11/26/2011

செல்லி

ஊர் முழுதும் காலை நேரத்துப் பரபரப்பு தொற்றிக் கொண்டிருந்தது. ஊர்வாசலில் இருந்த பாலக்காட்டு ஜோசப்பின் டீக்கடையில் வழக்கம் போலவே கூட்டம் நிரம்பி வழிந்தது. நரிக்கல் காட்டுக்குக்கு கல்லெடுக்கச் செல்பவர்கள் இட்லிகளை அடித்து நொறுக்கிக் கொண்டிருந்தார்கள். நாளிதழின் இருபக்க விளிம்புகளையும் விரித்துப்பிடித்து, படித்துக் கொண்டு இருந்தார் ஒருவர். அவருக்குப் பின்னால் சிலர் நின்று படிக்க, முன்பக்கங்களை எதிர்ப்பக்கத்தில் இருந்து சிலர் படித்துக் கொண்டிருந்தார்கள். இக்கூட்டத்தில் இருந்து தினத்தந்தி படிப்பதென்பது தனக்கு இயலாத காரியமென்பதை உணர்ந்த சிறுவன் வேலு, தன் வீடு நோக்கிப் புறப்பட்டான்.

ஊர்வாசலில் இருந்து கிளம்பி மேல்வளவுக்குள் நுழைந்தான். அவிநாசியப்பன் ஊட்டு அக்காவும், ஆட்டுக்கார மாரியப்பன் பொண்டாட்டி சுமதியும் சொல்லம்புகளை ஆள்மாற்றி ஆள் சரமாரியாக எறிந்து கொண்டிருந்தார்கள். இவர்களுக்குள்ளான சொல்லாடலை ஆங்காங்கே நின்று இரசித்துக் கொண்டிருந்தனர் சிலர்.

“கட்டீத்தின்னி... என்ன மயித்துக்குடீ அச்சக்காரம் வாங்குன நீயி. எட்டு ரூவாக்கூலின்னு சொல்லித்தான, கைக்களை எடுக்க வாறன்னு சொல்லி மூணு நாளைக்குமா சேந்து அச்சக்காரம் இரவது ரூவா குடுத்தேன். இப்ப வர்லீங்றயேடி? அடுத்தவிங்ககிட்ட முந்தானை விரிக்குற நீசத்தனம், அச்சக்காரம் வாங்குறதுக்கு முன்னாடி இருந்திருக்கோணும்!”

“இதபாருங்க. ஊரெல்லாம் பத்து ரூபாக் கூலிக்குப் போறாங்க. அந்த வெவரத்தை மூடிமறைச்சு என்ற வவுத்துல அடிக்கப் பாத்தது நீங்க. சோளக்காட்டுல தொண்டூழியம் பார்த்தது ஆருன்னு ஊருக்கே தெரியும், உங்க அச்சக்காரத்தை அவிங்கப்பன் வந்ததுமே குடுக்கச் சொல்லீர்றன்”

“அடித்தேவிடியா முண்டை”, அவிநாசியண்ணன் ஊட்டு அக்காவின் வசவு சரியாகக் கூட காதில் விழவில்லை. ‘பட்’டென்று யாரோ பின்னந்தலையில் அடித்தார்கள். என்னதான் எட்டு வயதுச் சிறுவன் என்றாலும், பின்னந்தலையில் அடித்தால் யாருக்கும் சினம் சிலிர்த்தெழத்தானே செய்யும். கோபத்தோடு திரும்பிப் பார்த்தவன் அமைதியாகிப் போனான்.

“இங்கென்றா பண்ற? இந்த ஊத்தை நாயத்தை எல்லாம் உங்கம்மா இருந்து கேட்ட்டு வரச் சொன்னாளா? ஊட்டுல போயி பொட்டாட்ட இரு போ”, அதட்டி அனுப்பினார் பெரியப்பிச்சி சின்னைய கவுண்டர்.

அச்சூழலில் இருந்து விடுபட்ட வேலுவை, அவனது வீட்டில் இருக்கும் செல்லியின் நினைவு ஆட்கொண்டது. தன் மாமா ஆறுக்குட்டி அவரது துள்ளுந்தை முடுக்கி ஓடவிடும் காட்சியைத் தன் மனத்துள் இருத்தினான் வேலு.

தன் அரைக்காற்சட்டைப் பையினுள் இருந்த சாவி கொண்டு தன் துள்ளுந்திற்குச் சமிஞ்ஞை அளித்து, வலது காலால் கற்பனைத் துள்ளுந்தின் இயக்கி மேல் ஓர் உதைவிட்டான். ‘ப்புர், ப்புர்’ என ஒலிக்கத் துவங்கியது வாய். கைகள் இரண்டும் காற்றோடு கரைந்திருக்கும் கைப்பிடிகளை இறுகத் திருப்பி முடுக்கியது. அடுத்த விநாடிக்கெல்லாம், ‘ப்புர், ப்புர்’ ஒலியானது ‘ட்டுர்ர்ர்’ரென மாறிப் பெருவேகம் கொண்டு தன் துள்ளுந்தில் வீடு சென்றான் வேலு.

“கண்ணூ வேலூ. எங்கடா இராசா சொல்லாமக் கொள்ளாமப் போன? நம்ம செல்லியப் போய்ப் பாரு, போ”, சொல்லிக் கொண்டே வாசலில் இருந்து அடுக்களைக்குள் நுழைந்தாள் அம்மா.

“அய்...”, துள்ளிக்குதித்து புறக்கொல்லைக்குப் போனான். வலது மூலையில் தரையெல்லாம் வைக்கோலிட்டு, மேற்புறத்தில் பருத்தியைப் பொதியாக்கப் பாவிக்கும் கிழிந்த மலகு ஒன்று மடித்து விரிக்கப்பட்டிருந்தது. அதன்மேல் செல்லி படுத்திருந்தாள். “அட செல்லீ” வாஞ்சையோடு குரல் கொடுத்துக் கொண்டே சென்றான் வேலு. பாலூட்டும் தினவிலிருந்த செல்லி, ஒருக்களித்த தலையின் மேற்புறக்கண் இமையை மாத்திரம் திறந்து பார்த்தாள். வேலுவைக் கண்டதும் தலையை உயர்த்தி பெருமிதத்தோடு மென்குரலில் குழைந்தாள்.

செல்லியின் கண்களில் இருந்து, தன் பார்வையை மெல்ல அவளது அடிவயிற்றுக்கு நகர்த்திக் கொண்டு போனான் வேலு. முட்டிமுட்டிப் பால் குடித்துக் கொண்டிருந்தன அத்தனையும். கொழுகொழுவெனப் பார்ப்பதற்குப் பரவசமூட்டின அவை. ஒன்றன் மீது ஒன்று ஏறுவதும், முலைக்காம்பினைக் கவ்விப் பிடிப்பதில் போட்டி போட்டுக் கொள்வதும், பிஞ்சுக்கால்களால் மற்றதைத் தள்ள முற்படுவதுமாய் மூசிக்கிடந்தன அவை. முலையொலிகள் ஒரு அற்புதமான இசையைத் தருவித்துக் கொண்டிருந்தது. குட்டிகளின் சிலும்பல்கள் மென்மையிடம் தோற்பதும் ஒரு அழகுதான். இவை எல்லாமே சிறுவன் வேலுவுக்கு கிடைத்திராத அனுபவம். அதில் மூழ்கி ஆழ்ந்து மெய்மறந்து நின்றவன், அருகில் இருந்த ஆட்டாங்கல்லின் மீது வாகாய் அமர்ந்து கொண்டான்.

எத்தனை குட்டிகள் என எண்ண முற்பட்டவன், பலமுறை முயன்றும் தோற்றுப் போனான். ஒன்றனடியில் ஒன்றாகப் புதையுண்டு பாலுண்ணும் அழகில் தன்னைப் பறிகொடுத்து, எண்ணுதலில் தோற்றான் வேலு.

”எத்தனாவது நாளுக்கா இது?”, உரையாடிக் கொண்டே அம்மாவும் மாகாளியாத்தா கோயில் சம்பங்கி அக்காவும் அவனிருக்கும் இடத்திற்கு வந்தார்கள்.

“இன்னையோட மூணு நாளாச்சு சம்பங்கி”

“அதான், கண்ணுத்தொறக்க ஆரமிச்சிருச்சுக. எத்தனை குட்டிகக்கா மொத்தம்?”

“கடுவங்குட்டி ஆறும் பொட்டைக்குட்டி மூணும், மொத்தம் ஒன்பது குட்டீக ஈனி இருக்குறா செல்லி”

"செரிக்கா, அப்ப நான் இப்பவே ஒன்னை எடுத்துட்டுப் போறேன்”

“செரி சம்பங்கி. அப்படியே போற வழியில ’சின்னக்கண்ணா’வுக்கும் ஒன்னைக் குடுத்துட்டுப் போயிரு. முன்னாடியே ஒரு குட்டிக்குச் சொல்லி இருந்துச்சு”

சாளையில் இருந்த சிறு பொட்டிக்கூடையை எடுத்த சம்பங்கி அக்கா நேராக செல்லியிடம் போனாள். “செல்லி, எந்திரிச்சு அந்தப் பொறம் போ” என சம்பங்கி சொல்ல, அடுக்களைக்குச் சென்று வந்த அம்மா தூக்குப் போசியில் இருந்த சாமைக்கூளை அங்கிருந்த செல்லியின் வட்டலில் ஊற்றினாள். அதனருகே சென்ற செல்லி, “ப்ளக், ப்ளக்” என்று தன் நாவை நீட்டி நீட்டி அள்ளிப் பருகினாள் தன் குட்டிகள் புதுவீட்டு எசமானர்கள் ஆகிக்கொண்டிருப்பது அறியாமல்.

முலைப்பாலுண்டு திளைத்திருந்த குட்டிகளில் இரண்டை எடுத்து பொட்டிக் கூடைக்குள் வைத்தாள் செம்பங்கி அக்கா. கண்ணிமைப் புருவங்கள் கறுத்திருந்தன. வாய் அவ்வளவு சிறியதாகவும் வடிவாகவும் இருந்தன. வால்மயிர்கள் செவலை நிறத்தில் பட்டுப் போல படர்ந்திருந்தது. நாட்டு நாய்க்குட்டிகளின் அழகே தனிதான். வீட்டிற்குச் சென்றதும், கழுத்தில் மணியொன்றைக் கட்டிவிட வேண்டும் எனச் சொல்லிக் கொண்டிருந்தாள் செம்பங்கி அக்கா. கூடையில் படுத்திருந்த குட்டியொன்று எழுந்து நின்று அச்சிறுகுறியின் நுண்துளையினூடாகச் சிறுநீரைப் பீய்ச்சியது.

“கூடைக்குள்ளயே ஒன்னுக்கு ஊத்தீருச்சு. இஃகிஃகி.. கூடைக்குள்ளயே ஒன்னுக்கு ஊத்திருச்சு”, சிரிப்பில் அதிர்ந்து வெகுளியாய்க் கத்தினான் வேலு.

“சம்பங்கியக்காவுக்கு யோகம்டா வேலு. இந்தவாட்டி ஏக்கராவுக்கு ஏழுபொதி பருத்தியாச்சும் பாக்காம உடமாட்டா பாரு”, அம்மாவும் நெகிழ்ந்து மகிழ்ந்து கொண்டாள்.

காலை ஏழு மணிக்குத் துவங்கிய நாய்க்கொடை அடுத்தடுத்து வந்த உற்றார் உறவினரின் வருகையால் எட்டரை மணிக்கெல்லாம் ஓய்ந்தது. வேலுவுக்கு மனத்துள் ஏமாற்றமும் இறுக்கமும் கப்பி இருந்தது. புறக்கொல்லையில் செல்லியுடன் அவனும் இருந்தான், செல்லியும் அதன் பொட்டைக் குட்டிகளுமாக! இருந்த கடுவன்கள் எல்லாம் நாலாபுறமும் எடுத்துச் செல்லப்பட்டிருந்தன.

தோட்டத்திற்குச் சென்றிருந்த அப்பா வீடு வந்து சேர்ந்திருந்தார். வந்தவர், அம்மாவை விரட்டலானார். “என்ன பண்ற நீயி? மணி எட்டரை ஆகுதல்லோ?? எந்த நேரத்துலயும் சொசைட்டி வண்டி வந்துரும். வேணுங்ற பாலெடுத்துட்டு பால்போசியக் குடு; போயி ஊத்தீட்டு வந்துடுறேன்!”

“இதென்னுங்... வேணுங்றதை எடுத்துட்டு, மிச்சத்தை அளந்து வெச்சிருக்கேன். இந்தப் பொட்டைக்குட்டிக மூணத்தையும் வெச்சிட்டு என்ன பண்றது? அந்த வேன்க்காரங்ககிட்டக் கொடுத்து, மொகானூர் வாய்க்கால்ல வீசீறச் சொல்லுங்க”

”அம்மா நம்முளுக்கு?” வேலன் சொல்வதறியாது இக்கட்டில் தவித்தான். “இருக்குற பொட்டை நாயி ஒன்னு பத்தாதாக்கும்?” எரிந்து விழுந்தாள் அம்மா.

அம்மாவின் பின்னால் தகித்துப் போய் கையறு நிலையில் வாலை ஆட்டிக் கொண்டு நிற்கிறாள் செல்லி. அப்பா, பால்ப்போசியை ஒரு கையிலும் கூடையை ஒரு கையிலும் வைத்துக் கொண்டு வீதியில் இறங்கிவிட்டார். அவரைப் பின்தொடர்வதற்காய் வீதியில் இறங்கினாள் செல்லியும்.

“வேலா, நீ எங்கடா போற?”

“போங்மா. எங்கோடப் பேசாதீங்க”, வேலனும் செல்லியோடு போனான். பால்வளக் கூட்டுறவுச் சங்கத்தின் ஆளுயரத் திண்ணையில் கூடையை வைத்துவிட்டு பால் ஊற்றுவதற்காக அப்பா உள்ளே சென்றார். செல்லி உயர உயரக் குதிக்க முற்பட்டது. சிதைந்து போன தக்காளிக் கூடை ஒன்றுக்குள் இருந்த அந்த பொட்டைக்குட்டிகள் ‘க்ம்ம்.. க்ம்ம்” என மெல்லொலி எழுப்பிக் கொண்டிருந்தன.

சுல்தான்பேட்டைப் பால்வள வங்கியின் ஊர்தியொன்று, எமன் வருவது போலப் பூதாகரமாய் வந்து நின்றது.

“லேட்டாய்ட்டு இருக்கு. சீக்கிரம் கேன் ரெண்டையும் உருட்டுங்க, உருட்டுங்க”, விரட்டினார் ஊர்திக்காரர்.

“தம்பி, இந்தப் பொட்டைக் குட்டிகளை மொகானூர் வாய்க்கால்ல வீசீறுங்க தம்பி”.

“செரி கொண்டாங்க”, கூடை கைமாறியது. செல்லி கத்தித் தன் இயலாமையை வெளிப்படுத்தினாள். வேகமாய்ச் சென்ற பால்வண்டிக்குப் பின்னர் சற்று தூரம் சென்று திரும்பியது. வீடே, இழவு வீடாய்க் காட்சியளித்தது வேலனுக்கு.

சரியாகப் பசிக்கவில்லை. ஒழுங்காகச் சாப்பிடவுமில்லை. குளிக்கவில்லை. எதுவுமே செய்யப் பிடிக்கவில்லை வேலனுக்கு. ஆழ்ந்த யோசனைகள் பலவாறு வந்து போயின. “வாய்க்கால்ல வீசி இருப்பாங்களோ? வாய்க்கால்ல தண்ணி போகாம இருந்துச்சுன்னா, பொழைச்சிக்கும் இல்ல?? வேற ஆறாச்சும், அதுகளை எடுத்து அவிங்க வீட்ல வெச்சுகுவாங்களோ, நம்மூட்ல செல்லி இருக்குறதைப் போல??”

யோசனையில் ஆழ்ந்தவன், திண்ணையில் இருந்த கயிற்றுக் கட்டிலின்மீதே உறங்கிப் போனான். திடுமென எழுந்தவன், கூட்டுறவுச்சங்கம் நோக்கி ஓடினான்.

“மணீன்னா, காலையில வந்த கிளீனரேதான் சாய்ங்கால வண்டீலயுமு வருவாங்களாண்ணா?”. கூட்டுறவுச் சங்கத்தில் பாலடிக்கும் பணியாளர் மணியை வினவினான். “தெரியலை வேலு, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதர இருக்கும். ஏன், உங்கம்மா மருந்து எதனா வாங்கியாறச் சொல்லி இருக்காங்களா?”

“இல்லீங்ணா”, பணியாளர் மணியின் மறுமொழியில் நிறைவற்று பதிலளித்தான் வேலு.

மாலை மணி ஏழு எப்போது ஆகுமெனத் தவம் இருந்தான். ஊர்வாசலுக்குச் செல்வதும், கூட்டுறவுச் சங்கத்தின் வாசலுக்குச் செல்வதும், தனித்து இருக்கும் செல்லியைப் பார்ப்பதுவுமாகத் தவித்துக்கிடந்தான். தனக்கிருக்கும் அன்றாட வேலைப்பளுவில், வேலுவின் துயரத்தைக் கவனிக்க அவனது அம்மாவுக்கு வாய்ப்பில்லை.

மாலை ஆறு மணிக்கெல்லாம், கூட்டுறவுச்சங்கத்தின் முன்பிருக்கும் அண்ணாச்சி கடைத் திண்ணையில் வந்தமர்ந்து கொண்டான். யாருடனும் விளையாடச் செல்லவில்லை. ஒருவழியாக, பால்வண்டி வரும் ஒலி கேட்கத் துவங்கியது. “கடவுளே, அதே அண்ணன் வரோணும்; அதே அண்ணன் வரோணும்”, இறைஞ்சலின் அதிர்வு கூடிக்கொண்டே போனது.

”என்றா தம்பி?”, அதே பணியாளர்தான்.

கண்கள் குளமாகிய நிலையில், பணிந்த குரல், “அண்ணா, அந்த பொட்டை நாய்க்குட்டிக மூணையும் வீசிட்டீங்ளாணா?”

“இல்றா தம்பி. சுல்தான்பேட்டை மேட்டுக்கடையில குடுத்து யாராவது கேட்டாக் குடுக்கச் சொல்லிட்டோம்”.

வீட்டை நோக்கி தலைதெறிக்க ஓடினான். எதிரில் மேய்ச்சலுக்கு சென்று திரும்பிய ஆட்டுமந்தைகள் வந்து கொண்டிருந்தன. களையெடுக்கச் சென்ற காரிகையர் வந்து கொண்டிருந்தனர். ஊர்க்கிணற்றில் குடிநீர் எடுக்கச் சென்றவர்கள், சும்மாட்டுத்தலையில் ஒரு குடமும் வளையிடுப்பில் ஒரு குடமுமாக வந்து கொண்டிருந்தனர். இவன் கண்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை. இறக்கை கட்டிப் பறந்து சென்றவன், கீழிருந்த கல் ஒன்றின் மேல் தன் காலடி மோதக் குப்புற விழுந்தான்.

“ஏன் வேலு, மாலநேரம் பார்த்துப் போகப்படாதாடா?? இந்தா, மண்ணுக் கொழிச்சுத் தாறேன். காயத்து மேல போடு!”, தன் வலக்கையால் மண்ணைக் கொழித்து அவன் சிராய்ப்புக் காயத்தின் மேல் பூசிவிட்டாள் எதிர்ப்பட்ட தெய்வாத்தக்கா. இரத்தம் வழிவது நின்றது.

மீண்டும் தன்வீடு நோக்கிப் பாய்ந்தான் வேலு. வாசலில் அம்மா கோழிகளை அடைத்துக் கொண்டிருந்தாள். இவன் பாய்ந்த பாய்ச்சலில், கோழிக்குஞ்சுகள் நாலாபுறமும் சிதறின. “நாசமத்துப் போனவன் எப்பிடிக் கலைச்சு உடுறாம்பாரு”, அம்மா அரட்டினாள்.

“செல்லீ.. செல்லீ.. உன்ற குட்டிக சாகுலடா. சுல்தான் பேட்டைக் கடையில வெச்சி, வந்து போறவிக எடுத்துட்டுப் போயிட்டாங்களாமா...”

புறக்கொல்லையில் நின்று, செல்லியைத் தேடின வேலனின் கண்கள். பிறகு பார்வையைக் குறுக்கிக் கீழே பார்த்தான்; வலது முழங்காலில் அப்பிய மண்ணையும் மீறி வடிந்து கொண்டிருந்த இரத்தத்தைத் தன் நாவால் நக்கித் துடைத்துவிட்டுக் கொண்டிருந்தது செல்லி!!

11/23/2011

பிதுங்கும் சுரைக்காய்கள்

LabuKendit.jpg (238×400)
பிள்ளைகள் 
பள்ளிக்கு ஏற்றிச் செல்லப்பட்டார்கள்!
பெண்கள்
கடைகளுக்குச் சென்றார்கள்!
சாலைகள்
பெருக்கின்றி இளைப்பாறின!
எஞ்சிய மக்கட்திரள்
பிதுங்கிய சுரைக்காய்களாய்
சாராயக் கடைகளிலும்
நீதிமன்றங்களிலும்!!


11/20/2011

பாதுகாப்பு

பேராய்வு
ஆராய்வு
பாதுகாப்பு
ஓம்படுத்தல்

11/07/2011

அமெரிக்கா:நாடளாவிய அறுந்தருண(emergency) அறிவிப்புச் சோதனை

அறுந்தருணத்தின் போது நாட்டின் பாதுகாப்புக்கு வலுச்சேர்க்கும் வகையில், அமெரிக்க தகவல் ஒலிபரப்புத் துறையானது இதர சில துறையினருடன் ஒருங்கிணைந்து அறிவிப்பு வெள்ளோட்டம் ஒன்றினை நடத்த உள்ளது.

குறிப்பிட்ட நேரத்தில் தொலைதொடர்புத் துறை மற்றுமுள்ள ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்படும் அறிவிப்பானது, குறுகிய நேரத்தில் நாட்டு மக்களைச் சென்றடைகிறதா எனப் பரிசோதிக்கும் பொருட்டும், தகவற்கட்டுறுத்தல் குறித்த ஆய்வுக்காகவும் இச்சோதனை நடத்தப்படுகிறது.

எதிர்வரும் நவம்பர் ஒன்பதாம் நாள், கிழக்கு அளவீடு பிற்பகல் இரண்டு மணிக்கு இச்சோதனை நடத்தப்பட உள்ளது. அதன் போழ்து, வானொலி மற்றும் தொலைக்காட்சி ஒலிபரப்பில் இடையூடாக செய்தி வெளியிடப்படும். எனவே, இவ்விபரத்தை உற்றார், உறவினர், அக்கம் பக்கம் என அனைவருக்கும் எடுத்துச் செல்ல வேண்டுகிறது மத்திய அறுந்தருண மேலாண் முகமை(FEMA).

Here are specific items we want everyone to know about the test:

  • It will be conducted Wednesday, November 9 at 2:00 PM EST.
  • It will be transmitted via television and radio stations within the U.S., including Alaska, Hawaii, the territories of Puerto Rico, the U.S. Virgin Islands, and American Samoa.

Similar to local emergency alert system tests, an audio message will interrupt television and radio programming indicating: “This is a test.” When the test is over, regular programming will resume.


http://www.fema.gov/eastest/

அமெரிக்காவில் முதல் பரிசு பெற்ற படைப்பு

கரும்படக் காட்சி. ஒளியைப் பாய்ச்சி, அதனுள் மறைவுகளை நேர்த்தியாய் உள்ளடக்கிப் படைக்கும் காட்சிதான், கரும்படக் காட்சி என்பதாகும். ஆங்கிலத்தில் silhouette எனக் குறிப்பிடுவர். ஆங்கிலத்தில் இப்பெயர் வரக்காரணம், Étienne de Silhouette எனும் பிரஞ்சு அமைச்சரே ஆகும். அதன் பின்னணி விபரங்களைப் பின்னர் காண்போம்.

தற்போதைக்கு, மெம்ஃபிசு நகர இந்திய விழாவில் இடம் பெற்ற, கேரள மாநிலத்தவரின் இப்படைப்பினைக் கண்டு மகிழுங்கள். விழாவின் முத்தாய்ப்பாகவும், முதல் பரிசினைப் பெற்ற படைப்பும் இதுவேயாகும். இப்படைப்பினை வடிவமைத்து இயக்கியதில் பெரும்பங்கு வகித்தவர், வேலையிடத்தில் எனக்கு உதவியாக இருக்கும் நண்பர் என்பதில் எனக்கும் பெருமை.



11/06/2011

எங்கள் தமிழ்

இனிமைத் தமிழ்மொழி எமது - எமக்
கின்பந் தரும்படி வாய்த்தநல் அமுது!
கனியைப் பிழிந்திட்ட சாறு - எங்கள்
கதியில் உயர்ந்திட யாம்பெற்ற பேறு!
தனிமைச் சுவையுள்ள சொல்லை - எங்கள்
தமிழினும் வேறெங்கும் யாங்கண்டதில்லை!
நனியுண்டு நனியுண்டு காதல் - தமிழ்
நாட்டினர் யாவர்க்குமே தமிழ் மீதில் 
தமிழுண்டு தமிழ் மக்க ளுண்டு - இன்பத்
தமிழுக்கு நாளும் செய்வோம் நல்ல தொண்டு
தமிழ் என்று தோள் தட்டி ஆடு! நல்ல
தமிழ் வெல்க வெல்க என்றே தினம் பாடு!
--பாவேந்தர் பாரதிதாசன்

இப்படிதாங்க எங்க வீட்ல, ஞாயிறுதோறும் தமிழ் வகுப்பு நடக்கு!! இஃகி இஃகி!!

11/05/2011

India Fest 2011, Memphis, Tennessee

இந்திய விழா 2011. ஐக்கிய அமெரிக்க மாகாணங்களின் தென்மத்திய மாகாணமான டென்னசியின் மெம்ஃபிசு மாநகரில் ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறும் மாபெரும் விழாதான் இந்திய விழா.

மெம்ஃபிசு மாநகரில் குடியமர்ந்த நாள்தொட்டே இவ்விழாவின் மீதான எதிர்பார்ப்புக் கூடிக் கொண்டே இருந்தது. கடந்த ஆண்டு விழாவின் போது இடம் பெற்ற கலைநிகழ்ச்சிகளின் காணொலிகள் மற்றும் அங்கிருப்போர் கூறக்கேட்டவை என அனைத்துமாகச் சேர்ந்து எதிர்பார்ப்பினைக் கூட்டி இருந்தது.

இவ்விழாவினை ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்வது Indian Association of Memphis என்பதாகும். மிகவும் சிறப்பானதொரு அமைப்பு. மிகவும் ஆக்கப்பூர்வமாகச் செயல்படும் அமைப்பு. சமூகத்தின்பால் மிகவும் நாட்டம் கொண்டு, அறப்பணிகளில் ஈடுபடுத்திக் கொள்ளும் ஒரு அமைப்பு.

காலையில் எழுந்தவுடனேயே, வீட்டார் புறப்பட்டு நச்சரித்துக் கொண்டிருந்தார்கள். எனக்கு வேறுசில பணிகள் இருந்தமையால் அவர்களுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. அப்படியும் இப்படியுமாக நண்பகல்வாக்கில், மெம்ஃபிசு நகர வேளாண்நிலையத்தை அடைந்தோம்.

மெம்ஃபிசு நகர வேளாண்நிலையம் என்பது மிகவும் பிரபலமான ஒரு இடமாகும். கிட்டத்தட்ட இருபதினாயிரம் பேர் ஒருங்கே கூடியிருக்கும்படியான உள்ளரங்கைக் கொண்டது. வாகனத்தரிப்பிடமும் பரந்த நிலப்பரப்பில் பெரிய அளவில் இருக்கிறது. நாங்கள் உள்ளே சென்ற வேளையில் எப்படியும் பத்தாயிரம் பேருக்கும் மேலான பார்வையாளர்கள் இருந்திருக்கக் கூடும்.

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து தொன்னூற்று ஆறு அல்லது ஏழாம் ஆண்டு, மிச்சிகன் மாகாணம் டெட்ராயிட் நகரில் நடந்த தெலுங்கர் மாநாட்டில் கலந்து கொண்ட அனுபவம் எமக்குண்டு. அம்மாநாட்டில் நாற்பதினாயிரம் பேர் கலந்து கொண்டதாக நினைவு. அதற்குப் பின், இப்போதுதான் இவ்வளவு பெரிய இந்தியர் கூட்டத்தை அமெரிக்காவில் காண்கிறேன்.

இந்தியாவில் என்று கேட்டுவிடாதீர்கள்? ஆம், சென்ற ஆண்டு, 2010 கோவை வ.உ.சி பூங்காவில் பல இலட்சம் பேர் கூடிய திமுக கூட்டம்தான் நான் கலந்து கொண்ட கடைசிக் கூட்டமாகும்.

பெருமளவிலான கூட்டத்தைக் கண்டதும் நமக்குள்ளும் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. நுழைவாயிலில் நுழைவுக் கட்டணமாக தலா மூன்று வெள்ளிகள் செலுத்தினோம். அரங்கத்திற்குள் சென்றதும் முதலில் கண்ணில் தென்பட்டது யோகா பிரச்சாரக் கூடாரங்கள். அவற்றை நிராகரித்துவிட்டு உள்ளே சென்றோம்.

அப்பப்பா, எத்தனை, எத்தனை உணவுக் கடைகள்? காட்சிப் பொருட்களாக வைத்திருந்த உணவுப் பண்டங்கள் யாவும் கவர்ந்திழுக்கக் கூடியனவாக இருந்தன. எனக்கு ஒரிசா மாநில வகை உணவு மீது நாட்டம் தோன்றியது. ஆனால், மனைவியார் தட்டிக்கழித்துக் கூட்டிக் கொண்டு போனார்.

“அய்ய்... தமிழ்நாடு உணவகம்” எனச் சிலிர்த்து அங்கே அழைத்துப் போனார். அங்கே சென்றமாத்திரத்தில், “அய்ய்... கோவை கார்னர்” என்று கூவி, அந்தக் கடைக்கு இழுத்துச் சென்றார். “என்னுங்க நம்மூர்ச் சாப்பாடே சாப்பிடலாமுங்க” என்று சொல்லியதற்கு கட்டுப்படுவதைத் தவிர எனக்கு வேறெதும் உறுதல் உண்டோ??

“ஏங்க கோழி பிரியாணி பாருங்க. நம்மூர்ல செய்த மாதிரியே இருக்கு பாருங்க!”

”அண்ணா, அந்த கோழி பிரியாணி ரெண்டு குடுங்க”

“what?"

"நீங்க கோயமுத்தூருங்களா?”

”ஆமா”

“Two Chicken Biriyani"

விட்டால் அந்த அம்மையார் பருக்கைகளை எண்ணுவார் போலிருந்தது. மிக மெதுவாக அந்த நெகிழி அகப்பை கொண்டு மிகச் சரியாக ஒரு அகப்பை, பெரிய எலுமிச்சையளவு தட்டில் இட்டு முட்டைக் குழம்பில் அரை முட்டைக்கும் மேலாக எதுவும் இருந்துவிடாமல் மிகக் கவனமாய்ப் பார்த்துக் கொண்டார்.

இடையில் குறுக்கிட்ட இன்னொருவர், “fish cutlet?"

"சரிங்க, வையுங்க”, என்று நான் சொல்லி முடிப்பதற்குள்ளாகவே, அந்த அம்மையார் குறுக்கிட்டு, “each plate is dollar ten" என்றார். தூக்கிவாரிப் போட்டது எனக்கு. அதன் மொத்த மதிப்பு எப்படிப் பார்த்தாலும் ஐந்து வெள்ளிகளுக்கும் மேல் இராது. காசைப் பறித்தது போலவே உணர்ந்தேன்.

அங்கிருந்த பரப்பு நாற்காலிகளின் மேல் இவ்விரு தட்டுகளையும் வைத்துவிட்டு, மற்றொரு தமிழ் உணவுக் கடைக்குச் செல்ல முற்பட்டேன்.

“எங்க போறீங்க?”, ஏமாற்றத்தை அடக்க முடியாமற் தவிர்த்த மனைவியாரின் முகம் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. “பரவாயில்லை, இரண்டு தட்டுலயும் இருக்குறதை ஒரு தட்டுல போட்டு நீ சாப்பிடு. அந்த மீன் வடைய மாத்திரம் குழந்தைக கையில குடுத்துரு” எனக் கூறிவிட்டு மற்றொரு தமிழ் உணவுக் கடைக்குச் சென்றேன்.

“yes"

"வணக்கங்க. சாப்புடுறதுக்கு பிரியாணி ஒரு தட்டு!”

“sure, you want anything else?"

"ம்ம்... அந்த மெதுவடை ரெண்டுங்க”

“twelve dollars" என்றார் அவர்.

வேறெதுவும் பேசாமல் எடுத்துக் கொடுத்துவிட்டு வந்தமர்ந்து, கோழியைக் கடித்தேன். இறைச்சி வெந்திருக்கவே இல்லை. இறைச்சி மணம் குப்பென்று அடித்தது. அப்படியே ஒதுக்கி வைத்து விட்டு, இவ்விரு வடைகளும் வெந்திருக்கிறதா எனப் பார்த்துவிட்டுக் குழந்தைகளின் கைகளில் திணித்தேன்.

பசியில் இருந்த அவர்கள், கொடுத்ததை எல்லாம் வாங்கிச் சுவைக்கலானார்கள்.

நான் மட்டும், இன்னமும் எதுவும் சாப்பிடவில்லை. ஆனால், முப்பத்தி இரண்டு வெள்ளிகள் கைமாறி இருந்தன. அங்கிருந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்த போது கண்ட காட்சி மிகவும் எரிச்சலூட்டியது.

ஒரு கடையில் இருந்த அந்த அமெரிக்கப் பெண்மணி, தான் கண்டதில் பிடித்தமானவற்றை எல்லாம் வேண்டுமெனச் சொல்லி, உடன் இருந்த இரண்டு குழந்தைகளின் விருப்பத்தையும் கேட்டறிகிறார். பின்னர் பணம் செலுத்தும் தருணமும் வருகிறது.

“forty two dollars madam"

அந்த அம்மையாரிடம் இருந்த பணம் போதுமானதாக இருந்திருக்கவில்லை. அவர் அவ்வளவு ஆகுமென எதிர்பார்த்திருக்கவும் மாட்டார். தட்டுகளை ஏந்தி ஆயிற்று. ஆனால், பணம் கொடுக்க இயலவில்லையே எனும் இக்கட்டில் அவர் பரிதவித்த காட்சி மிகவும் உருக்கமாக இருந்தது. அதனைக் கண்டதும், அருகில் இருந்த மற்றொருவர், “its ok... I will take care, when I pay mine" என்றதும் அவரது முகத்தில் பேரொளி பிறந்தது. “thank u, thank u" என்று சொல்லிக் கொண்டே இருந்தார் அவர்.

இந்தக் கடை இனி நமக்கு வேண்டாம் என நினைத்து, நண்பர் இளங்கோவன் அவர்கள் நடத்தும் உணவுப்பண்ட சாலைக்குப் போனோம். எதையோ சொல்லி, அக்கடையின் பணப்பெட்டியில் இருந்த அவரது நண்பர் கையில் இருபது வெள்ளிக்கான தாளினைத் திணித்தேன்.

இளங்கோ அவர்களது மனைவியார். கச்சுப்பண்டம்(sandwich) இரண்டும் தேநீரும் எங்கள் கண் எதிரிலேயே உண்டு செய்து கொடுத்தார்கள். கச்சுப்பண்டத்திலும் முக்கால் பங்கினை மகள்கள் வாங்கி உண்டார்கள். நான் உண்ட காற்பங்குப் பண்டம் மிகவும் சுவையாக இருந்தது.

இருந்த கடைகளிலேயே இக்கடையில்தான் அறம் நின்றாடியது என உறுதிபடச் சொல்வேன்.

எல்லோரும் வடித்து ஆறிப் போனவற்றைச் சூடு செய்து கொடுத்து, கொள்ளை அடித்துக் கொண்டிருந்தார்கள். இவர்கள் மாத்திரம், வந்தவர்களுக்கெல்லாம் சமைத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். கணக்குப் பார்க்க மனம் வரவில்லை. அவர்கள் மிகவும் களைத்து சோர்ந்து இருந்தார்கள். பார்க்கவே, பரிதாபமாக இருந்தது.

அடுத்து, மனைவியார் குழந்தைகளுக்கு நகைகள் வாங்க வேண்டுமென நகைக்கடைகளுக்கு அழைத்துப் போனார். நான் கண்ட காட்சியை விவரிக்க இயலாது. அந்த அளவுக்கு, கடைக்காரர்களின் மனத்தினைப் புண்படுத்திக் கொண்டிருந்தனர் வந்தவர்கள்.

ஐம்பது வெள்ளி நகையை ஐந்து வெள்ளிக்குக் கேட்டு, இடத்தைவிட்டு நகரவும் செய்யாமல் இருந்தார் ஒரு இளம்பெண்மணி. அடுத்த கடையிலோ, விலை உயர்ந்த நகைகளைத் தாறுமாறாக விட்டெறிந்து கொண்டிருந்தனர். கட்டுக்கடங்காத கூட்டத்தில், கடைக்காரர்களின் நிலை வெகுபரிதாபமாக இருந்தது.

குழந்தைகளுக்கான காதணிகளைப் பார்த்துக் கொண்டிருந்த மனைவியார், “இந்தக் கம்மலுக எல்லாம் நல்லா இருக்கு. ஆனா, இன்னும் நாலு கடைகளைப் பார்க்கலாம்”.

“இந்நேரம் உனக்கு எடுத்துக் காமிச்சிட்டுருந்தவன் பைத்தியக்காரனா?” எரிச்சலைக் கொட்டித் தீர்த்தேன்.

”நூற்றிப்பத்து வெள்ளிகள் பெறுமானம் கொண்ட பொருளுக்கு, நூறு தாருங்கள்” எனப் பரிதாபமான இறைஞ்சும் குரலில் தாழ்ந்த பார்வையோடு பார்த்தார்.

என்னிடம் இருபது வெள்ளிப் பெறுமானமுள்ள தாள்கள் மட்டுமே இருந்தன. அவற்றுள் ஆறினை எடுத்து நீட்டினேன். ஆனால், அவற்றுள் இருந்ததில் ஒரு தாளினைக் கவனத்துடன் திரும்பக் கொடுத்துவிட்டார்.

உடனடியாக, இவ்விடத்தில் இருந்து வெளியேற வேண்டுமெனச் சொன்னதும், “ஆமாங்க, போலாம்” என என்றுமில்லாதபடிக்கு ஒத்திசைந்தார் மனைவியார்.

கலைநிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கும் அரங்கத்திற்குச் செல்லலாம் என எண்ணி, மாற்றுப் பாதையில் செல்ல நினைத்துத் திரும்பினோம்.

“அப்பா, பசிக்குது!”

“என்ன கொடுமைடா இது? ஐம்பத்து இரண்டு வெள்ளிகள் கொடுத்த பிறகும் பசிக்கொடுமை தீரலையா?” என்றெண்ணியபடியே மனைவியாரைப் பார்த்தேன்.

“சரி வாங்க. போலாம். நான் வீட்டுல இருந்து எடுத்துட்டு வந்த பட்சணங்களை வெச்சி சரி பண்ணுறேன்”

“பரவாயில்லை. நான் மறுபடியும் போயி, எதனா வாங்கியாறேன்”

“இக்கும்... அங்க போனா இருக்குறதை எல்லாம் புடிங்கிட்டுத்தான் உடுவாங்க” என முணுமுணுத்துக் கொண்டார் மனைவியார்.

கலைநிகழ்ச்சிகள் நடக்கும் அரங்கம் சென்றடையவும், கேரள மாநிலத்தினர் வழங்கிய நடன நிகழ்ச்சி துவங்கவும் சரியாக இருந்தது. அவர்களது நாட்டிய நடன நிகழ்ச்சி, மிக அருமையாக இருந்தது. வயிற்றுப் பசியையும் மீறி, மனம் குளிர்ந்த நிகழ்ச்சியாக அது அமைந்தது.

“வந்ததுக்கு இது பார்த்ததே போதும். கிளம்புங்க, நான் ஊட்டுக்குப் போயி அரிசியும்பருப்புஞ் சோறாக்கணும். அல்லாரும் கிளம்புங்க”, மனைவியார் அரற்றினார்.

அறக்கட்டளை நடத்தும் விழாவில், வயிற்றால் அடித்துக் காசு பார்க்க நினைக்கும் வெகுளிகளை நினைத்து என்ன சொல்வது?! அல்லது, வயிற்றுப் பிழைப்புக்கு பொருள் விற்கும் வணிகர்களை மனிதநேயம் கொண்டு பாராமல் கொச்சைப்படுத்திக் கொள்ளை கொள்ள விரும்பும் மனிதர்களைத்தான் என்ன சொல்வது??

அல்லல்பட்டு அழுத கண்ணீர் செல்வத்தைக் குறைக்கும்!!


கேரள மாநிலத்தவ்ரின் அட்டகாசமான படைப்பு இதோ!!