6/25/2011

அதிரும் சார்ல்சுடன்! கோலாகலத் தமிழ்த் திருவிழா!!

ஒருவரது வாழ்க்கை எப்போது முழுமை பெறுகிறது? தன் மண்ணையும், மண் சார்ந்த கலை, இலக்கியங்களை நுகர்ந்து போற்றி, பின் அதனைப் பற்றி ஒழுகும் போது முழுமை பெறுகிறது. தமிழ்ச் சமுதாயம், காடு கழனிகளில் உழைத்து அதில் உன்னதத்தைக் காணும் சமுதாயம்.

அப்படியான உழைப்புக்கிடையே, தம்மை மகிழ்வித்துப் பிறரையும் மகிழ்வித்து அதனூடாக வாழ்க்கையை நெறிப்படுத்துமுகமாக எத்துனை எத்துனை கலைகள்?!

சிலம்பாட்டம், கோலாட்டம், ஒயிலாட்டம், தெருக்கூத்து, தப்பாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், வேங்கையாட்டம் எனச் சொல்லிக் கொண்டே போகலாம். அப்படியான கலைகளை, அயல் மண்ணில் வாழும் தமிழர்களுக்கு அறிமுகப்படுத்துவதில், வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் பங்கு அளப்பரியது.

2009ம் ஆண்டில், மெய்சிலிர்க்கும் சிலம்பாட்டம்! 2010ம் ஆண்டு, மதுரைவீரன் தெருக்கூத்து. அந்தத் தெருக்கூத்து நடந்த இரண்டரை மணி நேரமும், அரங்கம் அதிர்ந்தது. இதோ, அதன் நீட்சியாக இவ்வாண்டும், திண்டுக்கல் சக்தி கலைக் குழுவினரின் தப்பாட்டம்.

ஏதோ ஒரு கலைக்கழுவினர் வந்து நிகழ்ச்சி நடத்தப் போகிறார்கள் என்றுதான் நினைத்திருந்தேன். யார் இவர்கள்? இவர்களது பின்புலம் எனத் தெரிய முற்பட்டேன்.

கலைக்குழுவின் பொறுப்பாளர் சகோதரி சந்திரா அவர்களுக்குப் பின்னாலே ஒரு இலட்சிய வாழ்க்கை அமைந்திருப்பதை அறிந்தேன். பெண் விடுதலை, கலை மீட்டெடுப்பு, வழக்கொழிந்த பாரம்பரியக் கூறுகளை மீட்டெடுத்தல் என மாபெரும் இலட்சியப் போராட்டம் நடத்தி வருகிறார் அவர்.

சகோதரி சந்திரா அவர்களையும், அவர்கள்தம் குழுவினரையும் அழைத்துச் சிறப்பளிப்பதற்காக, பேரவைக்கு தமிழ்ச் சமுதாயம் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளது.

எங்கோ இருக்கிற சப்பானியர்களும், சீனர்களும், உருசிய நாட்டினரும், நம் கலைகளை அறிந்து அவர்தம் வாழ்வினைச் செம்மைப்படுத்த பெருமுயற்சி எடுத்து வருகிறார்கள். நிலை அப்படி இருக்கையில், நமது முன்னோர் நமக்களித்துச் சென்ற கலை, இலக்கியப் பண்பாட்டுக் கூறுகளை அறிந்து போற்றுவது நம் கடமையல்லவா??

குழந்தைகளுக்கான விடுப்புக் காலம் இது! சார்ல்சுடன் நகரில் நடக்க இருக்கும், தமிழ் விழாவிற்கு அழைத்து வாருங்கள். நம் மக்கள், நம் மொழி, பண்பாடு, கலை, இலக்கிய நிகழ்ச்சிகளை அவதானிக்க அவர்களுக்கு ஒரு வாய்ப்புத் தாருங்கள். ஒருவரது வாழ்க்கை எப்போது முழுமை பெறுகிறது? தன் மண்ணையும், மண் சார்ந்த கலை, இலக்கியங்களை நுகர்ந்து போற்றி, பின் அதனைப் பற்றி ஒழுகும் போது முழுமை பெறுகிறது.

கால அவகாசம் வாய்க்கும் போது, கீழ்க்கண்ட அற்புதமான ஆவணக் காணொலிகளைக் காணுங்கள். நம் முன்னோர் நமக்காக விட்டுச் சென்ற கலைகளில் சிலவற்றைக் கண்டு களியுங்கள்.

சக்தி கலைக் குழுவினரின் தப்பாட்டம் உள்ளிட்ட இன்னும் ஏராளமான கலை, இலக்கிய, நிகழ்ச்சிகளைக் கண்டு களித்திட, வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் வலைத்தளத்திற்குச் சென்று உங்களுக்கான இருக்கைகளை முன்பதிவு செய்து கொள்ளுங்கள்!!






தமிழராய்ப் பிறந்தோம்! தமிழால் இணைவோம்!!

1 comment:

a said...

Anne : Vazhakkam pola kalakkunga....