6/29/2013

கண்ணாடி வளையல்











என்றோ ஒரு நாள்!
க.மு இரண்டாம் ஆண்டு
எனக்குப் பிடித்தது
கண்ணாடி வளையலும்
தாவணியும்தானென்று
நான் உன்னிடத்தில் சொன்னதை
நினைவில் வைத்திருந்து
நோகடிக்க வேண்டுமென்பதற்காகவே
அந்த பச்சை வண்ண வளையல்களை
கண்ணில் தெரிகிறாற் போல
வைத்துச் சென்றிருக்கிறாய்!!
தொடக்கூட பயமாயிருக்கிறது
ஏமாந்து விழுந்து உடைந்து விட்டால்
அன்புக் குடம் குறைகுடமானதோ?
கேட்டுச் சுளுக்கு எடுப்பாய்
கண்ணுக்குப் புலப்படாப் பிரம்பும் நீளும்!
தொடாமலும் இருக்க முடியவில்லை!!
தொட்டுப் பார்ப்பதா வேண்டாமா?
கொஞ்சமாய் ஒசந்து
ஒசந்த வேகத்திலேயே தாழ்ந்து
மீண்டும் ஒசறப் பார்க்கும் எண்ணவூசலில்
மெல்ல நகர்கின்றன நத்தை நாட்கள்!!


6/26/2013

நொன்னை நையாண்டி

நொன்னை நையாண்டி

ஓடிக் கடக்கும் அவளது காலடி
கீழே கிடந்த இறகின் மீது 
கொஞ்சமே கொஞ்சமாய்த்தான்
உரசிச் செல்கையில்
நீர்த்தரையை நான் பார்க்க, 
தனக்கே தனக்குத்தான்
நொன்னை நையாண்டியுடன்
மொண்ணை மூக்குக் கெக்கலிப்பு
தீண்டப்பட்டுச் சொக்குண்ட
அந்த குள்ளமணி வாத்துக்கு!!


வாய்த்தமை

நாந்தான் 
காய்கறிக்கார அம்மா!
நீதான்
காய்கறி வாங்க வர்றவங்க!
அப்பா,
நீங்க அவ பின்னாடி வாங்க!
கூடை தூக்கிட்டு வர்ற அப்பா நீங்க!!
குழந்தைகள் உலகிலும்
எனக்கு வாய்த்தது அதேதான்!!

6/24/2013

பேசுபுக் தமிழன், டாசுமேக் தமிழன்

பேசுபுக் தமிழன்

பேசுபுக்கில் இருப்பதே
சிறப்பென்று பலர்!
பேசுபுக்கில் இருப்பவரெலாம்
காவாலிகளெனப் பலர்!!
வேற்றுக்கிரக விசா கேட்டு
இரண்டுக்குமிடையில் நான்!!

0o0o0o

டாசுமேக் தமிழன்

எள்ளுன்னா? 
எண்ணெயா இருப்பேன்!
எண்ணெய்ன்னா?
தீயா இருப்பேன்!
தீயின்னா?
தண்ணியா இருப்பேன்!
தண்ணின்னா?
மட்டையாயிருப்பேன்!!
மட்டைன்னா?
மல்லாந்து கிடப்பேன்!!

0o0o0o



6/23/2013

விழுந்து சிதறிய வினா?!



அந்த கண்டத்திலிருந்து
இந்த கண்டத்திற்குள் வந்து
விழுந்து சிதறியது
வினாவொன்று!
அப்பா!
கண்ணாடிப் பெட்டிக்குள்ள
இருக்குற அந்த அக்காவுக்கு
ஏம்ப்பா மொட்டை போட்டுட்டாங்க??

தேடலின் பரிணாமம்

கடுகு தேடும் போது
சீரகம் கிடைத்தது!
சீரகம் தேடும் போது
கடுகு கிடைத்தது!
ஆதலின்
தண்ணீர் தேடப் போகிறேன்
எண்ணெய் வேண்டுமென்பதால்!!


6/21/2013

நீ வருவாயென!!

நீ வருவாயென!!

படுத்து உறங்கினால்
வந்து கலைக்கிறாய் நீ!
எழுந்து என்ன செய்வது?
நீயின்றி எதுவுமின்றி
அழுகை பீரிடுகிறது
எல்லாமும் வெறுமை!
என்னதான் செய்வது?
இதோ போகிறேன்
படுத்து உறங்க!!

அழகாய் அவள்!!

அழகாக இருக்கிறீர்கள்
சொன்னதும் சொன்னாள்
எனக்காக நேரம் ஒதுக்கி
இன்சொல் கூறியமைக்கு
உங்களுக்குப் பாராட்டுகள்!
என் சொற்களின் எச்சமாய்
அற்றை நாளின்
அவளது
வானூர்திப் பணி யாவும்
சிறந்தே இருந்திருந்திருக்கும்!!

6/20/2013

புல்லும் கல்லும்!!

தற்போது தங்கி இருக்குமிடமும் சரி; அலுவலகமும் சரி, சரியான மலையும் மலைப்படுகையும் சார்ந்த இடம். இரவு உண்டி ஆனதன் பிறகு என்ன செய்வாய் எனக் கேட்டான் அன்றாடம் நாளிதழ் போடுவார்கள். வாசித்துக் கொண்டிருப்பேன் அல்லது இணையத்தில் உசாவிக் கொண்டிருப்பேன் எனக் கூறினேன். என் விடுதியில் இருந்து சரியாக உன் விடுதிக்கு ஏழு மணிக்கு வந்து விடுகிறேன். இருவருமாக அந்த அடிவாரம் வரை நடந்து விட்டு வருவோம் எனச் சொன்னான். இங்கு பாம்புகள் நடமாட்டம் வெகுவாக இருக்குமென்று சொல்கிறார்களே என வினவியதற்கு, நாம் சாலையோர நடைபாதையிலேயே போய்விட்டு வந்து விடுவோம் எனச் சொன்னான். 

அதன்படியே நானும் ஏழுமணிக்கெல்லாம் விடுதி முன்பு போய் நிற்க அவனும் வந்து சேரச் சரியாக இருந்தது. அவன், அவனுடைய அலைபேசியினூடகப் படங்கள் எடுத்து வந்தான். நான் எனது அலைபேசியினூடாகப் படங்கள் எடுத்து வந்தேன். இடையில், ஊருக்கு அழைத்து மனைவி மக்களோடும் ஒரு முறை சுருக்கமாகப் பேசினேன். பேசிவிட்டுப் பார்க்கும் போதுதான் அது நடந்தது. 

திருப்பதி லட்டு அளவிலான கல்லொன்று உருண்டோடி வந்து மற்றொரு கல்லின் மீது மோதியதில், உருண்டு வந்த கல் அங்கேயே நின்றுவிட்டது. மோதப்பட்ட கல் உருளத் துவங்கியிருந்தது. நான் அவனைப் பார்க்க, ஏற்கனவே அவன் என்னைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறான். சிக்கினான் சிங்காரம் என்கிற தொனியில் விரிக்கத் துவங்கினான். ஓடி வந்த கல்லின் எடையும், உருண்டு போன கல்லின் எடையும் தெரிந்தால் உருண்டு வந்த வேகத்தையும் உருண்டு போன வேகத்தையும் கணக்கிட்டுச் சொல்ல முடியும். அல்லது, உருண்டு வந்த தூரமும் வேகமும் தெரிந்தால் இரண்டு கற்களின் எடையையும் கணக்கிட முடியும் என விரித்துரை ஆற்றிப் பெருமைப்பாடு அடைந்து கொண்டிருந்தான். அதற்குள் சில பல அடிகள் முன்னேறியும் வந்து விட்டோம். திடீரென என்ன நினைத்தேனோ தெரியவில்லை; வா, போய்ப் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு அவனது பதிலுக்கும் காத்திராமால் நான் திரும்பி நடக்க ஆரம்பித்தேன். ஓடுவதற்கும் சற்று இளம்புள்ளியான வீச்சுநடையுடன் வந்து என்னைப் பிடித்து விட்டான். இருவருமாக அந்தப் பக்கம் பார்வையை வீசி எறிந்தோம். மோதிவிட்டு நின்ற அந்தக் கல்லையும் இப்போது காணவில்லை. அதுவும் கீழே உருண்டு போய்விட்டது என நினைக்க வேண்டியிருக்கிறது. திரும்பிப் பார்க்கிறேன், முகத்தில் எப்படி ஈஈஈ ஆடும்? ’ஒ’தான் ஒடுங்கி இருந்தது. அதற்கு மேலும் நான் அவனைக் கட்டாயப்படுத்தி அதை அலசி ஆய்ந்தெடுக்க விரும்பவில்லை. நடையை முன்னயபடியே தொடர்ந்தோம். 

கடைசி வரைக்கும் அந்த பழைய கெழுத்தி மீளப் பெறவே இல்லை. நான்தான் எஞ்சிய நடைநேரத்தையும் சொற்கள் பலவற்றால் நிரப்பி வேண்டி இருந்தது. நன்றாகவே விடை பெற்றுக் கொண்டோம். அடுத்து வருகிற கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்த வரைவு(RFP)க்கான வேலைகள்தான் நடந்து கொண்டிருக்கின்றன. இதை வைத்தே ஒப்பந்த ஒப்புதலுக்கான கைச்சாத்தும் அவனிடமிருந்து பெற்றுவிடலாம் எனும் நம்பிக்கை இருக்கிறது. அந்தக் கல்லைக் கண்டுபிடித்து ஆரத்தழுவிக் கொள்ள வேண்டும் போல இருக்கிறது. வல்லவனுக்குப் புல் மட்டுமல்ல, கல்லும் ஆயுதம்தான்!! 

6/19/2013

ஊஞ்சல்

ஊஞ்சல்

தொட்டுப் போகிறது
வாஞ்சைக் காற்று!
பெய்த மழையில்
தனக்குத் தானே
ஆடி மகிழ்கிறது
அந்த ஊஞ்சல்!!

கெட்டவனா?

நிறைய பாம்புகள்
வளைய வரும் இடம் இது 
சொன்னார்கள் கூட வந்தவர்கள்!
ஒன்றுகூடத் தென்படவில்லை!!
அவ்வளவு கெட்டவனா நான்?!

6/18/2013

மணவாளன்


என்ன செய்வதென்பது இன்னும் தீர்மானமாகவில்லை. இதுதான் பிரச்சினையென்பது கூட அவளுக்கு இன்னும் முடிவாகத் தெரிந்திருக்கவில்லை.
தாம் தவறிழைத்து விட்டதாக எண்ணி அவள் அழுவது கூட இதுதான் முதல்முறை. யோசித்துப் பார்க்கக் கூட அவகாசம் வாய்த்திருக்கவில்லை. நமக்கு வேண்டிய நேரத்திலெல்லாம் காலத்தை நிறுத்தி வைக்கவா முடிகிறது? மொட்டைமலைக் குன்றின் மேல் பெய்யும் மழையைப் போல, சடாரென அதன் போக்கில் அது போய்க் கொண்டே இருக்கிறது. அதன் வேகத்திற்கேற்ப என்னவெல்லாம் செய்ய முடியுமோ செய்கிறோம். மற்றதெல்லாம் விடுபட்டுப் போய்விடுகின்றன. அப்படி விடுபட்டுப் போனதில் ஒன்றுதான் இதுவும்.
எதுவொன்றுக்கும் ஆட்படாத வரையிலும் அதுகுறித்தான கவலையில்லை. மகன் குறித்தான கவலையில் இருக்கிறாள் லிண்ட்சி டொமினிக்! அது அவளை என்னவெல்லாமோ நினைக்க வைக்கிறது. அழுகை அழுகையாக வருகிறது. அவன் பேசினாலாவது என்னவென்று கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். ஆனால் தெளிவற்றுப் பேசுகிறானவன். அவன் வேறு யாருமல்ல, தன் மூத்தமகன் நேகன் கோல்டுசுமித்துதான். எதுவானாலும் அலைபேசியில்தான் பேச முடிகிறது அவனிடம். நேரில் சென்று பார்க்க இப்போதைக்கு வாய்ப்பில்லை.
தாயுக்கும் மகனுக்குமான மரபுப் பெயர் ஏன் வேறு வேறாக இருக்கிறது எனும் கேள்வி உங்களுக்குள் எழுமாயின், அது நியாயமானதும் சரியானதுமேயாகும். முதன்மைப் பெயரை விட மரபுப் பெயருக்குத்தான் அமெரிக்காவில் முக்கியத்துவம். மரபுப் பெயர் என்பது பண்பாடு சார்ந்த ஒன்றாகும். ஆனால் தகப்பன் பெயரையே மரபுப் பெயராகக் கொண்டிருப்பவர்களும் இருக்கிறார்கள். அதை ஃபேமிலி நேம், லாஸ்ட் நேம், சர் நேம், அப்பர் நேம் எனப் பலவாறாகச் சுட்டுவார்கள்.
அமெரிக்காவுக்கு வந்த தமிழ் நாட்டுக்காரன் ஒருவன் சமூகநல அடையாள எண் வாங்கப் போனான். அங்கே கொடுத்த விண்ணப்பத்திலிருந்த ஃபேமிலி நேம் எனுமிடத்தில், ’நாட் அப்ளிகபிள்’ என எழுதி விட்டு வந்தான். பின்னர், மிஸ்டர் நாட் அப்ளிகபிள் என மற்றவர்கள் அவனை அழைக்கத் தலைப்பட்ட போது நாணிக் குறுகினான். கட்டிய மனைவி கூடக் காலமெல்லாம் சொல்லிச்சொல்லி கேலி செய்வதாய் அழுது புலம்பினான்.
தாயுக்கும் மகனுக்குமான மரபுப் பெயர் வேறுவேறாய் இருப்பதை அமெரிக்காவில் எங்கும் பார்க்கலாம். நேகன் கோல்டுசுமித்து ஆப்பிரிக்க அமெரிக்கன். அதாவது அவனது தோலின் நிறம் கருப்பு. பண்புகருதி தோலின் நிறத்தைக் கொண்டு குறிப்பிடுவதில்லை. ஆங்கிலாய்டு அல்லது காகேசாய்டு, மங்கோலாய்டு, நீக்ராய்டு என மாந்தரை மூன்று பிரிவுக்குள் அடக்கினாலும், இடத்தின் பெயரால் சுட்டுவதே வழக்கு. மாந்தர் குலத்தின் வயது கூடக் கூட, நாகரிகமும் பண்பும் முதிரத்தானே வேண்டும்? இனியும் ஊனமுற்றோர் எனச் சொல்லலாகுமா?! மாற்றுத் திறனாளிகள் எனப் பண்பு பேணுகிறோம் அல்லவா?? அதைப் போலத்தான், நேகன் கோல்டுசுமித் ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கன். அவன் அம்மா லிண்ட்சி டொமினிக் வெள்ளை நிறத் தோலுடைய காக்கேசியன்.
செயிண்ட் லூயி நகரின் மருத்துவமனை ஒன்றில் தாதியாக வேலை பார்த்து வந்தாள் லிண்ட்சி. அதே மருத்துவமனையில் துப்புரவுத் தொழிலாளியாக இருந்த ஆப்பிரிக்க அமெரிக்கனான மார்க் கோல்டுசுமித்துக்கும் லிண்ட்சிக்கும் இடையே பூத்தது காதல். காதல் கண்களுக்கு நிறம் ஒரு பொருட்டாக இருந்திருக்கவில்லை. அதன் பயனாக, லிண்ட்சி ரோமா என்பவள் லிண்ட்சி கோல்டுசுமித் ஆனாள். லிண்ட்சி கோல்டுசுமித்தாக மாறின ஓரிரு ஆண்டுகளில் அவர்களுக்கு நேகன் கோல்டுசுமித்தும் பிறந்தான். சுருள் முடியும் கறுப்பழகும், அவளைத் தாய்மைக் கடலில் ஆழ்த்திப் பேரின்பத்தைக் கொடுத்துக் கொண்டிருந்த காலத்தின்  பிற்பகல் யாமப் பொழுதொன்றின் போழ்து அறிமுகமானான் காக்கேசிய ஆடவன் குவிண்ட் டொமினிக். அடுத்து வந்த குளிர்காலத்தின் போது, குவிண்ட் டொமினிக் வீட்டிற்குத் தன் கைக்குழந்தையோடு போய்ச் சேர்ந்தாள் லிண்ட்சி. வீடு தேடி வந்தவர்களை வரவேற்று குவிண்ட்டும் ஆதரவளிக்க, லிண்ட்சி டொமனிக்கன் ஆக பெயர் மாற்றம் கொண்டாள் அவள்.
செயிண்ட் லூயி நகரில் இனியும் இருக்க வேண்டாமென நினைத்து, டொமினிக் தம்பதியர் தங்களது குழந்தை நேகன் கோல்டுசுமித்தோடு காலியர்வில்லில் வந்து குடியேறினார்கள்.
நேகன் கோல்டுசுமித் என்பவன் தன்னுடைய மகனாயிற்றே? தன் மரபுப் பெயரைத் தாங்கி வளர்கிற குழந்தையை மறந்துவிட முடியுமா?? பார்க்காமல் இருக்க முடியவில்லை. வாரத்துக்கு ஒரு முறையாவது பார்த்து விட ஏங்கினான் அப்பன் மார்க் கோல்டுசுமித். டென்னசியில் இருக்கும் காலியர்வில் நகருக்கும், மிசெளரியில் இருக்கும் செயிண்ட்லூயி நகருக்கும் முந்நூறு மைல்கள். நெசவுதறியில் சிக்குண்ட ஊசுகோல் போல, தன் மகனைப் பார்ப்பதற்காக இங்குமங்குமாக வந்து போய்க்கொண்டிருந்தான் மார்க் .
அடுத்த பிள்ளைப் பேறு நெருங்கி வர, தன் மகனுக்கான தாயின் கவனம் அருகி வந்தது. அதைக் கவனித்த அப்பன்காரனும் காலியர்வில் நகருக்கே குடி வந்து விட்டான்.  பின்னாளில் தன் மகனின் அம்மாவுக்குப் பிள்ளை பிறந்ததை அறிய நேர்ந்ததும், மகனைத் தன்னுடனேயே கூட்டி வந்து வைத்துக் கொண்டான் மார்க்.
மார்க் தச்சு வேலை பார்த்தான். அருகிலிருக்கும் பண்ணைகளுக்கெல்லாம் கட்டுத்தறிகள் செய்வது, வீட்டுக்கூரைகள் செய்வது முதலானவற்றைச் செய்து வந்தான். தன் அப்பாவிடமே கைத்தொழில் கற்று வந்த நேகனும், தேர்ந்த தச்சன் ஆகிவிட்டிருந்தான். வரச் சொன்ன நாட்களில் மட்டும் போய் தன் அம்மாவைப் பார்த்து விட்டு வருவான். அங்கிருக்கும் தம்பியோடு விளையாடி மகிழ்வான். வீட்டு வேலைகள் இருந்தால் செய்து கொடுத்துவிட்டு வருவான். ஆனால் வெள்ளைக்காரத் தம்பி ஸ்டீபன் டொமினிக்குக்குத் தன் கருப்பு அண்ணனைக் கண்டாலே ஆகாது. நாளடைவில் அவன் வருவதையே நிறுத்தச் செய்துவிட்டான் ஸ்டீபன். இதற்கு நடுவில் வேறு யாருடனோ ஓடிப் போய்விட்டான் லிண்ட்சியின் நடப்புக் கணவனும் ஸ்டீபனின் அப்பனுமான குவிண்ட். சில வருடங்களில், மார்க்கும் உடல் நலம் குன்றி இறந்து போனான்.
செத்தவன் ஒன்றும் சும்மா விட்டு விட்டுப் போகவில்லை. தன் மகனுக்கு காலியர்வில் ஒதுக்குப் புறத்தில் அழகானதொரு வீட்டைத் தச்சுப் பட்டறையுடன் கட்டிக் கொடுத்து விட்டுத்தான் போயிருக்கிறான். சின்ன வீடுதான். ஆனால் அடிப்படை வசதிகளோடும் மரங்கள் புடைத்த நல்லதொரு இயற்கைச் சூழலோடும் அமைந்திருந்தது அந்த வீடு.
ஆர்லிங்டன் பண்ணையொன்றில் கூரை மேய்வதற்குப் போன இடத்தில், நேகனுக்கும் ஆப்பிரிக்க அமெரிக்க மங்கையான செர்ரி மூட்டிக்கும் காதல் மலர்ந்தது. அதனைத் தொடர்ந்து செர்ரி மூட்டியைத் தன் வீட்டுக்கே அழைத்து வந்து விட்டான் நேகன். மகிழ்ச்சியாக இருந்தார்கள். இடையில் தன் தோழி ஒருத்திக்கு திருமணம் என்று சொல்லி,  இல்லினாய் மாகாணத்தில் உள்ள கெய்ரோ நகருக்குப் போனாள் செர்ரி மூட்டி.
பத்து நாட்கள் கெய்ரோவில் இருந்துவிட்டுத் திரும்பியவள் வேறு ஆளாக வந்திருந்தாள். படுக்கையில் இருந்த நேகன் வாந்தி எடுக்கப் போனான். இருவரும் சண்டை போட்டுக் கொண்டனர். முடிவில், வாரத்தில் ஒரு நாள் மட்டும் தன்னைக் கஞ்சாவுடன் மெஸ்கல் அல்லது டகீலா குடிக்க அனுமதிக்க வேண்டும் என உறுதி வாங்கிக் கொண்டாள். குடியில் தகப்பனைப் பறிகொடுத்த நேகன்,  இவளுக்கும் போதைப் பழக்கம் அண்டியிருப்பது கண்டு கலங்கி நின்றான்.
வாரக் கடைசி வந்து விட்டால் போதும், மெம்ஃபிசு நகருக்குக் கிளம்பி விடுவாள் செர்ரி மூட்டி. ஓரிரு மாதங்கள் அப்படியாகக் கழிந்தன. மீண்டும் காலியர்வில் வீட்டிலேயே தன் ஆட்டத்தைத் துவங்கினாள் செர்ரி. இரவு நேரங்களில் கஞ்சா புகைத்து விட்டு சல்லாபத்துக்கு அழைப்பாள். கிட்ட நெருங்கினாலோ குடல் குமைந்து  வாந்தி வரும் அவனுக்கு. வராவிட்டால் தான் கத்தியால் குத்திக் கொள்ளப் போவதாகச் சொல்லி மிரட்டினாள். வீதியில் போவோரை அழைக்கத் தலைப்பட்டாள். துயர் தாளாது, அவளைக் கொண்டு போய் மெம்ஃபிசு நகரிலுள்ள அவளது நண்பர்கள் வீட்டில் விட்டுவிட்டு வந்து விட்டான். இது நடந்து பத்துப் பனிரெண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. போனவள் போனதுதான்.
சோவென்று மழை பெய்து ஓய்ந்திருந்தது. மரங்கள் எல்லாம் அவ்வப்போது சிலிர்த்தன. ஒவ்வொரு சிலிர்ப்பின் போதும் பன்னீர்த் துளிகள் தன்மீது பட்டுத் தெறிப்பதை உள்வாங்கி மகிழ்ந்தான். வானத்தைப் பார்த்தான். முகில்கள் கலைவதும் புணர்வதும் விதவிதமாய் நகர்வதுமாக இருந்தன. தனக்குப் பிடித்தமான முகில் ஒன்றின் மேல் ஏறிப் படுத்துக் கொண்டான். அதன் மேல் உலாப் போவதன் இன்பம் மனத்துள் ஊற்றெடுத்தது. கிழக்குப் புறத்திலிருந்த ஆலிவ் மரம் அவனைப் பார்த்துச் சிரித்தது. “யூ, ஆலி பப்ளீ” என்று கத்திக் கொண்டே போய் கீழார்ந்த கிளையப் பிடித்துக் தொங்கினான். தொங்கியதில் அது சிலிர்க்க, நீர்த்துளிகள் அவனைப் பதம் பார்த்தது. “அஃகஃகா, யூ  டுக்  ரிவெஞ்ச் ஆன் மி, இஸ் இட்?” என்று வினவிக்கொண்டே வீட்டின் முன்புறமிருந்த சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடியே ஆலிவ் மரத்தைப் பார்த்தான். ஆலிவ் மரமும் அவனும் கண்களால் பேசிக் கொண்டு அன்புற்றுப் கலப்பதை முகில்கள் பார்த்துக் கொண்டே கடந்தன.
மீண்டும் இருட்டி வருவதைப் போல உணர்ந்தவன் தன் காரை எடுத்துக் கொண்டு போனான். பட்டறையில், உளி கதிர்கள் முதலான சாமான்கள்  போட்டது  போட்டபடி இருந்தன. வீடு கூட சாத்தப்படாமலேதான் இருக்கிறது. உண்மையாய் நேசிக்கும் ஆலிவ் மரமும், செர்ரி மரங்களும், மேப்பிள் மரங்களும் காவலுக்கு இருக்கும் போது வீட்டைப் பூட்டுவதற்கான அவசியம் அவனுக்கு இருந்திருக்கவில்லை.
வாங்கி வந்த ரொட்டி ரெண்டு ராத்தலையும், பால் ஒரு கேலனையும் வண்டியின் பின்புறத்தில் வைத்து விட்டுக் கதவைச் சாத்தினான். யாரோ காருக்குள் முனகுவது போல இருந்தது. மீண்டும் பின்பக்கக் கதவைத் திறந்தான். மழை துளிக்கத் துவங்கியிருந்தது. யாரோ இருட்டைக் கொண்டுவந்து கார் முழுக்கத் திணித்திருந்தார்கள். காருக்குள் நெருக்கடி தாளாமல், இருட்டுதான் அழுது கொண்டிருக்கிறதா? அவற்றின் கண்கள் எங்கேயென்று துழாவினான். ஆனால், திடீரென மின்னிய மின்னல் ஒன்றில் செத்துச் சாம்பலாகிப் போனது இருட்டு. கதவை மூடிவிட்டு வந்து காரின் முன்பக்கக் கதவைத் திறக்க முற்பட்ட போதுதான் கவனித்தான்.
ஹிக்கரி மரத்திற்குக் கீழே என்னவோ அசைவது போலவும், அசையும் அந்த எதுவோ அதுவிலிருந்துதான் சத்தம் வருகிறது என்பதையும் உணர்ந்தான். மேப்பிள் இலையின் மஞ்சள் பழுப்புக்கும் செம்பழுப்புக்கும் இடையிலான ஒரு நிறத்தில் மெலிதான துணியொன்று போர்த்தப்பட்டிருப்பது போலத் தெரிந்தது. அருகே செல்லச் செல்ல அதற்கு இரண்டு கால்கள் முளைக்கத் துவங்கின. அட, ஆச்சரியமில்லை. இரண்டு கைகளும் இருக்கின்றன. ஆனால் இரண்டையும் ஒன்றாக்கி மார்புக்கு மேல வைக்கப்பட்டிருக்கிறது. ஒரு தலையும் இருக்கிறது. ஒருக்களித்து இருப்பதால் சரியாகத் தெரியவில்லை. கூடவே முனகலும்.
”ஏய், என்னாச்சு உனக்கு?”
“பசிக்குது”
“சரி வா அப்ப”
என்ன ஆச்சர்யம்? அது ஒரு பெண். அதுவும் புள்ளத்தாச்சி. அடிவயிறு பெருத்து இருப்பதைப் பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது. ”ஓ விழப் போகிறது, விழப் போகிறது!!”, யாரோ எட்ட இருந்து அலறினார்கள். ஒரே பாய்ச்சல், அலேக்காய்த் தூக்கினான் நேகன். கொண்டு போய்க் காரில் போட்டான்.
“அம்மா, நான் இப்ப அங்க வரலாமா?”
”ஏய், நேகன்! என்ன ஆச்சர்யம்? அம்மா நினைப்புகூட உனக்கு இருக்காடா??”
“அம்மா, அதெல்லாம் வேண்டாம். நான் இப்ப அங்க வரலாமா??”
“ஓ, உன்னோட தம்பி கூட வெளியில போயிருக்கான். சீக்கிரமா வா, அவன் வர்றதுக்கு முன்னாடியேவும்!”
ரொட்டியில் கொஞ்சத்தைப் பிய்த்துக் கொடுத்துவிட்டுக் கேட்டான், “உன்னோட வீடூ எங்க சொல்லு. நான் கொண்டு போயி விட்டுடுறேன்!”
இசிக்கிய மாங்காயைப் போன்ற தலை மட்டும் ஆடியதிலிருந்து புரிந்தது அவள் ஒரு வீடில்லா ஏதிலியென்று.
ஒரே அமுக்கு. வின்ச்செஸ்டர் சாலையிலிருந்து பல சாலைகளைக் கடந்து நியூவில்லோ சாலைக்குப் போய்ச் சேர்ந்தான். வீட்டு வாசலியே லிண்ட்சி நின்று கொண்டிருந்தாள். “ஹாய், நேகன்! என்னோட செல்லம், வாடா வாடா!!”, அரவணைத்துக் கொண்டாள். வீட்டுக்குள்ளிருந்த தன் தம்பியின் மனைவி பமீலா எட்டிப் பார்த்துக் கொண்டே ‘அகோ’ சொன்னாள்.
“அம்மா, எனக்கு ஒரு ஃபேவர் வேணும். உள்ள இருக்கிற அந்தப் பொம்பளைக்கு எதாவது குடுத்து இன்னிக்கி இராத்திரி இங்கயே வெச்சுகுங்க!”
லிண்ட்சியும், பமீலாவும் காருக்கு ஓடிப் போய்ப் பார்த்து மிரண்டு போனார்கள். “யார்றா இது? போட்டுக்கத் துணி கூட இல்லையாமா?”
“அம்மா, நானே அவளை இப்பதான் அந்த வின்ச்செஸ்டர் டாலர் ஸ்டோர்கிட்டப் பார்த்தேன். குளிர்ல நடுங்கிட்டுக் கீழ கிடந்தா!”
“போடா! இந்த நிலைமையில, உன் தம்பி வந்தான்னா அவ்ளோதான். துப்பாக்கி எடுத்துட்டு வந்து உன்னையும் போட்ருவான். என்னையும் போட்ருவான். போயிடு, நீ இங்க இருந்து போயிடு!”
“என்னமா சொல்ற? நான் இந்தப் பொம்பளைய என்ன செய்வேன்? ப்ளீஸ்மா, புள்ளத்தாச்சியா வேற இருக்கா?!”
”அங்க எங்கனாவது சர்ச்ல கொண்டு போயி உட்ரு, போ!”, வீட்டுக்குள் ஓடியே போய்விட்டாள் பமீலா.
”அப்ப நீயே சொல்லு. எனக்கும் சர்ச்சுக்கும் ஏழுகாத தூரம். எனக்கென்னம்மா தெரியும்?”
“போடா, நீயே போயி என்னமோ செய். நாளக்கி போன் பண்ணு!”, அம்மாவும் உள்ளே போய் விட்டாள்.
காருக்கு வந்தான் நேகன். அது மீண்டும் காருக்குள் சரிந்து விட்டிருந்தது. பழுப்பு நிறத் துணி சரிந்து எல்லாமும் தெரிந்தது. தன் கைகள் கொண்டு அந்தத் துணியை எடுக்கப் போனவன், சரேலெனக் கைகைப் பின்வாங்கிக் கொண்டான்.
காலியர்வில்லுக்கும் ஆர்லிங்ட்டனுக்கும் இடையிலிருக்கிற தன் ஒதுக்குப் புற வீட்டுக்குப் போனான். டெரிக் ஓடி வந்து பாய்ந்தான். “ஏய் டெரிக்! நம்ம வீட்டுக்கு ஒரு மிஸ் வந்திருக்காங்க. பாரு!!”
காரின் பின்பக்கக் கதவைத் திறந்து விட்டான் நேகன். அம்மணமாய் எழுந்து வந்தாள் அவள். டெரிக் பதறிப் போய் தச்சுப் பட்டறைக்குள் ஓடி ஒளிந்து கொண்டான். அவசர அவசரமாய் அந்த மெல்லிய பழுப்புத் துணியை எடுத்து அவள் மேல் போட்டான். அதை எடுத்துத் தன் கையில் வைத்துக் கொண்டாள் அவள்.
வீட்டுக்குள் சென்று படுக்கையின் மேலிருந்த போர்வையைக் கொண்டு வந்து போர்த்தினான். மெலிதாகச் சிரித்தாள் அவள். தன்னுடைய ஒரு இலையைக் கூட அசைய விடாது நின்று பார்த்துக் கொண்டிருந்தன ஆலிவ் மரமும், மேப்பிள் மரங்களும்.
“தண்ணி கொஞ்சம் கிடைக்குமா?”, சன்னமான குரலில் பேசினாள். இறுக்கம் தளர்ந்து இலைகளை அதனதன் போக்கில் அசைய விட்டன சுற்றியிருந்த மரங்கள். வாலை ஆட்டிக் கொண்டே வெளியே வந்து நின்றான் டெரிக்.
”கமான் இன்!”, தண்ணி பாட்டிலைக் கையில் பிடித்தபடி பூத்துச் சில நொடிகளேயானதொரு புது முகத்துடன் வரவேற்றான் நேகன்.
நேராக உள்ளறைக்கு அழைத்துப் போய் தன் படுக்கையைக் காண்பித்தான். அவளும் போய்ச் சாய்ந்து கொண்டு அரைக்கால்வாசிக் குரலில் சொன்னாள், “ஓக்கே ஓக்கே!”.
அடுக்களைக்கு ஓடினான். ஒரு தட்டில் ப்ளேக் பீன்சையும் கொஞ்சம் கெட்ச்அப் கலவையையும் போட்டு நுண்ணலையடுப்பில் வைத்துச் சூடேற்றினான். தலையை இங்குமங்கும் திருப்பிக் கொண்டு அமைதியாய் நடப்பதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தான் டெரிக்.
கொடுத்ததைச் சிறு கரண்டி கொண்டு தின்னத் துவங்கியிருந்தாள் அவள்.  தண்ணீர் பாட்டில்கள், வாழைப்பழம், மெலிந்த துணியாலான துண்டு முதலானவற்றைப் பவ்யமாய் அவளது தலைமாட்டில் வைத்தான்.
“இங்கதான் கழிப்பறை இருக்கு. இங்க தண்ணி இருக்கு!”, சொல்லிய பின் பட்டும் படாமல் கதவைச் சாத்திவிட்டு வெளியே வந்தான்.
“இங்கே என்ன நடக்கு?”, என்கிற தோரணையில் டெரிக் ’வவ்’வென்றான்.
“என்னடா அப்படிப் பாக்குறே? ச்சீ, நாயே! அப்படியெல்லாம் ஒன்னுமில்ல! ஷி வாஸ் எபவுட் டு டை தெரியுமா? நாந்தான் காப்பாத்திக் கூட்டிட்டு வந்தேன். எங்கம்மா ஒரு பிட்ச். வெள்ளக்காரியாம் பெரிய வெள்ளக்காரி. ரெட் நெக் ஆளுகளே ஒரு கோழப்பசங்க. ஒரு வெள்ளக்காரி இன்னொரு வெள்ளக்காரிக்கு உதவி செய்யக்கூடாதா? எங்கப்பா சொன்னது சரிதாம் போலிருக்கு!”
வெளியே வந்தான். தச்சுப் பட்டறைக்குப் போனான். குதூகலமாய் இருந்தது. சீவலுளியை எடுத்து வேலை பார்க்கத் துவங்கினான். பாட்டுப் பாடினான். இந்த உலகம் இனிமையானதென்றான். படகு இருந்தால் அதற்கான துடுப்பும் அமையும் எனச் சொல்லிக் கொண்டான்.
மூலையில் கலைந்திருந்த கழிகளையெல்லாம் எடுத்து அடுக்கி வைத்தான். அடைபட்டிருந்த அரைவாசி அளவுக்கும் மேற்பட்ட இடம் ஒழுங்காகி, பட்டறையே பெரிதாகிப் போனது.
“டே, டெரிக்! அப்படியெல்லாம் போயி அடுத்தவங்க என்ன செய்யறாங்கன்னு பாக்கக் கூடாது. அவங்களுக்குப் பிரைவசி வேணும்ல? நீ எங்கூடவே இரு!”
சொல்லுக்குக் கட்டுப்பட்டவன் டெரிக். பேசாமல் பின்னால் வந்து நின்று கொண்டான்.
சத்தத்தைத் தூக்கித் தூர எறிந்து விட்டு, இருவரும் அமைதியை வாங்கிக் கால்களில் போட்டுக் கொண்டனர். சமையலறையிலேயே உட்கார்ந்து வேண்டியதெல்லாம் எடுத்துச் சாப்பிட்டான் நேகன். பால் மட்டும் குடித்து விட்டு, வேறெதுவும் வேண்டாமென்கிற வாக்கில் வந்து சோபாவில் ஒய்யாரமிட்டுக் கொண்டான் டெரிக்.
கதவுகளைச் சாத்தி விட்டு பட்டறைக்குப் போனார்கள். மீண்டும் இழுவுளியால் கழிகளைச் சீவிச்சீவி மிளிர்ப்பூட்டினான்.  நாளைக்குச் செய்ய வேண்டிய வேலை எல்லாவற்றையும் முன்னிரவிலேயே செய்து முடித்து விட்டான். சத்தத்தைப் பட்டறையிலேயே இறக்கி வைத்து விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்தனர் இருவரும்.
தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்னாலிருக்கும் சோபாவில் நீட்டிப் படுத்து விட்டான் நேகன். அவனுக்கு மேலே ஏறி அந்த முடக்கில் முடங்கிக் கொண்டான் டெரிக்.
வெளியே ஆலிவ் மரத்துக்குப் பொறுக்க முடியவில்லை. தன்னுடையவன் தன்னிலிருந்து போய் விடுவானோயென்கிற இட்டுமுட்டு அதற்கு. மேப்பிள் மரத்து இலைகள் ஒன்றுக்கொன்று பொரணி பேசிக் கொண்டிருந்தன. செர்ரி மரத்துக் கிளைகளில் இருந்த டிப்பர் குருவிகள், “கத்தரிக்காய் முற்றினால் சந்தைக்கு வரப் போகிறது; அதற்குள் எதற்கு இந்த அரசல்புரசல்?” என்று ஒருமனதாய்த் தீர்மானம் நிறைவேற்றிவிட்டு ஒன்றுக்கொன்று ஏககாலத்தில் ஆலிங்கனம் செய்து கொண்டன.
எதோ கனவில் எழுகிற சத்தம் போல இருந்தது. “டே டெரிக், பேசாம இருடா. தூங்கிட்டு இருக்கன்ல?”.
சத்தம் நன்றாகவே கேட்கிறது. திடுக்கிட்டு எழுந்தான்!
“அகோ, மிஸ்!”
“விடிஞ்சிடிச்சில்லயா? ஒட்டு உறவு, வீடு வாசல் இல்லாத ஒரு நாடோடி நான். போகத்தானே வேணும்?”
உணர்வற்றுப் போய் இருளோவென்றிருந்தது. உள்ளோங்கிய குகையொன்றினூடாக இருக்கும் கைகளுக்கெதுவும் தட்டுப்படாத வெளியில் தள்ளிவிட்டது போலிருந்தது.
முகத்தை மூடிக் கொண்டு அப்படியே தரையில் உட்கார்ந்திருந்தான் அவன்.
திடுமென எழுந்து வெளியில் ஓடினான். அவன் ஏறிடவும் தெருமுனையில் ஒரு புள்ளியாய்த் தெரிந்து பின் மறையவும் சரியாய் இருந்தது.
“ஹோல்ல்லி ஷிட்!”, பெருங்குரலெடுத்து இரைந்து கொண்டே எட்டி ஒரு உதை விட்டதில் ’க்க்கைன்ய்’ என்று கத்திக் கொண்டே போய் எட்ட விழுந்தான் டெரிக். அவன் வீட்டு மரங்களோடு அண்டைப்புறத்து மரங்களும் அதிர்ந்து நடுங்க, அதனதன் அடிப்பழுப்பு இலைகளெல்லாம் உதிரத் துவங்கின.
பின்னங்கால்த் தொடைகளில் முழுப்பாரத்தையும் இறக்கி வைத்து முன்னங்கால்களால் முன்னூன்றிக் குந்திக் கொண்டு, வைத்த கண் வைத்தபடியே கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் டெரிக்.
கேவிக்கேவி அழுது கொண்டிருக்கும் தன் மணவாளனைத் தேற்றுவதற்குத் தன்னிடம் பேசும் சக்தி இல்லையேயென்று புழுங்கிக் கொண்டிருக்கிறது அந்த ஆலிவ் மரமும்!!
நன்றி: வல்லமை

6/17/2013

கொள்ளைச்சினம்!!

உப்புசம்

அப்பா
அமெரிக்காமாரி
மேகங்கெல்லாம்
ஒடஞ்சி
நொறுங்குறதே இல்ல
இந்தியாவுல!
எப்பப் பாத்தாலும்
உப்புசம்!!


கொள்ளைச்சினம்!!
ஸ்டீவ் ஜாப்ஸ்,
கொள்ளைச்சினம் உம்மீது!
காலார நடைபழகும் குளத்தை
எப்போது படம் பிடித்தாலும்
கால், அரைவாசியெனத்தான்
பார்வைக்குக் கிடைக்கிறது!
ஏனய்யா ஒற்றைக்கண்ணோடு
ஐபோனை அனுப்பி வைத்தீர்?
சரி போனது போகட்டும்!!
ஐயா, பொறுப்புமிகு டிம் குக்
நீராவது இனி அனுப்பும்!
இரு கண்களையும்
வடிவாய் வைத்து!!



6/16/2013

பிரசரெண்ட் ஊட்டு அக்கா!

அவர் இருந்த வரையிலும்
எப்பவும் வரவும் போகவுமா
இருப்பாங்க ஆளுக!
காலையில வந்து உக்காந்துட்டு
இட்லி தோசை வேணாம்
பசிக்குது சோறுதான் வேணும்பாங்க!
மத்தியான நேரத்துல வந்துட்டு
குடிக்கக் காப்பி குடுக்குறீங்களாம்பாங்க!
கூட வந்தவனே சொல்வான்
காப்பி வேண்டாங்க அண்ணி
மோர் குடுங்கன்னு சொல்லுவான்!
ரெண்டு பேருக்கு ரெண்டும் குடுப்பேன்!!
ராத்திரி நேரத்துல இரவையையோ
சேமியாவையோ கிளறிப் போட்டாக்க
இரசமும் பழையசோறும்
போடுங்கன்னு சொல்லிட்டு உக்காருவாங்க
இதுக எல்லாமே
அவர் இருந்த வரையிலுந்தான் தம்பி
இப்பெல்லாம் யாருமே வர்றதில்லை
எப்பவாச்சும் ஒருக்கா
புது ஆளுங்க வர்றாங்க
சாப்பாடெல்லாம் வேண்டாம்
கைச்செலவுக்குப் பணம் குடுங்க
அண்ணன் இருந்தா குடுப்பார்தானேன்னுவாங்க
அம்பது குடுத்தா நூறு குடுன்னுவாங்க
நூறு குடுத்தா இரநூறு குடுன்னுவாங்க
நானும் எடுத்தாந்து குடுப்பேன்
எல்லாம் தெரிஞ்சே குடுக்குறதுதாந் தம்பீ
அவிங்களாவது வந்திட்டுப் போறாங்கல்ல?!
நீங்க உங்கப்பாவைக் கவனிச்சிக்கோங்க தம்பீ!!

6/09/2013

ஊர் வலசை

வேண்டிய போதெல்லாம்
ஒரு பார்வையாளனாக
உள்நுழைந்து
இன்புற்று
மனமார்ந்து
திரும்புகிற
எங்கள் வீட்டுக்
குழந்தைகள் உலகத்தில்
யாருமே இல்லை!
அவர்கள்
வேற்றுலகிற்கு
உலாப் போயிருக்கிறார்களாம்;
சொல்லியழுகிறது
தொடப்படாமல் 
மூலையில் கிடக்கும்
கரடி பொம்மைகளுள் ஒன்று!!

6/08/2013

தற்கொலை

தற்கொலை

என் பெயர் சின்னத்தம்பி!
பேனாவுக்கு மை போட
கடைக்குப் போயிருந்த வேளை
வேலுமணி அக்கா
கசக்கப்பட்டுக் கொண்டிருந்தாள்!
போடா! இங்க்கும் இல்லை
ஒன்னுமில்லை, போ!!

அடித்த காற்று
மின்சாரத்தைக் களவாடிவிட
ஒளியூட்டும் மெழுகுதிரி
வாங்கப் போயிருந்த வேளை
பெண்டாட்டியானவள்
மயிர் இழுபட்டு
அறை வாங்கிக் கொண்டிருந்தாள்!!
என்னடா வேணும் உனக்கு?
இருட்டுக்குப் பொறந்தவனே
இந்தா போ!!

அம்மாவுக்குத் தலைவலி
அனாசினோ சாரிடோனோ
வாங்கப் போயிருந்த வேளை!
கடன் வாங்கத் தெரியுதல்ல?
வாடி பேசாம உள்ள!
வராதவளைப் பிடித்திழுக்க
சடாரெனத் தற்கொலை
செய்து கொண்டேன்!
கல்லை எடுத்தேன்;
மண்டையை உடைத்தேன்;
வீதியில் இறங்கினேன்!!
இப்போது என் பெயர்
கட்டக்காட்டு சின்னராசு!!



மனம்

நன்றோ தீதோ
உவப்போ கசப்போ
இனிமையோ தனிமையோ
தன்னுதலோடு
உறுவது கொண்டாள
கேட்கும் பொழுதெலாம்
வேண்டியது கொடுத்து
விரிந்தே கிடக்கிறது
கட்டற்ற எல்லையிலா
மாயவான் மனவெளி!!


6/07/2013

அடுக்களையும் அமைதியும்!!

தவளைகளின்
அட்டகாசத்தில்
ஆர்ப்பரித்துக் கிடக்கும்
குளத்திலும் அமைதி
மணவாட்டி இல்லாத
அடுக்களை போல!!
வணக்கம். இவ்வார வல்லமையாளர் பத்தியில், அன்பு திவாகர் அய்யா அவர்கள் இச்சிறு கவிதையைக் குறிப்பிட்டு இருக்கிறார். மூலையில் எங்கோ புதையுண்டு கிடக்கும் அந்த நுண்ணுணர்வினைக் களைந்தெறிந்து விட்டு வாசித்தால் இனிப்பைத் துறந்து விட்டு மெல்லும் கரும்புச் சக்கை போலத்தான் இருக்கும் எப்பேர்ப்பட்ட கவிதையும். அதற்கு இதுவும் விதிவிலக்கல்ல. அன்பு அய்யா அவர்களுக்கும் இக்கவிதையில் புதைந்திருக்கும் அந்த நுண்ணுணர்வின் தாக்கம் இருக்கிறது. அனுபவமும் நெகிழ்வும் தரித்த படைப்பாளிக்கு அதன் தாக்கம் இருக்கப் பார்ப்பதில் வியப்பில்லைதான். ஆனால் எமக்கு எல்லா நேரமும் அது வாய்க்கப் பெறுவதில்லை. அவ்வுணர்வைச் சரியாக வெளிப்படுத்துகிற கவிதைகளின் வீரியமும் அளப்பரியது. எனவேதான் கவிஞர்கள் உலகை ஆளுகிறார்கள். கவிதைகளாலே புரட்சிகள் பல பிறக்கின்றன! மக்கள்சக்தியை பராசக்தியாக்கி நாட்டைத் தட்டி எழுப்பினான் மகாகவி.
மனத்துள் விளைந்ததை எழுதிவிட்டு நிமிர்ந்து பார்த்தேன். வினாவொன்று நம்மை நிற்கவைத்து வினவியது. மணவாட்டி என்றால் அடுக்களைதானா? முற்போக்குவாதம் எனக் கையிலெடுத்துக் கொண்டு வந்தால் நீ பிற்போக்குவாதியாகி விடமாட்டாயா?? சிந்தையில் விழுந்தது சாட்டையடி. உள்ளதை உள்ளபடிச் சொல்லாமல் திரித்துச் சொல்வதுவும் நன்றன்றோ? எதிர்ச்சாட்டையின் வலு முன்னைய அடியைக் காட்டிலும் மிகுந்திருந்தது. வல்லான் வகுத்ததே வாய்க்காலெனக் கருதியும் உண்மை கருதியும் பின்னதன் சொல்படியே, எழுதியது எழுதியபடியே இருக்கட்டுமென இருந்து விட்டேன்.
”வெயிலின் அருமை நிழலில் தெரியும்; அண்மையின் அளவு அகல்தலில் தெரியும்!” என்பார்கள். விடுமுறைக்காலப் பயணமாகத் தாயகம் சென்றிருக்கும் மணவாட்டிக்கும் எனக்குமான அணுக்கம் அகம் குறித்தானது; எனவே எங்களுக்குள் பிரிவென்றேதும் கிடையாது. ஆனால் புறத்துக்கும் அகத்துக்குமான பிரிவு, அதாவது அடுக்களைக்கும் அவருக்குமான பிரிவின் தாக்கம் எமக்கு உண்டு. எனக்குச் சமைத்துக் கொடுக்க ஆளில்லாமல், நானே சமையலை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதல்ல அதன் பொருள். அமைதியாய்ச் சலனமெதுவுமின்றிக் காணப்படும் அடுக்களைதான் எம்மை என்னவோ செய்கிறது. அடிக்கடி சென்று பார்க்கிறேன். வெறுமையாய் இருக்கிறது. அந்த வெறுமையே எம்மிலும் புகுந்து பிரிவைச் சொல்லிக் காட்டி கெக்கலிக்கிறது.
நகரில் பிறந்து வளர்ந்து ஆளானவர் மணவாட்டி. மணமாகும் வரையிலும் செல்லப் பிள்ளைக்கே உரிய பாங்கில் சமையல் வேலை எதுவும் செய்யாமல் படிப்பும் விளையாட்டுமாய் இருந்த ஒருவர். சமையல் கட்டுக்கும் அவருக்கும் யாதொரு பிணைப்பும் இருந்ததில்லை. ஆனால் இன்று? பட்டறையே கதியென்று கிடக்கும் பொற்கொல்லனைப் போல இருக்கிறார். அவருக்கு எல்லாமும் எப்போதும் அடுக்களைதான்.
சிறப்புப் பட்டம் பெற்று, மருத்துவத்துறையின் உரிமம் பெற்ற ஒருவர் இப்படியானதொரு பாங்கில் இருக்கிறாரே என எண்ணி நான் வியந்தது எண்ணற்ற முறை. பொதுவாக ஒருவர் காலையில் எழுந்ததும் கழிவறைக்குச் செல்வது வழமை. ஆனால் இவரோ அடுக்களைக்குச் செல்வார். சும்மா அடுக்களைக்குச் சென்று அங்கொரு திருகு போட்டு விட்டுப் பின்னர் கழிப்பறைக்குச் செல்வார். சில நேரங்களில் சும்மாவேனும் எதோவொரு கதவினைத் திறந்து பார்த்து விட்டு, இருக்க வேண்டிய இடத்தில் இருக்க வேண்டியது இருக்கிறதாவென உறுதி செய்துவிட்டுச் செல்வார்.
வெளியே எங்கு போய் விட்டு வந்தாலும் சரி, கதவைத் திறந்து கொண்டு நேரடியாக அடுக்களைக்குப் போய் கண்களைச் சுழலவிட்டு ஒரு கோடியிலிருந்து மறுகோடி வரைக்கும் மேய்ந்தானபின் அங்கிருக்கும் நீர்க்குவளையில் ஒரு வாய் தண்ணீர் குடித்து விட்டுத்தான் இயல்புக்கு வருவார். விமான ஓட்டியின் அந்த ஒற்றைப் பார்வைக்கு நூறு கண்கள் இருக்கும். தன் எதிரே இருக்கும் நூற்றுக்கணக்கான எண்ணிமகாட்டிகளில் எதுவொன்று இயல்பிலியாக இருந்தாலும் உடனுக்குடன் அறிந்து கொள்கிற ஆற்றல் ஒரு விமானிக்கு உண்டு. ஆனால் என் மணவாட்டியின் அடுக்களைப் பார்வைக்கோ ஆயிரம் கண்கள். அதனதன் வைப்பிடத்தில் ஏதேனும் மாறுதல் இருந்தாலோ, இருக்க வேண்டிய இடத்தில் ஏதேனும் இல்லாமற் போனாலோ, புதிதாய் ஏதேனும் இடம் பெற்றிருந்தாலோ சட்டெனக் கண்டுபிடித்து விடுவார்.
அடுக்களையில் இருந்தபடியே குறுங்கணினியில் மின்னஞ்சல் பார்ப்பார். அடுக்களையில் இருந்து கொண்டே தொடுப்பிலித் தொலைபேசியினூடாக தாத்தா, பாட்டி, அதாவது என் அம்மா, அப்பாவை அழைத்து அவர்களுக்கு நடக்க வேண்டியது கிரமத்துடன் நடந்து கொண்டிருக்கிறதாவென அறிந்து கொள்வார். சில பல நேரங்களில் ஊரில் இருக்கும் அம்மா, அமெரிக்க அடுக்களையில் சமைத்துக் கொண்டிருப்பார். ’பொசுக், பொசுக்னு நாள் முச்சூடும் டாக்டர்கிட்டப் போய்ட்டு இருக்கப்படாது. கைக்குழந்தைகள்னா அப்படித்தான். இஞ்சியத் தட்டி இதுல போடு. சுக்கைத் தட்டி அதுல போடு. எண்ணைய சுட வெச்சி அதுல நாலு பல்லுப் பூண்டைப் போடு” என்று அடுக்களையில் அற்றைநாள்ப் போருக்கான முசுதீபுகள் பதினாறு இறக்கைகள் கொண்டு பறக்கும்.
“அம்மா, சீனு என்னோட அதை எடுத்திட்டு தர மாட்டீங்றான்” என்று பெரிய புராணத்தோடு வந்து நிற்கும் இரட்டை வாண்டுகளில் ஒன்று. ஒட்டிப் பிறந்தது வாளாதிருக்குமா? கூடவே வந்து நாயனத்துக்கு ஒத்து ஊதும். இலாகவமாக அதுகளுக்குப் பஞ்சாயத்து நடப்பதும் அந்த அடுக்களையில் வைத்துத்தான்.
சற்று நேரத்தில் அடுத்தவர் வருவார். “அம்மா, நேத்தே சொன்னனே? ஃபீல்டு ட்ரிப்புக்கு இருபது டாலர் கட்டணும்!”. அடுக்களையின் எதோவொரு இழுப்பறையை இழுக்க வந்து சேரும் வேண்டிய அந்த இருபது டாலர். எதற்காவது அடுக்களைக்குள் நாம் செல்ல நேரிட்டாலோ, வந்து பாயும் காண்டீபக் கணைகளும் பேட்ரியாட்களும். “இங்கென்ன செய்றீங்க? நீங்க போங்க. நான் எடுத்துத் தர்றேன்!”. நமக்கு ஒரு போதும் அனுமதி கிடையாது. அடுக்களைக்கு நாம் ஒரு அந்நியன். எத்தனையோ ஃபோபியோக்கள், கிலிகள் உண்டு. இது ”அடுக்களையோ கிலி”. எடுத்ததை எடுத்த இடத்தில் வைக்காமல் விட்டுவிடுவோமோ என்கிற கிலி.
“சின்னவங்க ரெண்டு பேரும் வாங்க. உக்காருங்க பேசாம. சாப்டுட்டுப் போயி விளையாடுவீங்களாமா!! இருந்து, ஆற அமரச் சாப்பாடு உண்ண ஆயிரம் அறைகலன்கள் வீட்டில் இருந்தாலும் அடுக்களைதானே இருந்தாக வேண்டிய இடம்? அடுக்களையின் தரையிலேயே சின்னதுகளும் உட்கார, நடந்தேறும் காலைச் சிற்றுண்டி.
இப்படி விடியல் பிறந்ததும் ஆர்ப்பரிக்கத் துவங்கிவிடுமந்த அடுக்களை. நாள் முழுமைக்கும் அடுக்களையில்தான் எல்லாமும். கதைப் புத்தகங்கள் வாசிப்பதும், அண்டை வீட்டாருடன் அளவளாவுவதும், எந்தத் தன்னார்வத் தொண்டு நிறுவனத்திற்கு எந்த நாளில் செல்ல வேண்டுமெனத் தீர்மானிப்பது உள்ளிட்ட ஏனைய பிற அலுவல்களும் அடுக்களை உருட்டலினூடேதான்.
செய்ய எதுவுமே இல்லாவிட்டாலும் செய்வதற்கு உரிய வேலைகள் உண்டு அடுக்களையில். சென்றவாரம் இடப்பக்கத்தில் இருப்பதை எல்லாம் வெளியே இழுத்துப் போட்டு மீண்டும் உள்ளே அடுக்கி வைத்தோமா? அப்படியானால் வலப்பக்கத்திலிருப்பதை எல்லாம் இழுத்துப் போடுவோம் இப்போது. இப்படித்தான் அடுக்களைக்குச் சீர் நடக்கும் தவறாது. என்றாவது ஒருநாள் அடுக்களையும் ’தன் வரலாறு’ எழுதும்; அன்று தெரியவரும் அதற்கு ஈடேறுகிற சீர்களும் பேணுதல் வரிசைகளும் முற்றிலுமாய்.
”உன்னை எனக்குக் கட்டி வைத்தார்களா, அடுக்களைக்கா?”, கேட்ட மாத்திரத்தில் பதில் வந்து விழும். அது நீங்கள் கட்டியழும் கம்ப்யூட்டரிடம் போய்க் கேளுங்கள் என்று. ஒரு வீட்டில் திருமண பந்தம் வைத்துக் கொள்கிறோம் என்றால், அந்த ஆணையோ பெண்ணையோ பார்க்கத் தேவையில்லை. கழிப்பறை அல்லது அடுக்களையைப் பார்த்தால் விளங்கும் என்கிறவாக்கில், “அடுப்புஞ் சலதாரையும் சுத்தமின்னா பொண்ணுஞ் சுத்தந்தேன்” என்கிறது ஊர்ப்புறத்துச் சொலவடை. எங்கள் வீட்டு அடுக்களையைப் பார்த்தாலோ ஏழேழு பிறவிக்கும் இந்த ஒரே மணவாட்டிதான் போலிருக்கிறது. நான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்.
வீட்டின் மறுகோடியில் இருக்கும் அலுவலக அறையிலிருந்து பார்க்கிறேன். ஆட்டுவிக்கப்படாத பொய்க்கால் குதிரை போலச் சலனமற்று ஒலிப்பசியுடன் கூடிய இருட்டுப் பட்டினியுடன் துவண்டு கிடக்கிறது. ஆமாம். கடந்த இரு வாரங்களாய்த் தரிசாய்க் கிடக்கிற அதன்மேல் மெலிதாய்ப் போர்த்தப்பட்டுமிருக்கிறது அமைதி.. அமைதி.. அமைதி!!!
நன்றி: வல்லமை

6/06/2013

தேடல் . . .

சென்ற வாரம்
சென்ற மாதம்
சென்ற ஆண்டு
தேடியன எல்லாமும் கிடைக்கிறது
இன்று தேடப்படுவது தவிர!!

                0o0o0o0
எதையோ தேடப்போய்
இது வந்து அகப்பட
தேடுவது நின்று போய்
அழைத்ததில் தெரிகிறது
பிள்ளைப் பேறு காலம்
அவளுக்கல்ல
அவளது மகளுக்கு!!

                0o0o0o0

தேடியலைந்து திரிந்து
கண்டுபிடித்த பின்னர்
சாவதனமாய்ச் சொல்கிறான்
மச்சான்
இதை மொதல்லயே
சொல்லியிருக்கலாமே?
போனவருசமே அவ சூசைடு!!

                0o0o0o0

கண்ணூ
நெம்ப நேரமா
என்னமோ தேடுறீயே
சொல்லிப் போட்டுத் தேடு
எனும் அப்பத்தா சொல்கிறார்
இத மொதல்லயே
சொல்றதுக்கென்ன கெரகம்?
உன்ற சோப்புலயே இருக்குது பாரு!
கண்ணாடி கிடைத்தது என்பதா?
அப்பத்தாவிடம் பல்பு என்பதா??

                0o0o0o0

குவிக்கப்பட்டிருந்த கூழாங்கற்களில்
தேடித் தேடி தெரிவு செய்து
ஒன்றை எடுத்து நிமிர்கையில் 
Can I have that one?
குளிருண்டது அந்தக்கல் மட்டுமல்ல!!

6/02/2013

மரம்

நன்றி: தென்றல் மாத இதழ்

அமைதி
தவளைகளின் 
அட்டகாசத்தில்
ஆர்ப்பரித்துக் கிடக்கும்
குளத்திலும் அமைதி
மணவாட்டி இல்லாத
அடுக்களை போல!!