1/30/2011

ஆமா, நான் திமுகதான்... இப்ப என்ன?!

கடந்த சில வாரங்களாக, பொங்கல் திருவிழா மற்றும் இதர வேலைகளுக்காக பல்வேறு நகரங்களுக்குச் சென்று பல தரப்பட்ட தமிழ் நண்பர்களைக் காணும் வாய்ப்புக் கிட்டியது. எங்கு சென்றிடினும், ஒரே மனோநிலைதான்! அது என்ன?

திமுக, திமுக அனுதாபிகள், திமுக தலைவர்கள், தோழமைக் கட்சியினர் என அனைவரும் கேலிக்கு உள்ளாக்கப்பட்டு, கொச்சைப்படுத்துதலுக்கு ஆளாகிறார்கள். காரணம்? தமிழுக்கும் தமிழனுக்கும் நேர்ந்திருக்கும் பின்னடைவு என்பதில் நமக்கு ஐயமேதும் இல்லை.

ஆனால், அமெரிக்காவில் குடியிருக்கும் இவர்களுக்கு ஊரைப்பற்றின நிலை எப்படித் தெரிய வந்திருக்கும்? வேறென்ன?? இணையம்தான்! இணையம் என்பது, வெகுசன மக்களின் மனோநிலையை அப்படியே பிரதிபலிக்கும் ஒரு சாதனமா? கிடையவே கிடையாது என்பதுதான் நம் கருத்து. வலைப்பக்கங்களும், திரட்டிகளும் இன்றைய நாள் வரையிலும் சமூகத்தின் மனோ நிலையைப் பிரதிபலிப்பது இல்லை என்பதுதான் யதார்த்தம். தாயகத்தில், தமிழ்ச் சமூகத்தில் இணையம் என்பது அவ்வளவாகப் புழக்கத்தில் வரவில்லை என்பதுதான் காரணம்.

இன்னுஞ் சொல்லப் போனால், தாயகத்து நாளிதழ்களும், வார இதழ்களும், இன்னும் பிற ஊடகங்களுமே வெகுசன மனோநிலையைப் பிரதிபலிப்பது இல்லை. மாறாக, தத்தம் கருத்துகளையும் நிலைப்பாட்டையும் கொண்டு செலுத்துவதிலேதான் முனைப்பாய் இருந்து வெற்றி காணத் துடிக்கின்றன.

இச்சூழலில்தான், நமது வெளியூர்ப் பயணங்களும் இன்ன பிற கலந்துரையாடல் நிகழ்ச்சிகளும் அமைந்தன. அரசியல், ஊழல்வாதியால் மக்கள் இன்னலுறுகிறார்கள் என்ற ரீதியில் நண்பர்களுடைய கேலிப் பேச்சுகள். ”அது அப்படி அல்ல; சுயநலவாத மற்றும் அடிப்படையைப் புரிந்து கொள்ளாத நம்மவர்களால்தான் நமக்கு இன்னல்கள் நிறைய”, என்பது நம் வாதம்.

துள்ளிக் குதித்து எழுந்தனர் நம்மவர்கள். பிரச்சினையை ஆழமாகப் பேசிப் புரிந்து கொள்ள எவருமே ஆயத்தமாக இல்லை. மாறாக, உடன் இருக்கும் சக தமிழனை, திமுக அனுதாபி எனும் பட்டத்தைச் சூட்டி ஆர்ப்பரிப்பதில் மகிழ்ச்சி அடைந்தார்கள். இணையத்தில் கேட்ட, கண்ட பரப்புரைகளை, சொல்லி வைத்தாற்போல் மாய்ந்து மாய்ந்து வாந்தி எடுத்தார்கள்.

கொள்கைகள் இன்னது என அடையாளம் காண முற்படவில்லை. சித்தாந்தங்கள் சிந்தனைக்குள் கொண்டு வரப்படவில்லை. சமூகம் என்பது, பொருளாதாரம், அரசியல் மற்றும் கொள்கைகள் முதலானவற்றோடு இரண்டறக் கலந்தது. அதையொட்டியே, யாவும் திட்டமிட்டு நடத்தப்பட வேண்டும் என்பதை உணரவே இல்லை. வேறு என்னதான் செய்கிறார்கள் இவர்கள்?

”இந்த மாதிரி இன்னமும் திமுகவுக்கு அனுதாபியா இருக்குற ஆட்களாலதான், இலவசத்தைக் கொடுத்துக் கொடுத்தே நாட்டைக் கெடுக்கிறானுக இவனுக?”, சக நண்பர் என் முன்னாலேயே கூறியதுதான் இது.

இவருடைய குழந்தைகள் தமிழ் கற்க வேண்டும். நாட்டிய, நாடகங்களில் பங்கேற்க வேண்டும். இந்நிலையில், கட்டமைப்பைக் கட்டி, நல்லதொரு வாய்ப்பினை நல்கும் தமிழ்ச் சங்கத்துக்கு உரிய கொடைக் கட்டணத்தை நினைவு கூர்ந்த சில நிமிடங்களில் ஆள் அம்பேல். இவர் பேசுகிறார், ”தாயகத்தில் இலவசத்தின் தாக்கம் அளப்பரியது”.

மனமுவந்து முன்வந்து, தமிழ்க் கட்டமைப்புக்கும் இன்னபிற சமூகம் சார்ந்த தொண்டு நிறுவனங்களுக்கு ஈவது, அல்லது தொண்டாற்றுவதை வழக்கமாகக் கொண்ட நம்மவர்கள் எத்தனை பேர்?

சொந்தத் தெருக்களில் வாழும் சக தமிழனிடம், உள்ளூர்ப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசியது உண்டா?

தன் கிராமத்தில், தன் ஊரில் நடக்கும் கிராம சபைக் கூட்டத்திற்கு, ஒரு பார்வையாளனாகச் சென்று அவதானித்த நாள் ஒன்று இவ்விமர்சகருக்கு உண்டா??

வாரம் ஒருமுறை, வேண்டாம், மாதம் ஒரு முறையாவது தன் சொந்த கிராமத்துக்குச் சென்று, ஊர்க்கட்டமைப்பு அல்லது இன்னபிற நிகழ்வுகளில் தன் பங்களிப்பைச் செய்தது உண்டா??

சென்ற தலைமுறையில் எழுத்தறிவின்மையைப் போக்குவது முதன்மைத் தேவையாக இருந்தது. இன்றைக்கு, சிந்தனையறிவின்மை என்பது பெரும் பிரச்சினையாக உருவெடுத்து இருக்கிறது. கேளிக்கை மற்றும் பொழுது போக்கைத் தவிர்த்து படைக்கப்படும் படைப்புகளுக்கு தொடர்புடைய விமர்சகர்கள் செய்த பங்களிப்பு என்ன?

பொருளாதாரத்தில் மேன்மை அடைய வேண்டும் என்பதைத் தவிர, இனமான மற்றும் தமக்கு ஒத்த விழுமியத்தைப் பற்றி சிந்தனைவயப்பட்டது உண்டா?

தனிமனிதனாய் மிளிரும் பிரச்சாரகரின் பின்னால் அணிவகுப்பதை விடுத்து, அப்படிப்பட்ட பரப்புரையாளரின் கொள்கைகள் மற்றும் இலக்கினைப் பற்றி வினவுவது உண்டா? உணர்வைக் கிளர்ந்து எழச் செய்து, அதற்கு ஆட்படுவதால் இருக்கும் பிரச்சினைகள் தீர்வு கண்டுவிடுமா?

அமெரிக்கா வந்தும், சாதிப் பற்றைக் கைவிட முடியாமல் திரிகிறோமே? இந்த இலட்சணத்தில், காசு பார்க்கும் அரசியல்வாதியின் வெற்றியே அதில்தான் அடங்கி இருக்கிறது என்பதை உணர்வது எப்படி??

பிரச்சினை என்ற மாத்திரத்தில், தமிழ், தமிழன் என்று கத்திக் கூப்பாடு போடுவதால் வந்துவிடுமா தீர்வு? கொள்கைகள் தரித்த மனிதர்கள் உலாவுதல் வேண்டும். அம்மனிதர்களின் வெளிப்பாடாய், கட்சிகள் தோன்றுதல் வேண்டும் என்பதுதானே நியமம்??

உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், வணிகமயமாக்கல் என மாற்றங்களைத் திணிக்கிறான் வளர்ந்த நாட்டுக்காரன். பகற்பொழுதில் ஐந்து பில்லியன், பத்து பில்லியன் என, உதவுதல் போலக் காசைத் தருகிறான். அன்றைய இராப் பொழுதிலேயே, ஐம்பது பில்லியன், அறுபது பில்லியன் என அறுவடையும் செய்கிறான். அதைப் பற்றிப் பேசினால், கலாசாரக் காவலன் எனக் கேலி பேசுவதில்லை?!

நின்முந்தை, நின் மரபு, நின் மொழி, நின் நானிலம், நின் மக்கள் எனும் உணர்வைத் தரிக்க தனிமனிதனாய் ஒருநாளேனும் சிந்தித்தது உண்டா? முதன்மையாய்த் தமிழில் பேசுவதை ஒரு கணமேனும் செயற்படுத்தியது உண்டா??

கிராமத்தில், பாமரராய் இருந்தும் அழகாய்ச் சொல்வர், “தும்பை வுட்டுட்டு, வாலைப் புடிக்கிறான் இவன்?”. இப்படிப் பின்பற்றக் கூடியனவற்றைச் செய்யாது இருந்து விட்டு, வெற்றுக் கூச்சல் இடும் இவர்களால் ஆகப் போவது ஒன்றும் இல!

திமுக தோற்று, அதிமுக வரலாம்!! ஆனால், மீண்டும் அதே திமுகதான் வெல்லும்... இளிச்சவாய்த் தமிழன், தான் திருந்தும் நாளது வரையிலும்!!!


அவர்கள் அவனைப் பிடிக்கும் வரை, ஒவ்வொருவரும் நேர்மையானவரே!

1/27/2011

கல்வெட்டுகளும் தமிழ்நாடும்!!









கல்வெட்டு ஆராய்ச்சியாளர் வெ.இரா.துரைசாமி

1/21/2011

தமிழ்மணம் விருதுகளும், விமர்சனமும்!!

சென்ற ஆண்டைப் போலவே, இவ்வாண்டும் தமிழ்மணம் திரட்டியானது விருது வழங்க்லைச் செவ்வனே நடத்தி முடித்திருக்கிறது. தமிழ் வாசகன் எனும் முறையில் நன்றியும் வாழ்த்துகளும்!

விருதுகள், படைக்கப்பட்ட படைப்புக்கே ஒழிய படைத்தவர்களுக்கு அல்ல. எதிலும் தனிமனிதர்களை முன்னிறுத்தி விமர்சனம் செய்வது என்பது களையப்பட வேண்டிய ஒன்று.

பங்கேற்ற நடுவர்கள் தத்தம் மனசாட்சிக்கு ஒப்ப நடந்து கொண்டிருப்பார்கள் என நம்புகிறேன். நம்பித்தான் ஆக வேண்டும். அப்படியே, ஓரிருவர் வழுவி இருந்தாலும் தேர்வுக்குப் பங்கம் நேர்ந்திருக்காது. ஏனெனில், ஒவ்வொரு பிரிவுக்கும் பல நடுவர்கள் பணியாற்றினர். ஒருவரது மதிப்பீடு மட்டும் இறுதித் தெரிவினை முடிவு செய்வதற்கான வாய்ப்புகள் மிகவும் சொறபம்.

கொடுத்த விருதினைத் திருப்பி அளிப்பது என்பது, கட்டமைப்புக்கும் கட்டமைப்பின் நேயர்களுக்கும் எதிரானது.

இறுதியாக, விருதுகள் என்பன கொடுக்கப்பட வேண்டுமே ஒழிய நாடப்படுவன அல்ல. அம்முறையில், தத்தம் இடுகையை தாமே விருதுக்குச் சமர்ப்பிப்பதில் அவ்வளவு நியாயம் இல்லை. மாறாக, தாம் வாசித்துச் சிலாகித்து, விருதுக்குத் தகுதியானவற்றை மற்றவர் முன்மொழிதலே சிறப்பாக இருக்க முடியும். இதிலும் சிக்கல் எழும். ஒரே பதிவரின் எண்ணற்ற இடுகைகள் முன்மொழியப்படக் கூடும். அப்படியான நேரத்தில், குறித்த பிரிவின் கீழ் முதலில் சமர்ப்பிக்கப்படும் இடுகை மாத்திரமே கணக்கில் கொள்ளப்பட வேண்டும்.

ஒரு சிலர், பங்கேற்பதில் இருந்து விலகுவதாக அறிவித்து இருக்கிறார்கள். என் பார்வையில் அதுவும் சரியன்று. விருது வழங்கலின் நோக்கத்தில், நயம்மிகு இடுகைகளைத் தெரிவு செய்து பார்வைக்கு வைத்தலும் அடக்கம். அப்படியாக, நயம்மிகு இடுகைகள் பார்வைக்குச் செல்லாமல் தடுப்பது எப்படி நியாயமானதாக இருக்கும்?

தமிழால் இணைந்தோம்!

ஏவல், பில்லி, சூனியம், வைப்பு, வசியம், செய்வினை, மாந்திரீகம்

”எங்கடா உங்கம்மா போயிருக்கு?”

“எங்கம்மா கொழிஞ்சாம்பாறைக்கு, எங்களுக்கு வெச்ச செய்வினைய எடுக்கப் போயிருக்குதுடா!”

எம் நினைவுக்கு எட்டிய வரையிலும், செய்வினை எனும் சொல் முதன்முதலாக மேற்கூறிய உரையாடலின் மூலம்தான் அறிய நேரிட்டது. அதற்குப் பின், எங்கள் ஊரில் சின்னக்கண்ணான் என்பவர் அடிக்கடி பல வீடுகளுக்குச் சென்று வருவதை அவதானித்து இருந்தோம். எங்கள் வீட்டில் அவர் குறித்து வினவியதற்கு, ”பில்லி சூனியம் விடுவிக்கும் வேலை அவருக்கு. அதனால்தான் அவர் மற்றவர் வீடுகளுக்கு அடிக்கடி சென்று வருகிறார்” எனக் கூறினார்கள்.

அவர் என்ன செய்கிறார் என்பதை அறியும் ஆவல் மிகுதியால், அவரைப் பின் தொடர்ந்து சென்று அவர் செய்வதை எல்லாம் கண்டு வந்த நாட்கள் பல.

உடுக்கை அடித்து, மந்திரப் பாடல்கள் பல பாடி, ஒருவருக்குள் இருக்கும் பில்லி மற்றும் சூனியத்தை விடுவிப்பார். வேப்பிலையால் மந்திரங்கள் ஓதி, வசியத்தை அகற்றுவார். பாதிக்கப்பட்டவரின் வீடுகளுக்குச் சென்று, பூசனைகள் நடத்தி, பூசனைக்கு வைத்த எலுமிச்சம் பழங்களை வீடுகளுக்கு அரணாக விட்டெறிந்து ஏவலை முறியடிப்பார். கோழிக் குஞ்சுகள் மற்றும் நரபலி இட்டு, இருப்பதாகக் கருதப்படும் வைப்புகளை நிர்மூலமாக்குவார்.

பில்லி என்றால், ஒருவரை ஆட்கொண்டு இருக்கும் நச்சு நிரலி என்பதாகும். அதாவது, ஒவ்வொரு மனிதரும் தன்னுள் இருக்கும் ஆன்மா எனும் நிரலியின் சொல்கேட்டுச் செயல்படக் கூடியவராகும். காலையில் எழுந்து, இந்த நேரத்திற்கு இங்கு செல்ல வேண்டும் என எண்ணம் துளிர்க்க, மெய்யானது அக்கட்டுப்பாட்டுக்கு இயங்கும். அக்கட்டுப்பாட்டில் குழப்பத்தை உண்டு செய்யும் விதமாக இயங்குவதுதான் பில்லி என்பதாகும்.

சூனியம் என்றால், ஒருவருக்கு எதுவுமே வாய்க்காது போதல். “அவனுக்கு யாரோ சூன்யம் வெச்சிட்டாங்க”, “அவன் ஒரு சூன்யம்டா” என்றெல்லாம் கிராமங்களில் சொல்லக் கேட்டிருப்பீர்கள். மந்திரிக்கப்பட்ட தகடுகளை வீடுகளில் வைத்தல், ஒருவரது மயிரில் மூன்று இழைகளைச் சேகரித்து அவர்தம் வீட்டில் அவர்தம் காலடி மண்ணோடு சுழியம் போல் புதைத்தல் என்பன அந்த வீட்டிற்கும், காலடி மண்ணுக்கு உரியவருக்கும் சூனியத்தை உண்டு செய்யும் என்பது நம்பிக்கை.

ஏவல் என்றால், துர்ப்பாக்கியமான காரியங்களுக்கு ஒருவரைத் தூண்டுவதன் மூலம் அவரைச் சீரழிப்பது அல்லது பாதிப்புக்கு உள்ளாக்குவதாகும். ஒருவருக்குப் பிடித்தமான பானங்கள், பண்டங்கள் முதலானவற்றைப் பூசனையில் வைத்து மந்திரங்கள் பல ஓதி, அவற்றை எல்லாம் அவ்ரைக் கொண்டு நுகரச் செய்வதன் மூலம், ஏவலில் சிக்க வைக்க முடியும் என்பது நம்பிக்கையாகும்.

வசியம் என்றால், தன்வசம் வயப்படுத்துவது. அல்லது, ஆகாக் குணங்களுக்கு ஒன்ற வைப்பது என்பதாகும். இறைச்சி உணவுகள் கொண்டு வசியம் செய்வது. அல்லது ஒரு பெண்ணின் வசம் வீழ்த்துவதற்கு, அப்பெண்ணின் நகம், மயிர் முதலான உடற்கூறினை மந்திரித்து அவரது இருப்பிடத்தில் தரிப்பது போனற செய்லகள் எல்லாம் வசியம் வைத்தல் என்பதாகும்.

வைப்பு என்பது, மேற்கூறியவற்றுக்காக எதோ ஒன்றை வைத்திடச் செய்வதே. அவர்தம் இடத்தில்தான் வைக்க வேண்டும் என்பது இல்லை. அவர் வேலை செய்யும் அலுவலகத்தில் வைக்கலாம். அவருக்கு முற்றிலும் தொடர்பில்லாத இடத்திலும் வைக்கலாம்.

செய்வினை என்பது, ஒவ்வாத மாந்திரிகச் செயல்களைச் செய்தல் என்பதாகும். ஆனைமலைக் கோயிலுக்குச் சென்று, அவன் நாசமாகப் போக வேண்டும் எனப் பிரார்த்தனை செய்து, மாசாணியம்மனுக்குச் சினத்தை உண்டாக்கும் வகையில் மிளகாயை அரைத்து அம்மனுக்கு அப்புவதெல்லாம் செய்வினை என்பதே ஆகும்.

மாந்திரீகம் என்பதில் எழுத்துப் பிழை இருக்கிறது. மாந்திரிகம் என்பதே சரி. மந்திரங்கள் அறிந்தவரைக் கொண்டு, மற்றவருக்குக் கெடுதல் விளைவிக்கும் பொருட்டு எதைச் செய்தாலும் அதை மாந்திரிகம்/மாந்திரிகன் என்றழைக்கப்படுவது வழக்கம். ஆனால், மாந்திரிகம் என்பது நன்மை பயக்கவும் செய்யும்.

கோயமுத்தூர், காந்திபுரம் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள முனியப்பன் கோவிலின் மந்திரங்கள் ஓதிப் பூசித்துத் தரும் கயிற்றைக் கட்டுவதன் மூலம், உடல் உபாதைகள் நீங்குகிறது எனப் பலர் நம்புகிறார்கள். அதுவும் மாந்திரிகம்தான்.

தூக்கமின்மை, குளிர்காய்ச்சல் முதலானவற்றுக்கு, கிட்டா எனும் மூதாட்டி எங்களுக்குச் சிறுவதின் போது துண்டை வீசிக் கொண்டே மந்திரம் சொல்லி, இறுதியில் திருநூறு வைத்துவிடுவது வழக்கம். இதுவும் மாந்திரிகம்தான்!

யார், என்ன பில்லி, சூன்யம், ஏவல், வசியம் ஆகியன வைத்தாலும், திருமுருகன் பூண்டி, அரசூர்ப் பரமசிவன் கோவில் மற்றும் கொடிமாடுச் செங்குன்றூர் எனும் திருச்செங்கோடு முதலான இடங்களுக்குச் சென்று பதிகங்கள் பாடி வருவதன் மூலம், அவற்றை எல்லாம் முறியடிக்க முடியும் என்பதும் ஐதீகம்.

அவ்வினைக் கிவ்வினை
என்றெடுத் தையர்அமுதுசெய்த
வெவ்விடம் முன்தடுத்
தெம்மிடர் நீக்கிய வெற்றியினால்
எவ்விடத்தும்அடி யார்இடர்
காப்பது கண்டமென்றே
செய்வினை தீண்டா
திருநீல கண்டம்! .

1/17/2011

கனவில் கவி காளமேகம் - 20

பாருங்க மக்களே, எல்லாம் ஒரு நிதானத்துலயே இல்ல பாருங்க. ஊர் முச்சூடும், வெட்டி வீறாப்பும் முறைச்சலுமுமாவே இருக்காங்க. கேட்டா, இது துன்பகாலம்னு அளக்குறாங்க. என்றா உனக்குத் தும்பம்ன்னு இழுத்துப் புடிச்சிக் கேட்டா, சாயங்காலமான கமுத்துறக்கு பணம் இல்லீங்கறானுக.

ஏண்டாப்பா, வாரத்துல இருக்குறது ஏழு நாளு? அதுல ஒம்போதுதரம் கருமத்தைக் குடிச்சுப் போட்டு அல்லாடாட்டி, கெடையில இருக்க முடியலையான்னு கேட்கலாம். கேட்டா, வுட்ருவாங்களா? செரி, அது அவனுகபாடு? ஆனாலும், இந்தியாவுல ஆண்டுக்கு ஒன்னரை இலட்சம் பேர் தற்கொலை செய்யுறது அறமாலும் அநியாயமுங்க! இதை நெனைச்சிக் கவலைப்படும் போது, நம்ம அப்புச்சி நாவகமும் வந்திட்டுது எனக்கு.

தமிழ்ச் சங்க விழாவுக்குப் போய்ட்டு வந்த களைப்புல, நம்ம அப்புச்சியும் தற்கொலை செய்திட்டாரோ? ஏம்பொறகு வாறதே இல்லைன்னு நினைச்சிட்டே தூங்கிப் போனனுங்க நேத்து. நாம் எப்ப அப்பிச்சிய நெனைச்சி கவலைப்பட்டாலும், குறிப்பறிஞ்சி வாறதுல அப்பச்சி பலே ஆளுங்க. ஆமாங்க, நம்ப கனவுல வந்த அப்பிச்சி, என்ன சொன்னாரு, ஏது சொன்னாருன்னு மேல படிங்க!!

”என்ற பேராண்டி, என்றா பண்றே?”

“க்கும்... சலுப்புல தூங்கீட்டு இருந்தவனை எழுப்பி உட்டுப் போட்டு, கேள்வியப் பாருங்க? ஆமா, ஏனுங்க இத்தினி நாளா ஆள் நடமாட்டத்தையே காணம்??”

“ஆமா, தூங்குறதுல நல்லா வசங்கண்டவன் ஆயிட்ட? அதான் வந்து எதுக்கு செரமத்தைக் குடுக்கோணுமின்னுதான் வாறதை நிறுத்திப் போட்டன் நானு??”

“ஏனுங் அப்பிச்சி இப்பிடிச் சொல்றீங்க? ஆமா, வசங்கண்டவன்னு சொல்லிச் சொன்னீங்களே, அதென்னோ??”

“அதா... ஒன்னைச் செய்யுறதுல நெம்ப அத்துபடி ஆனவன்னு சொல்றதைத்தான், வசங்கண்டவன்னு சொல்றது. ஆளுமை கண்டவன்னும் சொல்லலாம்டா பேராண்டி!”

அத்துபடின்னா?”

”என்றா நீயி, இன்னும் அரைவேக்காடாவேதான் இருக்கியா? ஒன்னைச் சொன்னா, அதுல இருந்து மறுக்கா ஒன்னைக் கேக்குற? ஆனாலும், கேட்டுத் தெரிஞ்சிக்கிற பாரு.... அங்கதாண்டா நீ எம் பேராண்டியா நிக்கிற?”

“அப்பிச்சி, இந்த டகால்டி வேலையெல்லாம் எங்கட்ட வேண்டாம்.. அத்துபடின்னா என்னொ? அத மொதல்ல சொல்லுங்க... அப்புறம் கேக்குறம் உங்க இராமயாணத்தை!!”

“சொல்றண்டா... சொல்றன்.. சொல்லாம எங்க போயறப் போறேன்? அத்து அப்படின்னு ஒன்னோட எல்லை, வரையறை, வன்மை, அவன்மைன்னு அதைப் பத்தின விபரங்கள். ஆக அத்துபடின்னா, ஒன்றைப் பற்றிய சகலவிபரங்களும்னு ஆகுது!”

“அப்பிச்சி... நான் என்ன திருவாத்தானா? சொல்றதை எல்லாங் கேட்டுப் போட்டுத் தலையாட்டுறதுக்கு... அத்துங்றதுக்கு விளங்குச்சு... அத்துபடிங்கும் போது, வாற ’படி’? இஃகிஃகி, யார்கிட்ட??”

“டேய்... டேய்... நீ ஒரு மஞ்சமாக்காண்டா... ஆனாலும் மடக்கிக் கேக்குறதுல எனக்கு நெம்பப் பெருமையா இருக்குதுடா பேராண்டி?”

“அப்பிச்சி... இன்னுமு ஒன்னைச் சொல்லி இருக்கீங்க இப்ப... அதையும் இதையும் பேசி என்னைக் கோமாளி ஆக்கிறலாம்ன்னு மட்டும் நெனச்சிறாதீக? அத்துபடில வாற, படிக்கு என்ன அர்த்தம்? அப்பொறம், மஞ்சமாக்கான்னு சொல்லித் திட்டுனீங்களே, அப்ப மஞ்சமாக்கான்னு சொன்னா என்ன அர்த்தம்?? மாட்டீட்டீங்களா... மாட்டீட்டீங்களா? இஃகிஃகி”

“டேய், டேய்... இர்றா, இர்றா.... அத்துபடி, பரும்படின்னு சொல்லிக் கேட்டு இருப்பியேடா? இதுகள்ல வாற படி அப்படிங்றது குணத்தின் நிலையக் குறிக்கும். அத்த்படி அப்படின்னா, அவன் அதைப் பற்றிய முழுவிபரமும் தெரிந்த நிலையில் இருப்பவன் அப்படின்னு அர்த்தம்”

“ஓ அப்படியா? அப்ப, பரும்படின்னா??”

“பரும்படியா இருந்துட்டேன்... தெனை இந்த வாட்டி பரும்படியாத்தான் முளைச்சி இருக்கு அப்படின்னெல்லாம் சொல்லிச் சொல்றதுடா... அதாவது, ஆழமும் நுணுக்கமும் இல்லாம, மேம்போக்கான நிலையில் இருக்குறதைச் சொல்றதுதான் பரும்படி. இரவை, மாவு அல்லாம் நுணுக்கமா இருக்கும்... பருப்புக எல்லாம், பெருசு பெருசா இருக்கில்ல? அதை உவமைப்படுத்தி வந்த சொல்தான் பரும்படி அப்படிங்றது... விளங்குச்சாடா?”

“நெம்ப நல்லாவே... ஆனா நான் மறக்கல...”

“என்னடா சொல்ற?”

“மஞ்சமாக்கானை உட்டுப் போடுவேன்னு நெனைச்சீங்களா?”

“அதுசெரி.... நீயி மஞ்சமாக்கான் மட்டும் இல்லடா... கோக்குமாக்கானுங்கூட... அதான், ஆறடி வளந்து நிக்கிறியே? அதைப்பத்திச் சொல்ல ஆரம்பிச்சா வெடிஞ்சி போயிரும்... அடுத்தவாட்டி வந்து சொல்றஞ்ச் செரியா?”

“செரீங் அப்பிச்சி... நீங்க சொன்னாச் செரீங்... ஆனா, எனக்கு இன்னுமொரு கேள்வி இருக்கு... உங்ககிட்ட கேக்குறதுக்கு?”

“செரி, விசுக்காக் கேள்றா? என்னோட பூமியில ஒளவை எனக்காகக் காத்திருப்பாடா!!”

“அப்பிச்சி... என்ன நடக்குது அங்க? அது ஆம்பளை ஒளவையா? பொம்பளை ஒளவையா?? அப்புறம் எங்கமுச்சீ...??”

“அதெல்லாம் பூலோகத்தோட போச்சி உங்கமுச்சியோட சங்காத்தம்... நித்திராலோகத்துல அம்சவல்லி ஒளவைதாண்டா எனக்கு எல்லாமும்!”

“அடக் கொடுமையே? இதா பாருங்யா... எங்கயும் இந்த அழிம்புதானா??”

“டேய்... சும்மா பொல்ம்பாமக் கேக்க வேண்டியதைக் கேளு... எனக்கு என்ற அம்சவல்லி காத்திருப்பாடா...”

“போங்க அப்பிச்சி... ஊர்ப் பேர்களைச் சொல்லிக் கேட்கலாமுன்னு இருந்தன்... எல்லாம் மறந்து போச்சுங்க... இந்த ஊர், பட்டி, பாளையம் இதுகளைப் பத்திச் சொல்லுங்க சித்த...”

“ஊர் அப்படின்னா, மக்கள் ஊர்ந்து சென்றடையும் இடம்; இருப்பிடங்கள் இருக்கும் இடம். பட்டி அப்படின்னா, மக்கள் தங்கிச் செல்லும் இடம்.”

“நிறுத்துங்க, நிறுத்துங்க... எங்கூர்ல இருந்து பொழில் வாய்ச்சி, அதாங்க பொள்ளாச்சி வரைக்குமு ஒரே பட்டிகதான்... அப்ப அதுக ஊருக இல்லையா?”

“அட, அந்த மாதிரியான இடங்க பின்னாள்ல ஊர்களாவும் மாறி இருக்கலாந்தானொ?”

“ஆமா... திப்பம்பட்டி, கோலாறுபட்டி, ஊஞ்சவேலாம்பட்டி, மாக்கினாம்பட்டி, அப்பொறம் பொள்ளாச்சி...”

“திப்பம் அப்படின்னா, பொன் நாணயம்; பொன் நாண்யங்கள் கண்ட இடம் திப்பம்பட்டி

கோலா(ர்)றுபட்டின்னா அப்ப?”

“பார்த்த வேலைக்கு ஈடாக, கோலால் நிலத்தை அறுத்து(அளந்து)க் கொடுத்த காணி நிலத்தில் அமைந்த பட்டி”

“ஊஞ்சவேலாம்பட்டி, நானே யூகிக்க முடியுது. அப்ப மாக்கினாம்பட்டி?”

“மாகினம் அப்படின்னா, மேன்மை பொருந்திய ஒருவன் நிர்வாகம் செய்வது. அப்படியானவனின் இடம், மாகினம்பட்டி.”

“நெம்ப சிறப்பாச் சொன்னீங்க அப்பிச்சி... இதுக்கு மேலயும் உங்களை தடுத்து நிறுத்தலை நானு... நெதானமாப் போய்ச் சேருங்க... ஆனா, அம்சவல்லி ஒளவைகூடச் சுத்தீட்டு, இந்தப் பேராண்டிய மறந்துறாதீங்க அப்பிச்சி!”

“செரிச்செரி... நான் வாறனப்ப?”

இன்னைக்கு இதாங்க சொன்னாரு! மனுசன், நித்திராலோகத்துல போயிக் கூட அறம், பொருள், இன்பம்ன்னு மூணையும் விட்டபாடில்ல போலிருக்கு. அம்சவல்லியத் தேத்தி இருக்கார் பாருங்களே?! எதுக்கும், மறுபடியும் வருவாருன்னு நம்புவோம்.

(கனவில் மீண்டும் வருவார்...)

1/15/2011

வட கரோலைனா பொங்கல் விழா - படப்பிடிப்பு துவங்கியது

பொங்கலோ பொங்கல்! மக்களே, டென்னசி மாகாணத்தின் சட்டனூகா நகரில் இருந்து கிட்டத்தட்ட நடுஇரவில் வட கரோலைனாவின் தலைநகருக்கு வந்து சேர்ந்தோம். அவ்வேளையிலும், தமிழாசான், சொல்வித்தகர் அமரர் கா.காளிமுத்து அவர்களுடைய உறவினருடைய உணவகம் ஒன்றின் அறுசுவை நம்மை “வா, வா” என வரவேற்றுப் புசிக்க வைத்தது.

புசித்து முடித்து, அறைக்குத் திரும்பியதும் தமிழ்மணம் விருதுகளைக் கண்டேன். அகமகிழ்ந்தேன். எண்ணற்ற மணிக்கணக்கான உழைப்பு அதில் அடங்கி இருக்கிறது. நேரம் செலவழித்து எழுதிய பதிவர்களின் உழைப்பு, கட்டமைப்பு உருவாக்கிப் போட்டிதனை அறிவித்து நடத்தி முடித்த தமிழ்மணம் திரட்டியினரின் உழைப்பு, நடுவர்களின் உழைப்பு என எண்ணற்ற மணிக்கணக்கான உழைப்பு, தமிழுக்கு அர்ப்பணிக்கப்பட்டதில் மிகவும் அகமகிழ்கிறேன்.

ஈரோட்டுப் பாசறைக்குப் பல விருதுகள். மகிழ்ச்சி! மகிழ்ச்சி!! எம்மவன் பாலாசி படைத்த “புழுக்கள்”. என்றும் எம்மை சிந்தனை வயப்படுத்தக் கூடிய ஒன்று. மாப்பு, ஈரோடு கதிர் படைத்த “கோடியில் இருவர்”, அர்ப்பணிப்பின் அடிநாதத்தை ஊர் உலக்குச் சொல்லும் இடுகை. விருதுக்குப் பெருமை!!

இதோ, அம்மகிழ்ச்சியின் தொடர்ச்சியாய்த் தமிழர் திருநாளைக் காணப் புறப்பட்டு விட்டோம். நேற்றைக்குத் தமிழ்சசி அவர்கள், விளையாட்டாய்க் கேட்டதில் உண்மை இருக்கிறதுதான். ஆனால், ஊக்கமும் உற்சாகமும் பெற அவையெல்லாம் செய்யத்தானே வேண்டி இருக்கிறது?!

இன்றைய நாள், உற்சாகத்தோடும் களிப்போடும் கழியும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. பதிவர் மக்களே, தமிழ்விழாக்களுக்கு தத்தம் குடும்பத்தோடு வாருங்கள். சக தமிழரையும் வந்து கலந்து கொள்ளச் செய்யுங்கள். உள்ளூர்த் தமிழ்ச் சங்கங்களுக்கு வலிமையூட்டுங்கள்!!

ஆமாங்கய்யா... இதோ, படப்பிடிப்புத் துவங்கிருச்சு.... அட, இப்பத்தான் அறையிலிருந்து கிளம்பிட்டு இருக்கோமுங்க....



தமிழால் இணைந்தோம்!

1/14/2011

பொங்கல்

”டே கருணாநிதி, நீயி பெரியபோது போயிருவியா? இல்ல இங்கதான் இருப்பியா??”

“ஆமாண்டா, நானும் எங்க அக்கா ஜோதிலட்சியுமு இன்னிக்கு ஆறுமணி வண்டிக்கு பொள்ளாச்சி போயி, மாமன் கடையச் சாத்துனவுட்டு ஆனைமலை வண்டி புடிச்சிப் போலாம்னு எங்கம்மா சொல்லுச்சு! ஆமா, நீயி”

“எங்க பெரீம்மா செத்துப் போச்சில்ல? அதுனால இந்த வருசம் எங்களுக்கு நோம்பி இல்லடா. ஆனா, நான் லட்சுமாவரம், எங்கமுச்சியவிங் ஊருக்குப் போறேன்!”.

“அப்பிடியா? ஆனைமலை மாசாணியாத்தா கோயலுக்கு வருவியாடா அப்ப?”

“பாப்பு வந்தா, கூடா நானுமு வருவேன்!”.

சலவநாயக்கன் பட்டிப் புதூர் மின்வாரிய ஊழியரான குப்புசாமி அண்ணனின் மகன் கருணாநிதியும் மணியனும் ஒரே பள்ளியில் படிப்பவர்கள். மணியன் எட்டாம் வகுப்பு, கருணாநிதி ஏழாம் வகுப்பு. இருவரும் பள்ளிக்குக் கிட்டத்தட்ட ஐந்து மைல்தூரம் ஒன்றாக இணைந்தே சென்று வருவது வழக்கம்.

“மணீ, இங்க வா கண்ணூ. ஊருக்குப் போகாத இராசா... இங்கியே இரு... நாம நாளைக்கு உங்க பெரியத்தையப் பாக்குறதுக்கு தாளக்கரை போய்ட்டு வர்லாம்”

“போ அப்பத்தா... நான் எங்கமுச்சி ஊருக்குப் போறேன்...”

”உங்கம்மா உனைய நல்லாக் கெடுத்து வெச்சிருக்கா... இந்தக் கெழவி சொல்றத யாரு கேப்பாங்க? உள்ளந் தீயெரிய ஒதடு பழஞ்சொரியன்னு, பேசுறது மட்டும் தேனொழுகப் பேசுவா அவ!”, சந்தடி சாக்கில் மருமகளை வறுத்தெடுத்தாள் கிழவி.

”தம்பி, டிக்கெட் எடுத்தாச்சா?”

“இல்லீங்ணா, உடுமலைப் பேட்டை ஒன்னு குடுங்ணா!”

“ஒர்ருவா பத்து பைசா... செரியாச் சில்லறை வேணும்”

“இந்தாங், டிக்கெட் கிழிக்காமக் குடுங்ணா!”

மணியனுக்கு, பேருந்துச் சிட்டுகளைச் சேர்த்து வைப்பது நெடுநாள் வழக்கம். மூன்றாம் வகுப்பு படிக்கும் காலத்திலிருந்து, ஐந்தாண்டுகளாகத் தொடர்ந்து சேகரம் செய்து, சேமித்து வருகிறான்.

உடுமலைப் பேட்டையில், தளி சாலையும் பழனி சாலையும் சங்கமிக்கும் இடத்தைப் பழைய பேருந்து நிலையம் என அழைக்கப்படுவது உண்டு. அங்கே ஒரு போக்குவரத்து நிழற்கூடையும் ஒன்று இருக்கும்.

பேருந்து நிலையத்தில் ஏறினால், அமருவதற்கு இடம் கிடைக்காது என்பதற்காக, வைத்தியநாதன் மருத்துவர் அலுவலகம் முன்பாக ஏறி பேருந்து நிலையம் சென்று, அங்கே அனைவரும் இறங்கியவுடன் அமர்ந்து கொள்வது மணியனின் வழக்கம். அப்படியாகப் பழைய பேருந்து நிலையத்திற்கும், நடப்புப் பேருந்து நிலையத்திற்குமான கட்டணம் இருபத்தி ஐந்து பைசா. அதுதான் குறைந்தபட்ச கட்டணுமும் கூட.

இப்படிப் போக்குவரத்துக் கட்டணமானது, குறைந்தபட்ச கட்டணமான இருபத்தி ஐந்து பைசாவில் இருந்து ஐந்து, ஐந்து பைசாவாகக் கூடிக் கொண்டே போகும். இருபத்தி ஐந்து பைசா டிக்கெட் துவக்கம், ஒரு ரூபாய் இருபது பைசா டிக்கெட் வரையில், அனைத்து டிக்கெட்டு வகைகளையும் கட்டுக் கட்டாகச் சேர்த்து வருகிறான் மணி.

சலவநாயக்கன் பட்டிப் புதூரில் புறப்பட்ட, UBT, Udumalpet Bus Transport, நான்காம் இலக்கமிட்ட பேருந்தானது, கொசவம்பாளையம், மூங்கில்தொழுவு, சிக்கநூத்து, சிந்திலுப்பு, இலுப்பநகரம், ஆலாமரத்தூர், மாலகோயில் பிரிவு, பெதப்பம்பட்டி, பொட்டையம் பாளையம் பிரிவு, குறிஞ்சேரி, புக்குளம், ஏரிப்பட்டி கடந்து உடுமலை பழனிப் பாதையை அடைந்ததும் ஆயத்தமானான் மணி.

“பழைய பஸ்டேண்டு எல்லாம் எறங்கு!”, தன் அம்மா கொடுத்த பையில் இவனது பொருட்களும் இருக்கின்றனவா எனச் சரிபார்த்துக் கொண்டே இறங்க எத்தனித்தான்.

“டே மணீ... ஊருக்குப் போறயா கண்ணூ?”, ஏற்கனவே இறங்கியிருந்த சரசக்கா.

“ஆமாங் சின்னம்மா!”

”உடுக்கம் பாளையத்து வண்டிக்கு இன்னுமு நேரமிருக்குது... வா, மணி விலாசுல காப்பி வாங்கித் தாறேன்!”

“வேண்டாங் சின்னம்மா... எங்கம்மாவுக்குத் தெரிஞ்சா வையும்!”

“நாஞ்சொல்லிக்கிறேன் வா”, பயந்து பயந்து போய், மணி விலாசில் காப்பியைக் குடித்துவிட்டு, மூன்றாம் இலக்கமிட்ட வண்டியைப் பிடித்து லெட்சுமாபுரம் நோக்கிப் பயணிக்கலானான்.

RSR Bus Transports, இலக்கம் 3, பேருந்தானது பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு, பொரிக்கடை, தங்கம்மாள் ஓடை, சுடுகாட்டு நிறுத்தம், இராகலபாவிப் பிரிவு, கள்ளப்பாளையம் பிரிவு, முக்கோணம், மில்கேட்டு, பூலாங்கிணறு, சடையபாளையம் கடந்து, அந்த வளைவில் திரும்பிக் கொண்டிருக்கையில், மணியன் எதேச்சையாக வெளியே பார்த்தான்.

மெய் சிலிர்த்தது அவனுக்கு. ஆம், அவன் பிறந்த வீடான, அந்தியூர் அம்முலு அம்மா வீடு கண்ணில்பட்டது. தற்போது வேறொரு ஊரில் வசித்து வந்தாலும், அந்தியூர்தான் இவனுடைய பிறப்பிடம். தன் ஊர் அருகில், இரு மருங்கிலும் இருக்கும் புளியமரங்களை இவன் இரசித்துக் கொண்டிருந்தான். பேருந்தானது, கோமங்கலம், கெடிமேடு, கூளநாயக்கன்பட்டி, குழியூர் கடந்து லெட்சுமாபுரத்துக்குள் நுழைந்தது.

ஊர் முழுதும் காப்புக் கட்டுவதற்காக, பூளைப்பூவும், வேப்பிலையும், மாவிலையும் பெருவேகத்தில், துரித கதியில் இடம் மாறிக் கொண்டிருந்தது. பேருந்தை விட்டு இறங்கியதில் இருந்து, வினாயகர் கோவில் சமீபம் இருக்கும் தன் அமுச்சியின் வீட்டை அடையும் வரையிலும், “வா கண்ணூ.. ஊர்ல அம்மா நல்லா இருக்காங்ளா? உங்காத்தா நல்லா இருக்குதா? மழையா கண்ணூ? வா, ஒரு லோட்டாக் காப்பித் தண்ணி குடிச்சிட்டு போவியாமா... வா கண்ணூ, தெனைமாவு தின்னுட்டுப் போ...”, வரவேற்பும், விருதோம்பலும் இவனை வாரி அணைத்தது.

இருந்தாலும் இவனுள், அமுச்சியைப் பார்க்க வேண்டும்; அதற்கும் மேலாக வீட்டில் இருப்பவர்களைப் பார்க்க வேண்டும் எனும் ஆவல் மேலோங்கி இருந்தது.

எல்லா வீட்டு முற்றமும் சாணத்தால் மொழுகி, இளம் பெண்கள் ஆங்காங்கே நின்று மாவுக் கோலமும், அச்சுக் கோலமும் இட்டுக் கொண்டிருந்தார்கள். தெருமுனைகளில், பொங்கல் வாழ்த்து அட்டைகளோடு விடலையர் கூட்டம் சிலாகித்துக் குதூகலித்துக் கொண்டிருந்தார்கள்.

“டே மணீ... உங்கண்ணன் பிரவாகரன் வர்லியாடா?”, அதில் ஒரு வாலிபம் அவனது சகோதரனைக் கேட்டது.

“வல்லீங்ணா!”

லெட்சுமாபுரம் துவக்கப் பள்ளியருகே இருக்கும் பாறைக்காட்டுக்காரர் வீட்டருகே சென்று கொண்டிருந்தான் அவன். தபதபவென நான்கைந்து பேர் அவனைப் பார்த்ததும் ஓடோடி வந்தார்கள். சின்னபாப்பக்கா மகள் வடிவு, ஜெயமணியக்கா மகள் பத்து, டெய்லர் பழனிச்சாமியண்ணன் மகள் சரசுவதி.. அவர்களுடன் பாப்புவும்.

“மாமா, ஏன் நேத்தே வர்லே?”

“பள்ளிக்கூடம் இன்னிக்கித்தான் பாப்பு வுட்டாங்க?”

“செரி, எனக்கு என்ன கொண்டாந்தீங்க?”

உடுமலைப் பேட்டை, ஜாஸ்மின் சில்க் அவுசு மஞ்சப் பையை விரித்துக் காண்பித்தான்; அம்மா கொடுத்த அனுப்பிய கைமுறுக்கும், அதிரசமும் இருந்தன. பழனியப்பா பிரதர்சு கோழிப் பையைக் காண்பித்தான்; அவ்னது துணிமணிகள் இருந்தன.

“போங் மாமா, நீங்க என்ன கொண்டாந்தீங்க?”, எனப் பாப்பு கேட்கவும், உடன் இருந்த பெட்டைகள் ஆவலோடு அவனைப் பார்த்தன.

கால்ச்சட்டைப் பையில் கையை நுழைத்து, சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்த 90 பைசா பச்சை நிறப் பேருந்துச் சீட்டுக் கட்டு ஒன்றும், கொடுமுடி தீர்த்தம் எடுக்கப் போயிருக்கையில் எடுத்து வந்த பண்ணாங்கல் விளையாடுவதற்கான வெங்கச்சாங்கல் ஐந்தையும் எடுத்துக் கொடுத்ததுதான் தாமதம், “ப்ச்க்”, பாப்பு ஓடிப் போனாள்.

ஏஏஏ... இத பாருங்டா... இங்க மாமன் மவளுக்கும் அத்தை பையனுக்குமு இப்பவே பொங்கல் பொங்கிடுச்சிடோய்! தெருமுனையில் இருந்த வாலிபங்கள் சிரித்துக் கூக்குரலிட்டுக் கொண்டாடின.

1/13/2011

இதற்குப் பெயர்தான் அயோக்கியத்தனம்??

இந்திய அரசின் ராணுவத்துறை நடத்தும் சைனிக் பள்ளி திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி நகரில் உள்ளது. இந்த பள்ளியில் 2011ம் ஆண்டுக்கான நாட்காட்டி பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த நாட்காட்டியில் இலங்கை அதிபர் ராஜபக்சேயின் படம் அச்சிடப்பட்டுள்ளது. அந்த படத்திற்கு தலைப்பாக ‘’எல்லாமே சாத்தியம்’’ என்று எழுதப்பட்டுள்ளது.

இதை கண்டித்து பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

====================

கல்லூரி நாட்களில், அண்ணன் இராமகிருஷ்ணன் அவர்களது அபிமானியாக இருந்தேன். அவர் ஒரு மாபெரும் தியாகி என்பதனாலேயே. சில வேளைகளில், வேண்டாத வேலைகளில் ஈடுபடுகிறாரே என அயர்ச்சியும் ஏற்பட்டது உண்டு.

சலிப்பான இன்னபிற காரணங்களாலும், சில பல தெளிவு ஏற்பட்டமையாலும், பின்னாளில் எம்மை நாமே நெறிப்படுத்திக் கொண்டோம். இன்றைக்கு இச்செய்தியைக் கண்டதுமே, அவருடைய அந்த அர்ப்பணிப்பு இன்னமும் தொடர்கிறது என்பதில் மகிழ்ச்சி ஏற்பட்டாலும், அரசுக்கு வேலை பார்க்கும் எதோ ஒரு தனிநபர் செய்யும் காரியத்தைப் பாருங்கள்.

தமிழ்நாட்டில், அதுவும் உடுமலைப் பேட்டையில், தளிக்கு அருகண்மையில் வந்து இக்காரியத்தைச் செய்வதென்பதும், அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கக் கூடிய ஒரு தீவிரவாதம்தான்! இது போன்ற செயல்களைத் திமுகவினர் உடனுக்குடனே கண்டித்துக் களைய வேண்டும். இல்லாவிடில் போடிபட்டித் தம்பு வழியில், எஞ்சிய உடுமலைத் திமுகவினரும் கூடாரத்தை விட்டு வெளியேறும் நாள் வெகு தொலைவில் இல்லை!!!

1/10/2011

பழமை பேசியே எ௱௫௰ (750)!

பண்டம் அறியார் படுசாந்தும் கோதையும்
கண்டுபா ராட்டுவார் கண்டிலர்கொல் - மண்டிப்
பெடைச்சேவல் வன்கழுகு பேர்த்திட்டுக் குத்தும்
முடைச்சாகா டச்சிற் றுழி - நாலடியார் 48.

வணக்கம். சரியாக முப்பது மாதங்கள்; கிட்டத்தட்ட 900 நாட்கள், 750 இடுகைகள். இவையெல்லாம் வெறும் எண்ணிக்கையே. எண்ணிக்கைகள் மட்டுமே வாழும் வாழ்க்கைக்குச் சிறப்புச் சேர்த்திடுமா? இன்றைய சூழலில், எங்கு காணினும், எதையும் எண்ணிக்கைதானே நிர்ணயிக்கிறது; ஆக, எண்ணிக்கை என்பது இன்றியமையாததுதானே?

வினா நம்மையும் சூழ்ந்தது. என்ணிக்கை நிர்ணயம் என்பது தற்காலிக வெற்றியாக இருக்குமே ஒழிய, அது வாழ்வாங்கு வாழ்ந்திடப் போவதில்லை. புறச்சூழல் கருதிக் கிடைக்கும் பாராட்டு எவையும், சூழல் மாறுகிற தருணத்தில் செல்லாக் காசுகள் ஆகிவிடும்.

அகம் கருதிக் கிடைக்கிற பரிசும், பொருளும், பாராட்டும் என்றென்றும் நம்மோடு வரும். மண்டிப் பெடைச் சேவலும், வன்கழுகுமாகச் சேர்ந்து உயிரற்ற இப்பூதவுடலைக் குதறிய பின்னும் அவை நம்மோடு சேர்ந்து வரும் என்கிற நாலடியாரை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும்.

இப்படியானதொரு மனநிலைக்கு ஆட்பட்டதும், மீண்டும் மற்றொரு வினாவானது நம்மைச் சூழ்ந்து கொண்டது. பகிர்ந்தது, படைத்தது எழுநூற்று ஐம்பதே ஆயினும், பலரும் பலனடையும் பொருட்டுப் பொருள் கொண்டு படைத்தது எம்மாத்திரமோ?

திரும்பிப் பார்த்தேன். முதல் நாளது முதல், இம்மணித் துளியானது வரையிலான மனவோட்டம் மற்றும் அகச்சூழலை! ஆங்காங்கே சறுக்கிடினும், மீண்டு வந்தது தெரிகிறது. மகிழ்ச்சி!

கடந்த 14-10-2009 தேதியில், ஐநூறுகளோடு அளவளாவினோம். இதோ மீண்டும், எழுநூற்று ஐம்பதுகளோடு அளவளாவுகிறோம். அளவளாவலுக்கு வித்திட்ட வலையுலக அன்பர்களுக்கு எம் சிரம் தாழ்ந்த வணக்கங்களும் நன்றிகளும்!!

ஆளும் வளரணும்; அறிவும் வளரணும்!! இது நடைமுறையில் சாத்தியமா? உங்கள் தரப்பு அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள முடியுமா??

இக்கூற்றானது கூறப்படுகிற இடத்தை நாம் கணக்கில் கொள்ள வேண்டும். அறிவு என்பது வளரும் என அப்படியே பொருள் கொண்டால், முரணாகத்தான் புலப்படும். அறிவு பெருக வேண்டும். எவ்வளவு அறிந்து வைத்திருக்கிறார் என்பதை விட, எவ்வளவு திறம் வாய்ந்தவராக இருக்கிறார் எனக் கணக்கிடும் காலமிது. இணையத்தில் கிடைக்காதது ஏதும் உண்டா?

திறத்தை மேம்படுத்த, அவனியில் எல்லா தரப்பு மக்களும் தத்தம் முயற்சிகளைச் செவ்வனே செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், குறிப்பாக, நம் நாட்டில் ஆண்டாண்டு காலமாய் இருந்து வருகிற முக்கியமான ஒன்றை நழுவவிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் என் நிலைப்பாடு. அது என்ன?

மனிதனின் மனமானது, வயது கூடக்கூட முதிர்ச்சியடையும்; அடைய வேண்டும். அதன்பொருட்டு, பெற்ற அனுபவங்களின் வாயிலாக மனம் பண்படைந்து, பக்குவப்படும்; பக்குவப்பட வேண்டும். சிலருக்கு, பிறப்பிலேயே மனம் பண்படையப்பட்டு இருக்கும். மற்றவர்க்கு? பட்டறிவின் வாயிலாக அது கூடிவரும். ஆனால் இன்றைய நிலை? பண்படைந்து, பக்குவமுறுதல் என்பதற்கான தடைகள்தான் பெருகி வருகிறது. எனவே, ஆளும் வளரணும்; படினமும் பெருகணும் என்பதே சரி!!

நான் எனது உடன்பிறந்தாரோடு அல்லது உறவினர்களோடு உரையாடும் போது, எல்லாமும் தமிழில்தானிருக்கும். எல்லோருக்கும் ஆங்கிலம் தெரிந்தாலும் அதன் கலப்பு இருக்காது. ஆனால் வெளியில் சிலரோடு உரையாடும்போது, அவர்கள் பேச்சை ஆங்கிலத்தில் திசை திருப்பி விடுவதைப் பெரும்பாலும் பார்க்கிறேன். தவறு எங்களிடமா அல்லது மற்றவரிடத்தா எனத் தெரியவில்லை. ஏன் இது?

இது தவறு என்பது சரியல்ல. பெற்ற குழந்தைகளுக்கு, முதன்மை மொழி ஆங்கிலமாக இருக்கும்பட்சத்தில், அவர்கள் ஆங்கிலத்தில் பேசுவதை பழக்கமாக்கிக் கொண்டிருக்கக் கூடும். நாம் தொடர்ந்து தமிழில் உரையாடுவதன் மூலம், அவர்களையும் தமிழின்பால் கொண்டு வர முடியும். அப்படிக் கொண்டுவர முடியாவிட்டால்தான் என்ன? தமிழில் பேசுவதைக் கேட்கிற வரையிலும் மகிழ்ச்சியே!

பொதுவாக பொருள் உதவி செய்பவர்கள், உறவினர் அல்லாதவர்க்குச் செய்யும்போது யாதொரு தயக்கமும் இல்லாமல் செய்ய முடிகிறது. ஆனால் உறவினர்களிடம் செய்யும் போது ஏகப்பட்ட சிந்தனைகள். எதனால் இது?

கடந்து வந்த பாதை. அவரது நடத்தை மற்றும் அவரது பின்புலம், இவற்றுக்கும் மேலானதொரு காரணியாக இருப்பது, நம்முள் இருக்கும் கோபதாபமும்! எம்முள் இதே நிலை எண்ணற்ற முறை நிகழ்ந்திருக்கிறது. சமீபத்தில் நான் இடுகையில் பகிர்ந்து கொண்ட இப்பாடல்தான் நினைவுக்கு வருகிறது.

பலநாளும் பக்கத்தார் ஆயினும் நெஞ்சில்
சில நாளும் ஒட்டாரோ ஒட்டார் - பலநாளும்
நீத்தார் எனக் கைவிடல் உண்டோ தன் நெஞ்சத்து
யாத்தாரோடு யாத்த தொடர்பு!

முடிந்தவரை ஆங்கிலக் கலப்பின்றி தமிழில் பேச நினைக்கும் சிலர்கூட, வெட்கத்தால் அவ்வாறு பேசுவதை கைவிடுகின்றனரே?! முழுமையாகத் தன் தாய்மொழியில் பேச வெட்கப்படும் இந்தத் தனி குணம், எதிர்காலத்தில் மாறும் எனும் நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா??

நான் எதோ ஒரு தமிழ்ப் புரவலன் எனும் பாங்கில் அல்லவா வினாக்கள் விடுக்கப்படுகிறது. ஆனானப்பட்ட தமிழ் மாமேதையே, நான் ஒரு தமிழ் மாணவன் எனக் கல்லறையில் எழுதி வைத்துச் சாகும் போது, இச்சாமன்யன் எம்மாத்திரம்? இருந்தாலும் என் மனநிலையைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

எதுவும் இயற்கைக்குக் கட்டுப்பட்டு இருக்கிற வரையிலும், மேன்மையோடு தொடரத்தான் செய்யும். இயற்கையைச் செயற்கை கொண்டு மாற்றியமைக்கும் போது, இன்னல்கள் நேர்வது தவிர்க்க இயலாதது. மாந்தர்கள், தத்தம் இருப்பிடத்தோடு, இனத்தோடு வாழ்ந்து வந்தான்.

இந்நூற்றாண்டில், புறச்சூழல் கருதி நாமனைவருமே தத்தம் மண்ணை விட்டகன்று வாழத்தலைப்பட்டு இருக்கிறோம். இதன் தாக்கம் என்னவாக இருக்கும்? உலகம் முழுமைக்கும் ஒரே இனமாக உருவெடுக்குமா? உலகம் முழுமைக்கும் ஒரே மொழி பேசப்படுமா??

உலகமயமாதல் உருவெடுக்கும்போது, தன்மயமாதல் உருவெடுக்காதா என்ன?? நான் பணிபுரிந்த நிறுவனமான, LMW, இலட்சுமி இயந்திரத் தொழிற்சாலைதான் நினைவுக்கு வருகிறது. மூன்று தலைமுறையைப் பார்த்த, மாபெரும் நிறுவனம் அது.

ஆங்காங்கே பிரிந்திருந்த பிரிவுகளை ஒன்றிணைத்து, ஒரு நிர்வாகத்தின் கீழ், ஒரே இடத்திற்குக் கொணர்ந்தார்கள் ஒரு தலைமுறையில். மற்றொரு தலைமுறையில், நிர்வாகத்தை எளிமைப்படுத்தும் பொருட்டு, பல பிரிவுகளாகப் பிரித்தார்கள். போக்குவரத்து, மற்றும் இன்னபிற காரண்ங்களைக் காட்டி மீண்டும் ஒன்றிணைக்கும் நாள், நான் மடியுமுன்பாகவே வரும் என நம்புகிறேன்.

யுனஸ்கோ ஆய்வின்படி எதிர்காலத்தில் முற்றிலும் அழியும் மொழிகளின் பட்டியலில் தமிழும் உள்ளதே?! அவ்வாறு ஒருநிலை வருமா?? அல்லது ஒவ்வொரு காலகட்டதிலும் தனக்கான அழிவு ஏற்படும் சூழலில், ஏதோ ஒரு சக்தியின் இயக்கத்தில் மீண்டெழும் தமிழ் இம்முறையும் மீண்டெழுமா??

யுனஸ்கோ ஆய்வு அறிக்கையில் தமிழ் இடம் பெறவில்லை. எனினும் அக்காலத்தில், விஞ்ஞானம் இல்லை. எழுதுவதற்குத் தாள் இல்லை. தாளில் வரிவடிவங்களைப் பொறிக்க மசியும் இல்லை. அச்சும் இல்லை. இருந்ததெல்லாம் கற்களும், உளியும், ஓலைகளும், எழுத்தாணியுமுமே. இருந்தும் நிலைத்து நிற்கிறது தமிழ். காரணம்? மக்கள் ஒன்றியமாய் வாழ்ந்தார்கள்.

ஆனால், இன்றைக்கு மக்கள் பலவாறாகப் பிரிந்து வாழத் துணைபோய்க் கொண்டிருக்கிறார்கள். இருந்தும் தமிழ் வாழ்கிறது. வாழும்! எங்கோ இருக்கும் நீங்களும், நானும் யாத்திருப்பதன் காரணம் கணினி அல்லவா? கணினியில் பதிந்திருப்பதை, இன்றிலிருந்து இன்னும் பத்துத் தலைமுறை கடந்து பிறக்கும் ஒரு பிறவியானது, தோண்டித் துழாவி எடுக்காது என்பதை எப்படி அறுதி இட்டுச் சொல்ல முடியும்? மரபுகளின் நீட்சிக்கு முடிவேதும் கிடையாது. அது இயற்கையின் நியதி!

நல்ல தமிழ்ல பேசினாலோ, பிள்ளைக்குத் தமிழ்ல பெயர் வைத்தாலோ, தமிழ் மீது அன்பும் ஆர்வமும் கொஞ்சம் இருந்தாலோ, "ஓ! நீங்க தமிழ் வெறியரா, எப்பவுமே தமிழ்ல தான் பேசுவீங்களா?" என்பதுபோல் பேசும் தமிழர்களை எப்படி அணுகுவிங்க?

புன்னகைத்துக் கடந்து செல்ல வேண்டியதுதான்! எவனொருவன், சினமுற்றுக் கிளர்ந்தெழுகிறானோ, அவன் தோல்விக்குத் தன்னைத் தாமாக இட்டுச் செல்கிறான் என்றே ஆகிறது. எறும்பு ஊறக் கல்லும் தேயும். அதற்கும் மேலாக, மற்றவர் மனதை நான் எதற்குக் கரைக்க வேண்டும்? எனக்குப் பிடித்திருக்கிறது. நான் செய்கிறேன். அவ்வளவே!

என் மக்ள் கல்வி கற்பது, கோவையில் இருக்கும் ஒரு ஆங்கில இந்தியப் பள்ளியில். அப்பள்ளியின் தலைமை ஆசிரியர், எனது அலைபேசி எண்ணை என் உறவினரிடத்தில் இருந்து பெற்று, சென்ற வாரத்தில் என்னை அழைத்திருந்தார். நான் பதைபதைத்துப் போனேன். மகள் என்ன செய்தாளோ, என்னவோயென!!

அமெரிக்காவில் பிறந்து, அங்கேயே துவக்கப் பள்ளியில் பயின்றும் வந்த உங்கள் மகள், இந்தி மற்றும் தமிழ் கற்றதோடு மட்டுமல்லாமல், தமிழில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தில் வந்திருப்பது வியத்தகு செயலாக இருக்கிறது எனக் கூறினார். நான் ஒருநாளும் என் மகளுக்குத் தமிழ் கற்றுக் கொடுத்தது கிடையாது. இதை இங்கே குறிப்பிடுவதன் காரணம், நாம் நாமாக இருக்கிற வரையிலும், நம்முடையது நம்முடனே வரும்.

இந்த ஆண்டில் ஏதாவது புத்தகம் எழுத எண்ணியுள்ளீர்களா? எண்ணியுள்ளீர்கள் எனில், எந்த மாதிரியான புத்தகம்? சிறுகதை அல்லது கவி காளமேகம்?? கவி காளமேகம் குறித்து நீங்கள் எழுதியவைகளை தொகுத்துப் புத்தகமாக வர வேண்டும் என்று நேற்று தான் எண்ணினேன்.

ஊர்ப் பழமை எனும் நூல் என்பது, நான் திட்டமிட்டுச் செய்த ஒன்றல்ல. நான் தாயகம் சென்றிருந்த போது, நட்பினரைச் சந்தித்த வேளையில் நண்பர் ஆரூரன் அவர்கள் தமது விருப்பத்தை வெளியிடவும், நானும் அதற்கு இசைந்தேன். அச்செயலானது, எமக்கு வெளியுலகில் நல்ல பல தொடர்புகளைப் பெற்றுக் கொடுத்தது. அவ்வழியில், எதுவும் அமையுமாயின் அதன் போக்கில் விட வேண்டியதுதான்!

நல்ல தமிழ் என்றாலே முகம் சுழிக்கும் சமுகத்தில் கோவை வட்டார வழக்குடன் தமிழ் பேசுவதை பலர் கேலி செய்வார்களே? அவர்களை எப்படி சமாளிக்கிறீர்கள்?? அதுவும் நீங்க வெள்ளையா இருக்கீங்க, நல்லா இங்கிலிபீசு வேற பேசறீங்க? எனவே இத்தொல்லை உங்களுக்கு அதிகமாக இருக்கும் இல்லையா??

ஏற்கனவே நண்பர் தென்னவன் கேட்ட கேள்வியைச் சற்று மாற்றிக் கேட்டிருக்கிறீர்கள். நான் எதற்கு வெட்கப்பட வேண்டும்? எம் மண்ணில் பேசப்படுவதை, எம்மக்கள் பேசுவதை நான் பேசாமல், சப்பானியனோ, சீனனோ வந்தா பேச முடியும்? கேலி பேசுபவர்களைப் பற்றி நான் பொருட் படுத்தினால்தானே அது எம்மை வதைக்கும்??

நீங்கள் உள்ளிட்ட எம் நண்பர்களுக்கு நான் அடிக்கடி சொல்வதெல்லாம் இதுதான். உன் ஊரெதென யாரும் வினவினால், அழுத்தம் திருத்தமாக உமது ஊர்ப் பெரைச் சொல் என்பதுதான். உடுமலைப் பேட்டை என்றோ, கோயமுத்தூர் என்றோ நான் ஏன் சொல்ல வேண்டும்?? அந்தியூர் என்று சொல்வேன். கோபி பக்கந்தானே என்பார்கள். இல்லை, உடுமலைப் பேட்டையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில், எட்டாவது மைல்தூரத்தில் இருக்கிறது என்பேன்.

என் ஊரின் பெயரை நான் பிரகடனப்படுத்திப் பிரபலமாக்காத வரையிலும், வேறு யார் செய்திட முடியும்?? விபரந் தெரிந்தவ்ர்கள், ”ஓ, அந்தியூர்ல எல்லாம் மேட்டாங்காட்டு வறண்ட விவசாய பூமியாச்சே?” என்பார்கள். “ஆமாம், வாய்க்காத் தண்ணி பாயுற வெள்ளாமைக்காரங்க எல்லாம் அந்தியூர்க்காரங்ககிட்டத்தான் காசு பணம் வாங்க வருவாங்க!” என்பேன். உண்மை அதுதானே?!

உங்க குழந்தைகளுக்கு இந்தியா, தமிழ்நாடு, கோயமுத்தூர் மாவட்டம் பற்றி என்ன மாதிரியான புரிந்துணர்வை உருவாக்க போறீங்கன்னு கொஞ்சம் சொல்லுங்க?

நான் எதற்கு உருவாக்கணும்? என் பிறந்த மண்ணைக் காண்பித்தேன். நான் பிறந்த வீட்டைக் காண்பித்தேன்.என் பெற்றோரிடத்தில் வளர விட்டேன். வளர்கிறார்கள். புரிந்து கொள்வதும், கொள்ளாததும் அவர்கள்பாடு. ஆனால், நான் நானாக இருக்க ஆசைப்படுகிறேன்.

இந்தியாவிற்கு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு திரும்பி வந்து விட முடியும்ங்ற நம்பிக்கை இருக்கிறதா?

கேள்விக்கான தேவையே இல்லை. நான் எங்கிருந்தாலும் நானாகவே இருப்பேன். ஆனாலும், எங்கே உயிர்ப்பிக்கப்பட்டேனோ, அங்கேயே மரிக்கவும் செய்ய வேண்டும் என்பது எம் தணியாத ஆசை.

நீங்க படிச்ச பள்ளிக்கு என்ன செய்து இருக்கீங்க? என்ன செய்யப் போறீங்க??

நான் பல பள்ளிகளில் படித்தவன். பள்ளிக்குச் செய்வதென்பதைவிட, என் ஆசிரியர்களுக்குச் செய்ய ஆசைப்படுகிறேன். செய்தும் வருகிறேன். பள்ளிக்கு ஒரு கட்டிடம் என்பதற்கு அரசாங்கம் இருக்கிறது. இச்சாமான்யனைவிட கடலளவு பொருளாதாரம் அரசிடம் இருக்கிறது. ஆனால், என் ஆசிரியர்களைச் சிறப்பிக்க, என்னைப் போன்ற மாணவர்களை விட்டால் வேறு எந்த நாதியும் கிடையாது என்பதுதான் இன்றைய நிலை.

குறைந்தபட்சம் உங்கள் சொந்தபந்த ஏழை மாணவர்களுக்காவது கல்விக்கான பொருள் உதவி செய்து இருக்கீங்களா?

அரசு செய்ய வேண்டிய பணிகளுக்கு மாற்றாக, தனிமனிதர்கள் அளிக்கும் நிதியானது முறையற்ற ஒன்று. மாறாக, தான் கட்ட வேண்டிய வரியை, அரசுக்கு முறையாகச் செலுத்தலாம். எங்கு அரசின் உதவி பெறுவது ஏதுவாக இல்லையோ, அதற்குச் செய்திடலாம். மேலும், சமூகப் பணிகளுக்கு நேரிடையாகத் தன் உழைப்பை நல்கிடலாம்.

என் மகளின் பிறந்த நாளன்று, ஐயாயிரம் உரூபாயை நன்கொடையாக அளிப்பதைக் காட்டிலும், அன்றைய தினத்தில் அவள் நேரிடையாகச் சென்று சமூகப் பணியாற்றுவதைப் பெரிதும் விரும்புவேன் நான்.

செய்தவற்றைப் பட்டியலிட்டுச் சொல்வது அறமாகாது. இருந்தாலும், ஒரு செய்தியை மற்றவர்க்குச் சொல்ல வேண்டும் என்பதற்காக இது. தகுந்த வசதியின்றிச் சுகாதாரத்தைப் பேணாமல், அவதியுறுவோர் நாட்டில் பெருகி வருகிறார்கள். அவர்களுக்கு உதவுவதை நான் முதன்மையாகக் கருதுகிறேன்.

வலைபதிவுகளில் ஆச்சரியப்பட்ட ஐந்து வலைபதிவுகளை சொல்ல முடியுமா? காரணத்தை ஒரு விமர்சனம் போல முடிந்தால் தரவும். நீங்க இதில் தப்பித்தால் உங்களை வலையுலக அரசியல் பிதாமகன் என்ற பட்டத்தை தருவேன். சம்மதமா?

நிறைய இருக்கின்றன.

http://maravalam.blogspot.com%2c/
http://mooligaivazam-kuppusamy.blogspot.com%2c/
http://pkp.blogspot.com%2c/
http://ocblogs.blogspot.com%2c/
http://www.kasangadu.com/

இதுதவிர, நெஞ்சை அள்ளியவை இன்னும் பல இருக்கின்றன. இவற்றுக்கான விமர்சனம் தேவையற்றது என நான் எண்ணுகிறேன். நீங்கள் அங்கு சென்றதும் புரிந்துவிடக் கூடிய அளவில்தான் பதிவுகளைப் பதிவு செய்யும் பதிவர்களின் செயல்பாடு இருக்கிறது.

நீங்க எளிமை விரும்பின்னு நான் நினைக்கிறேன். யார் மாதிரி இருக்கணும்ன்னு நீங்க நினைக்கிறீங்க?

காந்தியைப் போல் இருக்க வேண்டும். வள்ளலாரைப் போல் இருக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லி, சமகாலத்தவரை இருட்டடிப்புச் செய்ய விரும்பவில்லை. சக பதிவரைக் குறிப்பிட்டுச் சொல்வதனால், சில அசெளகரியங்கள் நிகழ வாய்ப்பிருக்கிறது. எனினும் குறிப்பிட விரும்புகிறேன். சகிப்புத்தன்மை மற்றும் எளிமை போற்றுவதில், சக பதிவர் சீமாச்சுவைப் போல் நானும் பண்படைய வேண்டும் என அவ்வப்போது நினைத்துக் கொள்வது உண்டு.

வெளி நாட்டில் விவசாயம் செய்யும் முறைகள் பற்றி அறிந்திருப்பீர்கள்; நேரிலும் பார்த்திருப்பீர்கள்; மேலை நாட்டு விவசாயம் போல, நம் நாட்டு விவசாயத்தை பெரிய அளவில் முறைப்படுத்தி செய்ய இயலுமா? அல்லது இப்படியே தொடர்வதே சிறந்ததா?

நல்ல கேள்வி. கூடவே காலத்தின் கட்டாயமும் கூட. குறைந்த பொருட்செலவில் வேளாண்மை என்பது இசுரேல் மற்றும் கனடாவில் நடைமுறையில் இருக்கிறது. கனடிய நாட்டின் கோதுமை உற்பத்தியைக் கண்டு வியந்து நின்றேன் நான். இசுரேல் மற்றும் கலிஃபோர்னியாவின் காய்கறி வளர்ப்பும் வியத்தகு ஒன்றாகும். விரைவில், இதுகுறித்துச் செய்திகள் சேகரம் செய்ய வேண்டும்.

பொதுவாக தண்ணீர்ப்பஞ்சம் என்ற பிரச்சினை மேலை நாடுகளில் இல்லை; அதற்கு அந்நாடுகளின் தகவமைப்பு மட்டுமே காரணமா அல்லது நீர் மேலாண்மை மெய்யாகவே சிறப்பாக உள்ளதா??

நீர் மேலாண்மைதான் முக்கியக் காரணம்.

சென்ற இடுகையில் நடிகர் சோபனா, நடிகர் சிந்து எனக் குறிப்பிட்டு உள்ளீர்களே? அது பிழையல்லவா??

ஒருவன் - ஒருத்தி, பாடகன் - பாடகி, செல்வன் - செல்வி, சிறுவன் - சிறுமி என்கிற வரிசையில், ஆசிரியன் - ஆசிரியை, நடிகன் - நடிகை என்பதுதானே சரி? ஆசிரியர், நடிகர் என்பனவெல்லாம் பொதுப் பெயர்தானே?

நடிகன் கமல், நடிகன் இரஜினி என அழைப்பதில் சிக்கல் இருக்கிறதல்லவா? அதே சிக்கல்தான் எனக்கும்; நடிகை சிந்து என்பதிலும், நடிகை சோபனா என்பதிலும். தமிழ் ஒருபோதும் பெண்டிரை நிந்திப்பதில்லை!! பெண் ந்டிகை என்பதும், நடிகையர் திலகம் என்பதும் அபத்தத்தின் உச்ச கட்டம். நடிப்புத் திலகம் சாவித்ரி என்றால், குறைந்துவிடுமா என்ன?!

உடன் அளவளாவிய அன்பர்கள், ஜோதிஜி, புதுகை அப்துல்லா, ரங்சு, தென்னவன், சேது மற்றும் குறும்பன் ஆகியோருக்கு நன்றி! மேலும் உடன் பயணித்து வரும் சக பதிவுலக அன்பர்கட்கும் நன்றி!!

நகைச்சுவை நடிகர் ஷோபனா அவர்கட்கு அஞ்சலி!

பொதுவாக திரைப்படம், தொலைக்காட்சித் தொடர் போன்றனவற்றை எல்லாம் நாம் கண்டு களிப்பது என்பது மிகக் குறைவே. எனினும் எப்போதாவது வாய்க்கப் பெறும் தருணங்களில் சிலவற்றைக் காண்பதின் வழியாகச் சில கலைஞர்கள் அபிமானக் கலைஞர்களாக ஆகிவிடுவதும் உண்டு.

குறிப்பாக, துணை நடிகர்களின் உழைப்பின் மேல் அபரிதமான நம்பிக்கை நமக்கு எப்போதும் உண்டு. வணிக தந்திரம் மற்றும் மேட்டிமைத் துண்டு போடல்கள் முதலானவற்றை எல்லாம் இவர்கள் நம்பி இருக்காமல், உழைப்பின் மேல் நம்பிக்கை வைத்து படைப்பாளிகளாக வலம் வருபவர்கள் என்பதும் நமது அபிமானத்துக்கு ஒரு காரணியாகும்.

எப்போதும் துடுக்குத்தனமாகவும், அதே வேளையில் வரம்பு மீறாமல் காட்சிக்கு பெருமை சேர்ப்பார் இவர். போண்டா மணி, முத்துக்காளை, கொட்டாங்குச்சி முதலானோர் வரிசையில், இக்கலைஞரின்பாலும் எனக்கு பெரும் ஈர்ப்பு. சில காட்சிகளை, யூட்டியூப் வழியாகத் திரும்பத் திரும்பப் பார்த்ததும் உண்டு. எதேச்சையாகத்தான் பார்த்தேன், தூக்குப் போட்டுத் தற்கொலை எனும் செய்தியை.

மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகினேன். எனது அபிமானக் கலைஞர்கள் வரிசையில், சில ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த நடிகர் சிந்து. சமீபத்தில் பாடகர் சொர்ணலதாவின் இழப்பு. மீண்டும் அபிமான நடிகர் ஒருவரது இழப்பையும் காண்கிறேன். மிகவும் வருத்தமாக இருக்கிறது. அன்னாரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.

1/09/2011

நிக்காத, ஓடிப் போயிரு!

”ஓடுகாலி இராஜேசுவரி செய்த வேலைடா மச்சி... அவளை சும்மா வுடக் கூடாதுடா!”, பாண்டியன் கடை வாசலில் நின்று கத்திக் கொண்டு இருந்தான் சோடாக்கடை மாதவன்.

வீட்டு மாட்டுக்கு மூக்கணாங்கயறு வாங்குவதற்காய்ப் பாண்டியன் கடையில் நின்று கொண்டிருந்த எனக்கு தூக்கிவாரிப் போட்டது.

என் பள்ளி நாட்கள் தொட்டு, மானசீகமாய்க் காதலிக்கும் இராஜேசுவரி ஓடுகாலியாகிப் போனாளா? ஓட்டைப்பல்லு மாதவனெல்லாம் ஏசும்படி ஆகிப் போனாளா என் இராஜேசுவரி?? வீடு சென்றடையும் வரையிலும் மனம் புழுங்கித் தவித்தது.

“அம்மா, தவுட்டுக்கார இரங்கநாதன் வீட்ல எல்லார்த்துக்கும் கண்ணாலம் ஆய்டிச்சாமா?”, மிகுந்த கவனத்துடன் இராஜேசுவரி பெயரைத் தவிர்த்தேன்.

“இன்னும் இல்லியே? பெரியவ சுசீலாவைப் பண்ணைக் கிணத்து ஆறுச்சாமி பையனுக்குக் குடுத்திருக்கு. அவளுக்கு நேர் இளையவன் திருமூர்த்தி. கடைசிப் பொண்ணு இராஜிக்கு கண்ணாலம் ஆனவிட்டுத்தான அவனுக்கு ஆகும்?”, அம்மா வெள்ளந்தியாக அடுக்கினாள் தவுட்டுக்காரவீட்டு நிலவரத்தை. மனம் குதூகலித்தது.

”நாதாரி மாதவன் சொல்றது யாரை?”, குதூகலிப்பு நீடிக்காமல், கொழுகொம்பை நாடும் கொடி போல அல்லாடியது மனம்.

“பாண்டியன் கடை வாசல்ல ஓடுகாலி இராஜேசுவரின்னு சொல்லிச் சொன்னாங்ளேம்மா?”

“அதா? சென்னியப்பன் தங்கச்சி எண்ணெய்க்காரன் மகனோட ஓடிப் போனாளே?? அதைச் சொல்லி இருப்பாங்களாட்ட இருக்கு?”

“ஏன்டா, ஊரெல்லாம் இராஜேசுவரிங்ற பேரையே வெச்சித் தொலையுறீங்க??”, நான் கேட்காவிட்டாலும் என் மனம் வலிந்து கேட்டது. நாளும் கழியத் துவங்கியது. மற்றொரு நாளும் விடிந்தது.

“டே மணியா! போடா, ஊர்த்தலைவர் ஊட்ல போயி, இன்னத்து தினத்தந்திய நாங்கேட்டன்னு சொல்லி வாங்கியா போ!!”, விரட்டினார் ஊர்சோலி பார்க்கும் சித்தப்பா.

“இந்த சித்தப்பனுக்கு வேற வேலையே இல்லை. எப்பப் பார்த்தாலும், எனக்குக் காட்டம்பட்டிக் கந்தசாமியத் தெரியும். ஆலம்பாளையத்துக் கண்ணப்பனைத் தெரியும். ஆனைமலை ஆண்டுவைத் தெரியும்னு சொரபுருடை விட்டுகினு எனக்கு வேலை சொல்றதே பொழப்பாப் போச்சு!” எனப் புலம்பியபடியே ஊராட்சித் தலைவர் பாலு வீட்டுக்கு நடையைக் கட்டினேன்.

”சின்னமணியக்கா, என்ற சித்தப்பன் பேப்பர் வாங்கியாறச் சொல்லுச்சுங்க்கா!”

“கண்ணூ, மாமன் வடவரத்துத் திண்ணையில வெச்சிருப்பாரு பாரு. எடுத்துட்டுப் போயிட்டு கொண்டாந்து வெச்சிரு இராசா!”, பாலண்ணனின் ரெண்டாவது மனைவி சின்னமணியக்கா கனிந்து பேசினாள். சமுத்தூரில் இருந்து இவள் வந்த நேரம், மூத்தகுடி தெய்வாத்தாளுக்கு இரட்டைக் குழந்தைகள். ”அன்பன், ஆனந்தன்”, சாதிக்பாட்சா சூட்டிய பெயர்கள்.

நான் வீட்டுக்குச் செல்லும் வழியில், கையிலிருந்த தினத்தந்தியை மேயத் தலைப்பட்டேன். “ஆசிரியர் மாரிமுத்து படுகொலை. மடத்துக்குளம் வாலிபர் கைது!”, பரபரத்து ஓடினேன்.

“அம்மா, ஒனக்கு விசியந் தெரியுமா? மாரிமுத்து வாத்தியாரை யாரோ கொன்னு போட்டாங்களாம்!”

“டே, கேனக்காத்தானாட்ட உளறாதடா... அக்கம்பக்கம் யாரும் கேட்றப் போறாங்க!”, திண்ணையில் சட்டாம்பிள்ளத்தனம் பார்த்துக் கொண்டிருந்த சித்தப்பா அலற, சின்னம்மா ஓடி வந்து, “யேங்க, சின்னவனை எப்பப் பார்த்தாலும் வெய்யுறீங்க?”, என ஒத்தாசைக்கு வந்தாள்.

”பின்ன? வெய்யாம என்ன பண்றதாமா?? எங்கியோ, எதோ மாரிமுத்தை யாரோ கொன்னு போட்டாங்கன்னு போட்டிருக்கு... அதுக்கு இவன்...”, சித்தப்பா நீட்டி முழக்கினார்.

“ங்கொன்னியா.... ஏன்டா, உங்களுக்கு மாரிமுத்துங்ற பேரைத் தவிர வேறு எதுவுமே கிடைக்காதாடா?? இதுல வேற, ஆசிரியர் மாரிமுத்து... “, இம்முறையும் வலிந்து ஏசத் துவங்கியது என் மனம். சித்தப்பாவின் அலட்டலில் அன்றைய நாளும் கழிந்தது.

இதோ, மற்றொரு நாள்... மற்றொரு பொழுது... “அகில இந்திய வானொலி நிலையம்... மாலை மணி ஆறு முப்பது... மாநிலச் செய்திகள் வாசிப்பது ஆர்.செல்வராஜ்.... கோவை மாவட்டம் சுல்தான் பேட்டையில் அடையாளம் தெரியாத நபர்களால் செஞ்சேரி மணி என்பவர் படுகொலை செய்யப்பட்டார். கொலையாளிகளைக் காவல் துறையினர் வலைவீசித் தேடி வருகிறார்கள்....”.

முழுதாகக் கூட கேட்கவில்லை. பிடித்தேன் ஓட்டம் மந்திரியப்பர் வீட்டுக்கு... “டே கொமாரு... உங்க மாமனை ஆரோ சுல்தான் பேட்டையில வெச்சிக் கொன்னு போட்டாங்களாமாடா... ஆறரை மணிச் சேதில சொன்னாங்க கேட்டியா?....”

பின்மண்டையில் யாரோ தட்டவும், கோபம் சுர்ரென தலைக்கேறி கையை ஓங்கியபடியே பின்னால் திரும்பினேன். குமாரின் அண்டை வீட்டுத் திருமலைசாமி அண்ணன் கொலை வெறியோடு நின்று கொண்டிருந்தார்.

“மணியம் தியேட்டர் மணியனை ஆரோ போட்டுத் தள்ளுனதுக்கு, நம்ம சிவகாமி அக்காவோடப் பொறந்த மணியனைச் சொல்ற நீயி... இரு உங்கம்மாகிட்டச் சொல்லிச் சொல்றேன்...”, விகாரமாய் ஓங்கிப் பேசினார் திருமலையண்ணன்.

“ச்சே... உங்களுக்கு மணிங்ற பேரை உட்டுப் போட்டு வேற பேரே கெடைக்காதாடா?”, மனம் வலிந்து திட்டித் தீர்த்தது இன்றும்.

இதோ மற்றொரு நாள், மற்றொரு பொழுது. ”சித்தூரில் தெரசா கைது!”.

“என்ன எழவுடா இது? தெரசா கைதா??”, இரு எங்க சித்தப்பங்கிட்ட உடனே போய்ச் சொல்றன்.

“சித்தப்பா, பேப்பர் பாத்தீங்களா? தெரசா கைதுன்னு போட்டிருக்கு!”

“எதனாப் போராட்டம் நடத்தி இருப்பாங்களா இருக்கும். அந்தம்மா அப்படி எதும் செய்யாதே?” என்று சொல்லியபடியே வாசலுக்கு வந்தார் ஊர்சுத்தி சித்தப்பா.

“கொண்டாடா அந்த பேப்பரை...”, தோரணைக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை.

“இருங் சித்தப்பா, போயி நாகராசண்ணன் டீக்கடையில இருந்து எடுத்தாறன்.”

நாகராசண்ணன் கடையில் இருந்து அன்றைய தினசரியை கேட்டு வாங்கிப் படித்தபடியே வந்து கொண்டிருந்தேன்.... "அடக் கெரகமே... இந்த இலடசணத்துல ஊட்டுக்குப் போனம்? சித்தப்பன் கொன்னு பொலி போட்ருவாரே?", உதறல் எடுக்கத் துவங்கியது எனக்கு.

”எழவு, ஏன்டா தலைவருக, நல்லவருக பேரையெல்லாம் வெச்சித் தொலையறீங்க? வெச்சாப் போச்சாது; நல்லபடியாவாவது இருந்து தொலையலாம்ல?”, மனம் வலிந்து கடிந்து நொந்து கொண்டது. மீண்டும் தலைப்பைக் கடந்து வாசித்தேன்.

தினசரி பல்லிளித்தது, “சட்டத்துக்கு விரோதமாகப் பெண்களை வைத்து பாலியல் தொழில் புரிந்த, ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த பெண்மணி தெரசா கைது செய்யப்பட்டு, 15 நாள் காவலில் அடைக்கப்பட்டு உள்ளார்!!”.

ஆண்டுகள் பல கடந்தோடின. செலாக்கு எடுப்பதில் கில்லாடியான செலாக்குச் சின்னதுரை ஒருவித பரபரப்புடன் வந்து சொன்னான், ”கருணாநிதி, தன் மனைவியுடன் கட்டிப் புரண்டு சண்டை! எதோ செய்தி போட்டு இருக்காங்டா!!”.

“ஓடிப் போயிரு நாயே... எந்த வட்டச் செயலாளர், பகுதிச் செயலாளர் அவம் பொண்டாட்டிகூட அக்கப் போர் செய்தா எனக்கென்னடா? நிக்காத, ஓடிப் போயிரு நாயே!!”

1/07/2011

வெள்ளிச் சிறப்பு இராவு!

நெல்லரிதல் சிறப்பு
அறுசீரடியாசிரிய விருத்தம்
நாவலோர் புனைந்துரைக்கும் நலமுழுதும்
அமைந்துவட நாகஞ்சூழ்பொன்
நாவலோ எனவியப்ப
அரிபருவம் நாடித் தெண்ணீர்
நாவலோன் உளங்களிப்பப் படியெடுக்குங்
குண்டைநகர் உழவர் போல்வார்
நாவலோ எனவிளிப்பத்
வினையின் மூள்வார்!


நாவல் தமிழ்ச் சொல்லே அன்றி, வேறெதுவும் அல்ல எனச் சொல்லி மட்டையாகும் தமிழ்ச் செல்வன் மைந்தனைச் சிறப்பிக்கும் இடுகை!!

நீலாமணி

நேராப் பாரு நீலாமணி
நீலா, அங்க பாரு!

துணைக்கு இவிகளும்!


ஆசனூர்க்குப் போட்டின்னு நாங்க சொல்லவே இல்லை!!!

1/02/2011

பள்ளயம் 01/02/2011

வணக்கம்! பள்ள(ளை)யம் தொடரில், மீண்டும் உங்களை எல்லாம் சந்திப்பதில் பெருமகிழ்வு கொள்கிறேன். பள்ளயம் என்பதின் பொருள் அறிய விழைவோர், எமது இந்த முந்தைய இடுகையினைப் பார்த்துத் தெரிந்து கொள்ளவும்.

-----------------------

பதிவுலகத்தில் காலடி எடுத்த வைத்ததின் வழியாக, நிறைய அனுகூலங்கள். ஆம், இதன் மூலம் பொருளீட்டுவது என்பதைத் தவிர்த்து, மனநிறைவானவை நிறைய! தெரியாதன தெரிந்து கொளல், அறியாதன அறிந்து கொளல், நட்பும் பேணுதலும், சகிப்புத்தன்மைப் பெருக்கம், எழுத்துப் பயிற்சி, சமூக ஈடுபாடு முதலானவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். அதன் தொடர்ச்சியாக, 2011ம் அதேவிதமாய்க் கழிய வேண்டும் என்பதில் ஆவலுடன் இருக்கிறேன்.

-----------------------

துவையல்? தொவையல் எனப் பேச்சு வழக்கில் குறிப்பிடுவது உண்டு. துவைத்து எடுப்பதால் துவையலா? தொகுத்து வழங்குவது, தொகையல் என ஆகிப் பின், தொவையல் ஆகிற்றா? வினா எழுப்பியவர், அண்ணன் சீமாச்சு அவர்கள். விடையை அனுமானித்தாலும், உறுதிப்படுத்தாமல் சொல்வதில் வழு நேர்ந்திடுமென வாளாதிருந்தோம்.

கூடவே..... முனையில் நீளும் கரம் என்னுடையது அல்ல; எங்கள் ஆருயிர் அண்ணனுடைய கையா என்பதும் எனக்குத் தெரியாது. விருந்தை நல்கிய மருத்துவர் அசோக் மற்றும் குடும்பத்தாருக்கு உளம்கனிந்த நன்றிகள்!

நேற்றைய இரவுக்கான விடை இதோ மறுநாள் விடியலில்....

தொகுத்து வழங்கும் எதுவும் தொகையல். வெற்றிலை பாக்கு முதலானவற்றைத் தொகுத்துக் கொடுப்பது, வெற்றிலைத் தொவையல். தேங்காய், கடலைப் பருப்பு, மிளகாய், வெங்காயம் முதலானவற்றைத் தொகுத்துக் கொடுப்பது தேங்காய்த் தொவையல். Salad எனச் சொல்லும் இலை, தழை மற்றும் பழச்சீவல்கள் முதலானவற்றைக் கொண்டு தொகுத்து அளிப்பது, எலக்கூட்டுத் தொவையல்! ஆக, தொவையல் என்பதும் துவையல் என்பதும் ஒன்றே! மேலும் இது ஒரு வினையாகு பெயராகும்.

துவைத்து, துவைத்தல் என்பது, இருக்கும் எதோ ஒன்றை மொத்தமாய்க் கூட்டி அதன்மேல் சக்தியைப் பிரயோகம் செய்திடுவதாகும். இது ஒரு வினைச்சொல். பெயர்ச் சொல் அன்று!

-----------------------

சென்ற ஆண்டின் இறுதியில் பனிச்சுமை காரணமாக, பதிவில் இடுகைகள் இடுவதில் தொய்வு ஏற்பட்டமை அனைவரும் அறிந்ததே. அதன் விளைவாய், தொடர்கள் எனும் பாங்கில் எழுதப்பட்டு வந்த, “கனவில் கவி காளமேகம்”, “பள்ளயம்”, ”கவி காளமேகத்தின் தாக்கம்” ஆகியனவை மீண்டும் உயிர்ப்பிக்கப்படும்.

”கவி காளமேகத்தின் தாக்கம்” எனும் தலைப்பின் கீழ், சித்திரகவி வகையில் சில படைப்புகள் இடம் பெற்றன. அவற்றோடு, கீழ்க்கண்ட கவி வகைகளை அறிமுகப்படுத்தும் நோக்கில், வகைக்கு ஒரு பாடல் இடம் பெறும்
.
சாதகம், பிள்ளைக்கவி, பரணி, கலம்பகம், அகப்பொருட் கோவை, ஐந்திணைச் செய்யுள், வருக்கக் கோவை, மும்மணிக் கோவை, அங்கமாலை, அட்டமங்கலம், அனுராகமாலை, இரட்டைமணிமாலை, இணைமணி மாலை, நவமணிமாலை, நான்மணிமாலை, நாமமாலை, பல்சந்தமாலை, பன்மணி மாலை, மணி மாலை, புகழ்ச்சி மாலை, பெருமகிழ்ச்சிமாலை, வருக்கமாலை, மெய்க் கீர்த்திமாலை, காப்புமாலை, வேனின் மாலை, வசந்த மாலை, தாரகைமாலை, உற்பவமாலை, தானைமாலை, மும் மணிமாலை, தண்டகமாலை, வீரவெட்சிமாலை, வெற் றிக்கரந்தைமஞ்சரி, போர்க்கெழுவஞ்சி, வரலாற்று வஞ்சி, செருக்களவஞ்சி, காஞ்சிமாலை, நொச்சிமாலை, உழிஞைமாலை, தும்பைமாலை, வாகைமாலை, ஆதோரணமஞ்சரி, எண்செய்யுள், தொகைநிலைச்செய்யுள், ஒலியலந்தாதி, பதிற்றந்தாதி, நூற்றந்தாதி, உலா, உலா மடல், வளமடல், ஒருபாவொருபஃது, இருபாவிரு பஃது, ஆற்றுப்படை, கண்படைநிலை, துயிலெடை நிலை, பெயரின்னிசை, ஊரின்னிசை, பெயர்நேரிசை, ஊர்நேரிசை, ஊர்வெண்பா, விளக்குநிலை, புறநிலை, கடைநிலை, கையறுநிலை, தசாங்கப்பத்து, தசாங்கத் தியல், அரசன்விருத்தம், நயனப்பத்து, பயோதரப் பத்து, பாதாதிகேசம், கேசாதிபாதம், அலங்கார பஞ்சகம், கைக்கிளை, மங்கலவெள்ளை, தூது, நாற் பது, குழமகன், தாண்டகம், பதிகம், சதகம், செவி யறிவுறூஉ, வாயுறைவாழ்த்து, புறநிலைவாழ்த்து, பவ னிக்காதல், குறத்திப்பாட்டு, உழத்திப்பாட்டு, ஊசல், எழுகூற்றிருக்கை, கடிகைவெண்பா, சின்னப்பூ, விருத்தவிலக்கணம், முதுகாஞ்சி, இயன்மொழி வாழ்த்து, பெருமங்கலம், பெருங்காப்பியம், சிறுகாப்பியம்

தொண்ணூற்று ஆறு வகையான செய்யுள்கள் கொண்டது, தமிழ்ப் பிரபந்தம். இலக்கணப் பிழையின்றிக் கட்டுவதென்பது இந்தச் சாமன்யனுக்கு இயலாத காரியம். எனினும், இயன்றவரை முயற்சி செய்வோம்!

-----------------------

நனவுகள்” எனும் தொடரும் கிடப்பிலேயே கிடக்கிறது. அதையும் மீளக் கொண்டு வர வேண்டும். டோண்டு ஐயா மற்றும் பாலாண்ணன் ஆகியோரது விருப்பங்கள் அவை. அத்தோடு புதிதாய்த் தொடரவிருக்கும் தொடரின் ஈடானது, அறிவியலைச் சார்ந்த புனைவாக இருக்கும். Specturm என்பதையொட்டி, Humatrum (ஃக்யூமேட்ரம்) என்பதுதான் கதையின் ஈடு.

திறம்மிக்க வெள்ளொளியை ஊடகத்தின் வழியாகச் செலுத்தினால், வெள்ளொளியானது, வீரியத்துக்கொப்ப ஏழு வணணங்களாப் பிரிந்து, ஒவ்வொரு வண்ணமும் தனித்தனியே நிற்கும். இதனை நிறப்பிரிகை என அழைக்கிறோம்.

நாகர்கோயில், வெட்டூர்னி மடத்தைச் சார்ந்த விஞ்ஞானி சுப்பையா வெனான்சியசு என்பார், திருமூர்த்திமலைச் சாரலை ஒட்டிய கிராமங்களான கொடுங்கியம், விளாமரத்துப்பட்டி, கரட்டுமடம் முதலான ஊர்களில் சுற்றித் திரிகிறார். அப்போது, வேடங்கோயில் எனும் இடத்தில் நல்லதொரு இடம் அமைய, தன் ஆய்வுக்கூடத்தை அங்கே நிறுவுகிறார்.

ஒரு மானுடன், தியானம் எனும் ஊடகத்தின் வழியாக தன்னுள் இருக்கும் பல்வேறு தரப்பட்ட குணங்களையும்,  குணப் பிரிகைக்கு ஆட்படுத்துகிறான். தியானம், அணுப்பிரதி(cloning), குணப்பிரிகை முதலானவற்றைக் கையாண்டு, தன்னுள் இருக்கும் ஒவ்வொரு குணத்திற்கும் ஒரு மானுடனை உருவாக்குகிறான்.

Character, Property, Attribute, அதாவது பண்பு, குணம், தன்மை முதலானவற்றின் வேறுபாடுகள் நன்கு ஆராயப்பட்டு, ஒவ்வொரு குணத்திற்கு ஒப்ப, ஒரு பிரதி(clone) மானிடனாக தயானந்த், மகிழானந்த், காமானந்த், சூரானந்த், கோபானந்த், வெகுளானந்த் முதலானவர்கள் பிறக்கிறார்கள்.

மானுடனை மகிழ்வின் ஆழ்நிலைக்குத் திருப்பி, அத்தருணத்தினாலான அவனது அணுக்களின் பிரதியைக் கொண்டு மகிழானந்த்தாவை உருவாக்குவார் விஞ்ஞானி வெனான்சியசு.

அப்படிப் படைக்கப்பட்ட பிரதி மானுடன் ஒவ்வொருவனும், சில பல காரியங்களுக்கு பயன்படுத்தப்பட்டு, இந்திய சமூக நல்லுறவுக்குத் துணை போவான். இப்படியாக, ஒவ்வொரு குணத்தைக் கொண்டவனும் ஒவ்வொரு காரியத்துக்க்குப் பாவிக்கப்பட்டு, இந்தியா வல்லரசு ஆவதுதான் கதை!

(அப்பு, இப்படி ஒரு படம் இன்னும் வரலைன்னு நினைக்கிறேன்...)

-----------------------

முகமறியா உறவுகள் சிலர் உலகமெங்கும் இருக்கிறார்கள் என்பதை எண்ணும் போது அடையும் அகமகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

பலநாளும் பக்கத்தார் ஆயினும் நெஞ்சில்
சில நாளும் ஒட்டாரோ ஒட்டார் - பலநாளும்
நீத்தார் எனக் கைவிடல் உண்டோ தன் நெஞ்சத்து
யாத்தாரோடு யாத்த தொடர்பு!

1/01/2011

2011:இல்லாத சாவுக்கு, வேண்டாத எழவு எதுக்கு?

உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட்டுடையார் அவர் தலைவர்
அன்னவர்க்கே சரண் நாங்களே!

ஆக்கலும், காத்தலும், அழித்தலும் என மூன்றையும் சரிசமமாய் நடாத்தி வருகிற இயற்கைக்குச் சரண் நாங்கள். எனினும், அந்த இயற்கையே அதன் பாதையிலிருந்து பிறழ்ந்து செல்கிறதோ எனும் ஐயம் ஏற்ப்டத் துவங்கி இருப்பதுதான் 2011ன் சிறப்பம்சம்.

ஆண்டிப்பட்டியில் இருந்து கொண்டு, ஆர்கன்சாசில் நிகழும் சுழற்காற்றைப் பற்றிக் கவலைப் படுகிறான் ஒருவன். ஓடக்கல் பாளையத்தில் இருந்து கொண்டு, ஒகாயோவில் வீசும் பனிப்புயலைப் பற்றி வர்ணிக்கிறான் மற்றொருவன். ஆனால், சொந்த ஊரில் இருக்கும் மாடசாமியும், முனியம்மாளும் என்னவானார்கள் எனக் கவலைப்பட அவனுக்கு நேரமும் இல்லை; பிரஞ்ஞையும் இல்லை.

பணத்தை அள்ளி வீசுகிறான். ”வீச முடிகிறது, வீசுகிறான்; அதில் என்ன பிழை கண்டீர்?” எனக் கொக்கரிக்கிறது மேட்டிமைக் கூட்டம். தட்டுமுட்டு சாமானெல்லாம் தரக்கூடாத விலை; ஓடுகிற ஓடையிலே அள்ளிக் குடித்துக் கொண்டிருந்த குடிநீருக்கு விலை; இருக்கும் இலையைக் கிள்ளிச் செய்த மருத்துவத்துக்கு விலை; கடமையே எனக் கற்றுக் கொடுத்த கல்விக்கு விலை. இயற்கையின் இச்சை, அன்பின் அச்சாணி, மனிதனின் மாண்பு என இருந்து வந்த கலவியும் விலைக்கு!

”ச்சீச்சீ... இது ஒரு உலோக அஃறிணை!” என நினைத்து விட்டால் அதற்கேது விலை? ஆனாலும் பவுனு பதினைந்தாயிரம். இல்லாத வெங்காயத்துக்கு விலை அறுபது உரூபாய். துணை இல்லாத மணவாளனுக்கு, கொடுக்கப் பெண் இல்லை. இருக்கிற பெண்ணுக்கு உரிமை இல்லை.

2011 தேர்தல்... தேர்தல்... தேர்தல்... தேர்ச்சியடையா மக்களுக்குத் தேறுதல் உண்டோ? இவன் அவனைச் சொல்வான். அவன் இவனைச் சொல்வான். சாதி என்பான். மதம் என்பான். இலக்கு என்பான். வாக்கு என்பான். பணம் என்பான். வாழ்க்கையைப் பிளந்து, நெருப்பு மூட்டுவான். அடுத்தவன் வாழ்க்கை எரிவிப்பில் குளிரும் காய்வான். ”தேர்தல் ஆண்டு, மக்கள் கொண்டாட்டம்! தலைவர்கள் பதட்டம்!!” எனச் செய்தியும் வெளியிடுவான் ஊடகப் பிச்சைக்காரன்!

கணம் பொருந்திய மேட்டிமைக்காரன் காற்றை அடைப்பான். அடைத்துச் சந்தையிலே வண்ண வண்ணப் போத்தலில், அங்க அவயங்கள் காட்டி விற்கச் சொல்வான். ”இடுப்பழகில் மயங்கிப் போனேனே, கன்னக் குழியழகில் கிறங்கிப் போனேனே... இதோ, வாங்குகிற மூச்சுக் காற்றுக்கும் விலை கொடுக்க நாம்போறேனே!!”, என்பான் இவன்.

வானவில்லை வளைக்க வந்தோம் நாங்கள். வானில் இருக்கும் விண்மீனையெல்லாம் பறிக்க வந்தோம் நாங்கள். சமூகத்தைச் சீர்திருத்த வந்தோம் நாங்கள். யோகாவைக் கொண்டு மோகாவை வீழ்த்த வந்தோம் நாங்கள். கடவுள் இல்லை என்றுச் சொன்ன கடவுள் வந்தார்பாரு. வாழ்வதற்க்குக் கூட கட்டணம் வசூலிப்பாரு அவரு!! கூடக் கொடுத்தா, கூடவும் கூட்டிக் கொடுப்பாரு அவுரு

... என்னங்கையா வாழ்க்கை? இருக்கிற எடத்துல இருந்து நாலடி கீழ இறங்குவோம்... இன்னைக்கு செத்தா, நாளைக்குப் பாலு! மனுசனுக்கு மனுசனா, ஒன்னுமொன்னுமா இருந்துட்டுச் சாகலாம் வாங்க. இருக்கிற மனுசனுக்கு, இல்லாத போட்டி எதுக்கு? இல்லாத சாவுக்கு, வேண்டாத எழவு எதுக்கு??

Let's make, year 2011 be a good start!!!