10/29/2017

இட்லிகளும் பின்ன நானும்

மடத்தில் சித்தர் இல்லை. ஆகவே இட்லி நான்கினை நிலக்கடலைத் தொகையலுடன் ’மாட் மாட்’டென மாட்டிவிட்டு இங்குமங்கும் பரபரத்தேன். ஏதோவொன்றை இழந்து தவிப்பது போன்ற உணர்வு. அப்பாவின் நினைவுதான் வந்தது. ஆமாம். மேலடவு, பின்னடைவு, அது எதுவானாலும் அப்பாவையே ஓர் எடுத்துக்காட்டாகக் கொள்கிறேன். அவருடைய சறுக்கலையும் கருத்திற்கொள்கிறேன். உறுக்கலையும் கருத்திற்கொள்கிறேன். அலைபேசியில் எப்போதும் திரைநிரை(screensaver)யாக உடன் இருக்கிறார். (இஃகி, எந்த மவராசனோ screensaverக்கு திரைக்காப்புன்னு விக்சனரியில போட்டு வெச்சிருக்கார். ஏம்ப்பா ஏன்?? கோயில்ல அம்மன் காட்சியளிப்பில்லா நேரத்தில் சாத்துவது திரைநிரைதானே?) அதை விடுங்கள்.

இட்லி நான்கினை வீசியவுடன் என்னவோ போலிருந்தது. அப்பாவை நினைத்தேன். இட்லிகளை வீசியவுடன் அவர் என்ன செய்வார்? ‘கொஞ்சம் சுடுதண்ணி’ என்று ஆட்காட்டி விரலையும் கட்டைவிரலையும் கொண்டு கோப்பையைச் சுருக்கி காற்றில் காண்பிப்பார். ஆகாவென நினைத்துக் கொண்டு நானே காப்பியைப் போட்டுக் குடித்துக் கொண்டிருக்கிறேன். நாவில் எஞ்சி இருக்கும் நிலக்கடலைத் தொகையலின் கார்ப்பும் காப்பியின் சுவையும் கலந்து எல்லையில்லா இடத்திற்கு என்னை, என் மனத்தை கவ்விக் கொண்டு போய்க்கொண்டிருக்கிறது. செம, சூப்பர் அப்பா!!
-பழமைபேசி.

No comments: