10/29/2017

இட்லிகளும் பின்ன நானும்

மடத்தில் சித்தர் இல்லை. ஆகவே இட்லி நான்கினை நிலக்கடலைத் தொகையலுடன் ’மாட் மாட்’டென மாட்டிவிட்டு இங்குமங்கும் பரபரத்தேன். ஏதோவொன்றை இழந்து தவிப்பது போன்ற உணர்வு. அப்பாவின் நினைவுதான் வந்தது. ஆமாம். மேலடவு, பின்னடைவு, அது எதுவானாலும் அப்பாவையே ஓர் எடுத்துக்காட்டாகக் கொள்கிறேன். அவருடைய சறுக்கலையும் கருத்திற்கொள்கிறேன். உறுக்கலையும் கருத்திற்கொள்கிறேன். அலைபேசியில் எப்போதும் திரைநிரை(screensaver)யாக உடன் இருக்கிறார். (இஃகி, எந்த மவராசனோ screensaverக்கு திரைக்காப்புன்னு விக்சனரியில போட்டு வெச்சிருக்கார். ஏம்ப்பா ஏன்?? கோயில்ல அம்மன் காட்சியளிப்பில்லா நேரத்தில் சாத்துவது திரைநிரைதானே?) அதை விடுங்கள்.

இட்லி நான்கினை வீசியவுடன் என்னவோ போலிருந்தது. அப்பாவை நினைத்தேன். இட்லிகளை வீசியவுடன் அவர் என்ன செய்வார்? ‘கொஞ்சம் சுடுதண்ணி’ என்று ஆட்காட்டி விரலையும் கட்டைவிரலையும் கொண்டு கோப்பையைச் சுருக்கி காற்றில் காண்பிப்பார். ஆகாவென நினைத்துக் கொண்டு நானே காப்பியைப் போட்டுக் குடித்துக் கொண்டிருக்கிறேன். நாவில் எஞ்சி இருக்கும் நிலக்கடலைத் தொகையலின் கார்ப்பும் காப்பியின் சுவையும் கலந்து எல்லையில்லா இடத்திற்கு என்னை, என் மனத்தை கவ்விக் கொண்டு போய்க்கொண்டிருக்கிறது. செம, சூப்பர் அப்பா!!
-பழமைபேசி.

10/27/2017

அலப்பறை



"அதான, கெடக்கறது கெடக்குது கெழவனத்தூக்கி மணைல வையுங்கற கணக்கா நம்ம பொழப்ப பாத்தாத்தானே வாழ்க்க ஒழுங்கா வோடும்..!! சரிதானுங்கோ?! "

"பின்ன? ஒதிய மரந்தான் தூணாகுமா? இல்ல, ஓட்டாங் கிழிசலுத்தான் காசாகுமா??"

"அதச்சொல்லுங்க, கூள குடியைக் கெடுக்குமாம், குட்டைக்கலப்பை காட்டைக் கெடுக்குமாம்..!! அப்படியில்ல இருக்கு இங்க பொழப்பு."

"சங்குல வார்த்தா தீர்த்தம், சட்டியில வார்த்தா தண்ணீங்றதெல்லாம் செரி வராதல்லொ? புள்ளீக பள்ளிக்கோடத்துல இருந்து வண்ட்டாங்கொ... போயி அவுகளுக்குத் திங்றதுக்கு எதுனா பொரி கல்ல குடுத்துப்போட்டு வாறன்... குஞ்சுகுளுவானுக அம்மணி, பொக்குன்னு போயிருமல்லொ??"

"அய்ய ஆமாங்கோ, பொடுசுவுளுக்கு திங்கறதுக்கு குடுத்துப்புட்டு, பொறவு சாவுகாசமா வந்து நம்ம பாட்டபூட்டங்காலத்து பழமொழிய நருவுசா எழுதிப்போடுங்கோ..!! காலத்துக்கு அழியாம காத்துப்புடலாமுங்க."

இடையில மூனாவது ஆளு வந்து:, "சபாஷ், சரியான போட்டி. ரெண்டு பேரும் இதோட விட்றாதீங்க. பழ மொழி பேசறதுல யாரு நம்பர் ஒண்ணுன்னு எங்களுக்கு உண்மை தெரிஞ்சாகனும். சும்மா பார்த்துக்குனு இருக்கறத விட, நாலு கத்துக்கின மாதிரியும் ஆச்சு. வயல்ல வேல பாக்க பொம்பள ஆளுங்கள கூப்பிட்டா, "கம்புக்கு களை வெட்டினமாதிரியும் ஆச்சு! அப்பிடியே தம்பிக்கு பொண்ணு பார்த்த மாதிரியும் ஆச்சு!”

”அடுத்தூட்டுக்காரங்கிட்ட வாங்குன கடனும் அடிப்பக்கத்துச் சிரங்கும் அடிக்கடி அரிக்கும்ங்ற கதையா, இந்த ஊர் நெனப்பு அப்பப்ப சொறிஞ்சுட்ருக்குதுங்க... என்னவன்னச் சொல்றீங்க?”

”க்கும், கண்டா ஒரு பேச்சு, காணாட்டி ஒரு பேச்சு”

“கள்ளிக்கு வேலியும் களவுக்குக் கூலியுமெதுக்குன்னு கேட்டா இப்படித்தான் இல்லாததும் பொல்லாததும் பேசுவீக அப்புனு”

”இரும்பும் கரும்பாகும், இட்டாலியும் பாழகுங்கற கணக்கா..... இது இனி எங்க போயி முட்டிக்கிட்டு முடியுமோ தெரியலையே...!! ”

“பொன்னே பொன்னேன்னு தாங்கி பொடக்காலீல விட்டு வெளுக்காம இருந்தாச் செரி.”

“கெரக, நம்ம பாட்டுக்கு கண்ட பழமொழிய எழுதிப்புட்டா - “சங்கிலிபுங்லிங் காட்டுக்குள்ள சனிய புடுச்சுக்கிட்டு ஆடுதா, ஏன்னு கேட்க போன என்னையும் புடிச்சுக்கிட்டு ஆட்டுத்தான்னு ஆகிப்போயிடாத எம்பொழப்பு?! இந்த ரெண்டாஜாமா ரவைல என்ன புள்ள வெட்டிப்பேச்சுன்னு எம்மச்சா பேசுவாருங்கோ...அக்காங்..!! போயி சித்த தூங்கிப்போட்டு வாரானுங்க.”

“நமக்கெல்லா வாயிமட்டு இல்லைனா, நாயி கால என்னைக்கோ கவ்விக்கிட்டு போயிருக்குமுங்க...”

“அப்படி என்னாத்த சொன்னாங்க, பட்டும் பவுசும் பொட்டில இருந்துச்சாமா, காக்காசு சந்தையில துள்ளுச்சாமா!”

“கந்தன்னா காவடியாடத்தான செய்வான்?”

“சொல்றவனுக்கு வாய், செய்யறவனுக்குத்தான் சொமை”

“கடலுன்னா உப்பு கரிக்கும்... காடுன்னா தட்டான் ரீரீன்னு ரீங்கத்தான் செய்யும்.... சும்மா புதுப்பொண்ணாட்டம் சிணுங்கல் எதுக்குன்னேன்??”

”எச்ச எலைய எடுன்னு சொன்னதுக்கு எலைய எண்ணிகிட்டு இருந்தானாம்! ஆரப்பா அது? இங்க வந்து எத்தினி லைக்கு, எத்தினி பின்னூட்டமுன்னு எண்ணிகிட்டு இருக்கறதூ??”

உடன் களமாடியவர்கள்: Mythili Thyag Krishna Raj Thirumurthi Ranganathan

10/26/2017

வேய்க்கானம்



 தொறந்திருக்குற ஊட்டுக்குத் தொறப்புக்குச்சி தேடுறவனோடெல்லாம் சகவாசம் எதுக்குங்றேன்? ஓடியாடிப் பாடுபட்டுச் சேக்குற வழியப் பாத்தா உருப்புடுலாம். வேய்க்கானம்ங்றது நெம்ப முக்கியமல்லோ? ஏன்னா, ஒறவும் பகையும் கையில காசிருந்தாத்தான் வந்து சேரும். இருக்குற ஒறவு அந்து போறதும் அந்தக் காசாலத்தான் போகும். அதுனால வேய்க்கானம் நெம்ப முக்கியம்.

 என்றா இவன் நெம்பத்தான் பாடம் போடுறானேன்னு யோசிக்கிறீங்ளாட்ட இருக்கூ? சொறிஞ்சு தேய்க்காத எண்ணெயும் பரிஞ்சு போடாத சோறும் இருந்தாயென்ன? இல்லாட்டியென்ன?? அதாஞ்சொல்றன். பின்ன. உங்களுக்குன்னு நான் இருக்குறது எதுக்கு? திருவுண்டானா திறமையும் வந்து சேரும்.

தெகிரியமா இருங்க!! ஒழுக ஒழுகப் பேசுனாக் காசாயிருமா? போயி, நீங்களும் உங்க பொழப்பு தழப்பைப் பாருங்க. நானும் என்ற பொழப்பைப் பாக்குறன்!! 

-பழமைபேசி.

10/25/2017

குப்பமேனிப்பூவுல...

அவனுக்கென்னங்க, விட்டா, குப்பமேனிப்பூவுல விட்டஞ்செஞ்சு பூட்டுவேன்னு சொல்வான்! வெக்கமா மானமா சொல்லுங் பாக்குலாம். பின்ன? குத்துக்கல்லுக்கு என்ன கெடக்குது மழயா வெயிலா?? அவம் பொழப்பும் ஓடீட்டுதான இருக்குதூ? என்ன நாஞ்சொல்றது?

ஆமாங், நீங்க சொல்றது வாசுதுவந்தேன். ஏத்துவார ஏத்தி நாளொரு எலியும் புடிப்பான்; ஏய்ப்பாரை ஏச்சி நாளுக்கு நாலு குண்டா ராகிக்களியும் திம்பான் அவன்!! ஏது, நானு என்ன பேசறனா? இம், எலீ லவுக்க போட்டுச்சாஞ் சபையில! போங் போங், போயிப் பாடுபழமயப் பாருங் போங்!!

 -பழமைபேசி.

10/24/2017

காட்டைப் பார்


வெளியே போ
காட்டைப் பார்
குருவி 
கொத்தித்தின்னும் 
அழகைப் பார்
கோரைப் புல்லின்
மலரைப் பார்
தடத்தின் குறுக்கேவோடும்
அணிலைப் பார்
தலைக்கு மேலே போகும்
பட்டாம்பூச்சியைப் பார்
வெடித்து 
விதைகளைத் துப்பும் 
காயைப் பார்
காற்றில் தவழும்
கொடியைப் பார்
போகிறபோக்கில்
புணர்ந்து போகும்
தட்டான் பார்
வேலியில் பூத்திருக்கும் 
கள்ளிப்பூவைப் பார்
வெளியின் ஊடாய்
விதையைச் சுமக்கும்
பஞ்சைப் பார்
ஊர்ந்து செல்லும்
கரையான் பார்
கொம்பின் கீழே
தொங்கும் அந்த
கூட்டைப் பார்
தாவிப் போகும்
முயலைப் பார்
கண்டங்கத்திரி
முள்ளைப் பார்
தும்பைச்செடியின்
இலையைப் பார்
மரத்தைக் கொத்தும்
கொண்டைலாத்தி பார்
இன்று இருக்கும்
நாளை இருக்காது
வெளியே போ
காட்டைப் பார்
காட்டைப் பார்

-பழமைபேசி

10/20/2017

உச்சா




கூடு திரும்பலென்பது எப்போதுமே இன்பமும் குதூகலமும் வாய்க்கப் பெற்றவொன்றாகும். வேலையிலிருந்து திரும்புவது, வெளியூரிலிருந்து திரும்புவது, விடுதியிலிருந்து திரும்புவது, வனாந்திரம் தேசாந்திரம் போய்த் திரும்புவது என எல்லாமுமே உளப்பொங்கலுடைத்தவை; இணையரின் காராட்டுக் காலம் தவிர. அதென்ன இணையரின் காராட்டு காலமென்பது? அதைப் பற்றியெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கும் நேரமிதுவல்ல. தேவையென்றால், வீட்டுப் பெரியவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவும்.

நான் இருக்கும் ஊர், ஒரு பெரிய வானூர்தி நிறுவனத்தின் நடுவவானூர்தி முனைய(hub) நகராகும்.. எல்லா ஊர்களுக்கும் செல்லும் வானூர்திகள் இங்கு வந்து போகும். அதாவது ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குச் செல்லும் பயணிகளை ஒரு வானூர்தியிலிருந்து இன்னோர் வானூர்திக்கு மடைமாற்றக்கூடிய ஊர். ஆதலால், நாம் எங்கு சென்றாலும் நேரடி வானூர்தியில் இரண்டு மணி நேரத்தில் செல்லக் கூடிய பயணமாகத்தான் இருக்கும். வியாழக்கிழமை பிற்பகல் ஒருமணிக்கெல்லாம் ஒரு பொட்டியை மூடி இன்னொரு பொட்டியை கட்டிக்கொண்டு வானூர்தி நிலையம் வந்து விடுவோம். வந்தபின், சோதனைச்சடங்குகளை முடித்துக் கொண்டு நேராக இசுடார்பக்சு கடைக்குச் சென்று பெருங்கோப்பை மிகைச்சூட்டு வெண்மோக்கா (extra hot grandee white mocha) வாங்கி விடுவோம். வானூர்தி உட்புகலுக்குச் சற்றுமுன்னர் தேங்குபை சுருங்குபை ஆகுமளவுக்கு அடித்துச் சுகிப்போம். ஆத்திரத்தை அடக்கினாலும் மூத்திரத்தை அடக்கக் கூடாதெனச் சரியாகத்தான் சொல்லியிருக்கின்றனர் பெரியோர்.

அன்றைய பொழுது நமக்கான பொழுதாக இருந்து, எவ்வித அக்கப்போர்களும் இழவுகூட்டலுமின்றியிருப்பின், சரியான நேரத்துக்குப் புறப்பட்டுச் சரியான நேரத்துக்கு வானூர்தி வந்து சேரும். பெரும்பாலும் வீடு திரும்பும் போதுதான் மிகச்சரியாக இழவைக் கூட்டுவார்கள். எது, எப்படியிருப்பினும் வானூர்தி வந்து சேர்ந்ததும் பொட்டியை இழுத்துக் கொண்டு செல்லுமிடம் மூத்திரச்சந்தாகத்தான் இருக்கும். சில நேரங்களில், வானூர்திக்குள்ளாகவே பையிலிருந்து நீரிறக்கம் செய்ய வேண்டியிருக்கும். எல்லாம், உள்ளே தள்ளிய தீர்த்தவாரியைப் பொறுத்து என்பதறிக.

கண்ணிமைக்கும் நேரத்தில் கொசுவர்த்தி சுழல்கிறது. உங்களை அப்படியே குண்டுக்கட்டாக கோயமுத்தூர் அவிநாசி சாலையிலிருக்கும் கொள்ளுப்பாளையத்துக்கும் கணியூருக்கும் இடைப்பட்ட பாம்புகள் பல்லிகள் ஓணான்கள் குடிகொண்டு வாழும் பாழும் காட்டுக்குத் தூக்கிக் கொண்டு போகிறேன்.

பகல்வாரம் முடிந்து கொள்ளிரவுவாரக் கிரமத்துக்கு மாறும் சனிக்கிழமைதோறும் வீடு திரும்புவது வழமையாகும். அதாவது, பகல்வாரமெனில் காலை எட்டுமணி முதல் மாலை நான்கரைமணி வரை வேலைநேரம். கொள்ளிரவு வாரமெனில் இரவு ஒரு மணியிலிருந்து காலை எட்டுமணி வரை வேலை நேரம். ஆகவே, சனிமாலை நான்கரையிலிருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை ஒருமணிவரையிலுமாக நெடுநேரம் நமக்கு விடுப்பாக இருக்கும். எனவேதான் இந்தகாலகட்டத்தில் ஊர் திரும்புவதென்பது உகந்ததாகக் கருதப்படுகிறது. அதைவிடுங்கள், இப்போது சனிக்கிழமை மாலை நான்கு மணி.

நெஞ்சமல்லாம் கிறுகிறுக்கும். மனசெல்லாம் இறக்கைகட்டி அலேக்காகப் பறக்கும். ங்கொய்யால எப்படா இந்த மணியடிச்சுத் தொலையுமென கிடந்துதவிக்கும் உள்ளம். கழிப்பறைக்குச் சென்று முகம் கழுவி ஒப்பனை செய்து சட்டைக்காலரைத் தூக்கிவிட்டு, வேலைநிமித்தம் அடுத்த வேளைக்கானவனிடம் பணிகளை மாற்றிக் கொடுத்தானபின், எந்த மணித்துளியிலும் மணியடிக்கு்மென எண்ணி ஓட்டமெடுக்கப் பரபரத்துக் கொண்டிருக்கும் கால்கள். அந்தா… அடிக்கிறது மணி, கிர்ர்ர்ர்ர்…

நேரச்சீட்டில் வெளியேறுபதிவிட, outpunch, கூட்டம் நெருக்கி முண்டியடிக்கிறது. டபக். என்னுடைய அட்டையில் விழுந்துவிட்டது முத்திரை. நிறுவனச்சாலைக்குள் ஓடக் கூடாது. கால்கள் வேகவேகமாக எட்டி நடையைப் போடுகின்றன. ஆனால் மனம் ஓடிக் கொண்டிருக்கிறது. ஐந்து மணிக்குள்ளாக, டவுன் ஆல் சோமனூர் வண்டியொன்று, காந்திபுரத்துக்கு நாற்பத்தொன்று ஏ, அவிநாசியிலிருந்து பூண்டி செல்லும் நேர்வழிப் பேருந்து, இம்மூன்றையும் தவறவிட்டு விட்டால் இழவுதான். அடுத்த வண்டி, ஆறுமணிக்குப் பிறகுதான். அப்படியே வந்தாலும் இந்தப் பாங்காட்டில் நிற்பானா என்பது தெரியாது. வேகுவேகென்று, மேலாகச் சங்கூதிபாளையம் பிரிவுக்கு நடந்து போகவேண்டும். அப்படி நேர்ந்துவிட்டால், யாரைப்பார்த்தாலும் கொன்று தின்ன வேண்டும் போல இருக்கும். இன்றைய நாள் நல்ல நாள், காந்திபுரம் பேருந்தில் இடம் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறோம்.

உலுக்கி உலுக்கி எப்படியோ பீளமேடு வந்து சேர்ந்தாயிற்று. பாதிபேர் இறங்கிவிட்டனர். ஒரு இருக்கையில் இடம் பிடித்துக் கொண்டோம். பெருவேகமெடுக்கிறது வண்டி. இந்நேரமும் உலுக்கிக் கொண்டிருந்த உலுக்குநர்ப் பேர்வழி, இப்போது உலுக்குநர் சட்டையைக் கழற்றியெறிந்து விட்டு புரட்டுநர் சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டாரென வைத்துக் கொள்ளுங்கள். புரட்டிப் புரட்டிப் போட்டுக் கொண்டே போய்ச் சேர்ந்து விடுகிறது வண்டி. அந்த லட்சுமிமில் வளைவில் நெளிந்தபோது கூட அவ்வளவாகத் தெரியவில்லை. போலீசு குவார்ட்டர்சில் ’சர்ரக்’கெனச் சாகசமாய் வளைந்து திரும்பியதில்தான் கம்பியில் விலாவெலும்புபட்டு நோகிறது. ”அதனாலென்ன, ரொம்ப நல்ல டிரைவர். அஞ்சரைக்கெல்லாம் கொண்டாந்து உட்டானப்பா”, தொண்டாமுத்தூரிலிருந்து வரும் நாதாரியொன்று மெய்சிலிர்க்கிறது.

காந்திபுரம் பேருந்து நிலையமல்ல அது. பெருமைதானம். இந்தக் கோட்டுக்கும் அந்தக்கோட்டுக்குமாக பரந்து விரிந்திருக்கும். சிறைச்சாலை மண்சுவரும் பொருட்காட்சி மைதானப்படலும் ஒன்றுக்கொன்று சந்திக்கிற இடம் வந்தான காட்சியைக் கண்டதும் ஒரே தாவு. உடனிருந்த தொண்டாமுத்தூர்க்காரனாவது சோதிபுரத்துக்காரனாவது, போங்கடாத் தெல்லவாரிகளா, ஒழிங்கடா சனியனுகளா… ஊர்டா, அந்தியூர்டா… வண்டி நிலையடைந்து நின்றதா இல்லையா என்பதையெல்லாம் யார் கண்டார்? ஒரே குதி! எதிரில் குறுக்காக வருபவனுக்கெல்லாம் மனதார நாமாவளிதான். அந்தநாய், இந்தநாய். இதற்கு மேல் நீங்களே உங்கள் விருப்பத்துக்கொப்ப இட்டு நிரப்பிக் கொள்ளுங்கள்.

”அண்ணா, இந்த வண்டி பொள்ளாச்சிக்கு நேர்வண்டியா? இல்ல, நின்னு நின்னு போயி எழவெடுப்பீங்ளா??”

“நேர்வண்டிதான் தம்பி, கரெக்டா அஞ்சு அம்பது சில்லறை வெச்சிக்கணும்”

“இருக்கு இருக்கு”

வண்டி நேருவிளையாட்டரங்க வளைவிலிருக்கிற அந்த திடீர்குபீர் மேட்டில்,, அந்த எழவு அன்றைக்கும் இருந்தது என்பதுதான் பேரெரிச்சல். ஏறியிறங்கியதுதும் கனவுலகவாசம் வண்ணவண்ணமயமாக உருவெடுக்கும். கோவைத்தம்பியின் படப்பாடல்கள் வாயிலாக இளையராசா நம்மை உலாவில் ஆழ்த்துவார். அந்தந்த காலகட்டத்துக்கொப்ப, கனவுலக வாழ்வு அமையும். உதயகீதம், இதயகோயில் வரிகளெல்லாம் கைபற்றி அழைத்துப் போகும். புளியமரங்களெல்லாம் வேகவேகமாய் எதிரே ஏன் இந்த வேகத்தில் ஓடுகின்றன என்பதைப்பற்றியெல்லாம் யாருக்கென்ன கவலை. பாழாய்ப்போன குறிச்சி ரெயில்வே கேட்டில் மாட்டாமல் இலாகவாம என்னமாய் ஓட்டுறார் இந்த டிரைவர்? அருமைடா பரஞ்சோதி. யார் அந்த பரஞ்சோதி. யாரோ ஒருத்தன்.

வண்டி மகாலிங்கபுரம் பக்கமாவே வந்து விட்டது. அய்யோ, ஸ்ரீதேவி இருப்பாளா? ஸ்ரீதேவி இருப்பாளா? மனம் ஏங்கும். ஏனென்றால், அவள் மட்டுமே நம்மையும் மதித்துத் தாங்குபவள். இருப்பாளா? இருப்பாளா??

”அய்யோ, புறப்பட்டுப் போறாளே? மணி என்ன? அய்யோ, அஞ்சு மணித்துளி காலத்தாழ்ச்சிதான்! கொள்ளையில போனவன், குறிஞ்சிப்பாடி கேட்லயும் புரவிபாளையம் பிரிவுலயும் நிக்கும் போதே நினைச்சேன். திருட்டுத் தாயோளி, நேர் வண்டின்னு சொல்லிப் போட்டு கழுத்தறுத்துட்டான்”, இறங்கி ஓட்டமோ ஓட்டம்.

கம்பியைப் பிடித்து ஒரு காலை வைத்தாயிற்று. வலக்கையின் கட்டைவிரல், ஒரே ஒருவிரல்தான் ஒட்டுமொத்த உடலையும் அந்தக் கம்பியோடு பிணைத்திருக்கிறது. கொஞ்சம் பிசகினாலும், பாடையில்தான் விழ வேண்டும்.

“படியில தொங்கறவங்கல்லாம் மரப்பேட்டையில இறங்கிக்க. இல்லன்னா, உள்ள வா”

அப்பாட, கொஞ்சமாக இடம் கிடைக்கவே, இருகால்களாலும் நிற்க வாய்க்கிறது. ஸ்ரீதேவியா, கொக்கா?! இவள் அல்லாவிடில், நொம்பலம்தான். அந்தியூரில் நிறுத்தமாட்டான்கள். ”கோமங்கலத்துல இறங்கிடு, இல்லன்னா நேரா முக்கோணந்தான்”, மிரட்டுவான்கள். அருமை ஸ்ரீதேவி அன்பானவள். எங்கும் நிற்பாள்.

நரகவாழ்க்கைத் தடங்களிலிருந்து விடுபட்டு, இந்தா வருதுடா ஊர்வாசம். ஊஞ்சவேலாம்பட்டி, திப்பம்பட்டி, கோலார்பட்டி கடந்து வந்துவிட்டதடா கெடிமேடு. கெடி என்றால், படை பரிவாரம் கொத்தளம் நிலைள்ளும் தாவளம். திப்புசுல்தான் படைகளை எதிர்க்க, நாயக்க மன்னரின் கெடிகள் இந்த மேட்டில் நிலைகொண்டதால், இது கெடிமேடு. கெடிமேடு தாண்டி, கோமங்கலம்பூதூர் வந்தாயிற்று. ஆகா, ஆகா. கொத்துமல்லி மணம் கமகமவென மூக்கு நாசிகளில் புகுந்து குருதியில் கலக்கிறது. மின்வெளிச்சத்திலும் கரிசல்மண் கண்களைக் கொள்ளை கொள்கிறது.

“அந்தியூர்ல வண்டி நிக்காது. வல(ளை)வுல வண்டி திரும்பும்போதே எறங்கிக்கணும்”

”ங்கோத்தா, நீ மூடு… இப்ப என்ன நடக்குதுன்னு மட்டும் நீ பாரு”, மனம் பேசுகிறது

அந்நேரமும் சாலையோரத்தில் காத்துக்கிடந்த தண்ணீர் பீப்பா (பீப்பாய்) வண்டி, ”லக், லக், ப்போ…”, ஒரே சுண்டு சுண்டிவிட்டாற் போதும், அந்த ஒற்றைமாட்டு வண்டி நடுரோட்டில் வந்து நிற்கும். பங்காளிகள் பலரும் வந்து நிற்பர். ”ங்கொய்யா ஊருக்கே தெரியும்டா, வலவாம், திரும்புமாம், எறங்கிக்கிடணுமாம்”.

அந்தியூர்… தாய்மண்ணே வணக்கம்!! 

இரவு மணி, எட்டு நாற்பது. நாகராசண்ணன் கடையில் சில நேரம். சத்திரத்தடியில் சில நேரம். வீடு செல்ல மணி ஒன்பது. ஆக மொத்தம் நான்கரை மணி நேரம்.

கட். அந்தியூரிலிருந்து, தற்போது நாமிருக்கும் இடத்துக்கு, தற்போதைய நேரத்துக்குத் திரும்புகிறோம்.

நான்குமணிக்கு மூத்திரச் சந்துக்குப் போனோம். ஒன்பது மணிக்கு வீடு திரும்பியும் மூத்திரசாலம் செய்ய வேண்டுமென்கிற நினைப்பிருந்திருக்கவில்லை. அமெரிக்காவில் புறப்படுமுன் ஒரு பாட்டம் பெய்தல். வந்து சேர்ந்தபின் ஒரு பாட்டம் பெய்தல். ஏனிந்த வேறுபாடு? சிந்திக்கிறோம். அங்கு தட்பவெப்பம் வேறு. வியர்வைச் சுரப்பிகள் அயராது பணியில். இங்கு அதற்கு இடமில்லை. அது மட்டும்தானா காரணம்?

“போடாப் பன்னாட, ஒழுக்கமா அப்பப்ப நீராகாரம், தண்ணி குடிக்கணும்டா. அல்லாங்காட்டி மூட்டு வலி, தலைவலி வரும். ஆயுளுங் குறையும்டாத் தறுதல”, நான் சொல்லவில்லை. அந்த உள்மனக்குரங்கு கொக்கரிக்கிறது.



10/19/2017

நாய்க்கரச்சை

நாய்க்கரச்சை

இந்தகதையப் புரிந்து கொள்ள வேண்டுமானால், முதலில் நீங்கள் சீனிவெடி, இலட்சுமிவெடிகள் எப்படி வேலை செய்கின்றன என்பதை அறிந்து கொள்ள வேண்டும். மருந்துப் பொருட்களை சரியான விகிதத்தில் கலக்கி, அதற்கு நடுவே ஒரு திரியையும் வைத்து தாள்களால் நன்கு இறுகச்சுற்றப்பட வேண்டும். தென்னாட்டு மக்கள் நிரம்பிய இணையத்தில், இது குறித்து சகலதையும் அறிந்தவர்கள் இருப்பர். சுருக்கமாகச் சொல்லின், கன்பவுடரெனும் பொட்டாசியம் நைட்ரேட் எனும் வேதிப்பொருள் திரியின் மூலம் பற்ற வைக்கப்படும் நெருப்பு, காற்றோடு சேர்ந்து வினையாற்றி நைட்ரசன் வாயுவை உண்டு செய்ய, அதன் மூலக்கூறுகள் பெருக்க, உயர் அழுத்தம் ஏற்பட்டு இறுகச்சுற்றப்பட்டிருக்கும் காகிதச்சுற்றினைப் பிளந்தடிக்க காதைக்கிழிக்கும் வண்ணம் பேரோசை உருவெடுக்கும்.

நிற்க. மேலே குறிப்பிட்டபடி சரியான விகிதத்தில் நைட்ரேட் கலக்கப்படாவிட்டாலோ அல்லது இதர வேதிப்பொருட்களின் சமன்பாடு மாறிவிட்டாலோ, பற்றவைக்கப்படும் நெருப்புத் தீண்டும் போது இடம்பெறும் வினையின் செயல் மாறுபடும். வெடிக்காமால், புசுபுசுவென்று குற்றோசையை எழுப்பிக் கொண்டே சற்றுதொலைவு போய் கடைசியில் ஓய்ந்து படுத்துவிடும். இதை நாங்கள், பட்டாசு குசுவுட்ருச்சுடாவென்போம். வெடிக்காது.. மேலும், நாய் தன்வாலை வவ்வவ்வெனக் கடித்துக் கொண்டே நாலு சுற்றுச்சுற்றிவிட்டு ‘ங்க்கவ்’வெனச் சொல்லிப் படுத்துக் கொள்வதைப் போல, சிலவேளைகளில் ஓரிரு வெடிகள் கரகரவெனச் சுற்றிச்சுற்றி வந்து பின்னர் ‘பொடுக்’கென்று சன்னமான சத்தத்தோடு படுத்துவிடும் இதை நாய்க்கரச்சு நமுத்துபோச்சுறாவென்போம்.

இப்படியான வெடிகளை, சரமாக அல்லாமல் தனிவெடியாக விடுவது உண்டு. இலட்சுமிவெடி, சரசுவதி வெடியெல்லாம் கனமாக நிறைய இறுக்கத்துடன் கெட்டியான தாள்களால் சுற்றப்பட்டு பார்ப்பதற்கே திகிலூட்டக்கூடியதாக இருக்கும். இவற்றை நுவாக்ரான், டெமாக்ரான் தகரடப்பாவில் நுழைத்து திரிமட்டும் வெளியே தெரியும்படி பற்ற வைக்க வேண்டும். அப்படிப் பற்றவைக்கும் போது பெருஞ்சத்தத்தோடு டப்பாவையும் வானத்தில் தூக்கியடித்து கூடுதலான ஓசையை உண்டு செய்யும். சீனிவெடி எனப்படுகிற வெடிகள்,, லேசான சிவப்புவண்ணத்தாளில் சுற்றப்பட்டிருக்கும் இவற்றை நுவாக்ரான் தகரத்தில் வைத்தால் தூக்கியடிக்காது. கனத்தின் காரணம், வெடிச்சத்தமும் குறைந்து போகும். ஆகவே, இவற்றை கொட்டாங்குச்சியின் கண்களில் ஒன்றை நோண்டிவிட்டு, அதன் துளையில் திரியை வெளியே தெரியும் வண்ணம் வைக்க வேண்டும்.

மழை ஈரம் இருக்குமென்பதால், கற்கள், ஆட்டாங்கல், அம்மி, உரல் போன்றவற்றின் மீது பட்டாசுநுழைக்கப்பட்ட கொட்டாங்குச்சியை வைத்துப் பற்ற வைக்க வேண்டும்.

இப்படித்தான், காலை ஏழுமணி இருக்கும். வாணா கோபால்சாமி நாய்க்கர் தூக்குப் போசியில் பால் வாங்கிக் கொண்டு அந்த வீதி வழியாகப் போய்க்கொண்டிருந்தார். நாய்க்கர், பெரும் கோபக்காரர். பையன்களுக்கு அவரென்றால் பெரும்பயம். அவர் வருவாரென்று நாங்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. நாங்கள் எல்லாரும், பசனை கோயிலுக்கும் குருநாத வாத்தியார் வீட்டு மதிற்சுவருக்கும் நடுவே கும்பலாக நின்று கொண்டிருந்தோம். பாண்டியனின் தம்பி செளந்தரன்தான், சீனிவெடியைப் பற்ற வைக்கப் போனான். ’ஆராவது வர்றாங்களா பாருங்டா’ என்றான்.

சாமிநாதன் சாப்பாட்டுக்கடை தங்கவேலன் சுற்றிலும் முற்றிலும் பார்த்துவிட்டுச் சொன்னான், ‘ஆரும் வர்ல. நீ பத்த வெக்கிலாம்’.

செளந்தரனும் கையில் வைத்திருந்த ஊதுபத்தியால், கொட்டாங்குச்சியை குருநாத வாத்தியார் வீட்டு மதிலுக்கு வெளியே இருக்கும், மதிற்சுவர் மீது மாட்டுவண்டிகள் இடிக்கா வண்ணம் நடப்பட்டிருக்கும் அந்த முட்டாங்கல் மீது வைத்து திரியில் நெருப்பினை வைத்தான்.

வழக்கத்துக்கு மாறாக அது உடனே வெடிக்கவில்லை. ஒரு சில விநாடிகள் சற்றுக்கூடுதலான நேரத்தை, எடுத்துக் கொண்டிருந்தது. எங்களுக்கு அதன் பக்கத்தில் போகவும் அச்சம். அந்த இடைப்பட்ட வேளையில், பசனைகோயிலுக்கு மறுபக்க வீதியிலிருந்து வெளிப்பட்டு, பால்ப்போசியோடு வந்து கொண்டிருக்கிறார் வாணாகோபால்சாமி நாய்க்கர். எங்களுக்கா குலை நடுக்கம். எப்பவுமே ஊர்ப்பையன்களைப் பார்த்து மிரட்டலாக எதையாவது சொல்லிவிட்டுப் போவார். அன்று தீவாளி அல்லவா? நாய்க்கருக்கு வேறென்னவோ யோசனை. விறுவிறுவென வேட்டியை மடித்துக்கொண்ட நிலையில் பால்ப்போசியை தூக்கிக் கொண்டு பாண்டியனின் மளிகைக்கடை முன்பாக எட்டி நடையைப் போட்டார். முட்டாங்கல் மேலிருந்த கொட்டாங்குச்சிக்குள்ளிருந்த சீனிவெடி நாய்க்கரச்சை இடத் துவங்கியது.  கண்ணிமைக்கும் நேரத்தில், அவரின் கால்களுக்கிடையே ஆட்டம் போட்ட கொட்டாங்குச்சி உசுபுசுவென மேலெழுந்த வாக்கில் சரசரவென்றது.

அங்கிருப்பவர்களிலேயே நான்தான்  மிகவும் இளையவன். முதலில் இராசகோபால்தான் கத்தினான். ”தேங்காத்தொட்டி நாய்க்கர் வேட்டிக்குள்ள  பூந்த்துருச்சாட் இருக்கூ? டேய் ஓடுங்டா”.

இவன் போட்ட சத்தமும் கொட்டாங்குச்சியின் உரசலும் நாய்க்கருக்கு பதட்டத்தை உண்டுபண்ண, தூக்குப்போசியைப் போட்டு விட்டு வேட்டியை உதறத் தலைப்பட்டார் நாய்க்கர்.

வீதிமணலில் பால்ப்போசி கவிழ்ந்து மணல் ஈரத்தில் கலந்து கொண்டிருக்கிறது வாங்கி வந்த பால் முழுதும். அரக்கப்பரக்க வேட்டியை அவிழ்த்தவருக்கோ, தான் உள்ளாடை எதுவும் அணியாததைப் பற்றின கவலை இருக்கவில்லை. உதறலோடு உதறலாக உதறிக் கொண்டிருந்தார். கனம் கண்ட பையன்கள்,எல்லாரும் வெலவெலத்துப் பயந்து போய், சந்தைப்பேட்டைக்குள் நுழைந்து உப்பிலிமாரப்பன் பட்டிக்குள் ஓடிப் போய் கற்களின் மறைவில் ஒடுங்கிக் கொண்டனர்..

‘கண்டாரோலி பசங்க, எங்கிட்டியே வேலையக் காமிச்சிட்டாங்டா பாண்டியா!”, பசனை கோயல் தாண்டி கரியூடு, டீச்சரம்மா வீடு, ஆலாமரத்தூர் இராசகோபல் வீட்டு வரையிலும் ஓங்கி ஒலித்தது நாய்க்கரின் பேரலறல்.



10/18/2017

அப்பாடா... தீவாளிடா!!

அப்பாடா... தீவாளிடா!!

இலட்சுமிநாய்க்கன் பாளையம் விடுதியில் தங்கியிருந்து படிக்கிறேன். தீபாவளிக்கு முந்தினநாளே விடுதி மூடப்படுகிறது. பக்கத்து கிராமத்து நண்பர்கள் அவரவர் வீட்டுக்கு அழைக்கிறார்கள். நானும் போய்த் தங்கிவிட்டு, கடைசியாக வேலப்பநாய்க்கன் பாளையம் உறவினர் இரங்கநாதன் அவர்களது தோட்டத்துக்குப் போய்ச் சேருகிறேன். மழை பெய்யத் துவங்குகிறது. மழைக்கு இதமாக இராகிவடை, ஆமைவடை, மெதுவடை என மூன்றுவிதமான வடைகளும் சூடாக சுட்டுக் கொடுக்கப்படுகின்றன. குதூகலமாகத் தின்று கொண்டே மாலை முழுதும் கரைந்து போகிறது. எனக்குள் கொஞ்சம் கொஞ்சமாகப் பதற்றம். எவ்விதமான போன் வசதியுமிராத காலகட்டமது. அழவில்லை. அவ்வளவுதான். மனம்முழுமைக்கும் அழுகை அணைகட்டி நிற்கிறது. இராத்திரி எட்டுமணி சியாம் வண்டிக்குப் போயிர்லாம்டா என்கின்றனர் அண்ணன் இரங்கநாதனும் புருசோத்தமனும். அதேபோல மழையோடு மழையாகக் கொங்காடிகள் போட்டுக் கொண்டு அக்கநாய்க்கன் பாளையம் பிரிவில் இரவு எட்டுமணிக்கு நிற்கிறோம். நிற்கிறோம். கோயமுத்தூரிலிருந்து கிராமத்து சாலைகளில் தவழ்ந்து வருகிறது சியாம். மழையோடு மழையாகக் கரைந்து போகிறது நான் அழுத கண்ணீரெல்லாம்.

வண்டிக்குள் ஏறி, நான் போட்டிருந்த உடுப்புகளை எல்லாம் அவிழ்த்து பெட்டியிலிருந்த அழுக்கு உடைகளுக்குள் புகுந்து கொள்கிறேன். இருந்தும் குளிர் கொல்கிறது. வண்டி ஓட்டுநர் செய்யக்கூடாத சாகசமெல்லாம் செய்து ஒருவழியாக திருப்பூர் - பொள்ளாச்சி சாலையை வந்தடைகிறது வண்டி. ஓரமாக நிறுத்திவிட்டு பீடி ஒன்றைப் புகைக்க விடுகிறார். மழையும் ஓரளவுக்கு நின்று விட்டிருந்தது. 

“அண்ணா, மணி என்னாசுங்ணா?” 

“ஒம்பதே முக்கால் தம்பி”. 

மீண்டும் அழத் துவங்குகிறேன். வண்டிக்குள் எண்ணி ஏழு அல்லது எட்டுப் பயணிகள்தாம். அதில் ஒருவர் வருகிறார். “கண்ணு, நீங்க எந்த ஊருக்குப் போகோணும்?”, 

“சலவநாய்க்கன் பட்டிப் புதூருங்க”. 

“வெசனப்படாதீங்க. மழ நின்றுச்சு பாருங். போய்ச் சேந்துரும் வண்டி”. 

நிமிர்ந்து உட்காருகிறேன். வண்டி செஞ்சேரிமலைச் சாலையில் வேகமெடுக்கிறது. மகிழ்ச்சி கரை புரள்கிறது. சற்றே உறக்கமும் கண்களை அணைக்கிறது.

“நிறுத்துங், நிறுத்துங்... வண்டி தெக்கமின்னாப் போகாது. பச்சாக்கவுண்டம் பாளையத்து தரைப்பாலம் முறிஞ்சி போச்சி”

நான் செத்தே போனேன். என்னையும் கடந்து அழுகை ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. நாங்க நடந்தே போய்க்கிறமுங்க. எல்லாரும் இறங்கிப் போய்விட்டார்கள். எஞ்சியிருப்பது, ஓட்டுநர், நடத்துநர், நான்.

“செரிங்ணே, நாம நெகமம் போயி, வீதம்பட்டி வழியாப் போயி, பிரசிடெண்ட் நாய்க்கர் தோட்டத்துல வண்டியப் போட்டுர்லா. ஆனா, இந்தப் பையனை என்ன பண்றதுன்னுதா தெரீல”, நடத்துநர் ஓட்டுநரிடம் சொல்கிறார். 

விடிந்தால் தீபாவளி. ஒரு சீட்டில் குறுகிப்படுத்துக் கொண்டேன். அழுகையில் என்னையுமறியாது நான் உறங்கிப் போனேன்.எதொவொரு பள்ளத்தில் வண்டி இறங்கி ஏறும் போது செரியான குலுக்கல். குலுக்கலில் நோக்காட்டில் எழுந்து உட்காருகிறேன். 

“வண்டிய நிப்பாட்டுங்க. ஆரோ, கைய கைய ஆட்டுறாங்க”

“எங்க தம்பு இந்த வண்டியில ஏறுச்சுங்ளா தம்பீ?”

வேலூர், வீதம்பட்டி, வாகைத்தொழுவு, சலவநாய்க்கன்பட்டி எல்லாமும் அதிர்ந்தெழுகிறது. பொட்டியாவது கிட்டியாவது. ஒரே பாய்ச்சலில் பாய்கிறேன். நாடி நரம்புகள் எல்லாமும் ஒருசேரப் புடைத்தெழுந்து பேரோசை ஆர்ப்பரிக்கிறது.  ”அப்பா!”

மகனைத் தேடி நள்ளிரவில் சைக்கிள் எடுத்துக் கொண்டு மழையோடு மழையாக வந்திருக்கிறார். 

வீட்டுக்கு வந்து சேர்ந்ததும், போட்டாரே பார்க்கலாம் வெடிகளை. ‘பட பட படார்”.

அப்பாடா... தீவாளிடா!!

10/14/2017

அறம்சார் அமைப்பும் ஓட்டும்

1. சாலையில் பயணிக்கும் போது, போக்குவரத்து மின்விளக்கில் மஞ்சள் வண்ண விளக்கு ஒளிர்கிறது. நாம் என்ன செய்கிறோம்? இயன்றவரையிலும் வேகமாக ஓட்டிக் கடந்து விட முயல்கிறோம். அது தவறு. இயன்றவரை நிற்கப் பார்க்க வேண்டும். இயலாதநிலையில், கடந்து விட வேண்டும். Try to stop, not try to go. அது போல, எந்தவொரு அறம்சார்ந்த மக்களாட்சி அமைப்பிலும் தேர்தல் நடத்த முயலவேண்டும். போட்டியாளர்கள் கிடைக்கவில்லையாயின், தேர்தலின்றி அதன் போக்கில் அது போய்விட்டுப் போகட்டும்.

 2. தேர்தல் இடம்பெற்றால், பிணக்குகள் வரும். பகைமை வளரும். இப்படியெல்லாம் அஞ்சிக் கொண்டிருப்பது அல்லது எண்ணுவது, சமூகம் இன்னமும் மேம்படவில்லை என்பதற்கு ஒப்பானது. பத்தாம்பசலித்தனமானது.

 3. முறைப்படி தேர்தல் இடம்பெற வேண்டும். கண்ணியமாகவும் நேர்மையாகவும் திறந்தமனத்தோடு விமர்சனங்களையும் முன்வைத்தே செயற்பட வேண்டும். அதே நேரத்தில் அநாகரிகம், தனிமனித வசையாடல் தவிர்க்கப்படல் வேண்டும்.

 4. நிர்வாகமுடிவுகளில், சாதி சமயம் இனம் வயது பாலினம் முதனாவற்றின் அடிப்படையில் பாகுபாடு, பேதம் பார்ப்பது அறவே கூடாது. எடுத்துக்காட்டாக, ஒரு விருந்திநரை அழைப்பதில் எப்படி இவற்றை முன்னிறுத்தக் கூடாதோ, அதே பாங்கினை அழைக்காமற்தவிர்ப்பதிலும் கடைபிடிக்க வேண்டும்.

 5. எத்தகைய அமைப்பானாலும், அதனதன் நிர்வாகக்குழுவில் இடம் பெற, கலை, இலக்கியம், விளையாட்டு, நுட்பம், தொழில்சார் நுண்ணறிவு, மக்கள்தொடர்புத் திறம் கொண்டவர்களுக்கு முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். வெறுமனே உணர்வாளர்கள், பற்றுக்கொண்டோரென இருந்து அமைப்பின் நோக்கத்திற்கும் மேம்பாட்டுக்கும் தடையாக இருந்துவிடக் கூடாது. அமெரிக்காவில், கல்லூரியில் இடம்பெற, நிர்வாகத்தில் இடம் பெற இவற்றைத்தான் எடை போடுகிறார்கள்.

 6. குறியீடுகள், கருத்தியல்களால் ஆனது உலகு. ஆகவே பன்முகத்தன்மை இல்லாவிடில் அமைப்போ, வணிகமோ, அரசியலோ, அது எதுவோ, விளங்கவே விளங்காது அல்லது முழுமைப்பயனை எட்டவே முடியாது. தற்காலிகக் கானல்நீராய் இருக்கலாம். ஆனால் மேம்பாட்டை ஒருபோதும் ஈட்டாது. எடுத்துக்காட்டாக, மோகன்தாசு கரம்சந்த் காந்தி, அம்பேத்கர், நெல்சன் மண்டேலா, லெனின், ஆபிரகாம் லிங்கன், கென்னடி, பாரதி, ஈ.வே.ரா, வள்ளலார், பாரதிதாசன் முதலானோர் கருத்தியலின் குறியீடுகளேவொழிய, தனிமனிதர்கள் அல்ல. அந்தந்தக் கருத்தியற் கோட்பாடுகளில் இருக்கும் நல்லனவற்றை ஈர்த்துச் செல்லவே அக்குறியீடுகள். மாறாக, அந்தந்த தனிமனிதர்களின் வாழ்வில் இடம்பெற்ற வேண்டாதனவற்றை அமைப்பின் நிர்வாகத்தில் புகுத்திச் செயற்படுவது பன்முகத்தன்மைக்கு எதிரானது.

 7. நிர்வாகக்குழுவில் இடம் பெறுபவர்கள், நாட்டமுள்ளவர்கள், அவரவராகவே குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னர் பணிகளிலிருந்து விடுபட்டுக் கொள்ளவேண்டும். அல்லாவிடில், அவர், அவருடைய தனிமனிதநலன், குடும்பநலனுக்கு எதிரானவராகவே கருதப்பட வேண்டும். அமைப்பின் உறுப்பினர்களும், அத்தகையோரை மட்டுப்படுத்த வேண்டும். ஏனென்றால் இது அறம்சார் மக்களாட்சி அமைப்பு அல்லது நிறுவனம். வணிகநிறுவனமோ அல்லது தொழில்நிறுவனமோ அன்று.

 8. அமைப்புகளின் செயற்பாடுகளை திறந்த புத்தகமாக, மக்கள் நிர்வாகச் சபைகளின் ஓட்டெடுப்பு விபரங்களைப் பொதுவில் வைப்பதைப் போல, கூட்ட முடிவுகள், தீர்மான ஓட்டெடுப்பு முடிவுகளை மக்களின் பார்வைக்கு பொதுவில் வைக்கப்பட தேர்தலில் இடம்பெறும் போட்டியாளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். இத்தகைய பண்பு, திரைமறைவு ஊழல்களை வெகுவாக ஒழித்துக் குறைவான உழைப்பில் நிறைவான பயனை ஈட்ட வழிவகுக்கும்.

 9. பல்லினமக்கள், பன்முகத்தன்மையென்பது உலகமயமாக்கல், பொருளாதாரமயமக்கல் உலகத்தின் அச்சாணியாக நிலைபெற்றுவிட்டது. Globalization is irreversible. ஆகவே, தனித்துவம் போற்றிக் கொண்டே, அடுத்த வீட்டு, அடுத்த நாட்டு, அடுத்த அமைப்பு, அடுத்த நிறுவனம் போன்றவற்றோடு இயைந்து செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். அப்படித்தான் பண்டங்களும் பொருட்களும் தொண்டுப்பணிகளும் நடந்தேறிவருகின்றன. ஒரு கூரைக்குக் கீழேயே எல்லாமும் இடம்பெற வேண்டுமென்பது வழக்கொழிந்து போனவொன்றாகும். எனவே, அடுத்த அமைப்பிலிருந்து வல்லுநர்கள் பேசவேண்டும். ஓர் அமைப்பு இன்னோர் அமைப்புடன் இயந்து செயற்பட வேண்டும். Office bearers should be able to work across the aisle. குண்டுச்சட்டியிலிருந்து கொண்டால், இழப்பு குறுக்கில் இருப்பவருக்கே!

 10. அறம்சார் தொண்டு நிறுவனம், மக்கள்சார் கலை இலக்கிய அமைப்பு, மக்களின் உரிமை மேம்பாட்டு இயக்கம் போன்ற அமைப்புகளின் உயிர்நாடியே, அந்தந்த மண்ணின் மையநீரோட்டத்தில் மேம்படுவதுதான். எனவே, மையநீரோட்டத்துடன் ஒன்றிச் செயற்படும் போட்டியாளர்களே தேவை. தனித்துவமும் மரபும் போற்றப்பட வேண்டியவொன்று. அதே வேளையில், தனித்துவவெறியும் தூய்மைவாதமுமென இருந்துவிட்டால் பின்னடைவுதான். ஆகவே, இவ்விரண்டுக்குமான பொருளுணர்ந்து செயற்படும் நிர்வாகிகள் காலத்தின் தேவை.

 இஃகிஃகி, தேர்தல் களம் காணுகிற, காணப்போகிற எல்லா அமைப்பினருக்கும் பாராட்டுகள்! முடிந்து முடிந்து பூமிக்கடியில் புதைத்து வைத்துக் கொள்கிற அமைப்பினரும் விழிப்புணர்வு கொண்டெழ வாழ்த்துகள்!!

 -பழமைபேசி.

10/13/2017

மாடர்ன் மருத்துவம் vs மரபு மருத்துவம்

மாடர்ன் மருத்துவம்
மரபு மருத்துவம்
போலி மருத்துவம்
தம்பொறுப்பு

இவற்றுக்கிடையே சிண்டைப் பிடித்துக் கொள்கிறார்கள். ஆகையால் நம் புரிதலையும் உளமாரச் சொல்லிக் கொள்வோம். பின்னூட்டங்களைப் பொறுத்து புரிதலைச் சரி செய்தும் கொள்வோம். இஃகிஃகி!

1. அறிவியல், இன்று ஒன்றைச் சொல்லும். புது அறிதல்களுக்கொப்ப இன்று சொல்வதை நாளையே அது மறுக்கக் கூடும். அதுதான் புத்தாக்க அறிவியல். தொழில்நுட்பம், சுற்றுச்சூழலுக்கொப்ப அது தன்னை புதுப்பித்துக் கொண்டே இருக்கும். முறைசார் அறிஞர்களை நம்பித்தான் சமூகம் இயங்கியாக வேண்டும். ஆகவே, புதுமை அறிவியல்தான் முதன்மை. (எடுத்துக்காட்டு: நுண்ணோக்கியில் குருதியின் அணுக்களை ஆய்ந்து நோய்க்கூறுகள் கண்டறிவது)

2. மரபு மருத்துவமும் அறிவியலை அடிப்படையாகக் கொண்டதுதான். ஆனால், பல்லாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என்பதாலும், உரிய பதிவுகள், முறையான நிறுவுசான்றுப் பதிவுகள் இல்லாததாலும் சிதைவுக்கு ஆட்படுகிறது. ஆனால், முற்றிலும் ஒதுக்கிவிட, நிராகரிக்கத் தேவையில்லை. துய்ப்பறிவு, பட்டறிவு, பகுத்தறிவு, அனுபவத்தின் அடிப்படையில் தன்னாய்ந்து ஏற்றுக் கொள்ளலாம். எடுத்ததற்கெல்லாம் வேதிப்பொருட்களை உண்ணாமல், மரபு மருத்துவத்தை நாடலாம். நுண்ணுயிர், தொற்றுநோய், நச்சுயிர்களைக் களைய வேதிமருத்துவத்தை நாடுவதும், சத்துக்குறைபாடுகளுக்கு மரபுமருத்துவம் நாடுவதும் ஒருவரது தெரிவாக இருக்கும் போது நாம் அதை எள்ளி நகையாடத் தேவையில்லை (எடுத்துக்காட்டு: கொட்டம்சுக்காதி தைலம், காஞ்சித்தழை, சாணிப்பூட்டாந்தழை)

3. போலி மருத்துவம். மிடீல உவர் ஆனர். போகிற போக்கில் தன் விருப்பு வெறுப்புகட்கொப்ப, அறமற்றுத் தன்முனைப்பும் தன்னலமும் கொண்டு, பேச்சு, எழுத்துத் திற்மையால் நீக்கமற நிறைந்திருக்கும் பேரறிஞர்களை, வணிக நிறுவனங்கள் வார்த்தெடுக்கின்றன. தன்னறிவுப் போதாமை கொண்டவர்கள் போற்றி வழிபடுகின்றனர். சட்டங்கள், கட்டுப்பாடுகள் கொண்டு இத்தகைய போக்கினை மட்டுப்படுத்தலாம்; ஆனால் முற்றிலும் களையவே முடியாது. மாறாக, சமூகம் அறிவுப்புலத்தில் இயங்கித் தன்னறிவுக்கு வசப்படுதலே பின்னடைவினை இல்லாமற் செய்யும்.

4. தம்பொறுப்பு. அய்யன் திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே எல்லாமும் சொல்லிப் போய்விட்டார். அவற்றை உணர்ந்து இருத்தலே பெரும்பயனை ஈட்டும். https://youtu.be/dPDyXlkf3zo

(இதையெல்லாம் பேசி, ஒரு விவாதப் பொருளாக்க வேண்டி இருக்கு. சை... where is the common sense heading?)

10/10/2017

Terrapin Point (ஆமைமுனை)

நயாகரா ஆற்றின் மேல்நுனிக்கு அருகில் நின்று, பெருங்கொள்ளளவு கொண்ட ஆற்றுப்பாய்ச்சல் அருவியாய் வீழ்வதைக் காணலாம். காண வருபவர்களுள் எண்பது விழுக்காட்டுக்கும் மேலாக ஆசியர்கள். ஊர்தித் தரிப்பிடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு இறங்கும் போதே குதூகலத்துடனும் அலைபேசியுடனுமாக ஆர்ப்பட்டமாய்ப் புறப்பட்டு வருகிறார்கள். எங்கும் பேச்சொலிதான். உள்ளம் பொங்கத் தற்படங்கள் எடுத்துக் கொள்கிறார்கள். புறப்பட்டு அடுத்த இடத்துக்குச் செல்ல விரைகிறார்கள். இருக்கும் எல்லா இடங்களையும் பார்த்துவிட வேண்டுமென்கிற வேட்கை.

 ஏற்கனவே பலமுறை சென்று வந்த இடம். எனினும் அமெரிக்கக் கரையில் இருந்து காண்பது இதுவே முதன்முறை. ஆனால், நம்மவர்களின் ஆர்ப்பாட்டம் என்னில் குறுக்கிட்டது. திரும்பிப் பார்த்தேன். ஒரு வெள்ளைக்காரக் குடும்பம்; இரு பிள்ளைகளோடு. மறுகோடியில், கூட்டத்தினின்று விலகி நின்று கொண்டனர். வானத்தைப் பார்க்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாய் இயற்கைக் காட்சிகளில் தொலைந்து போகிறார்கள். பிள்ளைகள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை. எப்போதாவது ஒருவரின் கண்கள் மற்றவரின் கண்களைப் பார்க்கின்றன. கைகளைப் பிடித்துக் கொள்கின்றனர். கணவன் மனைவியும் முத்தமிட்டுக் கொள்கின்றனர். நெடுநேரம் தியான மனநிலையில் இருந்து காலத்தை நையப்புசிக்கின்றனர். ஒரு பொழுதின் போது, அவர்களுக்கே தெரியாமல், எட்டுக் கண்களும் கலந்து பேசி ஒரு முடிவுக்கு வருகின்றன. காலத்தின் சாட்சியாய், இடத்தின் சாட்சியாய் ஒரு படம் எடுத்துக்கொண்டு புறப்படுகின்றனர். நிதானத்தை அளவிடும் பொருட்டுத்தான், குறுக்கே செல்கிறேன். நயாகராச்சாரலின் மென்மையைத் தோற்கடிக்கின்றன அவர்களின் புன்முறுச்சிந்தல்! அல்ல, பண்பாட்டுப் புன்னகை!!