7/10/2013

பசுங்கொழுந்து

பழுப்பிலைக்கு உயிரூட்டி
அதை உன் மகளாக்கி
கொஞ்சி மகிழ்ந்தவளே!
நீ வாரிக் கொஞ்சுகையில்
கொஞ்சமாயது கசங்கிவிட
நர்சுக்கு போனைப் போடு
சொல்லி அழுதவளே!!
பசுங்கொழுந்து வந்திருக்கும்
வேளை பார்த்துத்தானா,
என் பசுங்கொழுந்து வந்திருக்கும்
வேளை பார்த்துத்தானா
பாதகர் வந்து வெட்ட வேணும்
அந்த ரோட்டோர பூவரசனை?!


7/09/2013

இணையகூலம்

என்ன சொல்லித் திட்டினாலும்
பேசாமல் போவதன் நிமித்தம்
இணையத்தின் மீது பொருமல்!
இன்ட்டர்நெட்ல கெடந்து கெடந்து
உங்கப்பனுக்கு சொரணையே
இல்லாமப் போச்சு பாரு!!


7/07/2013

மையல்

கதிரவன் மேல்வாக்கில் கீழே விழுந்து போய்க் கொண்டிருந்தான். போனவன் சும்மா போகவில்லை. தலையைப் பின்பக்கமாய்த் திருப்பி வெளியில் வியாபித்திருந்த வெளிச்சத்தைத் தன் வாயால் உறிஞ்சிக் குடித்தபடியே போய்க் கொண்டிருந்தான். வெளிச்சத்தின் அடர்த்தி கொஞ்சம் கொஞ்சமாய் நீர்த்துப் போன வேளையது. எனக்கு மிகவும் பிடித்த பொழுதும் அதுதான். அந்த வேளையில்தான் அது தனித்து இருக்கும். லெளகீகம் சொல்லிக் கொடுக்க பிரயாசைப்பட்டுக் கிடக்கும் அது. நான் போனதும் என் கண்களுக்கு மட்டுமே தெரிகிறாற் போல நாணிச் சிரிக்கும். நீளாக் கைகளை விட்டு என்னைத் துழாவும். நான் மருங்கில் ஓடி கடுக்கா கொடுக்கும் போது பொய்யாய்ச் சினந்து விடுவித்துக் கொள்ளும். எங்களுக்கிடையே எவ்விதமான குழூஉக்குறிகளும் இடம் பெற்றிருக்கவில்லை. 

எங்களுக்கே எங்களுக்கான பரிபாடங்கள், எங்களுக்கு மட்டுமே உரித்தானது. அதை நாங்கள் மட்டுமே அறிவோம். இதைக் கண்டு கடந்து போகிற முகில்களுக்கு ஏனிந்தப் பொறாமை எங்கள் மீது?? புதர் வந்தடையும் டிப்பர்களும் கார்டினல்களும் ஒளிந்திருந்து பார்த்திருக்கும். சிக்காடீக்கள் மட்டும் எமைக் கிட்டடியில் வந்து பார்த்து விட்டுப் போகும். இந்த அன்பூடு பொழுதில்தான் முயல் தன் குட்டிகளை வெளியே அனுப்புகிறது. பிறந்த குட்டிகளுக்கு என்ன தெரியும்? எங்களுக்குள்ளான அந்த முயக்கம் அதுகளுக்கு ஒரு வேடிக்கை. இந்நேரம் முக்கிலி போட்டு நீச்சலடித்துக் கொண்டிருந்த கூழைக்கடாக்கள் கரைக்கு வந்து தன் மண்டையை உடலுக்குள் குத்திக் கொண்டன. நேரம் பார்த்துத் தன் நிர்வாணத்தைக் காண்பிக்கத் துவங்கியது அது. பார்க்கப் பார்க்க கொள்ளையழகு. இன்னமும் இங்கேயிருந்தால் என்ன வேண்டுமானாலும் நிகழக்கூடும். திரும்பிக்கூடப் பார்க்காமல் வந்து விட்டேன். 

எங்கே போய்விடப் போகிறது? அது அங்குதான் இருக்கும் என்மீதான பாயத்துடன் இன்னும் கொஞ்சம் அழகு பெருக்கி அது அங்குதான் இருக்கும். தாவளம் வந்து சேர்ந்துவிட்டதாலேயே தடாகக் காதல் பொல்லுக்காதல் ஆகிவிடுமா என்ன?? அந்த மாரீசனே வந்தாலும் மடையனாக்கி விட்டு எமக்காய் அங்கேதான் என்மீதான மையலுடன் மையங் கொண்டிருக்குமந்தத் தடாகம்!!

7/06/2013

FeTNA 2013 Flash mob

புவியைக் காப்பாற்றும் பொருட்டு...

எழுந்து
காலைக்கடன் முடித்து
மின்னஞ்சல் பார்த்து
தட்சுடமில் பார்த்து
சிஎன்என் பார்த்து
தினமலர் பார்த்து
பிபிசி கண்ணுற்று
நக்கீரன் பார்த்து
புதியதலைமுறை பார்த்து
தமிழ்மணம் பார்த்து
பேசுபுக் மேலிருந்து கீழாக இறக்கியபின்
கூகுள்+க்குச் சென்று பார்த்து
குழுமப் பக்கங்களுக்குச் சென்று கண்டு
இவையாவினின்று கிளைத்த பக்கங்களுக்கு
போய் அவையாவும் படித்தறிந்து
எதைக் கையிலெடுப்பது என
தீர்மானிப்பதற்குள் நண்பகல் வந்துவிடுகிறது!
பசித்ததற்கேற்ப புசித்தான பின்
மீண்டும் முதலிலிருந்தே துவங்க 
வேண்டி இருக்கிறது எல்லாமும்!!
இப்படியாய் அனைத்தும் அறிந்து
சிக்கலுக்குத் தீர்வு இது என நினைக்கும் போதே
இருள் சூழ்ந்து உறக்கம் வந்து கவ்வி விடுகிறது!
எனக்கு எப்போது உகந்த நேரம் கிடைக்கும்?
இந்த உலகம் எப்போது சுபிட்சமடையும்??


7/04/2013

திரும்பிய பருவம்



நன்றி: தென்றல் மாத இதழ்


7/03/2013

இராவெல்லாம்!!

இராவெல்லாம்!!

நேற்றைய மாலையின்
தெருச்சந்தையில்
சகாய விலைக்கு
படப்பிடிப்பான் ஒன்று
வாங்கி வந்தேன்!
அங்கிங்கெனாது சுற்றி வந்து
இடையறா இராவெல்லாம் 
எடுத்துத் தள்ளினேன்!
அந்த பூத்தடாகத்தில்
குளித்துக் கொண்டிருந்த
கானகத்து மங்கை!
இதழ்கள் நொந்துவிடாதபடிக்கு
அனுசரணையாய் அமர்ந்து
உண்டு மகிழ்ந்த பட்டாம்பூச்சி!
இந்த மலரின் மகரந்தம்
அந்த மலரின் சூலில்
துளிர்க்கும் அந்த மரவட்டை!
மூக்கும் மூக்கும் உரசி
மாமன் மகன்
அத்தை மகள்
விளையாட்டு விளையாடிய
அந்த இளந்தாரிச் சிட்டுகள் இரண்டு!!
விடிந்ததும் போய்
ஆவற்கண்களில் பார்க்கிறேன் 
அதில் ஒன்றுமேயில்லை!!


7/02/2013

வயிறேகும் பேராறு!!











கரைகரைந்த பெருவெள்ளம்
நங்கூரம் பாய்ச்சிவிட
வாரம் அறுபது டாலர்
பேசி முடிவானது
மெம்ஃபிசு வழித்தங்கல்!
கூதற்கால வெள்ளத்தினால்
வயிறேகி வீதி வருகிறாள்
சுட்டெரிக்கும் கோடையில்!!
அடுத்த கூதலுக்கும்
தப்பாமல் அமைந்து வரும்
மற்றுமொரு வீடுதன்னில்
வழித்தங்கலும் வயிறுதங்கலும்!
இந்த அப்பனறியாப் பிள்ளைகளும்
தாவளம் போட்டுக்கொள்ள
நாள் ஓட்டி நாளையும்
ஓடிக்கொண்டுதான் இருக்கும்
சீற்றமிகு மிசிசிப்பி பேராறு!!