6/28/2015

தர்பூசணி சூப் (libido booster)








மக்கழே,

தர்பூசணி சூப் குடித்துப் பயன் பெறுவது எப்படி? இப்பிடீ.... இஃகிஃகி!!

செய்முறை:

முதலில் அடுப்பில் கொள்கலனை வைக்கவும். அடுப்பில் வைக்காமல் தலையிலா வைப்பார்கள் எனக் கேட்பவர்கள் சற்று ஒதுங்கிப் போகவும்.

சூடானதும் இரு தேக்கரண்டி எண்ணெய், அதற்காக கடுகு எண்ணெய், வேப்பெண்ணெய் போன்றவற்றை ஊற்றாமல் சமையலுக்கான எண்ணெய் இரு தேக்கரண்டி ஊற்றவும்.

எண்ணெய் மிதமாய்ச் சூடானது ஓமம் இட வேண்டும். வீட்டில் ஓமம் இருக்கிறதா? எங்கிருக்கிறது என்பன தெரியவில்லை. இராமாயி வீட்டில் இல்லாவிட்டால், வீட்டில் இருக்கும் அவளது தங்கை இலட்சுமாயி கையைப் பிடித்திழுப்பது நம் பண்பாடு. எனவே எதிரில் இருந்த சீரகத்தில் ஒரு சிட்டிகை எடுத்துப் போட்டேன். அவள் சடசடவெனப் பொரிந்தாள். கோபம் போலிருக்கிறது. உடனே ஒரு பெருங்கிண்ணத்தில் நிரம்பியிருந்த நீரைக் கொள்கலனுக்குள் ஊற்றி கொதிக்குமளவுக்கு விட்டேன்.

முதலில் செம்பங்கி(கேரட்) இடுவதாய் நினைத்திருந்தேன். கடைக்குச் சென்று வர சோம்பலேறிவிட்டது. வெளியூரில் இருக்கும் சரசுவை விட உள்ளூரில் இருக்கும் மீனாள் மேல் என்பது பழமொழி. அதைப் போலவே, வீட்டிலிருக்கும் லிமா பீன்சு எனப்படுகிற பெரியவரைக்கும் தயமின், புரதம் போன்ற பண்புகள் இருப்பதால் அதைப் பாவிப்பதென முடிவு செய்து, அதில் ஒரு கைப்பிடி அளவு சுடுநீரில் இடப்பட்டது.

பெரியவரையின் பச்சைவாசம் சுடுநீரிலிருந்து நீங்கிய பின், தயாரக வைக்கப்பட்டிருந்த தர்பூசணி ஓட்டு நறுக்குகள் கொதிநீரில் இடப்பட்டது. பொதுவாக தர்பூசணியோட்டின் பச்சையத்தடிமனை நீக்கிய பின் நீரில் இடுவது வழக்கம். இன்பயியல்பூக்கிக் கனிமங்கள் பெருமளவு அப்பச்சையத்திலிருக்கிறபடியால் நாம் அதை நீக்கவில்லையென்பதறிக. கருக்முருக் இல்லாமல் சுவைக்க விரும்புவோர், தோல் நீக்கிவிடுவது உசிதம்.

நன்றாக வெந்து விட்டதென்பதறிந்த பின், வீட்டில் மசிக்கப்பட்ட கொத்துமல்லித் தூள் ஒரு சிட்டிகை, மிளகாய்த் தூள் அல்லது குறுமிளகுத் தூள் இரு சிறு தேக்கரண்டி, தேவையான அளவு உப்பிட்டுக் கிண்டிவிட வேண்டும். தேவையான அளவு சீசு எனப்படுகிற கொழுப்பினை இட்டுக் கலக்கவும்.

நல்ல ஐங்காயமணம் நாசிகளை வந்தடையும் தருணத்தில், அடுப்பை அணைத்து விடுக. இருக்கும் சூட்டில் சிறிது நேரம் இருக்கட்டும். இப்போது, சிட்ருலின் கனிமம் பொதிந்த சூப் தயார். கிண்ணத்தில் வடித்து, மேலாக சில புதினா இலைகளை இட்டு உங்கள் விருந்தினருக்குப் பரிமாறுக. சிட்ருலின் கனிமம் செம்மையான தோல், இரத்தநாள மேம்பாடு, தசைநார்களின் நல்லியல்புத்தன்மை மேம்படுதல் போன்றவற்றுக்கு பெரிதும் உதவி புரியக்கூடியது.

மீண்டும், மற்றுமொரு தர்பூசணிப் படையலுடன் சந்திப்போம்!!

தர்பூசுத் திளைப்பில்,
பழமைபேசி.

வயாகராப் பொரியல்









எடுத்துக் கொண்ட நேரம்: 25 மணித் துளிகள்

செயல்முறை:

தர்பூசணி வெளியோட்டினைத் துண்டு துண்டாக வெட்டிக்கொள்ளவும்.

குடமிளகாய் ஒன்று நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

சின்ன வெங்காயம் தோல் உரித்து நறுக்கி வைத்துக் கொள்ளவும். நான் பல்லாரி வெங்காயம் நறுக்கினேன். நான் ஒரு சோம்பேறி. சோம்பேறி என்பதை விட எங்கள் வீட்டில் சின்ன வெங்காயம் இருப்பு இல்லையென்பதே உண்மை.

பூண்டு, இஞ்சி நறுக்கி வைத்துக் கொள்ளவும். எல்லாமே தேவையான அளவுதான். ஒவ்வொன்றுக்கும் இவ்வளவு எனச் சொல்லிக் கொண்டிருக்க முடியாது.

சீசு என்ப்படுகிற சுண்டக்காச்சி வடித்தெடுத்த கொழுப்பு கொஞ்சம். தயிர் ஒரு கிண்ணம் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

தக்காளிச்சீவல், ஒரு பழம் நான் எடுத்துக் கொண்டது.

கொள்கலனை அடுப்பில் வைத்துச் சூடேற்றுக. பின்னர் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு, வெந்தயம் போட்டு எண்ணெய் காய்ந்து விட்டதென உறுதிப்படுத்திக் கொள்க. சடச்சடவென்றால் காய்ந்து விட்டதெனப் பொருள். என்னைப் போன்ற மங்குனிப்பாண்டியர்களுக்கு இப்படிச் சொன்னால்தான் புரியும்.

பிற்பாடு, நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், இஞ்சி, பூண்டு, குடமிளகாய், தக்காளி, தர்பூசணியோட்டுச் சீவல் ஆகியவற்றை வரிசையாகச் சற்று இடைவெளி விட்டு, கொள்கலனில் இட்டு, இட்டு, வதக்கவும்.

தற்போது சீசு/கொழுப்புச் சீவல் அல்லது முட்டையை உடைத்து இடவும். பின்னர் அந்த கிண்ணத்திலிருக்கும் தயிர் ஊற்றிக் கிண்டுக.

கிண்டியபின், கடையில் வாங்கின தூள் எல்லாம் தூ எனத் தூக்கி வீசிவிடவும். வீட்டில் செய்தது என்றால் மட்டும் பாவிக்கலாம். தேவையான அளவு மிளகாய்த்தூள் இடவும். மிளகாய்த் தூள் இல்லாவிடில் குறுமிளகுத்தூளாவது சிறிது இடுக. பின்னர், கொஞ்சமே கொஞ்சம் உப்பு இட்டு மிக மிதமான சூட்டில் ஐந்து மணித்துளிகள் மூடப்பட்ட கொள்கலனில் வேகவிடவும்.

தற்போது தர்பூசணிப் பொரியல் தயார். இது ஆண்மைப் பொரியல் என்றும் அழைக்கப்படுகிறது. காரணம், libido boost, இன்பயியல்பூக்கி எனப்படுகிற கனிமங்கள் பூசணியோட்டில் மிகுந்து காணப்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். Prostate, முன்னிற்சுரப்பி செய்ற்படுவதற்கான கனிமங்கள் மிகுந்திருப்பதாகவும், வைட்டமின் ஏ, சி என்பன இருப்பதாலும், கூடச் சேர்த்திருக்கிற இதர உள்ளீடான வெங்காயம், பூண்டு, மிளகாய் போன்றனவற்றிலும் இவை கணிசமான அளவு இருப்பதாலும் இப்பொரியலானது ஆண்மைப் பொரியலென மேற்குலகில் வர்ணிக்கப்படுகிறது.

http://www.healthline.com/health/food-nutrition/watermelon-rind-benefits

(ங்கொய்யால, சமைக்க ஆன நேரத்தை விட, இதை எழுதிப் பதிவற்கான நேரம் அதிகமாட்ட இருக்கூ?!)

6/20/2015

கரிக்குருவி


நான் அப்போது ஐந்தாம் வகுப்பு. பக்கத்து வீட்டு குமார் நான்காம் வகுப்பு. Selvakumar Kuppusamy குமாரின் அப்பா அம்மாவும்  விவசாயம். அதனால் தோட்டத்துக்குச் சென்று விடுவார்கள். ஆனால் எங்கள் வீட்டில் அம்மா எப்போதும் வீட்டில்தான் இருப்பார்கள். எனவே பள்ளிக்குச் சென்று வந்த நேரம் போக உள்ள உபரி நேரத்தில் நாங்கள் இருவரும் எங்கள் வீட்டிற்கு முன்பு இருக்கும் பெரு மைதானத்தில் எப்போதும் விளையாடிக் கொண்டிருப்போம். ஆமாம். நாங்களிருந்த வீட்டிற்கு முன்புறம் பரந்த இடம் இருக்கும். அது போக, விடுப்பு நாட்களில் மாடு மேய்க்கப் போவேன். நான் உதயசூரியன். குமார் இரட்டை இலை. ஆனாலும் எங்களுக்குள் சண்டையெல்லாம் கிடையாது.

தனக்கா அவர்களுக்கு சர்க்கார்பாளையத்தில் தோட்டமும் உறவினர்களும் உண்டு. அவ்வப்போது அவர்களது வீட்டார் ஜக்கார்பாளையம் போய் வருவது வழமை. அன்று மாலை ஐந்து மணி இருக்கும். தோட்டங்காடுகளுக்குச் சென்றவர்கள் ஊருக்குள் திரும்ப வேண்டிய தருணம் கூடி வருகிற வேளை. நானும் குமாரும் எங்கள் வீட்டுத் திண்ணைக்கு முன்பாக நின்று, எங்கள் வீட்டுக் கல்கட்டில் கூடு வைத்திருக்கிற வாலை வாலை ஆட்டிக் குதித்துக் கொண்டிருக்கும் அந்த கரிக்குருவியைப் பார்த்துக் கொண்டிருந்தோம். குமாரின் வீட்டுக்கு இடப்பக்கமாக இருக்கும் அந்த கல்கட்டு ஓரமாகத்தான் போயாக வேண்டும். அப்போதெல்லாம் அது அவன் தலையைக் கொத்தப் போகும். எனவே குமாருக்கு அதன் மீது கோபம். எனக்கு அது உட்கார்ந்து உட்கார்ந்து துள்ளிக்குதிக்கும் ஒயில் மிகவும் பிடிக்கும்.

“அதே... அப்பிடியே கசக்கி வீசணும்”, இது குமார்.

“ஏங்கொமாரு? அதென்ன பண்ணுச்சு உன்னிய?” இது நான்.

இந்த நேரத்தில்தான் எங்கள் வீட்டின் வலப்பக்க மூலையில் டமாலென ஏதோ ஓசை கேட்டது. ஏறெடுத்துப் பார்த்தால் சவாரி வண்டி(கூட்டு வண்டி)யொன்று பக்கவாட்டில் சாய்ந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் நாங்கள் இருவரும், “ஏய் வண்டி உழுந்திருச்சேய்... வண்டி உழுந்திருச்சேய்”யென்று கைகொட்டிக் குதூகலமாய்ச் சிரித்துக் குதித்தோம். அந்த நேரம் பார்த்து எங்கோ போய்விட்டுச் சைக்கிளில் வந்த அப்பா, சைக்கிளைக் கீழே போட்டு விட்டு வண்டியை நோக்கி ஓடினார். அம்மாவை நோக்கி எதோ உரத்த குரலில் கத்தினார். கடையையும், கடை வியாபாரத்தையும் அப்படியப்படியே போட்டு விட்டு, கைச்சொம்பில் தண்ணீரோடு அம்மாவும் போனார்கள்.

குமாரும் அதை வேடிக்கை பார்க்கப் போய் விட்டான். கடை திறந்திருக்கிறபடியால் நான் திண்ணையில் ஏறி உட்கார்ந்து கொண்டே அங்கே என்ன நடக்கிறதெனப் பார்த்துக் கொண்டிருந்தேன். சவாரி வண்டிக்குள் இருந்த தனக்காவையும், தனக்காவின் மாமியாரையும் கைத்தாங்கலாக அப்பா வெளிக்கொண்டு வந்தார். அம்மா தண்ணீர் கொடுத்து உட்காரச் சொன்னார். அதற்குள் பக்கத்திலிருந்தவர்களும் வந்து சேர, வண்டியையும் எருதுகளையும் ஓர்சலாக்கினார்கள். தன்க்காவைவும் அந்த பாட்டியையும் நடக்கச் சொன்னார்கள். உடலுக்கு ஒன்றும் பழுதில்லை என்றானவுடன் அவர்களை வீட்டில் விட்டுவர அம்மா போய்விட்டார். நான் மீண்டும் குமாரைக் கண்களால் தேடிக் கொண்டிருந்தேன்.

கண்ணிமைக்கும் நேரத்தில், பருத்திமார் விளார் என் கால்களிரண்டையும் பதம் பார்த்தது. அய்யோ அய்யோவெனக் கத்தினேன். எங்கள் வீட்டிற்குப் பின்புறம் இருந்த லைன்மேனக்கா வந்து தடுக்க முயன்றார்கள். இருந்தாலும் விளார் இறங்குவது நின்றபாடில்லை. அதற்குள் அம்மாவும் வந்து விட்டார். “ஏன், என்னாச்சு?” என்றார். அப்போதுதான் அங்கே இருந்தவர்களுக்கும் புரிந்தது. எனக்கும் புரிந்தது. “அங்க, வண்டி கொட சாஞ்சி கீழ உழுகுது. இவன் இங்க கைதட்டீட்டு குசியாச் சிரிக்கிறான்”னென்று சொல்லிக் கொண்டே மீண்டும் என்னை நோக்கியோடி வந்தவரை தடுத்துக் கொண்டார்கள். ஆனாலும் என் தலையில் ஒரு கொட்டு இறங்கியது. திரும்பிப் பார்த்தால், கடுங்கோபத்துடன் அம்மா.

நான் அழுதவன்... அழுதபடியே திண்ணையிலேயே தூங்கிவிட்டேன். திடுமெனக் கண்விழித்துப் பார்த்தேன். என் கால்களை அப்பா பிடித்து விட்டுக் கொண்டிருந்தார். “எதனா சப்புடுறா” என்றார். “முலுவா.. ஒனகென்னடா வேணும்... எது கேட்டாலும் வாங்கித்தர்றேன்” என்றார். நான் பிடியேதும் கொடுக்கவில்லை. கெஞ்சிக் கொண்டேயிருந்தார். என்னையும் மீறி என் மனம் இளகி விட்டிருந்தது. “எனக்கு நீச்சல் பழக கத்தாழமுட்டி வேணும்” என்றேன். “செரி. குப்புசாமியண்ணங்கிட்டச் சொல்லி அரக்கனிட்டேரியில இருந்து நாளைக்கே கொண்டு வந்து குடுக்கிறேன்” என்றார். அது போலவே கத்தாழ முட்டியும் வந்து சேர்ந்தது. மேலும், அன்று முதல் எனக்குத்தான் அவர் பயந்து கொண்டிருந்தார். 

கடைசியாக, நான் போய்ருவேனென்றார். ’இல்லை, எங்களுடன்தான் இருக்கப் போகிறீர்கள்’ என்றேன். மெலிதாகச் சிரித்துக் கொண்டார். 

Happy Father's Day! It's ours to show the same faith!!
-பழமைபேசி