11/23/2013

இரண்டாம் உலகம்

இரண்டாம் உலகம் அருமையான படைப்பு. அகமனத்தை முன்னிறுத்திப் பார்க்க வேண்டிய படம். எல்லாப் படங்களையும் போல நேரிடையான காட்சிகளால் கருத்துச் சொல்லக் கூடியதோ அல்லது வறட்டுக் கேளிக்கை விழுமியங்களால் ஆக்கப்பட்டதோ அல்ல இந்தப் படம். கதை இல்லை எனும் கருத்து எந்த அடிப்படையுமற்றதாகும். நல்ல படம் என்பது பல்விதமான படிமங்களைக் கொண்டே ஆக்கப்பட்டிருக்கும். படத்தைப் பார்க்கும் நுகர்வாளன், அந்த படிமங்களினூடாகப் பயணித்து கற்பனா சக்தியுடன் மனம் இருந்த வாக்கில் கதையை அமைத்துக் கொள்ளக் கூடிய வகையில் அமைவதே நல்ல படம். அதன்படிதான் இப்படமும் படைக்கப்பட்டிருக்கிறது.

இரு உலகங்களை ஒரு சேரக் காண்பிப்பதன் மூலம் ஒரு மாய யதார்த்தவாதத்தை திரைப்பட நேயர்களுக்குள் நிகழ்த்த முயன்றிருக்கிறார் இயக்குநர். அம்முயற்சிக்கு பாராட்டப்பட வேண்டியவர் அவர். புலன்களுக்கு வழமைப்படாத மாய அனுபவங்களைக் காட்டுவது போலவே துல்லியமான காட்சித் தன்மையுடனும் படிமங்களைக் காண்பிப்பதை கையிலெடுத்திருக்கிறார். அதாவது இயல்பானவற்றில் மாயத்தையும் ஒரு சேரக் கலப்பது. இப்படத்தில் சொல்லப்படும் மாயங்கள் மனத்திரிபுகளோ, மூட நம்பிக்கைகளோ அல்ல. ஒவ்வொரு படிமக்காட்சியும் ஏதோவொரு குறியீட்டுத்தன்மை கொண்டவை. அவற்றைப் பார்க்கத் தம்மைப் பழக்கிக் கொண்டாக வேண்டும். பழக்கப்படாதவர்களுக்கு படம் ஒரு எட்டாக் கனியாகவே அமையும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை. இது போன்ற படங்கள் இன்னும் நிறைய வர வேண்டும். தயவு செய்து எடுத்த எடுப்பில் படம் புரியவில்லை எனச் சொல்லும் போக்கை மக்கள் கைவிட வேண்டும். எவ்விதமான உழைப்புமற்று படம் புரியவில்லை என்பது படைப்பாளியின் ஆடைகளை உருவி அம்மணமாக ஓட விடுவதற்குச் சமமாகும்.

பொருள்வயமான உலகில் அடிப்படைக் காட்சிகளினூடாகக் கேளிக்கைகளைக் கொட்டிக் கொட்டிப் பழக்கப்படுத்தப்பட்ட வணிகப் படங்களுக்கு மத்தியில் படைப்பூக்கமும் புத்தூக்கமும் கொண்ட ஓர் அரிய படம் இரண்டாம் உலகம்.

11/21/2013

எப்பிடிப்பா நீங்க சமாளிக்கிறீங்க??

வட்ட மேசை!!
அனைவருக்குமான
பொதுப்புரிதல் வேண்டி
யாராவது பேசுபொருள் குறித்து
சுருக்கமாய்ச் சொல்லுங்கள்!!
ஒருமனதாய்
ஏற்றுக் கொள்ளப்பட்டது
ஏதுமறியாமல் வந்துவிட்ட
அலுவலக அம்மணியின் சமாளிபிகேசன்!!

சுகந்தம்
ஒருவருக்கொருவர்
பேசிக் கொள்ளவில்லை!
கைகோத்தபடி
இருவருமாய்
ஒரு முறை சுற்றி வந்தார்கள்!
இதழ் பதித்து
தனித்தனி
கார்களில் புறப்பட்டுப் போனார்கள்!!
வெறுமையாகிப் போன
குளக்கரையெங்கும்
சிநேகித வாசம்!!


வாய் திறவாமல்...
சீக்கிரம்
வாய மூடிட்டு
சாப்பிடு!
மறுபக்கம் திரும்பி
மெளனமாய் வீசப்படும்
அந்தப் பார்வைக்குப் பொருள்
எப்பிடிப்பா நீங்க சமாளிக்கிறீங்க??


நேற்று நான்...
நேற்று
நான்
குளக்கரைக்குச் சென்றிருக்கவில்லை!
குளத்திலிருக்கும்
அந்த
ஒற்றை நாரைக்கு
தெரிந்திருக்க நியாயமில்லை
தன்னையே
நினைத்துக் கொண்டிருக்கும்
ஓர் உயிரினம் உண்டென!!
நேற்று
நான்
குளக்கரைக்குச் சென்றிருக்கவில்லை!
அந்த ஒற்றை நாரை குறித்த
எனக்கான அக்கறை பற்றி
என்ன சொன்னாலும்
புரியப் போவதில்லை மனையாளுக்கு!
எனவேதான்
நினைத்துக் கொண்டே இருக்கிறேன்!!
நேற்று
நான்
குளக்கரைக்குச் சென்றிருக்கவில்லை!
குளத்திலிருக்கும்
அந்த
ஒற்றை நாரைக்கு
தெரிந்திருக்க நியாயமில்லை
தன்னையே
நினைத்துக் கொண்டிருக்கும்
ஓர் உயிரினம் உண்டென!!
பற்றற்று இரு
உலகம் உய்விக்கும்
என்றான் புத்தன்!
பற்றுக் கொள்
சகல உயிரினங்களும்
உவப்பினுள் உய்விக்கும்
அந்த ஒற்றை நாரை குறித்த
எனக்கான அக்கறை பற்றி
என்றோ வாழ்ந்த புத்தனுக்கு
தெரிந்திருக்க வேண்டுமென்பதில்
எந்தவொரு நியாயமுமில்லை
நேற்று
நான்
குளக்கரைக்குச் சென்றிருக்கவில்லை!
குளத்திலிருக்கும்
அந்த
ஒற்றை நாரைக்கு
தெரிந்திருக்க நியாயமில்லை
தன்னையே
நினைத்துக் கொண்டிருக்கும்
ஓர் உயிரினம் உண்டென!!
நேற்று
நான்
குளக்கரைக்குச் சென்றிருக்கவில்லை!


தற்காப்பு
அடுக்களையில்
இலாகவமாய் ஒரு பேச்சு
அம்மா
இன்னிக்கி யாரையும்
திட்டக்கூடாது சரியா??


பிணக்கு
வரைபலகையும்
வண்ணக்கோல்களும்
கொடுத்துவிட்டால்
எதையாவது வரைந்து
வாழ்ந்து கொண்டிருப்பர்
வீட்டுக் குழந்தைகள்!
அப்படியான வாழ்வில்
இப்படியானதொரு பிணக்கு!!
நான் வரைஞ்ச வீட்டுல
அவ வந்து போறதுக்கு
கதவு திறந்து வெச்சிருந்தேன்!
அவ வரைஞ்ச வீட்டுல
கதவு மூடியே இருந்துச்சுன்னு
நான் கேட்டதுக்கு
வீட்டையே இடிச்சிட்டாப்பா!!
நான் கேட்டதுக்கு
வீட்டையே இடிச்சிட்டாப்பா!!

11/03/2013

மாமழை



மூத்தவள்
இரண்டாமவள்
கடைச்செல்லம்
கூட நானும்!
மெளனத்தை உடைத்து
சொற்சோழி பரப்பியவள்
அந்த துடுக்கு மூன்றாமத்துதான்!!

எல்லாரும் ஒவ்வொரு விரலா
எல்லா விரலையும் நீட்டுங்க
தலைக்கு மேல தூக்குங்க
வீடெல்லாம் மரம் முளைச்சாச்சு
ஆட்டுங்க ஆட்டுங்க வேகமா
இப்ப எல்லா மரமும் ஆடுது
வாங்க வெளியில ஓடிடலாம்!
பெருசா மழை வரப்போகுது
வாங்க வெளியில ஓடிடலாம்!!
பேசாம இருக்க மாட்டீங்க?
மழை வருதாம் மழை?!
சும்மா வீட்டுக்குள்ள ஓடிகிட்டு?!
கூப்பாட்டு அம்மாவையும் மீறி
கதவுகள் திறபட்டுக் கிளம்பின
நாலிரு கழல்களும் விருட்டென!
அய்ய்ய் மழை! அய்ய்ய் மழை!!
அம்மா நெசமாலுமே மழைம்மா!!
அடித்த சாரலில் சட்டெனப் பூத்தது
அம்மாவின் முகத்தில் வெட்கப்பூ!!

நன்றி: தென்றல் மாத இதழ்

11/02/2013

விதி









மனசஞ்சலம் தலையெடுத்து
முடிவெடுக்கவியலாத் தருணமெல்லாம்
நாடுவதென்பது அவர்களுள் ஒருவரைத்தான்!
செய்யலாமா? வேண்டாமா??
இரண்டில் ஒரு பதில் கிடைக்கும்.
அதன்வழியே பயணிப்பேன் நான்
விளைவுகளைப் பற்றிய கவலையின்றி!
இதன் பின்னணியில் இன்றொரு சம்பவம்!!
செய்ய நினைத்த செயலின் தலைவிதி
தீர்மானிக்கப்பட்டது பூங்காவின் நிமித்தம் கொண்டு!!
செய்யலாமா? வேண்டாமா??
பார்க்குக்கு விளையாடப் போறேன்னு
சொல்லியும் வேண்டாம்ன்னு சொன்ன நீங்க
என்ன ஏதுன்னு ஒன்னுமே சொல்லாம
செய்யலாமா, வேண்டாமான்னு கேட்கிறீங்களே?
போங்க, வேண்டாம்தான் என்னோட பதில்!!