5/31/2010

பதிவுலகச் சீர்கேடும், மூன்று நாள் விடுப்புக்கு வந்த கேடும்!!

எனதருமை வாசகர்களே, நண்பர்களே,

இப்படியானதொரு இடுகையை இடுவது தவிர்க்க இயலாதது ஆகிவிட்டது. மன்னிக்கவும்!!

May 28 மாலை: சட்டநூகா நகரில் இருந்து சார்லட் நகருக்கு வந்தடைதல்

May 28 இரவு 9.30 மணி: சொந்த அலுவல் காரணமாக, நண்பர், சகபதிவர் ஆருரன் அவர்களுக்கான அழைப்பு

நீண்ட நாட்களாக அழைக்காமல் விடுபட்டுப் போனதற்கான விளக்கம்; சொந்த அலுவல் குறித்தான அளவளாவுதல்; இடையூடாக, பதிவுலகத்தில் ஏதோ சலசலப்பு என்று மட்டுமான தகவல்

May 29 சனி, காலை 7.30: நண்பர், சகபதிவருமான கதிர் அவர்களுடன் மடலாடல்

பூக்காரி எனும் இடுகையை வாசிக்கச் சொல்கிறார். வாசிக்கிறேன். மிகவும் எரிச்சலுற்றேன். பின்னூட்டங்கள் வாயிலாக, ஏதோ விபரீதம் என்பதை மட்டும் உணர முடிந்தது. தெரிந்து கொள்ளும் ஆவல் மேலிட்டதை அடுத்து, அலைபேசியில் கதிருடன் அளவளாவல். முழு விபரமும் தெரிய வருகிறது. வருத்தம் தெரிவித்ததோடு, அமைதி காக்குமாறு முடிவும் செய்தோம்.

May 29 சனி காலை 8.10: நண்பர், உடன்பிறவாச் சகோதரர் புதுகை அப்துல்லாவுக்கு அழைப்பு

சொந்த அலுவல் குறித்தான அளவளாவல். அவர் கேட்ட அலுவலை முடித்துத் தருகிறேன் என உறுதி கூறல். உரையாடல் முடியும் தருவாயில், நர்சிம் அவர்களது மேலான அதிருப்தியைத் தெரிவித்துக் கொள்தல். சில வினாடிகள் நேரமே அது குறித்துப் பேசிக் கொண்டோம்.

May 29 சனி காலை 9-10 காலை: அனைத்து இடுகைகளையும் வாசித்து, அந்தச் சிறு குழந்தையை நினைத்து நினைத்து பெரும் வருத்தம். மீண்டும் கதிர் அவர்களுக்கு அழைப்பு. இரு சாராருமே காரணம், எனினும் கொச்சைத்தனமான இழிவான சொற்களை நினைத்து அவமானமுற்றோம்.

May 29 சனி, நண்பகல்: பதிவர், அண்ணன் சீமாச்சு அவர்கள் இல்லத்திற்குப் பயணம்

நித்திரையில் இருந்து, எழுந்து வந்தவருடன் செய்திப் பரிமாற்றம். அண்ணன் அவர்களும் மிகுந்த பாதிப்புக்குள்ளாயினார். பாதிக்கப்பட்ட பெண்ணைப் பற்றியே பேச்சு. குடும்பத்தினரும் கவலையில் பங்கு கொள்கிறார்கள். இடையூடாக, மீண்டும் கதிருக்கு அழைக்க, அவருடன் சீமாச்சு அளவளாவுகிறார். எங்கள் வீட்டுச் சகோதரிக்கு நேர்ந்த இடர் ஆகவே நினைத்துப் புலம்பினோம். வெளியே எங்கும் செல்ல மனம் வரவில்லை.

May 29 சனி இரவு: திரு. மாதவராஜ் இடுகை. மனம் மேலும் இறுகி, நித்திரை கொள்ளாத த்விப்பில். அடுத்த சில மணி நேரங்களில், நட்சத்திர இடுகை. பிற்படுத்தப்பட்ட பெண் என, மெதுவாக சாதி தலையெடுக்கிறது.

இதுகாறும், புலம்பெயர்ந்த மண்ணிலே இருந்து கொண்டு, சொந்தச் சகோதரியாய் நினைத்த நாங்கள் மனிதர்கள் அல்லவா?? சாதியைப் பார்த்துத்தான் கவலை கொண்டோமா??

கவலையினூடே, அவள் ஒரு தொடர்கதை எனும் பெண்ணின் பெருமையைப் பறை சாற்றும் படத்தைக் காண்கிறோம். முற்போக்கு சிந்தனையும், அதேவேளையில் கட்டுப்பாடு தவறாமையும் அப்படத்திலே வெளிப்படுகிறது. அதைச் சிலாகித்துக் கொண்டே, தமிழ்மணத்தைத் தட்டுங்கால், செந்தழல் இரவியின் இடுகை.

நேர்த்தியான, மனதிற்குப் பிடித்தபடியாக இருந்தமையால், வணக்கமும் பரிந்துரைக்கான ஒப்பமுக்கும் செலுத்தி அரைகுறை நித்திரை கொள்கிறேன்.

May 30 ஞாயிறு காலை: பதிவுலகம் எங்கும் இதேதான். வேலையற்றுப் போய், பக்கம் பக்கமாய்ச் சென்று பின்னூட்டுகள் படித்து, மனம் நொந்து, வெந்து போகிறோம்.

May 30 ஞாயிறு நண்பகல்: மனக்குழப்பத்தில் எது செய்தாலும் அது தவறாகவே முடியும். எனவே அமைதி காப்போம் என ஒருமனதோடு நண்பருகளுக்குமான ஒரு அறிவுறுத்தல். சீமாச்சு அண்ணாவின் இல்லத்திலேயே உறக்கம்.

May 30 ஞாயிறு, மாலை 7 மணி: பதிவர், சகோதரி முகுந்த் அம்மா அவர்கள், வேறொரு நண்பருக்கு அழைத்து, அவரிடம் இருந்து என் அலைபேசி எண்ணை வாங்கி, என்னை அழைக்கிறார்கள்.

என்ன சொல்வதென அறியாது, அலைபேசியை அருகில் இருந்த சீமாச்சு அவர்களிடம் கொடுத்து விடுகிறேன். கண்ணீர் விடாதது குறையாக அவர் புலம்ப, நாங்கள் இருவரும் சமாதானப்படுத்தி ஆற்றுப்படுத்துகிறோம்.

May 30 இரவு: என் வீட்டாருடன் செய்தியைப் பகிர்ந்து கொள்ள, அவர்களோ திகைத்துப் போய், அச்சமுறுகிறார்கள்.

May 31 காலை 5 மணி: மீண்டும், தமிழ்மணம் வாசம்; இடுகைகள் வாசித்து, மனநோய் மேலிடுகிறது. என் சார்ந்த நண்பர்களுக்குச் சொல்வதன் மூலம், என்னை நானே கட்டுப்படுத்திக் கொள்கிறேன். இடுகைகள் இட்டு, மேலும் தீயில் எண்ணெய் வார்க்கவா? செந்தழல் இரவி அவர்களுக்கு மட்டும் நன்றியைப் பகிர்ந்து கொள்கிறேன் மடலாடல் வழியாக. இரு நாட்களும் சரிவரத் தூக்கமின்மையால், நித்திரையில் ஆழ்ந்து போகிறேன்.

May 31 காலை 9 மணி: உள்ளூர் நண்பர்களிடம் உரையாடல். அனைவருமே, ஒருவிதமான இறுக்கமான மனநிலையிலேயே இருந்தார்கள். அதன்பொருட்டு, மீண்டும் மடல். பொறுமையாக இருப்போம் என. சுயலாபம் கருதி என்றும் வைத்துக் கொள்ளலாம். அவர்களுக்கு அறிவுரை சொல்வதன் மூலம், நானும் அதைக் கடைபிடித்தாக வேண்டுமே??

May 31 காலை 10 மணி: வினவு குழுமத்தின் இடுகை. நொந்து போயிருந்த மனது, மேலும் கசங்கிக் கண்ணீர் வடித்தது. தோழர்களே, சாதி பார்த்துத்தானா, நாங்கள் இந்த மூன்று நாட்களும் மனக்கண்ணீர் வடித்தோம்?? இடுகை இடாத காரணத்தால், நாங்கள் கள்ள மெளனிகளா ஆனோம்?? என்னால், என் நண்பர்களும் அவச்சொல்லுக்கு ஆளானார்களே?? செந்தழல் இரவியாரே, இதற்குத்தானா உம்மை நாங்கள் வணங்கினோம்??


முன்பின் பார்த்திராத சகோதரிக்காய், சகோதரனுக்காய், பாரெங்கும், எத்துனை எத்துனை தமிழ் உறவுகள் சாதி பார்க்காது, துஞ்சாது அல்லல் உற்றனரோ??


5/30/2010

யார்டா அவன்? அவனை எறக்கி விடணும்!!

அவந்தான் பிரச்சினை... சொல்லுங்க.... எல்லாரும் ஏமாத்துறாய்ங்க.... அவன் எவன்? ஏற்கனவே பிரச்சினை.... எவ்ளோ கலாட்டா தெரியுமா? அவ்வ்வ்...... சொல்லுங்க சார்.... நீங்களும் என்னையும் ஏமாத்துறீங்க... பார்த்தீங்களா?

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!

கடந்த இரு நாட்களாக, மின்தமிழ் மடலாடற் குழுவில் நான் இட்ட இரு இடுகைகளும் சிறந்த விவாத இழைகளாக உருவெடுத்தன. அதிற்கிடைத்த ஒரு தகவல்தான் இது!

லெனின் சோவியத் ருஷியாவின் ஆட்சிச் தலைமையில் இருந்த போது, மேடையில் பேசக் கூப்பிட்ட தருணத்தில் தன்னைப் புகழ்ந்தவர்களைப் பார்த்துச் சொன்னார். ”தோழர் லெனின் என்பதற்குமேல் ஒரு வார்த்தை என்னைப் பற்றிப் பேசக்கூடாது. மக்களிடம் பேசவந்த கருத்தைப் பேசுங்கள்” என்று.

இதையே பணிவோடு உங்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் பாராட்டும் ஒவ்வொரு சொல்லும் உங்களிலிருந்து என்னை அன்னியப் படுத்துகிறது. நமக்குள் உள்ள நட்பில் இடைவெளியையும் எனக்கு மனச்சங்கடத்தையும் ஏற்படுத்துகிறது.

அறிவு ஒரு கூட்டுமுயற்சி. பலபேர் சேர்ந்து தேர் இழுப்பதுபோல், பலபேர் சேர்ந்து சிந்திக்கும்போது, உங்களுக்குத் தெரிந்ததை நானும், எனக்குத் தெரிந்ததை நீங்களும் என ஒவ்வொருவரும் பகிர்ந்துகொள்கிறோம்.

அகமதாபாத்தில் பேச அழைத்தார்கள். அங்குத் தமிழர்கள் மிகுதியாக வாழ்கிறார்கள். இது 80களில் நடந்தது. வடஇந்தியாவில் முருகன் கோயில் உள்ளதா எனக் கேட்டேன். அவர்கள் இல்லை என்று சொன்னார்கள். ஏன் என்றேன். தந்தைக்கே பாடம் சொன்னவன் முருகன். தந்தையை விஞ்சியவன். தகப்பன் சாமி. இங்குள்ள மக்கள், எவ்வளவு வளர்ந்தாலும் தகப்பனுக்குப் புத்திசொல்லும் பண்பாடு இல்லை. அதனால் முருகனையும் இவர்கள் ஏற்பதில்லை என ஒருவர் சொன்னார்.

அக்கருத்து சரியா தவறா என்பது வேறு. ஆனால் தமிழ் நாட்டில் அறிவு பெரியவரிடம் இருந்தாலும் சிறியவரிடம் இருந்தாலும் மகனிடம் இருந்தாலும் ஏற்றுப் போற்று எனக் கற்பிக்கப்பட்டிருக்கிறோம்.

”அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்...
வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமே!”

என ஒரு அரசன் பாடுகிறான்.

எல்லோரும் ஒவ்வொருவிதத்தில் அறிவு சான்றவர்கள். எனக்கு இலக்கணமும் தத்துவமும் தெரியுமென்றால் வேறு சிலருக்கு கம்யூட்டரும், மருத்துவமும் தெரியும். பிறர் திறமை நமக்குத் தெரிவதில்லை. அவ்வளவுதான்.

பெரியோரை வியத்தலும் இலமே!
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!!

அன்புடன்
ஆராதி


5/29/2010

புணரின் புணருமாம் இன்பம் - 2

சென்ற சில நாட்களுக்கு முன்னர் சங்கைச் செய்தி(hidden message) எதுவுமன்றி, திறந்த மனதோடு புணரின் புணருமாம் இன்பம் எனும் தலைப்பிட்டு ஒரு இடுகை வெளியிட்டு இருந்தேன்.

அதாவது, புறநிலைத் தாக்கங்களுக்கு ஒருவனது அகநிலையானது எவ்வாறு வெளிப்படுகிறதோ, அதை ஒட்டியே அவனது பிம்பம் உருவாக நேரிடும். இதுதான் இயற்கையின் நியதி.


அதை விடுத்து, பிம்பங்கள் கட்டி எழுப்பப்படுகின்றன. இது சமூகத்தின் அவலம்; ஏற்படும் வழு; அதற்கான விளைவுகள், தொடர்ச்சியின் நீட்சியாகச்(cascade) சென்று சென்று... சென்று கொண்டே இருப்பதன் காரணமாய் மனிதங்கள் மரித்துப் போகிற காட்சியை எவரும் அறிவர்.

பதிவில் இட்ட இடுகைக்கு அவ்வளவு வரவேற்பு அமையப் பெறாதது ஏமாற்றமே! எனினும், அறிஞர்கள் கூடும் இடத்தில் மாபெரும் வரவேற்பு கண்டு, மகிழ்ந்து நெகிழ்ந்து போனேன்.

வரவேற்பும், இதர கருத்துகளும்!

அவற்றுள் சில:

எதிர்ப்பவன் ஏழை என்றால், கோபம் சண்டாளம்!

புறநிலைத் தாக்கமே, அகநிலையின் வெளிப்பாடு!!

உருத்திரமும் இடம் பெற்ற ஒன்பான் சுவைகள்: வீரம், அச்சம், இழிவு, வியப்பு, இன்பம், அவலம், நகை, உருத்திரம் மற்றும் நடுவுநிலை.

வலியவர் உடைத்தால் மண் குடம்; மெலிந்தவர் உடைப்பின் அது பொன் குடமும்; குற்றமும்!!

Moral outrage is a response to the behavior of others.. never one's own!

சங்கை இல்லாதன சங்கையாம்!

5/27/2010

ஓர் ஆசங்கை!

மக்களே, நான் ஒரு தமிழ் மாணவன். அன்றாடம் தவறாது தமிழ் கற்று வருகிறேன். அவ்வகையிலே, உங்கள் உதவியோடு மேலதிகமாக ஒன்றை இன்று கற்க விரும்புகிறேன்.

நான் எழுப்பப் போகிற வினாவானது, அறிவிலித்தனமான மற்றும் பக்குவமற்ற வினாவாகவும் இருக்கக் கூடும். அப்படி இருப்பின் பொறுத்தருள்வதோடு, எம்மடமையை அகற்றித் தெளிவித்திடுவீராக!

பண்புத்தொகை என்பது பண்புப் பெயரைச் சேர்த்து வரும் பெயர்ச் சொல். அப்படியா? அப்படியானால், பண்புப்பெயர் என்றால் என்ன?? பண்பைக் குறிப்பது பண்புப் பெயர்; செம்மை, வட்டம், பசுமை என்பன போன்ற பண்புகளைக் குறிப்பது.

இப்படியான பண்புகளைத் தாங்கி வரும் பெயர்ச் சொல், பண்புத்தொகை. பெருங்கடல், செந்தமிழ், பசும்பொன் முதலானவை அதற்கான உதாரணங்கள். செம்மையான தமிழ், செந்தமிழ் என்று ஆகிறது.

செம்மையான மொழி செம்மொழி. அந்த வகையிலே, செம்மொழியான தமிழ், செம்மொழித் தமிழ். இந்த செம்மொழித்தமிழுக்கு, உலகந் தழுவிய அளவிலே ஒரு மாநாடு. ஆக, அந்த நல்லதொரு நிகழ்வுக்கான பெயர்ச்சொல், உலகச் செம்மொழித் தமிழ் மாநாடு என்று வரும். தருக்கம் சரியாக இருக்கிறதா? நிச்சயமாக, சரியாக இருப்பதைப் போலத் தோணக்கூடும்.

அப்படியானால், ஏன் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்று அழைக்கிறோம்? இங்கே, தமிழ் என்பது ஒரு பண்பைக் குறிக்கிறதா?? கன்னடச் செம்மொழி, தெலுங்குச் செம்மொழி எனப் பண்பால் குறிப்பதாகுமா??

செம்மொழித்தமிழ் என்பதில் பெருமையின் வீரியம் தூக்கலாக இருக்கிறதா? அல்லது, தமிழ்ச் செம்மொழி என்பதில் தமிழுக்கான பெருமையின் வீரியம் அதிகமா?? அன்பு கூர்ந்து, எனக்குள் தலைதூக்கி இருக்கும் இந்த ஆசங்கத்தை விரட்டி அடிக்க உதவி புரியுங்கள் தமிழரே!!


வேர்கள் தமிழில்!
விழுதுகள் உலகெங்கும்!!

5/25/2010

புணரின் புணருமாம் இன்பம்!

உணர உணரும் உணர்வுடை யாரைப்
புணரின் புணருமாம் இன்பம் - புணரின்
தெரியத் தெரியும் தெரிவிலா தாரைப்
பிரியப் பிரியுமாம் நோய்!
-நாலடியார்

மரண தண்டனை; வாழ்வதற்காகவே உயிர்த்த உயிரை வலுக்கட்டாயமாக மாய்த்தல்! ஆறறிவு உள்ள மனிதன், மற்றொரு ஆறறிவு உள்ள மனிதத்தைக் மரித்துப் போகச் செய்கிறான்.

விளை நிலத்தில் ஊடுருவிய களையை அகற்றுதல் போன்றது என்றும் வாதிடுவான் மனிதன். மனிதனை மனிதனே மனிதனாக்கவியலாது தோற்றுப் போய், மனிதம் அற்ற செயலைச் செய்யும் காரியமே அதுவென வாதிடுபவனும் மனிதனே! இவ்விரு வாதங்களையும் இடத்திற்கேற்ற வியந்தோதலுடன் இன்னொரு மனிதன்!!

இன்றைய நாளில், இகம் போற்றவல்ல இந்த அவனியில் மரணதண்டனையை ஏற்றுக் கொண்டுள்ள நாடுகள் ஐம்பத்தெட்டு; அது மனிதமற்ற செயலென ஒதுக்கி வைக்கும் நாடுகள் தொன்னூற்று ஐந்து; இதுவும் அதுவுமாய் இருப்பவை எஞ்சிய நாடுகள்!!

இங்கேதான் நாம் ஒன்றைக் கூர்ந்து கவனித்தாக வேண்டும். யாரும், யாரையும் தூற்றிக் கொண்டிருக்கவில்லை. அவரவர் அவரவர் வாதங்களில், எண்ணங்களில் ஊன்றி நிற்கின்றனரே அல்லாது, காழ்ப்பும் கடுமையும் குடிபுகுதலுக்கு இடம் கொடாது அன்றைய தினத்தை அருள் நீங்காப் பற்றுதலுடனே கழிக்கின்றனர்.

ஐக்கிய அமெரிக்க மாகாணங்களில், ஒரு சில மாகாணங்கள் மரண தண்டனை என்பது சட்டத்திற்குப் புறம்பானது எனச் சொல்லுகையில், அண்டைய மாகாணங்களில் அது சட்டத்தின் ஆதரவுடன் நிமிர்ந்து கோலோச்சுகிறது. இரு மாகாண மக்களும் காழ்ப்பை உமிழ்ந்து, அன்பைத் தொலைத்து, மனதை நோகடித்துக் கொண்டா இருக்கிறார்கள்? மாறாக, அடுத்தவர் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, இடத்தின் தன்மைக்கொப்ப தம்மையும் ஆட்படுத்திக் கொண்டல்லவா இருக்கின்றனர்??

எந்த மாகாணத்தில் மரண தண்டனையைச் சட்டத்தில் சேர்க்கவில்லையோ, அதே மாகாணத்தில் கருக்கலைப்புக்குச் சட்டத்தில் இடமளித்து இருக்கிறார்கள். அல்லது, அதற்கு ஆதரவாகப் பெருமளவிலான மக்கள் இருக்கிறார்கள் என்பது விந்தையாக இருக்கிறதல்லவா?

எந்த மாகாணத்தில் மரண தண்டனைக்குச் சட்டத்தில் இடமிருக்கிறதோ, அங்கே கருக்கலைப்புக்கு இடமில்லை. இப்படி ஒன்றுக்கு ஒன்று முரணான நிலைப்பாடுகளும் இருக்கத்தான் செய்கிறது. எனினும், பெரும்பாலான மக்களின் எண்ணங்களுக்கு மதிப்பளித்து, அதற்கு ஒத்துழைப்பும் செய்கின்றார் பெருமக்கள்.

ஆயினும், அவரவர் எண்ணங்களையும் வாதங்களையும் அவர்கள் கைவிட்டு விடவில்லை. வாய்ப்பு அமைகிற போதெல்லாம் துணிச்சலாக, தத்தம் கருத்துகளை உரைத்துக் கொண்டுதான் இருக்கின்றனர். உணர உணரும் உணர்வுடையாரை நாடிச் செலல் தவறல்லவே?!

நடப்புக் காலகட்டமென்பது தமிழினத்திற்கு மட்டும் அல்ல; ஏனைய பல்வேறு தேசிய இனங்களுக்குமான நெருக்கடி மிகுந்த காலம். மாற்றங்கள் பெருவேகம் எடுத்துச் சூறாவளியாய்ச் சுழன்று சுழன்று, அண்டபேரண்டத்தை ஆட்டுவித்துக் கொண்டிருக்கின்றன! அதன் வேகத்தில் மனிதங்கள் மரித்துப் போகின்றன!!

நம்மில் எத்துனை எத்துனை முரண்பாடுகள்? இறப்புகளை மறப்புகளாக்க ஒரு கூட்டம். மறப்புகளை இருப்புகளாக்க ஒரு கூட்டம். மனிதம் மறந்தவரென ஒரு கூட்டம். செம்மொழி மாநாடு என ஒரு கூட்டம். அதாகாவென ஒரு கூட்டம். ஊழலே திறமென ஒரு கூட்டம். ஊழலுக்கு எதிர்ப்பு என ஒரு கூட்டம். எதிர்த்தே ஏமாற்றுபவர் ஒரு கூட்டம். எதிர்ப்பவனை எதிர்ப்பவர் எவரும் துரோகியரென ஒரு கூட்டம். எதிர்ப்பவர் எவரும் பிழைக்கத்தெரியா மடையரென ஒரு கூட்டம்.

கொள்கைப் பற்றுடன் ஒரு கூட்டம்; பற்றிருந்தும் ஒழுகாரென ஒரு கூட்டம்; கொள்கை எதுவுமற்று ஏமாறுபவர் ஒரு கூட்டம்; ஏமாறுபவரென நடித்து ஏமாற்றுபவர் ஒரு கூட்டம். மொழியென ஒரு கூட்டம். மொழியைக் கேலி செய்து அற்ப மகிழ்வு பெறுபவர் ஒரு கூட்டம். இப்படி, வகை வகையாய் எண்ணிலடங்காக் கூட்டங்கள்!!

இவ்வகையான கூட்டங்களுக்குள், மற்றவர் எண்ணங்களுக்கு மதிப்பளிக்கும் கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது; எண்ணிக்கையில் மிகக் குறைவாய்!!

  • என்மொழியை, எண்ணங்களை ஆராதிக்கிறேன்; ஆராதிக்க மறுப்பவரைக் கடிந்து கொள்ளேன்! ஆராதிக்க முனைபவனை எள்ளி நகையாடுவதை நிராகரிக்கிறேன்!!


  • எந்தவொரு தேசத்தையும் நேசிக்கிறேன். மனிதமே மகத்துவம் என என்றும் போற்றுவேன். மனிதர்கள் அனாதரவுகள் ஆவதைக் கண்டு மனம் நோகிறேன்!!


  • அந்தந்த நாட்டுச் சட்ட திட்டங்களை மதிக்கிறேன். மாண்பு போற்றுவேன். மாற்றங்கள் கண்டு ஒரு போதும் அஞ்சேன்!!


  • எண்ணுவது இழுக்கன்று; தோற்பது இழிவுமன்று; மற்றவர் உணர்வுகள் மதிக்கப்படுவது ஈனமுமன்று!!
--பழமைபேசி.


5/24/2010

கனவில் கவி காளமேகம் - 18

அப்பப்ப நம்ம கனவுல வந்துட்டு இருந்த அப்பிச்சி கவி காளமேகம், மாசக் கணக்குல வராமப் போயிட்டாருங்க. நேற்றைக்குப் பாருங்க, இரவு மணி பதினொன்னு வரைக்கும் தமிழ், தமிழ்னு இலக்கியப் பல்வழி அழைப்பு. அதுல கலந்துகிட்டு, களைப்பாப் போயிப் படுத்தேன்... அப்படி ஒரு நித்திரை!

இடையில யாரோ வந்து, தலை மாட்டுல நின்னு கூப்புடுற மாதரயே இருந்திச்சி.... மனக் கண்ணைத் திறந்து பார்த்தா, நம்ம அப்பிச்சி... அவர் என்ன சொன்னார்னு மேல படிங்க....

“அப்பிச்சீஈஈ....”

“டே, பேராண்டீ....”

“என்னுங்க அப்பிச்சி, நெம்ப நாளாக் காணாமலே போயிட்டீங்க?”

“அட... ஆமா... நீதான் அல்லும் எல்லும் ஊரா ஊராத் திரிஞ்சிட்டு இருந்தே... அந்த நேரத்துல உனக்கெதுக்கு செரமம்னுதேன்...”

“நீங்கவாட்டுக்கு வந்து போயிட்டு இருங்க அப்பிச்சி.... பாக்குற நாலு சனம், என்ன அப்பிச்சிக்கும் பேராண்டிக்குமு இணக்கக்கேடான்னு கேக்குறாங்க பாருங்க?!”

“எலும்பு இல்லாத நாக்கு எப்பிடி வேணுமுன்னாலும் திலும்பும்டா... அவங்க கெடக்குறாய்ங்க... நீ மனசுல எதையுமு வெச்சிக்காத பாரு!”

“செரீங் அப்பிச்சி.... அதென்னங்கப்பிச்சி அல்லும் எல்லும்??

“அல் அப்படின்னா இரவு; எல் அப்படின்னா பகல்; அல்லும் பகலும் அப்படின்னு சொல்லிச் சொல்றதில்ல?! அதாண்டா, எங்க காலத்துத் தமிழ்ல அல்லும் எல்லும்!”

“ஓ, அப்படிங்களா அப்பச்சி?”

“ஆமாண்டா கண்ணு.... அதே கிரமத்துல சொல்றதுதான் அல்லோன்... அல்லில் வலம் வருபவன் அல்லோன்....அமாவாசையில் அல்லோன் அகப்படான்!”

பக்கிணிப் பொழுது வேலை செஞ்சும் பொல்லாப்புன்னு சொல்லிச் சொல்றாங்களே... அதென்னங்க அப்பிச்சி?”

“டே... எப்படறா இதையெல்லாங்கூட ஞாவகத்துல வெச்சிருக்க நீயி?”

“அய்ய... நம்ம கட்டைக்காட்டுல கல்லக்கா புடுங்க வாறவங்கல்லாம் பேசுன பழமை மறந்து போயுருங்ளாக்கூ?”

“என்ற பேராண்டியா? கொக்கான்னேன்?? ஆமாடா சின்னவனே.... கல்லக்கா எப்பப் புடுங்குவாங்க? தை, மாசில நல்ல வேசை காலத்துல புடுங்குவாங்க... அப்ப சில நேரங்கள்ல, இரவைக்குத் தூங்காமக் கொள்ளாம இருந்து வேலை செய்வாங்க... அப்பச் சொல்றதுதான் இந்த சொல்லு... பக்கிணிப் பொழுதுன்னா, காலைல இருந்து அடுத்த நா சாயங்காலம் வரைக்கும்... அதாவது, ரெண்டு பகலுமு, ஒரு இராத்திரியுமு!”

“ம்ம்ம்... இப்ப ஞாவகத்துக்கு வருதுங்க அப்பிச்சி....”

”நீயாவது இதெல்லாம் ஞாவகத்துல வெச்சிருக்கபாரு!”

“ஆமாங்க அப்பிச்சி.... நம்ம பக்கத்தூட்டு குப்புசாமியண்ணன் ஊட்டுக் கொமாரு திண்டுக்கல்லுல வேலை பாக்குறானுங்க.... பதினஞ்சி வருசங்களுக்கு அப்புறம் போன வாரந்தான் அவங்கூடப் பேசுனனுங்க அப்பிச்சி!”

“அப்படியா... அவனுமு நீயுந்தான மாடுகளைக் கொறைக்கு ஓட்டிட்டுப் போயி, ஒட்டுக்கா மாடு மேச்சிட்டு இருப்பீங்க?! அவனுமு, உன்ன மாதரயே நெறைய பழைய பழமைகளைப் பேசுவானே??”

”ஆமுங்... அப்பிச்சி, உங்ககிட்ட இன்னொன்னு கேக்கோணுமிங்க.... அடுத்தவிங்க குறுக்கால குறுக்கால பேசாம இருக்கச் செய்யுறதுக்கு ஒரு சொல் சொல்லுவாங்கல்லங்... அதென்ன சொல்லுங் அப்பிச்சி??”

மூகாத்துறதுன்னு சொல்றதைக் கேக்குறயாடா பழமை?”

“ஆங்... அதேதானுங் அப்பிச்சி! இப்ப அலைபேசி, தொலைபேசியெல்லாம் வந்திடுச்சி பாருங்க... தமிழ்ப் பேரவையோட தமிழ்விழாவுக்கு, கவியரங்கம், இலக்கிய வினாடி வினான்னு பலதுக்கும் பல்வழி அழைப்பு நடந்துட்டு இருக்குங்க அப்பிச்சி... அப்ப, அவங்க அலைபேசி, தொலைபேசில இருக்குற உள்வாங்கியில அவங்கவங்க ஊட்டு நாயமெல்லாம் கேக்குதுங்க அப்பிச்சி.... அதான், அதை எப்படி அமித்தி வெக்கிறதுன்னு சொல்லும் போது, இந்த சொல்லு தேவைப்பட்டதுங்.... உங்க அலைபேசியக் கொஞ்சம் மூகாத்துங்க அப்பிடின்னு இனி சொல்லலாம் பாருங்க....”

“நெம்ப நல்லா!”

“அப்பிச்சி... நெம்ப நாள்க் கழிச்சு நீங்க வந்ததுல மனசு நிறைஞ்சு போச்சுங்க... அப்பப்ப வரோணுமாக்கூ?”

"சரிடா பேராண்டி! இன்னைக்கு இது போதும் அப்ப. நீ தூங்கு, நான் வாறேன்!"

இன்னைக்கு இதாங்க சொன்னாரு! மொதல்லயெல்லாம் வந்தா, அவரு கேள்வியாக் கேட்டு உசுரை வாங்குவாரு.... அப்பறம் வாறதையே நிறுத்திட்டாரு... இனிமேலாவது, அடிக்கடி வருவார்னு நம்புவோம்... நம்பிக்கைதான வாழ்க்கை? சரி அப்ப, நீங்க போயிட்டு நாளைக்கி வாங்க போங்க....


(......கனவுல இன்னும் வருவார்......)

5/22/2010

நான் கண்ட, தமிழ் கூறும் நல்லுலகின் எழுச்சிமிகு விழா!



நீரின்றி அமையாது உலகு; மொழியின்றி நில்லாது இனம்; எங்கள் வாழ்வும் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு என்று முழங்கினான் பாவேந்தர் பாரதிதாசன். அதற்கொப்ப, புலம் பெயர்ந்து வந்த போதிலும் மொழியில்லையேல் இனமில்லை; இனமில்லையேல் நாமில்லை எனும் உண்மையை நல்லுணர்ந்த தமிழர்கள், பாரெங்கும் பரவி விரவி இருக்கிறார்கள் என்பது வெள்ளிடை மலை.

இதனூடாக, எப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசியா இனத்துல போயித்தான் அடையணும் என்பதனை நெஞ்சில்தாங்கும் இவனுக்குக் கிடைத்தது பெரும் பேறு; ஆம், கெரி(Cary, NC) நகரில் இருக்கும் வடகரோலைனாத் தமிழ்ச் சங்கப் பள்ளியின் ஆண்டு விழாவிற்கான அழைப்புத்தான் அது.

அந்நகரில் வாழும் தமிழுறவுகளின் அழைப்பினைக் கடந்த முறை ஏற்க முடியாமற் போனதால், இம்முறை எப்படியேனும் சென்றே தீர வேண்டும் என்கிற வேட்கையில், கடும் மழையையும் பொருட்படுத்தாது அதனூடாக முன்னிரவே நகரைச் சென்றடைந்தேன்.

நல்லதொரு விருந்தோம்பலுடன் இரவைக் கழித்துவிட்டு, காலை ஒன்பது மணிக்கெல்லாம் விழா அரங்கினை அடைந்தேன். வனத்தில் தவிக்கும் கன்றொன்று, தன்னினத்தைக் கண்டவுடன் நெஞ்சம் நிறைந்து துள்ளிக் குதிப்பதைப் போன்றதொரு மனோநிலை ஆட்கொண்டது.

தமிழ் கற்கும் மாணவர்கள், தமிழ்க் கடலில் மூழ்கி முத்தெடுத்துக் கொண்டிருக்கும் புளகாங்கிதத்துடன் அரங்கத்தில் குழும, அரங்கமே நிரம்பியது. அரங்கம் நிரம்பியதும், பள்ளியின் துணைத் தலைமை ஆசிரியர் இரவி சண்முகம் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அடுத்ததாகத் தலைமையுரை ஆற்றிய தலைமை ஆசிரியர் கார்த்திகேயன், பள்ளியின் வளர்ச்சிக்கு உதவி வரும் அனைவருக்கும் நன்றி கூறியதோடு, வரும் ஆண்டிலும் அது தொடர வேண்டுமென்பதை வலியுறுத்திப் பேசினார்.

நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக, பென்சில்வேனியாப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிவரும் முனைவர். வாசு இரங்கநாதன் அவர்கள் வருகை அளித்திருந்தார். அவரை திரு. செல்வன் பச்சைமுத்து அவர்கள் அறிமுகப்படுத்திப் பேசிமுடித்ததும், சிறப்புரை ஆற்றிப் பேசிய முனைவர் அவர்கள் செறிவான பல தகவல்களை அடுக்கினார். முதலாவதாக, அமெரிக்கா முழுவதும் உள்ள தமிழ் ப்யிலும் மாணவர்களுக்காக, ஒருமுகமான பாடத்திட்டத்தைக் கொண்டு வரவேண்டியதன் தேவையை குறிப்பிட்டுப் பேசினார்.

”அமெரிக்கத் தமிழாசிரியர்கள், தமது மாணவர்களுக்கு தமிழ் இரண்டாம் மொழி என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். எதையும் ஆங்கிலத்தில் சிந்திக்கும் மாணவர்களுக்கு ஏற்றபடியாகப் பாடத்திட்டங்களை வகுத்து, அதனூடாகப் படிப்படியாக மொழியறிவை ஊட்டவேண்டும். இங்கு பயிலும் பெரும்பாலான மாணவர்களுக்கு தமிழில் வாசிப்பதும், மற்றவர்கள் பேசுவதைப் புரிந்து கொள்வதும் செய்லபாட்டில்(active knowledge) இருக்கிறது. எனினும், எழுதுவது மற்றும் பேசுவதில் அவர்களுக்கு உள்ள திறன் மறைந்தே(passive) காணப்படுகிறது” என அவர் தொடர்ந்து கூறிய பல கருத்துகள் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் சிந்தனையை வெகுவாகக் கிளர்ந்தது.

மனித குலத்தில் யாரும் பன்மொழியராக( bilingual) இருக்கவே முடியாது. ஒருவனது ஆழ்மனதில் ஓடும் சிந்தனையானது எந்த மொழியினூடாகப் பாய்கிறதோ, அம்மொழியே அவனது பிரதான மொழி. அவனுக்குத் தெரிந்த இன்னபிற மொழிகள் எல்லாம் இரண்டாம் மொழிகளே! அவ்வகையில், அமெரிக்கத் தமிழ் மாணவர்களுக்கு தமிழைக் கற்றுக் கொடுக்கும் போது, அது குறித்த ஆட்படுத்து(immersion)தலுக்கான செய்ல்பாடுகளைப் புகுத்துவது அவசியமானது. தமிழ்ச் சூழலில் விடுவது, தமிழ் நாடகங்கள் காண வைப்பது, தாயகத்தில் விடுமுறையைக் கழிப்பது போன்ற செய்ல்கள், மேன்மையக் கூட்ட வல்லவை என்றும் அழகாக எடுத்துரைத்தார்.

பெரும்பாலான பெற்றோர்கள், தம் குழந்தைகள் எடுத்த எடுப்பிலேயே இலக்கியம் கற்க வேண்டும் என விரும்புகிறார்கள். அவர்கள் அவ்வாறு செய்வது, மாணவர்களுக்கு சிக்கலையே ஏற்படுத்தும். மாறாக, வாசிப்புப் பயிற்சி மற்றும் தமிழில் மனப்பாடம் செய்து ஒப்பிப்பது போன்றவற்றை ஊக்குவிக்கலாம் எனப் பல உதாரணங்களுடன் அவர் எடுத்துரைக்க, அரங்கத்தினர் கரவொலி எழுப்பி ஆமோதித்தனர்.

வட கரோலைனாத் தமிழ்ப் பள்ளியில், தமிழ் கற்ற மாணவி ஒருவர் தனது பல்கலைக் கழகப் படிப்பின் போது எவ்வாறு பலனடைந்தார் என்பதை மிக விரிவாகப் பேசினார். பல்கலைக் கழகங்களில் இருக்கும் இரண்டாம் மொழிக்கான பாடத்திற்குத் தேவைப்படும் மதிப்பீடு(credit)களை, இத்தகைய பள்ளிகளில் பயிலும் தமிழ் மொழிப் பயிற்சியைக் காண்பித்து ஈடுகட்ட முடியும் என்றும், அவ்வாறு செய்ததால் மூவாயிரம் டாலர் பொருட்செலவையும், கால விரயத்தையும் அவரால் தவிர்க்க முடிந்ததும் என்றும் விளக்கிச் சொன்னார்.

பல்கலைக் கழகங்களில், இரண்டாவது மொழிப் பாடத்துக்கான தேவையை இவரது(பலகலைக் கழகம்) மூலமாகத் தேர்வு எழுதுவதன் வழியாக ஈடு கட்ட முடியும் என்பதைத் தமிழர்கள் பலரும் தெரிந்து கொள்ள வேண்டும்; அதற்கான விழிப்புணர்வை தமிழ்ச் சங்கங்கள் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என வேண்டிக் கொண்டார் சிறப்பு விருந்தினரான பென்சில்வேனியாப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் வாசு இரங்கநாதன் அவர்கள்.

அடுத்த படியாக, ஆண்டு முழுவதும் வகுப்புத் தவறாமல் வருகை புரிந்த மாணவர்கள் சூர்யா சண்முகம் மற்றும் சிந்து சண்முகம் ஆகியோருக்கு சிறப்புச் செய்யப்பட்டது. அவ்விரு மாணவர்களைத் தொடர்ந்து, எல்லாத் தேர்விலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்ற மாணவி ஜோடேனிகா இனிகோவுக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

விழா மலரைத் தொகுத்து வழங்கிய எழில்வேந்தன் தருமராசன் அவர்கள் செந்தமிழில் வெகு அழகாகப் பேசி மலரை வெளியிட, தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் அவர்கள் முதல் மலரை சிறப்பு விருந்தினருக்கு அளித்தார். இறுதியாக திரு. வேதையன் அவர்கள், நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் நன்றி நவில்ந்தார்.

இதையெல்லாம் கண்டு களித்த நான், சார்லட் நகரில் துவங்க இருக்கும் தமிழ்ப்பள்ளிக்கு இந்நிகழ்ச்சியானது பெருமளவில் உதவிகரமாய் இருக்குமென எனது மகிழ்ச்சியை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டேன்.

மேலும், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் தமிழ் விழா குறித்த அறிவிப்பை வெளியிடலாமே என உரிமையுடன் நான் வினவ, கெழுமை கொண்ட நண்பர் எழில்வேந்தன் தனது வழமையான கணீர்க் குரலில் அறிவிப்பை வெளியிட்டார்; நெஞ்சம் நிறைந்தது. மேலும் சிலர் விழாவிற்கு வருவதாக இசைந்தமை மகிழ்வை ஊட்டியது.

சிறப்பு விருந்தினருடனான அளவளாவலுடன், தமிழ்ப் பள்ளி வழங்கிய நண்பகல் விருந்தைப் பசியாறப் புசித்துவிட்டு, அரங்கிலிருந்து சக தமிழன்பர்களோடு தமிழார்வலர் கார்த்திகேயன் அவர்களது இல்லம் புகுந்தோம் ஒரு சிறு குழுவாக. மனம் விட்டுக் கதைத்து, நகைத்து, இன்புற்ற பொழுதெந்தன் வாழ்வில் குதூகலமான இன்னாள்! எழில்வேந்தனோடும், அன்பு பொழில் தமிழரோடும் எழிலாய்ப் பழமை பேசிய பொன்னாள்!!

வேர்கள் தமிழில்!
விழுதுகள் உலகெங்கும்!!

---பழமைபேசி.

5/20/2010

பூமியின் அழகே...பரிதியின் சுடரே!

இவன் பயின்ற பல்கலைக் கழகத்தில் பணிபுரியும் எம்மவர்! எம்மவர் அவர் ஈழத்துக் கவிஞராம் சேரன்!! அவர் படைத்தார் பாடல்! நம்மக்கள் பிடித்தனர் அபிநயத்தோடு ஆடல்!!

காணொளியைக் கண்டு களியுங்கள். கவிஞரைக் காணவும் கவிஞர்தம் படைப்புகளை ஆராதிக்கவும் வாரீர் ஜூலை 2,3ல் நடக்கவிருக்கும் தமிழ் விழாவுக்கு! கடுகதியில் முன்பதிவு செய்யப்பட்டு வருவதால், உடனே முந்துங்கள் நுழைவுச் சீட்டுக்கு!!

நான் ஒருங்கிணைப்புச் செய்து, தொகுக்க இருக்கும் வேர்கள் தமிழில்! விழுதுகள் உலகெங்கும்!! தலைப்பிலான கவியரங்கிற்கு சீரிய கவிஞர் தாமரை அவர்கள் தலைமை ஏற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கவியரங்க நிகழ்ச்சி பற்றிய அறிவிப்புக்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பை ஒட்டி, கவியரங்கத்திற்கான பங்காளர் ஏற்பு மே 15ந் தேதியுடன் நிறைவுற்றது. மேலும் நிகழ்ச்சிக்கான மேலதிகப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. கவியரங்கத்திற்கு உங்களனைவரது ஆதரவையும் எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன்.பட்டிமண்டபம் மற்றும் இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விருப்பமுடையோர் விரைவில் தொடர்பு கொள்ளவும்.



5/19/2010

விடாமுயற்சி

இந்தக் காணொளியானது வேடிக்கையாக இருந்தாலும், அந்த விடாமுயற்சி, தன்னம்பிக்கை, உழைப்பு..... ஏ அப்பா.... வணிகமயத்தில் வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருப்பவர் மத்தியில் இப்படியுமான மகாத்மாக்கள்!


மாப்பு, முயற்சியைக் கை விட்டுவிடாதீர்கள்! வாழ்த்துகள்!!

5/16/2010

இனியரும் இளைஞரே!

இளைஞன் என்பவன் யார்? நான் இளைஞனா, இல்லையா?? வயதை அளவீடாய்க் கொண்டு அளவிடும் பருவங்களுள் ஒன்று என்பது பொதுவாகப் புழக்கத்தில் உள்ளது. வளரிளம் (adolescent) பருவத்திற்கு அடுத்து வருவது இளமைப் பருவம். இந்தப் பின்னணியில், பதினெட்டு வயது முதல் இருபதுகளின் கடைசிக்குள் இருப்பவன் இளைஞன். இது பெரும்பாலானவர்களின் புழக்கம்.

இளம்பருவத்தில் இருப்பவர்களின் மனதில் எளிதாய் மாற்றங்களைக் கொண்டு வர முடியும். அவர்களது எண்ண அலைகள் குறுங்கோணத்தில் கட்டுண்டு போகாது, மேலும் மேலும் விரிவடைய வல்லது. அதையொத்து, மாற்றங்களை ஏற்கவல்லாரையும், சூழலுக்குள் தன்னை ஆட்படுத்திக் கொண்டு அதற்கேற்ப வினையாற்றுவோரையும் இளைஞர்கள் என்றே குறிப்பிடுவர்.

ஒப்பீட்டுக் கோணத்தில், மூத்தவன் அருகில் இருக்க ஒருவனை இளையன் எனச் சொல்வதும் உண்டு அல்லவா? அந்த வகையிலே, வயதிற்க் குறைந்தவன் இளையன் என ஆகிறான்.

செம்மொழியாம் தமிழ் மொழியில், இளமை எப்படி எல்லாம் கையாளப்பட்டு இருக்கிறது?

இள இளநீர், இளவேனில்
கன்னி கன்னிப்பேச்சு, கன்னிக்கோழி
குமரி குமரிவாழை
குஞ்சி குஞ்சியாச்சி
குட்டி குட்டியப்பன்,குட்டியம்மா
சிறிய சிற்றன்னை, சிறிய தந்தை
சிறு சிறுகாலை, சிறு பிள்ளை
சின்ன சின்னப்புள்ளை
நுழாய் நுழம்பு நுழாய்ப்பாக்கு
நொரு நொருப்பிஞ்சு
பச்சை பச்சைப்புள்ளை
பசு பசுங்குருவி பசுங்காய்
பிள்ளை பிள்ளையாண்டான்
பூ பூம்பிஞ்சு பூங்குஞ்சு
பை பைங்கூழ்
முட்டு முட்டுக்குரும்பை

ஆகவே, இளமை என்பது இடம், பொருள், ஏவல் என்பனவற்றைத் தழுவி மாறுபட்டு நிற்கிறது என்பதைக் காணலாம். மாற்றங்களுக்கும், கொள்கையை ஒத்த எண்ண விரிவாக்கங்களுக்கும் இடம் கொடுப்பவரா நீங்கள்? கோபதாபங்களை அடக்கி, மனக்கிலேசங்களை ஒடுக்கி, மனிதருள் மனிதராய் இரண்டறக் கலப்பவர் எவரும் இளைஞரே! அந்த வகையில் நீங்களும் இளைஞரே!!

என்ன இவன்? பத்து நாளா இடுகை எதும் இடாம இருக்குறதைப் பாத்துத் தொலைஞ்சான் இவன்னு மகிழ்ச்சியா அல்ல இருந்தோம்?? இப்ப எதுக்கு இளமையப் பத்தி பெரிய வியாக்கியானம்னு யோசிக்கிறீங்களா? இஃகிஃகி! அதுல ஒரு நுண்ணியம் இருக்குது இராசா, இருக்குது!!

இந்த சின்ன வயசா இருந்தும், எப்படி உங்களுக்கு தமிழ் மேல ஒரு ஈடுபாடு அப்படின்னு சிலர் கேட்டாங்க. இளைஞனுக்குள் இவ்வளவு அனுபவம் இருக்கான்னு ஒரு அம்மா மின்னஞ்சல் அனுப்பி இருந்தாய்ங்க. மகிழ்ச்சிதான்! மனதாரப் பாராட்டி, எளிமை போற்றும் அவங்க மனசும் இளமையானதே அப்படின்னு அவங்க புரிஞ்சிகணும் என்பதற்குத்தான் இந்த இடுகை. இஃகிஃகி!!

5/08/2010

உன்னதம் படைக்க, உறவுகள் சூழ வாரீர்!


வணக்கம் மக்களே, வணக்கம்! விழாவுக்கு வாங்க, வந்து உறவுகளோட உறவா இருங்க!!

உடனே விழாவுக்கான உள்நுழைவுக்கு பதிவும் செய்திடுங்க! அதற்கான கட்டணம் எதுவும் மாறப் போவது இல்லை; ஆனா நாள் நெருங்க நெருங்க, விடுதிக்கான கட்டணம் உசந்துட்டே போகுதுதானே? ஆகவே, பயண ஏற்பாடுகள் மற்றும் தங்கும் ஏற்பாடுகளையும் சேர்த்துக் கவனியுங்க மக்களே!!

செந்தமிழால் சேர்ந்திணைவோம்;
செயல்பட்டே இனம் காப்போம்!

5/05/2010

சிகாகோ: கலாய்க்கலாம் வாங்க!

மக்களே, ஜூலை 2, 3 மற்றும் 4 தேதிகள்ல நடக்கப் போற அமெரிக்கத் தமிழ் விழாவுக்கு வந்திடுங்க. சந்திப்போம்... விழா நிகழ்ச்சிகளைக் கண்டு களிச்சிடுவோம்.

அப்புறம் நாம நாளைக்கு மாலை சிகாகோ நகரத்துக்கு போயி, வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று நாட்களும் அங்க இருந்து பல நண்பர்களைக் கண்டுட்டு, ஊரைச் சுத்திட்டு வரலாம்னு இருக்கோம். நீங்க அந்தப் பகுதியில இருந்தா, என்னோட விபரக்கட்டத்துல இருக்குற மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு தட்டு தட்டுங்க... சந்திப்போம்!

செந்தமிழால் சேர்ந்திணைவோம்!
செயல்பட்டே இனம் காப்போம்!!