குடிகொண்டிருப்பதாலும், மூதாதையர் காலத்தே மியான்மா(ர்) என்றே அழைக்கப்பட்டிருந்ததாலும், தற்போது மியான்மார் என்றே அழைக்கப்படுகிறது.

மியான்மார் நாட்டின் கச்சின் மாகாணத் தலைநகரான மிட்கியானவுக்கு அருகே சுவையாறும், பூஞ்சோலையாறும் வந்து சங்கமிக்க, ஐராவதி ஆறு(யானையாறு) உருப்பெறுகிறது. இப்படியாக இமயத்தின் கடைப்பகுதியில் இருசிற்றாறுகளாகத் தோன்றி, சங்கமித்த ஐராவதி ஆறு நாட்டின் தெற்காக 2170 கிலோ மீட்டர்கள் தொலைவுக்கு, நடுவே சென்று நாட்டுக்கு உயிர்நாடியாக இருந்து, பாமோ, கதா, மாலி, மண்டலி(லே), சாகெங் வந்தடைகிறது. இந்திய எல்லையை ஒட்டிப் பிறக்கும் சிந்வின்(சிண்டுவின்) ஆறு, மாலெய்க், கலிவா, மொனிவா ஆகிய நகரங்களைத் தொட்டுக் கொண்டே வந்து ஐராவதியின் இடப்பக்கத்தில் வந்து சேர, சங்கமம் சாகெங் நகருக்குப் பொலிவூட்டுகிறது. பிறகு, பாகன், சாலி, புரோம் முதலான நகரங்களைத் தொட்டுக் கொண்டே போய், மானாவுங் நகரில் பலவாறாகப் பிரிந்து கழிமுகங்கொண்டு அமைதியாகி அந்தமான் கடலோடு ஐக்கியமாகிக் கொள்கிறது.  சுவையாற்றிலிருந்தே, நாட்டின் ஒட்டுமொத்த நீர்பிடிப்புப் பகுதிகளின் ஓடைகளும், சிற்றாறுகளும், குளக்கடைவாய்களும், சால்வின் ஆறென எல்லாமும் ஏதோவொரு இடத்தில் வந்து இந்த ஐராவதியோடு புணர்ந்து கொள்வதால், நாட்டின் முக்கிய போக்குவரத்தினையும் ஐராவதியே நடத்திக் கொண்டிருக்கிறாள்.

எங்கு பார்த்தாலும் பொன்னும் பொருளும் வைர வைடூரிய மாணிக்க மரகத செவ்வந்திக் கற்களுமாயும், பச்சைப்பசேலென வானுயர்ந்த மரங்களும் மலர்களும் மாமலைச் சோலைகளுமாய் இருக்க, பல்லாயிரக்கணக்கான ஐராவதங்கள் ஆறுகளில் புரண்டு உருண்டு முக்கி மூழ்கி எழுந்து ஆர்ப்பரிக்க, கழிமுக வயல்களில் பசுந்தாவரங்களும் நெற்பயிர்களும் முகிழ்த்திருக்க, இலட்சோப இலட்ச புத்த விகாரைகள் ஆற்றுக்கரை நாகரிகத்தை அள்ளிப்பருகும் வண்ணம் மலை, மடு, ஆறு, கரையென எங்கும் வியாபித்திருக்க, இந்த மண்ணில் நான்கு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பே ஓமோ எரெக்ட்சு, ஓமோ சபியென்சு போன்ற மனிதயினம் வாழ்ந்ததற்கான தொல்லியற் தடங்கள் இருப்பதைக் காட்டுகிற தொன்மங்கள் நிறைந்திருக்க, கிமு பதினோராம் ஆண்டுக்கு முந்தைய அன்யதின் கற்காலக் கலாச்சாரத்தின் அடையாளமும் கிமு ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நவீன கற்காலத்தின் அடையாளமாக மரவேலைப்பாடுகளும் குகை வேலைப்பாடுகளும் பொதிந்திருக்க இப்புவியின் அணிகலனாக அற்புதமான நாகரிகப் பிரதேசமாய் இருந்து கொண்டிருக்க, மியான்மா மக்கள் கடல் கடந்து தமிழ்நாட்டுக்கு வர, தமிழர்கள் கடல் கடந்து மியான்மாருக்குச் செல்ல, பண்டமாற்றும், கலை இலக்கிய கலாச்சார உறவுகளும் பலப்பல நூற்றாண்டுகால நெடுகிலும் நீடித்து வந்தன. தமிழ்நாட்டில் 1756ஆம் ஆண்டு அப்படியானதொரு பெரும்பஞ்சம் ஏற்பட்டு மக்கள் கொத்துக் கொத்தாய் இலட்சோப இலட்சம் மக்கள் மடிந்த காலமெனவொன்றுண்டு.

பரிதவித்துப் போன மக்கள், மொரீசியசு, இலங்கை, மலேயம், சிங்கப்பூர், ஆப்பிரிக்க நாடுகள், மேற்கிந்தியத் தீவுகளெனக் கடல்மார்க்கமாக எங்கெல்லாம் செல்ல முடியுமோ அங்கெல்லாம் சென்றார்கள். பர்மாவுக்கும் வந்து சேர்ந்தார்கள். பராரிகளாய் வந்தவர்கள், படகுக் கூலிகளென அழைக்கப்பட்டார்கள். கொஞ்சம் கொஞ்சமாக இயற்கையை புரிந்து கொள்ளத் தலைப்பட்டனர் மக்கள். காலம் செல்லச் செல்ல தமிழர்கள் தத்தம் தொழில்முனைப்புத் திறத்தைப் பயன்படுத்தத் துவங்கினர். 1935ஆம் ஆண்டு வரையிலும், இந்த ஐராவதிப் பிரதேசமும் இந்தியாவின் அங்கமாக ஆங்கிலேயரின் ஆட்சிக்குட்பட்டே இருந்தது. அழகிய தட்பவெப்பம், காலந்தப்பாமற் பெய்யும் பருவமழைகள், நாடெங்கும் கரைபுரண்டு ஓடுகிற சிற்றாறுகளும் ஐராவதியும், மலைகளின் மடுக்களில் எங்கும் கானகமும் விலங்குகளும். அங்கிருந்த பழங்குடி இனத்தவர்க்கு வேளாண்மை அவ்வளவாகத் தெரியாது. சமவெளிகள் கண்ட இடத்திலிருந்த காடுகளை ஒழுங்கு செய்து வேளாண்மைக்கு வித்திட்டனர் சமவெளியிலிருந்து போய்ச் சேர்ந்த தமிழர்கள். பொன்னும் பொருளும் இரத்தினக்கற்கள் இருப்பதையும் ஆய்ந்தறிந்து வணிகத்திலும் கடல் கடந்து சென்று வர்த்தகத்தை விருத்தி செய்தனர். சவனே போன்ற உயர்ரக நெல்வகைகளைப் பயிரிட்டு, அப்பிரதேசத்தின் பொருளாதாரம் தழைக்க முக்கியப் பங்காற்ற ஆங்கிலேயர்களும் உரிய ஊக்கவிப்பை அளிக்க, அப்பிரதேசத்தின் தவிர்க்கவியலாச் சக்தியாய் மாறினர் தமிழர். ஆனால் எல்லாவற்றையும் ஆங்கிலேயருக்குக் கொடுக்க வேண்டியதாய்ப் போயிற்று. கேந்திரத்தின் அருமை கருதி, நிர்வாக வசதிக்காய், 1935ஆம் ஆண்டு இப்பிரதேசத்தை இந்திய நிர்வாகத்திலிருந்து பிரித்துத் தனி நிர்வாகமாக அமைத்துக் கொள்ளையடித்தது பிரிட்டிசு அரசாங்கம். மக்கள் எல்லாரும் வெகுண்டெழுந்து போராடினர். அப்போதுதான் ஜப்பான் இராணுவம், படிப்படியாக முன்னேறி, பர்மாப் பகுதியில் இருக்கும் பிரிட்டிசு இராணுவத்தையும் விரட்டியடிப்போமெனச் சொல்லி வர, பர்மா நாட்டு மக்களும் ஜப்பான் இராணுவத்துக்குப் பெருவாரியாக ஆதரவளிக்க இப்பிரதேசத்தின் கணிசமான பகுதி ஜப்பான் இராணுவத்தின் பிடிக்குள் வந்து சேர்ந்தது.

ஜப்பானுக்கும் பிரிட்டிசுக்கும் இடையே அகப்பட்டுக் கொண்ட பர்மா, 1941, 1942ஆம் ஆண்டுகளின் போது பெரும் அடக்குமுறையைச் சந்திக்க நேர்ந்தது. விலைமதிப்பு மிக்க சொத்துகளையெல்லாம் இரு நாட்டு நிர்வாகங்களும் அள்ளிக் கொண்டு போயின. இப்போது, பிரிட்டிசு இராணுவத்தைக் காட்டிலும் ஜப்பான் இராணுவம் மக்கள் மீது மிகவும் கடுமையாக நடந்து கொண்டது. உயிர்பிழைக்க மக்கள் தத்தளித்தனர். மற்றொரு பக்கம், பர்மிய மொழி பேசுவோருக்குத் தமிழர்களின் செல்வச்சிறப்பும் உயர்வும் கண்களைக் குத்தின. தமிழர்களைக் குறி வைத்துத் தாக்கத் துவங்கினர். ஊருக்குள் புகுந்து தானியம், ஆடு, மாடு போன்ற கால்நடைகள் எல்லாவற்றையும் களவாடிக் கொண்டு போனவர்கள், படிப்படியாக தமிழர்களைக் கொல்லத் துவங்கினர். ஊர்களில் வாழ்ந்த தமிழர்கள் அக்கம் பக்கமிருந்த நகரங்களுக்கு ஓடி ஒளிந்து வாழ்ந்தனர். பிறகு நகரங்களிலேயே சிறு சிறு கடைகள், நகரம் சார்ந்த கைவினைத் தொழில்களை நடத்தி ஓரளவுக்கு வாழ்க்கையில் அமைதியைக் கண்டனர்.

1947ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நான்காம் நாள், பர்மா விடுதலை பெற்றது. நகரங்களில் இருந்த தமிழர்கள் மீண்டும் வளமாய் வாழத் தலைப்பட்டிருந்த காலகட்டம். விடுதலை பெற்றதும், நாட்டில் இருக்கிற வணிக நிறுவனங்கள் எல்லாமும் நாட்டுடமை என ஆணை பிறப்பித்து, பர்மிய அரசு. மீண்டும், பெரும்பாலான தமிழர்கள் உடைமைகளை இழந்து தெருவுக்கு வந்தனர். பள்ளிகளில் பர்மிய மொழி மட்டுமே என்பதை நடைமுறைப்படுத்தியும், தமிழில் பேசுவோரைத் துன்புறுத்தியும், தலைக்கு இவ்வளவு வரியென விதித்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட, உயிரையாவது காப்பாற்றிக் கொள்வோமெனப் பர்மாவிலிருந்த இந்திய அலுவலகங்கள் முன் போராட்டத்தில் குதித்தனர் தமிழர்கள். நிலைமையை உணர்ந்த இந்திய அரசாங்கம் அவ்வப்போது சில பல கப்பல்களை அனுப்பிக் கொண்டிருந்தது. அப்படியான கப்பல்களில் ஏறிக்கொள்ள தமிழ் அகதிகள் முண்டியடித்துக் கொண்டனர். ஏற முற்பட்ட தமிழர்களிடம் தாலித்தங்கம்(2 பவுன்), பணம் பதினைந்து ரூபாய்க்கு மேல் இருந்தால், அவை பர்மிய அதிகாரிகளால் பறிக்கப்பட்டன. ஐராவதியின் கரையில் வழிந்து கொண்டிருந்த செங்குருதி, பெருக்கெடுக்கத் துவங்கியிருந்தது.

(தொடரும்…)

https://latitude.blogs.nytimes.com/2012/07/06/neither-myanmar-nor-burma-is-a-good-name-for-my-country/

https://www.britannica.com/place/Irrawaddy-River

2/12/2018

நெட்டாற்றின் உலகப் பேரணை (The largest dam in the world)



நெட்டாற்றின் உலகப் பேரணை (The largest dam in the world)
இமயமலைக்கு வடக்கே பரந்து விரிந்திருப்பதும் புவியின் உயர்மேட்டு நிலமானதுமான உலகின் கூரையென வழங்கப்படும் திபெத் பீடபூமியின் பனிமலைகளும் பனிப்பாறைகளும் சிந்து, பிரம்மபுத்திரா, மீகாங், மஞ்சளாறு உள்ளிட்ட பல ஆறுகளுக்குப் பிறப்பிடம். இதேபீடபூமியின் மறுபக்கத்தில், கடல் மட்டத்திலிருந்து ஐந்தரை கிலோமீட்டர்கள் உயரத்தில் சேங் சியாங் (நெடிய ஆறு, நெட்டாறு) ஆறும் இங்கிருந்துதான் உருக்கொண்டு, சீனாவின் யுன்னான் மாநிலத்திற்குள் நுழையும் போது, 16 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து பல்வேறு அருவிகளின் வாயிலாக வீழ்ந்து ஆயிரம் அடிக்குக் கீழிறங்கி விடுகிறது. சீனாவின் 40% விழுக்காட்டு நிலத்திற்கும் வடிகாலாக இருப்பது இந்த நெட்டாறுதான். பல்வேறு துணையாறுகள் மேட்டுநிலங்கள், மலைப்பள்ளத்தாக்குகள் வழியாக வந்து நெட்டாற்றில் தம்மை இணைத்துக் கொள்கின்றன. படிப்படியாகக் கீழிறங்கி மலைகளின் கடைசிக் கட்டமாக இருக்கும் சாங்கிங் மலைப்பகுதிக்கு வந்து சேரும் வண்டல்மேட்டு வண்ணத்தை தன் உருவாக்கிக் கொள்ள, நெட்டாறு எனும் பெயரிலிருந்து, செம்மண்ணாறு (யாங்சி) எனத் தன் பெயரை மாற்றிக் கொள்கிறது ஆசியக்கண்டத்தின் மீகநீண்டதும் 6380 கிமீ நெடிய பயணத்தைக் கொண்டதுமான இந்த ஆறு. அடுத்தடுத்து நாஞ்சிங், நாந்தோங், கழிமுகநகரும் வணிகத் தலைநகருமான சாங்காய் முதலான பெருநகரங்களினூடே பாய்ந்து கிழக்குச்சீனக் கடலில் அமைதி கொள்கிறது இந்த நெட்டாறு. சீனாவின் 40 கோடிமக்களின் வாழ்வாதாரமாக வேளாண்மையின் முதுகெலும்பாக, கடலினின்று உள்ளே 1000 கிலோமீட்டர் வந்து போகக் கூடிய போக்குவரத்துக் களமாக, சீனாவின் நான்காயிரமாண்டுகால வரலாறு, நாகரிகம், பண்பாட்டைப் படம் பிடித்துக் காட்டக்கூடிய பல தொன்மையான அடையாளங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கும் இந்த நெட்டாற்றினைச் ’சீனாவின் துயரம்’ என்று குறிப்பிடுகிறார் ஆய்வாளர் ஒலிவியா நிக்கோலசு. மலைகள் சூழ பள்ளத்தாக்குகளின் வழியே பாய்ந்து வரும் யாங்சி, சமவெளியை அடையும் போது அவ்வப்போது கரைகளை உடைத்துக் கொண்டு உழவுநிலம், ஊருக்குள்ளெனப் புகுந்து விடும். கரையோரங்களில் தடுப்புச்சுவர்களைக் கட்டிக் காப்பாற்றுவது விவசாயிகளுக்குப் பெரும் சவாலாகவே இருந்து வருகிறது. முறையே 1870, 1931, 1954, 1998, 2010 ஆகிய ஆண்டுகளின் போது இடம் பெற்ற வெள்ளப்பெருக்கில் பெருத்த சேதத்தை உண்டாக்கியது யாங்சி. கடந்த 75 ஆண்டுகளில் கிட்டத்தட்ட நான்கு இலட்சம் பேருக்கும் மேலாக யாங்சியின் வெள்ளப்பெருக்கால் உயிரிழந்திருக்கின்றனர். இலட்சோப இலட்சம் மக்கள் உடைமைகளை இழந்தனர். 1931ஆம் ஆண்டு நிகழ்ந்த யாங்சி வெள்ளப்பெருக்கு சீனாவின் பேரழிவு என வர்ணிக்கப்பட்டது. சீனாவின் புரட்சித்தலைவன் மாவோ, யாங்சியின் குறுக்கே அணைகட்டி, வெள்ளப்பெருக்கினைக் கட்டுக்குள் கொண்டுவருவேனெனச் சூளுரைத்தார். ஆனாலும் அவர் காலத்தில் இதற்கான பணிகள் துவங்கப்படவில்லை. அணை கட்டினால் இயற்கைச்சூழல் வெகுவாகப் பாதிக்கப்படுமெனவும், விளைவுகள் பின்னடைவையே கொடுக்குமென்றும் இயற்கை ஆர்வலர்களும் பொறியாளர்களும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அவர்கள் யாவரும் தண்டனைக்காட்பட்டனர். 1992ஆம் ஆண்டு நடந்த, சீனப் பாராளுமன்றத்தில் 2633 ஓட்டுகளில் 1767 ஓட்டுகள் அணை கட்டுவதற்கு ஆதரவாகப் பதிந்தன. இதனைத் தொடர்ந்து டிசம்பர் 14, 1994ஆம் நாள் அணைக்கட்டுப் பணிகள் துவங்கி கடந்த 2012ஆம் ஆண்டு நிறைவடைந்தன. மலைகளுக்கிடையே மூன்று இடுக்குப் பள்ளத்தாக்குகள், குயுடாங், வு சியா, சிலிங் ஆகியன அமைந்திருக்கும் இடத்தையொட்டி இந்த அணை கட்டப்பட்டிருப்பதால், இவ்வணைக்கு முவ்விடுக்கு அணை (three gorges dam) எனப் பெயரிடப்பட்டு, நாட்டின் தொழில்நுட்பத்தின் குறியீடாகப் பணத்தில் அச்சடிக்கப்படும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் அணைச்சுவரின் நீளம் 2.3கிலோமீட்டர், 607 அடிகள் உயரம் கொண்டு, 574 அடி உயரத்துக்குத் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டிருக்கக் கூடிய அளவில், உலகிலேயே பெரிய அணையாக இது விளங்குகிறது. பென்னிகுவிக் என்பாரால் தமிழ்நாட்டில் கட்டப்பட்டிருக்கும் பெரியாறு அணையின் உயரம் 155 அடியாகவும் தண்ணீர் தேக்கி வைக்கப்படுவது 130அடியாகவும் இருந்து வருகிறது. ஒப்பீட்டு அளவில் இந்த முவ்விடுக்கு அணை எவ்வளவு பெரியது என்பதை நாம் நினைத்துப் பார்த்துக் கொள்ளலாம். இவ்வணையில் உற்பத்தி செய்யப்படும் மின்சக்தி சீனாவின் தேவையில் 10 விழுக்காட்டினை ஈடு செய்கிறது. மேலும், கிழக்குச் சீனக்கடலில் இருந்து சீனாவின் மையப் பகுதியை நோக்கி 1000 கிலோ மீட்டர்கள் வரை சரக்குக்கப்பல்கள் வந்து செல்ல இந்த அணை உதவிபுரிவதால், சீனப் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப் பெரிய காரணியாக இது அமைந்திருக்கிறது என்பதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. இத்திட்டத்திற்குச் செலவிடப்பட்ட 24 பில்லியன் டாலர்களை பத்தே ஆண்டுகளில் ஈடுகட்ட முடியுமென அறிவித்தது சீன அரசு. சீனாவின் அதிசயமாய் அறியப்பட்ட பெருஞ்சுவருக்கு இணையாக இந்த முவ்விடுக்கு அணையும் சிறப்பிடத்தைப் பெற்று, சீனாவின் அணைகட்டும் திறனும் வர்த்த ரீதியில் மற்ற நாடுகளுக்கு வணிகம் செய்யப்படுகிறது. சிறப்புமிக்க சாதனையாகப் போற்றப்படும் இந்த அணைக்கட்டின் மறுபக்கத்தையும் ஆய்ந்து பார்க்க வேண்டியது மனிதகுலத்தின் தேவையெனக் கொந்தளிக்கின்றனர் சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்களும் மனிதவுரிமை ஆர்வலர்களும். ஆற்றினை மறித்து அணைகட்டியதில் நீரில் அமிழ்ந்து போனவையும் அப்புறப்படுத்தப்பட்டதுமாக 13 நகரங்கள், 140 பேரூர்கள், 1350 சிற்றூர்கள், மொத்தமாக இடம் பெயர்ந்தோர் 14 இலட்சம் பேர் என்கிறது அரசுத் தரப்பு. ஆனால் இதைவிட அதிகமாக இருக்குமென்கின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள். ஏராளமானோர்க்கு உரிய இழப்பீடோ, நிவாரணமோ வழங்கப்படாமல் பெருமளவில் ஊழல் நடந்து, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. நகரமயமாக்கல் திட்டத்தில் அவர்கள் சேர்க்கப்பட்டதால், அக்குற்றச்சாட்டினை மறுக்கிறோமென அறிவித்தன உள்ளூராட்சி நிர்வாகங்கள். அணை கட்டப்பட்டிருக்கும் இடத்திற்கு முன்பான அந்த பள்ளத்தாக்கு இடுக்குகளின் மலையுச்சியில், யாருமே அணுகமுடியாத பாறையிடுக்குகளில் மூன்று அல்லது நான்கு மனித உடல்கள் ஒரு சேர வைக்கப்பட்டிருக்கும் மரக்கலத்தாலான கல்லறைப் பெட்டிகள் சீனாவின் நான்காயிரமாண்டுப் பழமையான தொன்மைக்குச் சான்றாக விளங்கிக் கொண்டிருந்தன. இப்படியான சிறிதும் பெரிதுமான 12000 தொல்லியலாய்வு இடங்கள் முற்றாகக் கைவிடப்பட்டு நீருக்குள் அமிழ்ந்து போயின என்கிறார், யாங்சி ஆற்றில் 50 ஆண்டுகாலம் கப்பல் மாலுமியாக இருந்த டான் யுங். நான்காயிரம் ஆண்டு வரலாற்றுத் தடத்தோடு, தான் பிறந்து வாழ்ந்த தன் வீடும் இதோ இந்த இடத்தில்தான் இருந்ததென அணையிலிருந்து சில மைல்கள் தொலைவிலிருக்கும் ஆற்றுநீர்ப்பரப்பைக் காண்பிக்கிறார் அவர். பணிகள் எல்லாம் முடிந்தபின், 2003ஆம் ஆண்டு, ஜூன் ஆறாம் நாள், 580 மீட்டர்கள் நீளம் கொண்டதும் 140 மீட்டர்கள் உயரமானதுமான ஆற்றுக்குக் குறுக்கே கட்டப்பட்டிருந்த தற்காலிகச் சுவரை இடிப்பதற்கு, 2540 வெடிக்குச்சிகளும் 192 டன் எடையுள்ள வெடிமருந்தும் பாவித்து 12 விநாடிகளில் அச்சுவர் தகர்த்தெறியப்பட்டது. அப்படியென்றால், ஆற்றின் வழிப்பாதையிலிருந்து விலகி மறுபக்கமாக மலைப்பாறைகளை வெடித்துத் தகர்ப்பதற்கு எத்தனை மடங்கு வெடிமருந்து பாவிக்கப்பட்டது, பத்தாண்டு காலம் இடம் பெற்ற பணியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை எவ்வளவு போன்ற விபரங்களை அறிவிக்கத் தயாராவென கேட்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள். நூற்றுக்கணக்கான மாண்டு போனதாக அறியப்படுகிறது. மலைகளுக்கிடையே பெருமளவு தண்ணீரைத் தேக்கி வைத்திருப்பதனால் தொடர்ந்து ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. சிறிதும் பெரிதுமாக 3000 முறை நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கின்றதெனச் சொல்லி, அணை கட்டுவதற்கு முன், கட்டியதற்குப் பின் எனப் புள்ளிவிபரங்களைக் காண்பித்து விமர்சனங்களை முன்வைக்கின்றனர் நிலப்பண்பு ஆய்வாளர்கள். 2008ஆம் ஆண்டு இடம் பெற்ற நிலநடுக்கம் மட்டுமே 87 ஆயிரம் உயிர்களைப் பலி கொண்டுவிட்டது. இவற்றுக்கும் அணைக்கும் தொடர்பில்லையென மறுக்கிறது அரசுத்தரப்பு. பனிப்பாறையில் பிறந்து, வண்டல்மண்ப் பூமியில் வளர்ந்து வந்த யாங்சியை அணைக்கட்டு மறித்து, மேற்புறத்துத் தண்ணீரைப் பாவித்து மின்சக்தியை எடுத்த பின்னர் கீழ்ப்பகுதிக்கு அனுப்புவதால், ஆற்றோடு வரும் வண்டல் யாவும் அணையிலேயே தேங்கி, அணையின் கொள்ளளவு வெகுவேகமாகக் குறைந்து வருவதாகவும் கவலை தெரிவிக்கின்றனர் ஆய்வாளர்கள். இதனைச் சரி செய்வதற்காக, ஆற்றின் தலைப்பகுதியில் மேலும் பல அணைகளைக் கட்டத் திட்டமிட்டுப் பணிகள் நடந்து வருகின்றன. அவை கட்டப்பட்டாலும், நேரப் போகும் துயரத்திலிருந்து தப்பவே முடியாது என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள். ஆங்காங்கே வண்டல்மண் தடுக்கப்பட்டு விடுவதால், இந்த பேரணைக்குக் கீழே இருக்கிற ஆற்றின் கரைகள் கரைந்து போகும். மழைக்காலத்தில் வெள்ளச்சேதம் மேலும் வலுவடையுமெனச் சொல்லி, அண்மையில் நிகழ்ந்த மழைக்கால இடர்களைச் சுட்டிக் காண்பிக்கின்றனர். அது மட்டுமல்லாது, அமெரிக்காவின் நியூயார்க்கைப் போல, இந்தியாவின் மும்பையைப் போல, வணிகத்தலைநகராக விளங்கும் சாங்காய் நகரம் கழிமுகத்தின் கரையில் இருப்பதைச் சுட்டிக் காட்டி, வண்டல்க்குறைபாட்டால் கழிமுகக்கரைகள் வலுவீனம் கொண்டு, கடலுக்குள் நகரம் புதையுண்டு போகவோ, அல்லது கடல்மட்டம் உயரும் போது நகருக்குள் வெள்ளம் புகும் ஆபத்தோ வருங்காலத்தில் ஏற்பட்டு விடுமென அஞ்சுகின்றனர் இயற்கை அறிஞர்கள். இயற்கைச்சூழல் மாசுபடுதலுக்கு அணையும் ஒரு காரணமென்கின்றனர். சீனாவின் நாற்பது விழுக்காட்டு நிலப்பரப்பின் வடிகாலாக இருக்கும் இந்த ஆற்றில் கொட்டப்படும் கழிவுகள் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. யாங்சியில் கொட்டப்படும் கழிவுகளின் அளவு 2001ஆம் ஆண்டு 21 பில்லியன் டன்களாகவும், 2003ஆம் ஆண்டு 33+ பில்லியன் டன்களாகவும் இருந்தன. அரசாங்கமும் ஆற்றினைத் தூய்மைப்படுத்த நாளொன்றுக்கு சில மில்லியன் டாலர்களைச் செய்து வருகிறது. கொட்டப்பட்ட கழிவுகளைத் தூயமைப்படுத்துவதற்கு மாறாக ஏன் கொட்டப்படுவதைத் தவிர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளக் கூடாதெனக் கேட்டுப் போராடுபவர்களும் உண்டு. அரசுத் தரப்பில் இடம் பெறும் ஊழல்தான் டன் கணக்கில் கழிவுகளை ஆற்றில் கொட்டும் நிறுவனங்களைக் காப்பாற்றுகிறதென்பது பொதுமக்களின் குற்றச்சாட்டு. தொழில்நுட்பம், உற்பத்தி முதலானவற்றில் மேன்மை கொள்ளும் மனித இனம், இயற்கை பேணலில் பின்னடைவு கொள்வது எந்நேரத்திலும் இடருக்கும் நம்மை ஆட்படுத்தக் கூடும். நாம் இயற்கையைக் கைவிட்டு விட்டால், பொறுத்துப் பார்க்கும் இயற்கையும் நம்மைக் கைவிட்டு விடக்கூடும். தகவலறிந்து நாம் நம்மைச் செம்மைப்படுத்திக் கொள்தலன்றி நம்மிடம் வேறெதுவுமில்லை. பழமைபேசி. https://news.nationalgeographic.com/news/2006/06/060609-gorges-dam_2.html https://youtu.be/cCJ5bU9UbYs

2/11/2018

மீகாங் (அம்மா நதி)


மீகாங் (அம்மா நதி) வாய்மொழிக் கதைகளூடாகவே தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டு, தங்களுக்கும் தங்களின் அடுத்த தலைமுறைக்கும் விசுவாசமாய் இருப்பதுதான் பழங்குடியினரின் வாழ்க்கை முறையாக உலகம்யாவிலும் இருக்கிறது. முழுநிலாக் காய்ந்த இரவின் விடியலும் தெளிந்த வானம் காணக்கிடைத்த நாளொன்றிலுமாகக் காடுமலை கடந்து மலையுச்சிக்கு வந்து சேர்ந்தனராம் கீழைநாட்டைச் சேர்ந்த சிலர். வந்தவர்கள், அவர்கள் நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடுகிறதென்றும், எப்படியாவது அதற்கு ஒரு வழிவகை செய்ய வேண்டுமென்றும் தங்களுடைய பெரியவர் ஒருவரிடம் வந்து இறைஞ்சிக் கொண்டார்களாம். உடனே அந்தப் பெரியவர், மலைமுகட்டின் மீது ஏறிநின்று வலக்கையை விரித்து கீழைநாடு நோக்கி பாட்டொன்று பாட, கையிலிருந்து நன்னீர் ஊற்றுக் கொப்புளிக்க, அது கொஞ்சம் கொஞ்சமாக உருக்கொண்டு மலைகளுக்கிடையே புரண்டோடத் துவங்கியதாம். வந்திருந்த கீழைநாட்டவரும் மனமகிழ்ச்சியோடு அந்த ஆற்றுப்பெருக்கு செல்லும்வழிச் சென்று, அவர்தம் நாடடைந்ததாகச் சொல்லிவிட்டு, வெண்பனி படர்ந்து நிற்கும் அந்த உச்சியை நோக்கி வணங்கிக் கொள்கின்றனர் திபெத் மக்கள். இமயமலையின் ’கோசோங்முச்சா’ எனும் முகட்டில் இருக்கும் அந்த ஊற்றுப் பகுதி, ’லாசாகோங்மா ஊற்று’ என அழைக்கப்படுகின்றது. பதினேழேயிரம் அடிகள், ஐந்தரைக் கிலோ மீட்டர்கள் உயரத்தில் இருக்கும் திபெத் பீடபூமியிலிருந்து மலைமுகடுகளின் வழிக்கீழிறங்குகையில், புவியீர்ப்புவிசையால் மலைகளை அரித்துச் சீறிக்கொண்டு கிளம்பி, நான்காயிரத்து முந்நூற்று ஐம்பது கிலோமீட்டர்கள் பயணித்து, திபெத், மியான்மார், லாவோசு, தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம் நாடுகள் வழியாக எண்ணற்ற கோலங்கொண்டு வளைந்து நெளிந்து உறுமிச்சீறீ இலட்சக்கணக்கான புதுப்புது உயிரினங்களுக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கும், நூற்றுக்கணக்கான பழங்குடியினரின் தெய்வமென விளங்கி வாழ்வாதாரமாய் தன்னை ஈந்து பாய்ந்து, வியட்நாமின் தென்கோடியில் ஒன்பது கடல்நாகங்க(nine dragons)ளெனப் பிரிந்து ஆற்றிடைத்திட்டு(delta)களுக்கிடையே சலனமிழந்து தென்சீனக்கடலில் அமைதி கொள்கிறது இந்த மீகாங் பேராறு. மலைமுகட்டில் எழுச்சி கொள்ளும் போது, ‘சூ கூ’ என வாஞ்சையோடு அழைக்கின்றனர் திபெத்தின் அன்பான மக்கள். திபெத்தைக் கடந்து சீனாவின் தென்கிழக்கு மாநிலமான யுன்னான் எல்லைக்குள் புகுந்தவுடன், ’லேன்காங்’ என அழைக்கப்படுகிறாள். சீனமலைகளின் நீர்பிடிப்புப் பகுதிகளில் இருந்து ஃகெங்குடான், யாங்ட்சே, சல்வான் முதலான துணையாறுகளும் வந்து இவளோடு புணர்ந்து கொள்ள, பெரும்பாய்ச்சலுடன் தென்புறம் நோக்கி மலைகளை உடைத்துக் கொண்டு பீறிடுகிறாள். தென்னாடு நோக்கிவந்தவள், சீனா, மியான்மார், லாவோசு ஆகிய மூன்று நாட்டு எல்லைகளும் சந்திக்கிற இடத்தை அடைகிறாள். இயற்கை இவளைத் தன் உடலெங்கும் பூசிக்கொண்டு பச்சைப் பசேலென ஓங்கியுயர் மலைகளோடு எழில் கொள்கிறது. அங்கிருந்து இருமருங்கிலும் ஓங்கிவளர் காடுகளுக்கு நீர்பாய்ச்சிக் கொண்டே நூறுகிலோமீட்டர்கள் கடந்து தாய்லாந்து, மியான்மார், லாவோசு ஆகிய நாடுகளின் எல்லைக்கோடுகள் சங்கமிக்கிற இடத்துக்கு வந்து விடுகிறாள். அவ்வப்போது தாய்லாந்து, லாவோசு, மியான்மார் நாட்டுநீர்ப்பிடிப்புத் துணையாறுகள் வந்து யத்தனிக்க, மறுப்பேதுமின்றித் தன்னகத்தே சங்கமித்துக் கொள்கிறது அம்மா நதி. லாவோசு, தாய்லாந்து மக்களின் மொழியில் மீ என்றால் அம்மா. காங் என்றால் நதி. மீகாங்கின் மேற்புறக்கரை தாய்லாந்தின் எல்லையாகவும், கீழ்க்கரை லாவோசின் எல்லையாகவும் கிட்டத்தட்ட 800 கிமீட்டர்கள் பாய்ந்து, கம்போடியாவைச் சென்று சேர்கிறாள் அம்மா நதி(மீகாங்). கம்போடியாவில் வாழும் கெமர் இனமக்களின் வாய்மொழிக் கதைகள் உலகப்புகழ் பெற்றவை. அக்கதைகளிலும், நூற்றுக்கணக்கான கதைகளின் வேராக மீகாங் திகழ்கிறாள். தான் பிறந்த திபெத் பனிப்பாறையிலிருந்து தென்சீனக்கடலில் துயில் கொள்ளும் வரையிலும் இலட்சோப இலட்சம் புத்தர் சிலைகளுக்கும் கோயில்களுக்கும் மெருகூட்டி வரும் அம்மா நதியின் அரவணைப்பில் உருக்கொண்ட நகரம் புனோம் பென். பென் என்ற ஒரு பணக்காரப் பெண், இன்றைய புனோம் பென்னின் புறநகர்பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்தாள். மீகாங் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டபோது, உள்ளீடற்ற மரமொன்று அவளுக்குச் சொந்தமான புல்வெளிக்கு மிதந்து வந்தது. அம்மரத்தில் நான்கு வெண்கல புத்தர் சிலைகள் இருந்தன. புத்தர் ஒரு புதிய வீட்டிற்குள் வரவேண்டும் என்று விரும்புவது போன்ற ஒரு அடையாளமாக அக்காட்சி அவளுக்குத் தோன்றியது. அதனால் அவள் புத்தருக்காக அங்கு ஒரு கோவில் கட்டினாள். இப்போதும் தலைநகர் புனோம் பென்னில் அந்தக் கோயிலும் இருப்பதாக நம்பப்படுகிறது. பென் உருவாக்கிய அக்கோயில் பெரும் புகழுடன் வளர்ச்சியடைந்தது. பக்தர்கள் கூட்டம் கூட்டமாக கோயிலுக்கு வரத் தொடங்கினர். நூறு ஆண்டுகளுக்கு பின்னர் அங்கோர் படை, சியாம் நகரின் மீது படையெடுத்த போது, கம்போடியாவின் தலைநகரம் புனோம் பென்னுக்கு மாற்றப்பட்டது. கெமர் மொழியில் புனோம் என்ற சொல்லின் பொருள் ’குன்று’ என்பதாகும். எனவே புனோம் பென் என்றால், பென் என்ற பெண்ணுக்குச் சொந்தமான மலை என்று பொருளாகும். அப்பெண் கட்டியதாக நம்பப்படும் அக்கோயில் மிகவும் பழமை வாய்ந்த நூற்றாண்டுகளுக்கு முந்தைய கோயில் ஆகும். அக்கோயிலை புனோம் வாட் என்று அல்லது மலைக் கோயில் என்று அழைக்கிறார்கள். இப்படிக் கம்போடியாவின் உயிர்நாடியாக விளங்கிய அம்மாநதி, வியட்நாமுக்குள் புகுந்து பலவாறாகப் பிரிந்து டெல்டா பகுதிகளுக்கிடையே சென்று தென்சீனக் கடலில் ஐக்கியமாகிக் கொள்கிறாள். அமேசான் நதிக்கு அடுத்தபடியாக சுவையைக் கொண்ட நதியாக மீகாங் இருந்து வந்ததோடு, பல்வேறு தாவரங்களையும் உயிரினங்களையும் தன்னகத்தே கொண்டிருந்ததிலும் அமேசானுக்கு அடுத்ததாக விளங்கியது. முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட தனித்துவமான தாவரங்கள், 1200க்கும் மேற்பட்ட தனித்துவமான பறவைகள், ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட யானைகள், 850க்கும் மேற்பட்ட நன்னீர்வாழ் மீன்வகைகள் எனப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இப்படியாக அருந்தவப் பேராறாக விளங்கிய மீகாங் ஆற்றையொட்டி காடுகளில் வெறும் இரண்டாயிரம் யானைகளே தற்போது உள்ளன. பல்லாயிரக்கான நன்னீர் டால்பின்கள் இருந்த ஆற்றில், இருநூறுக்கும் குறைவான டால்பின்களே இன்று இருக்கின்றன. இயற்கையானது அந்தந்த நிலப்பகுதியில் வாழும் மக்களுக்குத் தேவையான உணவினை ஏதோ ஒரு உருவில் சமநிலையோடு வழங்கியே வந்திருக்கிறது அண்மைக்காலம் வரையிலும். தாய்லாந்து, லாவோசு, கம்போடியா, வியட்நாம், மியான்மார் முதலிய நாடுகளுக்கும் அப்படித்தான். அவர்களுக்குத் தேவையான புரதச்சத்தில், எழுபது விழுக்காட்டுக்கும் மேல் அம்மாநதியின் மீன்வளமாகவே இருந்து வந்தது. ஆற்றிலேயே வீடுகட்டி, ஆற்றிலேயே வாழ்ந்து, ஆற்றையே தொழுது கொண்டிருந்தனர் புத்தர்வழி அன்புமக்கள். 1970களுள் துவங்கியது அவர்களுக்கான துன்பம். ஆமாம், அம்மாநதியை சிறுகச்சிறுகச் சிதைத்து பலவந்தப் படுத்தும் வேலைகள் துவங்கியது அக்காலகட்டத்தில்தான். திபெத், யுன்னான் மாநிலத்துக்குள்ளே மீகாங் ஆற்றுக்குக் குறுக்காகவும் துணையாறுகளை மறித்துமென இதுவரை சிறிதும் பெரிதுமாக அறுபது அணைகளைக் கட்டியிருக்கிறது சீனா. இன்னும் பல அணைகள் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மலைகளுக்கிடையே பலத்தை அழுத்தத்தை உண்டாக்கி எந்த நேரத்தில் என்ன நிகழுமோயெனக் கவலைகொள்ள வைத்திருக்கின்றன இவை. சீனா மட்டுமன்றி, மீகாங் பாய்கிற மற்றநாடுகளும் அவரவர் பகுதிகளில் அணைகளைக் கட்டிச் சூறையாடத் துவங்கியிருக்கின்றனர். இயற்கையின் வழிப்பாதையை மாற்றியமைப்பதன் வாயிலாகச் சுற்றுச்சூழல் வெகுவாகப் பாதிக்கப்படுவதாக மேற்குலக நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர். சீனாவின் அணைகள் கட்டப்பட்ட இடத்தில் வாழ்ந்த இலட்சோப இலட்சம் மக்கள் எவ்வசதிகளுமற்ற திபெத் பீடபூமிக்குள் குடியேற்றப்பட்டு, அங்கு வாழும் திபெத்தியர்களைச் சிறுபான்மையாக்கப்படப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டனர். லாவோசு, கம்போடியாவில் அணைகளைக் கட்டுமிடத்தில் வாழ்ந்தவர்கள், எவ்வித இழப்பீடும், வாழ்வாதாரமும் வழங்கப்படாமல் தூக்கியடிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். மீன்வளம் முற்றுமாகச் சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. கட்டப்படுகிற அணைகள் எல்லாம் விவசாயத்துக்கான நீர்ப்பாசனத்துக்குக் கட்டப்படுபவை அல்ல. மாறாக, நீர்மின்திட்டத்துக்காக மட்டுமே கட்டப்படுபவை ஆகும். எனவே அரிசியின் ஏற்றுமதியில் சிறப்பாகயிருந்த வேளாண்நிலங்களும் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. ஏற்கனவே இந்நாடுகளில் நிகழ்ந்த அணைக்கட்டுச் சீரழிவுகளை நினைவுபடுத்துகின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். 1975ஆம் ஆண்டு. சீனா பேரழிவைச் சந்தித்தது. பாங்க்யோ அணைச்சுவர்கள் நீர்வரத்தின் அழுத்தம் தாக்குப் பிடிக்காமல் சிதறியது. இரண்டு இலட்சத்துக்கும் மேலான மக்கள் உயிரிழந்தனர். ஒரு கோடியே இருபது இலட்சம் பேர், உடைமைகளை இழந்து வீடுகளை இழந்து அபலைகளாயினர். அடுத்தடுத்து இருக்கும் அணைகளும் உடைந்து பெருக்கெடுக்கக் கூடுமென அஞ்சிய அரசு, பாதிப்புகளைக் குறைக்கும் பொருட்டுக் கிட்டத்தட்ட அறுபது அணைகளைத் தாமாக முன்வந்து பீரங்கிகளைக் கொண்டு உடைத்தெறிந்தது. 2017ஆம் ஆண்டில் கூட லாவோசு அணை உடைந்ததில் பல கிராமங்கள் அடித்துச் செல்லப்பட்டன. பாங்க்யோ அணைப் பேரழிவு குறித்த தகவலைப் பொதுவெளியில் தெரிவிக்கப்படுவதற்குத் தடை விதித்திருந்தது சீனா. 1975ஆம் ஆண்டு நிகழ்ந்த பேரழிவு குறித்த செய்திச் சேகரத்துக்குக்கான தடை, கடந்த 2005ஆம் ஆண்டுதான் விலக்கிக் கொள்ளப்பட்டது. மலைகளை உடைத்து அணைகளைக் கட்டும் போது நிகழ்ந்த ஆபத்தான விளைவுகள் இன்னமுமே முற்றாக மறைக்கப்பட்டுக் கொண்டே வந்திருக்கின்றன. மலைகளைப் பிளக்கும் போது பயன்படுத்தப்படும் மருந்தின் நெடி சுவாசத்தைப் பாதிப்பதாகவும் நிறையக் குழந்தைகள் குறைபாடுடன் இருப்பதாகவும் பழங்குடியினர் அலறுகின்றனர். ஆற்றோடு வாழ்ந்து கொண்டிருந்த மண்ணின் மக்களுக்குக் குடிநீருக்கே பஞ்சம் ஏற்பட்டது. வேளாண்மை முற்றாகப் பொய்த்தது. வியட்நாம் மக்கள் வீதிக்கு வந்தனர். உலகநாடுகளின் வற்புறுத்தலுக்கிணங்க, சீனா தன் அணைகளுள் ஒன்றிலிருந்து அப்போதைக்குக் கொஞ்சம் தண்ணீர் திறந்து விட்டிருந்தது. நிலைமை சரியாகி மழையும் பெய்யவே அப்போதைக்கு பிரச்சினை ஓய்ந்தது. ஆனாலும், தாய்லாந்து, மியான்மார் நாடுகளில் இருக்கும் சீனநிறுவனங்களுக்கான மின்பற்றாக்குறை பெருமளவில் அதிகரித்தது. சீனாவின் பண உதவியின் பேரில், மேலும் பல அணைகள் கட்டப்படவிருக்கின்றன. மின்உற்பத்தி நடைபெறும் போது ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதும், இதர நேரங்களில் தண்ணீர் வரத்து இல்லாமையாலும் ஆற்றின் கரைகள் சிதைந்து ஆற்றின் தடம் மாறி வருவதாயும் மீன்கள் குடியேற்றம் முற்றிலும் நின்று போய்விட்டதாகவும் சொல்லவொண்ணாத் துயரத்தில் ஆழ்ந்திருக்கின்றனர் பொதுமக்கள். ஏராளமான அணைகள் குறுக்கிடுவதால், வண்டல்மண் ஆற்றோடு வருவதுமில்லை. ஆற்றுக்குப் பாதுகாப்புமில்லை. மீன்வளமுமில்லை. வேளாண்மையுமில்லை. அம்மாநதியை நம்பியிருக்கும் நாடுகளுக்கிடையேயான ஒற்றுமையைச் சிதைத்துப் பிரித்தாளும் போக்கு எங்களைக் கொல்லாமல் கொன்றுகொண்டு இருக்கிறதெனச் சொல்லி ஒப்பாரிப் பாடலைப் பாடுகிறார் லாவோசு நாட்டு மூதாட்டி ஒருவர். லாவோசில் சீனா கட்டும் சையாபுரி அணை வேலைகள் முடிக்கப்படும் போது, இயற்கையே எங்களுக்கு ஒரு வழிகாண்பிக்குமெனச் சொல்கிறார் வியட்நாமியப் பழங்குடி ஒருவர். நாட்டார் சாபம், காலத்தின் கையில். அம்மாவை வல்லாதிக்கம் கற்பழித்துக் கொண்டிருக்கிறது; பிள்ளைகள் செய்வதறியாது வலியால் துடித்துக் கொண்டிருக்கின்றனர். பொருட்களைச் சிக்கனமாய்ப் புழங்கப் பழகுவோம்; இயற்கையைப் போற்றுவோம். நம்மால் முடிந்தது அவ்வளவுதான்! -பழமைபேசி. https://wle-mekong.cgiar.org/mekong-river-facts/ http://e360.yale.edu/features/life_on_mekong_faces_threats_as_major_dams_begin_to_rise