4/24/2011

வரலாறு

சரித்திரம்? உறுதியாகத் தகுந்த ஆதாரங்கள், சான்றுகளுடன் கூடிய காலம் ஏறத்தாழ 2500 ஆண்டுகளுக்கு உட்பட்டதுதான். இன்னும் கூட்டிச் சொல்ல வேண்டுமேயானால், இயேசு கிறித்துவின் பிறப்புக்கு முந்தைய ஆயிரம் ஆண்டுகள். அப்படியே பார்த்தாலும், 3000 ஆண்டுகளுக்கு உட்பட்டதுதான் சரித்திரம்.

சரி, அப்படியானால் 3000 ஆண்டுகளுக்கு முன்னர் மனித குலமே இருந்திருக்கவில்லையா? அக்காலத்தை என்னவென்று சொல்வது? உதாரணத்திற்குக் குறிப்பிட வேண்டுமேயாயின், 5000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலம் எப்படி இருந்திருக்கும்? அக்காலத்தை என்னவென்று குறிப்பிடுவது??

இன்றைய நாளது வரையிலும், ஆராய்ச்சியாளர்களால் அக்காலத்தை வரையறுத்துக் கூறமுடியவில்லை. ஆனால், தோராயமாக ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள். அக்காலத்தில் வாழ்ந்த குடிகள் பாவித்த பொருட்களைக் கொண்டு பெயரிடத் துவங்கினார்கள்.

உதாரணமாக, கூரான கற்கள், கற்கலாலான பாண்டங்கள் முதலானவற்றைப் பாவித்த காலம் சிலாகாலம் அல்லது கற்காலம் எனப்படுகிறது. அச்சிலா காலத்தைக் கூட, ஆதி சிலாகாலம், முந்தைய சிலா காலம், பிந்தைய சிலா காலம் எனப் பிரித்தார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

கற்காலத்து மனிதர்கள் தற்குறிகள், அறிவற்றவர்கள், மூடர்கள் என இழித்தும் பழித்தும் பேசப்படுவது இன்று வரையிலும் வழக்கத்தில் இருந்து வருகிறது. ஆனால், அவையெல்லாம் ஒரு அனுமானத்தில், யூகத்தின் அடிப்படையில் கூறப்படுவனவேயன்றி ஆதாரப்பூர்வமானவை அன்று. உளவியல் ரீதியாகப் பார்க்கும் பொருட்டு, அவர்கள் நேர்மையானவர்கள். வெள்ளந்திகள்.

கற்காலத்திற்கு அடுத்து வருவது, வெங்கலத்தாலான பொருட்களைப் பாவித்த வெங்கலக்காலம் என்பதாகும். இக்கால கட்டத்திலேதான் சூதும், சூழ்ச்சியும் சிறிது சிறிதாகத் தலையெடுக்கத் துவங்கியது. இதற்கு அடுத்து இடம் பெறுவது, இரும்புக் காலம். இரும்பாலான பொருட்களை ஆக்கிப் பாவித்த காலமாகும்.

இரும்புக் காலத்திற்குப் பிற்பட்ட சரித்திர காலத்திலேதான் திருட்டு என்பது இடம் பெற்றது என வாதிடுவோரும் உண்டு. இரும்புக் காலம் வரையிலும், வரலாற்றுச் சின்னங்கள் அப்படியப்படியே கிடந்தன. அதற்குப் பிந்தைய காலத்திலேதான், அவற்றைச் சூறையாடி, அதிலிருந்த விலைமதிப்பற்ற பொருட்களைக் கொள்ளை கொண்டார்கள் என்பதை ஆதாரமாகக் காண்பிக்கிறார்கள்.

சரித்திர காலத்தைப் பற்றி நாம் அலசத் தேவையில்லை. அவை பற்றிய தகவல்கள் எங்கும் இரைந்து கிடக்கின்றன. போர்களும், படையெடுப்புகளும், ஆக்கிரமிப்புகளும், அடாவடிகளும், பறிப்புகளும் அடங்கியதுதான் சரித்திர காலம்.

இனி, எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை யூகத்தின் அடிப்படையிலும், நடப்புச் சூழலில் இருக்கும் தகவின் தரவு(data)களைக் கருத்தில் கொண்டு மட்டுமே அணுக முடியும். உலகின் பல பாகங்களுக்குச் சென்று வந்திருந்தாலும் கூட, நான் பிறந்த மண்ணைக் கருத்தில் கொண்டு மட்டுமே என்னுள்ளான சிந்தனைகள் உருவெடுக்கும். இது வரையிலும், என் வாழ்க்கை என்பது அப்படித்தான் இருந்திருக்கிறது.

அதனடிப்படையில், நான் நோக்குவது இதுதான்!!

  • இடையூறுகள், துயர்கள் எனப் பலதும் கலந்து, அதன் நீட்சியாக மேன்மை உயிர்ப்பிக்கும்  என்பதே!!

4/20/2011

தாயகப் பயணம் - 3

சென்றேன்; களித்தேன்; வந்தேன் என மூன்று சொற்களில் எனது தாயகப் பயணத்தைப் பற்றிக் குறிப்பிட்டேன். எனது நண்பனது முகம் அட்டமக் கோணலாகிப் போனது. எதையும் விலேவாரியாக, அக்கு வேறு, ஆணி வேறாகப் பிரித்துப் போட்டுப் பின் கட்டமைப்பதில்தானே சுவாரசியம்?

ஆசான் நாஞ்சில் பீற்றர் அண்ணன் அவர்களோடு அன்றாடம் அளவளாவுவது வழக்கம். ஆனால், கடந்த ஐம்பது நாட்களாகப் பேசிக் கொள்ளவில்லை. இன்று பேசினேன். ஒரு நாலு வரிகளாவது எழுதலாமே என அங்கலாய்த்தார். நான்கு வரிகள்தானா? நாலாயிரம் வரிகள் கூட எழுதலாம்தான், அயர்ச்சி என்பது இல்லாதிருந்தால்!!

ஆம். தனிமனிதனாக தாயகப் பயணம் வெகு சிறப்பாக இருந்தது. ஆனால் எம் சமுதாயம் சிதறுண்டு கிடப்பதைத்தான் பொறுத்துக் கொள்ள இயலவில்லை.

சென்ற ஒரு சில தினங்களுக்குள்ளாகவே, ஒரு திருமண வைபவத்திற்குச் சென்றிருந்தேன். வெகு விமரிசையாக நடந்த மங்கல் நாண் பூட்டு நிகழ்ச்சி அது. சைவத் தமிழ் ஓதுவார்கள், தமிழ்மறைகள் ஓத, பெரியவர்கள் புடை சூழ மனம் கொண்டோரால் மணமக்கள் வாழ்த்தப்பட்டார்கள்.

கல்யாணப் பந்தலிலே குதூகலமாய்க் குதித்தோடும் இளஞ்சிறார்களைக் காணவில்லை. அரக்கப் பறக்க தெறித்தோடும் உறவுக்காரர்களின் பரபரப்புத் துளியேனும் காணப்படவில்லை. குறித்த நேரத்திற்கு வந்தார்கள். அமர்ந்தார்கள். சென்றார்கள். இப்படி ஒரு ஈடுபாடின்றி, முகதாட்சண்யத்திற்காய் வரத்தான் வேண்டுமா?!

எனது ஊர்க்காரர் அடுத்த தெருவில் குடும்ப சகிதமாய்க் குடியிருப்பதாய்ச் சொன்னார்கள். கோவை கண்பதியில் இருக்கும் நண்பரைச் சந்திக்க, கண்பதி கடந்து, காந்திபுரம் கடந்து, சிதம்பரம் பூங்கா வரை சென்று தேடியலைந்து நுங்காங்குலை வாங்கி வந்தேன். நானே அவற்றை வெட்டித் தர, எனது தாயின் கைவண்ணத்தினாலான நுங்காம்பச்சடி, நுங்காநீர், இளம்பனங் கற்கண்டுடன் கூடிய நுங்காங்குல்குந்து மற்றும் இராகி வடைச் சிலாம்புகளுடன் அம்மாவைக் கூட கூட்டிச் சென்றேன்.

நண்பன் முகமலர வரவேற்றான். அவனுக்கு வாய்த்த பட்டணத்து மங்கை, முன் வந்து பையை வாங்கிச் செல்வார் என எதிர்பார்த்தேன். அவனுடைய பிள்ளைகள் வந்து பையில் இருப்பதைப் பதம் பார்க்கும் என நினைத்திருந்தேன்.

வைத்தது வைத்தபடியே இருந்தது பைக்கட்டு. ”அம்மா, எடுத்து எல்லாருக்கும் குடுங்க” என்றேன். “இப்பதான் டிபன் சாப்ட்டோம்” என்றான் நம்மாள். கடித்துக் குதறினேன். “என்றா, மாகாளியாத்தா கோயில் பொங்கச் சோத்துக்கு நீ அலைஞ்ச கதையெல்லாம் உன்ற பொண்டாட்டிகுட்ட சொன்னியா நீயி?” என்றேன் பெருங்குரலில். ஒழுங்கு மரியாதையாக தட்டுகளில் இட்டு அவனும் தின்றான். மனைவியையும் ருசி பார்க்க வைத்தான்.

“அட, உனக்கு எத்தனை கொழந்தைக?”

“ஒன்னுதான்!”

“எனக்கு மூணு! இஃகி, இஃகி!!”

“...”

“எங்க காணோம்?”

“உள்ள படிச்சிட்டு இருக்கான்!”

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இருந்தோம். கடைசி வரையிலும் முகதரிசனம் கிடைக்கவே இல்லை. அவனும் அமெரிக்கா, அது, இது என்றெல்லாம் கூவிப்பார்த்தான். மனையாளின் கடைக்கண் அனுமதிக்கவில்லை போலிருக்கிறது. ஊர்த்தலைவாசலில் தலை தெரிந்தாலே ஆர்ப்பரிக்கும் காலம் எங்களுடையது. வீட்டிற்குப் பண்டங்களோடு வந்திருந்தும், பாராமுகமாய் இருப்பது இக்காலத்தவர் காலம் போலும்?! நல்லா இருங்கடா சாமி!!
(எங்க ஊர்லதான் முதல் கூட்டம்; நாங்களும் கலந்துகிட்டம்ல?)
(அன்பு வலைஞர் விஜய் திருமணத்துல கலந்துகிட்டதும் நான் பெற்ற பேறு)
(எங்கப்புச்சி கவி காளமேகம் சொல்வாரு; மனுசனுக்குள்ள இருக்குற அகந்தை போய்டிச்சின்னா, அல்லாரும் பரவசம்னு... நாங்களும் அப்படித்தான இருந்தோம்?!)

4/10/2011

இஃகி! இஃகி!!








முதல் ஊதியம்




4/04/2011

2011: கோவையில், திணறும் திமுக

புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் காலத்திலே, இரட்டை இலை என்பது எங்கும் ஊடுருவி வியாபித்திருந்த காலமது. ஆனாலும், சென்னை, காவிரி டெல்டா பகுதிகளுக்கு அடுத்து திமுக பெறும் இடங்கள் கோவையை அண்டியுள்ள தொகுதிகளாகத்தான் இருக்கும்.

பேரூர் ஆ.நடராசன், சிங்காநல்லூர் A.D.குலசேகர், கோவை மேற்கு மு.இராமநாதன் மற்றும் இரா.மோகன், C.T.தண்டபாணி முதலானவர்களில் ஓரிருவர் வெற்றி பெற்றுவிடுவார்கள். குறிப்பாக, நடுத்தர வர்க்கத்தினர் பெருவாரியாக திமுகவுக்கு வாக்களித்து வந்தார்கள்.

ஆனால் இன்றைய நிலை என்ன? கோயம்பத்தூருக்கு, உள்ளபடியே திராவிட முன்னேற்றக் கழக அரசு நல்ல பல திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறது. கோவை மக்கள், செல்வத்தில் திளைக்கிறார்கள். இருந்தும், எம்.ஜி.ஆர் காலத்திலேயே வெல்லக் கூடியதாக இருந்த தொகுதிகளில் திமுகவினர் திணறுவது ஏன்??

திமுகவில் இருந்த, கட்சித் தளபதிகளை பெரும் புள்ளிகள் ஓரங்கட்டி வைத்தது முதற்காரணம். நடுத்தர வர்க்கத்தின் குரலாக இருந்த கட்சித் தலைவர்கள் பெருமளவில் ஓரங்கட்டப்பட்டு, செல்வந்தர்கள் கட்சித் தலைவர்களாக உருவெடுத்தார்கள்.

கோயம்பத்தூர் என்பது, பெரியார் உயிர்கொடுத்த திராவிடத்தின் இலக்கணம் என்பது இன்று வரையிலும் மெய்யானதாகவே உள்ளது. ஏன்? கோயம்பத்தூரில், பெருமளவில் தெலுங்கர்கள், கன்னடர்கள், மலையாளிகள் காலங்காலமாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கான கட்சியாக இருந்த திமுக, ஒரு குறிப்பிட்டவர்களின் கட்சியாக மாறிப் போனது இன்று. இதன் காரணமாக, இதர திராவிட மொழிகளைச் சார்ந்தோரின் சங்கங்கள் எல்லாம், கூட்டம் போட்டுத் திமுகவுக்கு எதிராகத் தீர்மானம் போடும் அளவிற்கு நிலைமை மாறி இருக்கிறது.

கல்லூரிகளின் மாநகராகத் திகழும் கோவையில், மாணவர்களின் ஆதரவு என்றும் திமுகவுக்கே இருந்து வந்தது. ஆனால், இன்றைக்கு அவர்கள் திமுகவுக்கு எதிரான நிலையை மேற்கொண்டு உள்ளார்கள். குடும்ப அரசியல் மற்றும் இசுபெக்ட்ரம் முதலானவற்றைக் குறிப்பிட்டுப் பேசுகிறார்கள் இவர்கள்.

ஏற்கனவே குறிப்பிட்டபடி, திராவிடத்தை முன்னிறுத்தியதில் கோயம்பத்தூருக்கு நிகர் வேறு எந்த நகரும் இருக்க முடியாது. ஈழ உறவுகளுக்காக அன்றும், இன்றும் குரல் கொடுக்கும் தலைவர்கள் வாழும் ஊர் இது. அவர்களை ஒட்டி இருக்கும் தமிழார்வலர்கள், பேராயம் மற்றும் திமுகவுக்கு எதிரான நிலையை மேற்கொண்டிருப்பதும் திமுகவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

இலவசங்கள் மற்றும் தள்ளுபடித் திட்டங்கள் மூலம் கிராமப்புறத்தினரைக் கவர்ந்திழுத்த திமுக, சோதனையான காலத்திலெல்லாம் கைகொடுத்த நடுத்தர வர்க்கத்தினரின் ஆதரவை இழந்து, பணத்தாலே அரசியல் நடத்தலாம் எனும் நிலையை மேற்கொண்டிருப்பது எம் போன்ற முன்னாள் திமுக அபிமானிகளுக்குப் பெருத்த ஏமாற்றமே!

இன்றும் நாளையும், அதிமுக பொதுச் செயலாளர் அவர்கள் கொங்குப் பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்கள். அவரது வருகை, நிச்சயமாய்த் திமுகவின் ஆதரவு வாக்குகளையும் சேர்த்துக் கொள்ளை கொள்ளும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

இறுதி நாட்களிலாவது, திமுக தலைமை தலையிட்டுத் தன் பழைய உறவுகளை மீட்டெடுக்குமா? அல்லது, படு பயங்கரமாகத் தோற்றுப் போகுமா?? முடிவு, திமுகவின் நடவடிக்கைகளைப் பொறுத்தே அமையும்.

4/03/2011

பதிவர் கொட்டம்

முதலாளி