10/29/2009

பள்ளயம், 10/30/2009

வணக்கம்! பள்ள(ளை)யம் தொடரில் மீண்டும் உங்களை எல்லாம் சந்திப்பதில் பெருமகிழ்வு கொள்கிறேன். பள்ளயம் என்பதின் பொருள் அறிய விழைவோர், எமது இந்த முந்தைய இடுகையினைப் பார்த்துத் தெரிந்து கொள்ளவும்.

---------------------------
”விகற்பம்! அப்படின்னா? சங்கற்பத்துக்கு எதிரானது!”

“யோவ், என்ன விளையாடுறியா? கற்பம் காணாதபடிக்குக் கபோதி ஆயிடுவே, ஆமா!”

இப்படியெல்லாம் கூட நீங்க வைவீங்களா இருக்கும்! கற்பம் அப்படின்னா இருப்பிடம், கர்ப்பம்ன்னா கருவாதல். அது சரி, எதுக்கும் இந்த கொடுக்கல் வாங்கலுக்கு உண்டான கதையப் பார்க்கலாம் வாங்க!

விகற்பம்ன்னா, சரியற்ற கருத்து, அனுமானம் கொள்வது. சங்கற்பம்ன்னா சரியான கருத்து, ஒத்த கருத்து, அனுமானம் கொள்வது. இங்க அமெரிக்காவுல இருக்குற இந்தியர்கள்ல, கிட்டத்தட்ட எல்லாரும் ஒரு விகற்பத்துல சங்கற்பமா இருக்காங்க. அது என்ன?

ஆமாங்க, இங்க தட்பவெப்ப நிலைய Fahrenheit அலகுல குறிப்பிடுவாங்க. அதே ஊர்ல Celsiusல சொல்றது வாடிக்கை. இந்தப் பின்னணியில, இங்க இருக்குற நம்மாட்கள்ட்ட போயி 70 Degree Fahrenheitக்கு எவ்வளவு டிகிரி செல்சியசுன்னு கேட்டுப் பாருங்க. முப்பதுல இருந்து முப்பத்தி இரண்டு இருக்கும்னு விடை உடனே வரும். ஆனா, அது தவறான விடை. அதுக்கு என்ன காரணம்?


ஒரு விகற்ப அனுமானந்தான் காரணம். இங்க சராசரியா 70 டிகிரி பாரன்ஹீட்ல வாழ்றோம். ஊர்ல, 30-32 டிகிரிங்றது சராசரி. ஆக, 70 டிகிரி பாரன்ஹீட்டுக்கு முப்பது, முப்பத்தி இரண்டு டிகிரி செல்சியசுன்னு ஒரு புரிதல். சரி, எந்த உதவியும் இல்லாம, 70 டிகிரி பாரன்ஹீட்டுக்கு எவ்வளவு டிகிரி செல்சியசுன்னு சொல்லுங்க பார்க்கலாம்!

====================================

நம்ம ஊர்ல climateதான் எதுக்கும் பாவிக்கிறது. இங்க weather! இரண்டுக்கும் என்ன வேறுபாடு? காலநிலை(climate)ங்றது, ஒரு காலத்தை ஒட்டிய தட்பவெப்ப நிலையை இனியொரு காலத்துக்கு உண்டான தட்பவெப்ப நிலையோட ஒப்பிட்டுச் சொல்லக் கூடியது. உதாரணமா, the climate was totally different when I was going to school. நான் குட்டையில மீன் புடிச்சிட்டுச் சிட்டுக பின்னாடி திரிஞ்சப்ப இருந்த காலநிலையே வேற. அப்ப எல்லாம் கூதலுக்கு சின்னாத்தா கடையில வாங்கித் திங்கிற சூடான வடை உருசியே உருசி.

Weather, தட்பவெப்பநிலை அப்படீன்னா, இன்னைக்கு அல்லது குறுகிய காலத்துல இருக்குற நிலைப்பாட்டைச் சொல்றது. இன்னைக்கு தட்பம் இவ்வளவு, வெப்பம் இவ்வளவு அப்படின்னு. ஆமா, கோயமுத்தூர்ல இப்ப தட்பமா, வெப்பமா? நான் அடுத்த மாசம் ஊருக்கு வரலாமுன்னு இருக்கேன், அதான்! இஃகி!!
====================================

என்னடாப்பா நுரைநாட்டியம் எல்லாம் வலுவா இருக்குதாட்ட இருக்கூ? அவன் ஒரு நொரைநாட்டியம், அவம் பேசுறதெல்லாம் ஒரு பேச்சுன்னு?? இப்பிடி எல்லாம் பேசக் கேட்டு இருப்பீங்க. அதென்ன நொரை நாட்டியம்??

இஃகி, ஓடுற வாய்க்கால்ல பார்த்தீங்கன்னா சுழிகள்ல நுரை மேல நின்னுட்டு அங்குட்டு ஓடவும் இங்குட்டு ஓடவும்ன்னு தளுக்காட்டம் ஆடும். அதைப் போல, வீண் பண்ணாட்டுச் செய்துட்டு வாய்ச் சவடால் உட்டுகிட்டு இங்கயும் அங்கயும் ஆடிட்டுத் திரியறதுதானுங்க நொரைநாட்டியம்!

ஏ, யாரப்பா அது நொரைநாட்டியம் அங்க? தொரை, போயி வேலை வெட்டி இருந்தாச் செய்யுங்க போங்க! அதைவிட்டுப் போட்டு, யாரு யாரைப்பத்திப் பொறம் பேசுறாங்கன்னு பதிவுகளைத் தேடிகிட்டு?!

10/28/2009

கனவில் கவி காளமேகம் - 17

அப்பப்ப நம்ம கனவுல வந்துட்டு இருந்த அப்பிச்சி கவி காளமேகம் ரொம்ப நாள் வரவே இல்லை. என்ன நினைச்சாரோ நேற்றைக்கு வந்தாருங்க, வந்து என்னதான் அலப்பறை செய்தாருன்னு மேல படீங்க!

”டே பேராண்டி, அவஞ் சொல்றானா? சரி, சும்மா சொல்றான்னு பொத்தாம் பொதுவா சொன்னா எப்படி? குறிப்பிட்டுச் சொன்னாத்தான ஆகும்? அதெப்படி, நறுக்குத் தெறிச்சா மாதிரி அவன் என்ன சொன்னான்னு எப்படிச் சொல்றது?”

“அப்பிச்சி, வாங்க! அவஞ்சொல்றானா? எவன் அவன்?? நான் அப்படி எதுவும் சொல்லவே இல்லையே? சுத்தி வளைச்சு நீங்க எங்க வர்றீங்கன்னு புரியுது. எனக்கு இப்ப அதை எல்லாம் யோசிக்க நேரம் இல்லை. நித்திரையில ஆழ்ந்து போயி இருக்கேன். சொல்ல வந்ததைச் சொல்லிட்டுக் கிளம்புறீங்களா சித்த?”

“சொல்லுறதுல பலவகை இருக்குடா. அதைக் கணக்காப் பாவிச்சாத்தான சொல்ல வந்ததை சரியாச் சொல்ல முடியும். சரி, அதென்னன்னு சொல்லுறேங் கேட்டுக்க!

விளம்புதல்: அறிவிப்பு போல ஒன்னைச் சொல்றது

விளத்துதல்: விளக்கமா, விவரமாச் சொல்றது

விள்ளுதல்: வெளிப்படையா, ஒளிமறைவில்லாம சொல்றது

விதத்தல்: சிறப்புக் கூட்டிச் சொல்றது

வலத்தல்: மனம் நோகுற மாதிரி, வலிக்கச் சொல்றது

மொழிதல்: வளமான சொற்கள் கொண்டு சொல்றது. கவிதைன்னு சொல்லிக்கிறீங்களே இப்பெல்லாம் நீங்க?

மிழற்றுதல்: குழந்தைகள் மாதிரி மழலையோட இனிக்க இனிக்கச் சொல்றது

பொழிதல்: இடைவிடாமச் சொல்றது.

பேசுதல்: இரண்டு பேர் மாறி மாறிச் சொல்லிக்கிறது

புலம்புதல்: தனக்குத் தானே சொல்றது

புகலுதல்: விருப்பத்தோட சொல்றது

புகழ்தல்: ஆகோ ஓகோன்னு மிகைப்படுத்திச் சொல்றது

பனுவுதல்: பாட்டுல புகழ்ந்து சொல்றது

பறைதல்: மறை ஒன்னை வெளிப்படுத்திச் சொல்றது

பகர்தல்: ஒன்னை ஒடச்சி சொல்றது

நுவலுதல்: நுண்ணிய ஒன்னைச் சொல்றது

நுதலுதல்: ஒன்னைச் சொல்லி, அதுல இருந்து சொல்றது

நவில்தல்: நாவால ஒழுகும்படியா சொல்றது

செப்புதல்: வினாவுக்கு விடை சொல்றது

சாற்றுதல்: ஒரே நேரத்துல பலர் அறியச் சொல்றது

கூறுதல்: கூறுபடுத்திச் சொல்றது, சூத்திரம் சூத்திரமா...

குழறுதல்: நாவு தளர்ந்து சொல்றது

குயிலுதல்: குடும்பக் கதை சொல்றது

கிளத்தல்: கடிந்து, கடுமையாச் சொல்றது

கரைதல்: குரலெழுப்பிச் சொல்றது

கத்துதல்: உரத்துச் சொல்லுதல்

ஓதுதல்: தொடர்ந்து சொல்லுறது

என்னுதல்: அடுத்தவங்க சொன்னது, செய்ததுன்னு சொல்றது

உளறுதல்: ஒன்னு கிடக்க ஒன்னைச் சொல்றது

உரைத்தல்: பொருள் விளங்கச் சொல்றது

இயம்புதல்: இசை கூட்டிச் சொல்லுறது

இசைத்தல்: ஓசை ஏற்ற இறக்கத்தோட சொல்றது

அறைதல்: வன்மையா மறுத்துச் சொல்றது

கதைதல்: கோர்வையா, அடுத்தடுத்துச் சொல்றது

அலப்புதல்: வீணா எதையுஞ் சொல்றது

ஊன்றல்: தெளிவாய்ச் சொல்றது

ஒக்கலித்தல்: அபிமானவங்களுக்குள்ள ஒருத்தர்க்கு ஒருத்தர் சொல்றது

கடுகுடுத்தல்: கோபமாச் சொல்றது

கம்பீரித்தல்: எடுப்பான குரல்ல சொல்றது

சடாய்த்தல்: பெருமிதமாச் சொல்றது

சித்தரித்தல்: அலங்காரமாச் சொல்லுறது

சிலேடித்தல்: இரு பொருள்ள சொல்றது, சாடை போடுறது

நருநாட்டியம்: குத்திக் காட்டிச் சொல்றது

நழுநழுத்தல்: பிடி கொடுக்காமச் சொல்றது

நிகண்டுதல்: எல்லாந் தெரிஞ்ச மாதிரி சொல்றது

மிண்டுதல்: திமிர்த்தனமாச் சொல்றது

நப்பிளித்தல்: இளிச்சு இளிச்சு சொல்றது

இதெல்லாம் ஒருத்தர், இன்னொருத்தர்கிட்ட சொல்ற விதம். இதுவே, ஒன்னுக்கு மேற்பட்டவங்க மாறி மாறிச் சொல்லிகிட்டா, அது பேசுறதுன்னு ஆயிடும். அதுல நிறைய விதம் இருக்கு. சொல்லுட்டுமாடா பேராண்டி?”

“அய்யோ அப்பிச்சி, சித்த நீங்க கிளம்புங்க. நீங்க சொல்றதைப்பத்தி சொன்னது போதும். ஆளைவிடுங்க இப்ப!”

"சரிடா பேராண்டி! இன்னைக்கு இது போதும் அப்ப. நீ தூங்கு, நான் வாறேன்!"

இன்னைக்கு இதாங்க சொன்னாரு! அடுத்த தடவை வரும் போது இனி என்ன சொல்லப் போறாரோ? வந்து, மனுசன் கேள்வி வேற கேப்பாரு. சும்மா, சொல்லிட்டுப் போகலாமில்ல?? எதுக்கும், மறுபடியும் வருவாருன்னு நம்புவோம்.


(......கனவுல இன்னும் வருவார்......)

10/27/2009

ஒடுவங்கந் தலையக் கண்டா ஓடிப்போ!

ஏங்க, புனைவும் தனையுமாவே இருக்க முடியுமாங்க ஒருத்தன்? பல நூல்களை வாசிக்கத்தான் வேணும். அப்பத்தானே வந்த வழி தெரியும்?? படிக்கிறோம். படிச்சதுல பிடிச்சது எதுவோ அதுல, தனிப்பட்ட அனுபவத்தையும் கலக்குறோம்; அதை மத்தவங்க பார்வைக்கும் வைக்குறோம்! அதுல என்ன தப்பிதம் இருக்க முடியும்? என்ன, ஒன்னும் புரியலையா? அப்ப சரி, வாங்க மேல படிக்கலாம்!

ஒரு நாள், வெங்கடேசன் எங்க நிறுவனத்துக்கு வந்திருந்தார். அவர் பெரிய நிர்வாகி! கோயமுத்தூர் நிறுவனம் ஒன்னுல தொழில்நுட்ப இயக்குனர் அவரு. அதே நிறுவனத்துல, அன்னூர்ப் புளியம்பட்டியச் சேர்ந்த பாலகிருஷ்ணனும் வேலை செய்துட்டு இருந்தாரு. அவர், தரக்கட்டுப்பாட்டு அதிகாரி. அதே நிறுவனத்துல, இழை உருளிப்(flutted rollers) பிரிவுக்கு முதன்மைப் பொறியாளன்(Foreman) நானு.

அந்த இயக்குனர் வெங்கடேசன் இருக்காரே, பெரிய கெடுபிடியான ஆளும் கூட. அதட்டுவாரு, முறைப்பாரு, அதுன்னுவாரு, இதுன்னுவாரு, எல்லாரும் அவரைக் கண்டா அப்படிப் பம்பு பம்புன்னு பம்புவாங்க. அந்த காலகட்டத்துல, நாந்தான் அந்த நிறுவனத்துலயே வயசு குறைஞ்ச, மீசை கூட முளைக்காத ஆள். என்னைக் குழந்தைன்னுதான் கூப்பிடுவாங்க, இப்பவுங்கூட. அதே ஒரு பேருன்னும் ஆயிப்போச்சு, கூட வேலை செய்த சக அலுவலர்கள் மத்தியில.

இப்படிதாங்க ஒரு நாள் வெங்கடேசன் வேக வேகமா வந்து, எனக்குப் பாத்தியப்பட்ட வேலையிடத்துல நின்னுட்டு, மறுகோடியில இருக்குற என்னை ஆட்காட்டி விரலால் பின்னாடிச் சுண்டிச் சுண்டிக் கூப்ட்டாரு. அதைப் பார்த்த நான், அன்ன நடை போட்டுப் போனதைப் பார்த்ததும் மனுசன் மகாக் கோவப்பட்டு, You, Young Old Man, Can't you come bit faster?ன்னு, எனக்குக் கீழ வேலை செய்யுறவங்க முன்னாடியே கத்தி ஆர்ப்பாட்டம் செய்தாரு.

அப்புறம், எதோ அவருங் கேட்க நானுஞ் சொல்ல, மனுசன் கத்திட்டு அந்தப் பக்கமாப் போயிட்டாரு. ஆனாப் பாவம், அந்தப் பக்கமா, கதிர்கள்(Spindles) பிரிவுல நம்ம ஒடுவங்க நாட்டு அண்ணன், அதாங்க அன்னூர்ப் புளியம்பட்டிக்காரரு இருக்குறது தெரியலை அவருக்கு!

அவர் பலே கில்லாடிங்க! இவர் வர்றது தெரிஞ்சதும், எங்கயோ இருந்த அவர் இவரைத் தேடி ஓடி வந்தாரு. வந்ததும் வராததுமா, ’வெங்கடேசன், நானே உங்ககிட்ட வரலாம்ன்னு இருந்தேன். போனதடவை நீங்க உலா வரும்போது சொன்னேனே, அந்தக் காரியம் இன்னும் ஆகலை, அதான் என்ன ஆச்சுன்னு கேட்கலாமுன்னு இருந்தேன்!’ அப்படீன்னாரு.

நாங்களா, அதைக் கேட்டு சிரிக்கவும் முடியாம, அடக்கி வைக்கவும் முடியாமத் திணறிப் போயிட்டோம். இயக்குனர் பெருமகனாருக்கு வந்தது பாருங்க கோபம், ’என்ன நீ? பேர் சொல்லிக் கூப்புடுறே?? அதுவும் இத்தனை பேர் சுத்தியும் நின்னு வேலை பார்த்துட்டு இருக்காங்க?!’ அப்படீன்னு ஆய் ஊய்ன்னு குரல் கொடுத்தாரு!

நம்ம ஒடுவங்க நாட்டுக்காரரு கொஞ்சங்கூடப் பதற்றப்படாம, ‘உங்க பேரு வெங்கடேசன்தான? மாத்திட்டீங்களா, யாருஞ் சொல்லவே இல்லியே??’ங்கவும், சுத்தி இருக்குறவங்க எல்லாரும், அவங்க அவங்க வேலை செய்யுற இயந்திரங்களுக்குப் பின்னாடி போயிக் குலுங்கக் குலுங்கச் சிரிச்சாங்க.

இந்த நிகழ்வு நடந்த அன்னைக்குதாங்க, வேலுச்சாமிங்ற நண்பர் சொன்னாரு, ஒடுவங்க நாட்டுக்காரன் தலையக் கண்டா ஓடுவாங்கன்னு சும்மாவா சொல்றாங்க அப்படின்னு. பொதுவாவே, ஒடுவங்க நாட்டுக்காரங்க யாரையும் வாகாப் பேசி விழுத்திடுவாங்களாம்; அதனால, தலை தப்பினது தம்பிரான் புண்ணியமுன்னு ஓடுவாங்களாம் மத்தவங்க!


சீருலவி டுந்தடப் பள்ளிகூ டற்கரை திருக்கணாம்
பேட்டையுடனே
திகழ்சத்தி மங்கையவக் கோட்டை கலையனூர்
திறமைமிகு சிறுமுகைநிதங்
காருலவி வருமிரு காலூர்கா ராப்பாடி கருத்துறும
திப்பானூருங்
கனிவுமிகு வானிபுத் தூரெழில்விண் ணப்பள்ளி
கனமா மிரும்பரையுடன்
ஏருலவு மாலத்தூர் கெம்மநாய்க் கன்பட்டி
யிணைமேவு சதுமுகையதும்
இறையவர்க் குபதேச மோதுமலை யாணடவ
னின்பஞ் சிறப்பதான
பாருலகி லுத்தண்ட தவளமலை யான்கிருபை பாலிக்க
நின்றுவளரும்
பரிவுமிகு மொடுவங்க நாட்டிலுள வனைவரும்
பலகால மிக வாழ்கவே!

தடப்பள்ளி, கூடற்கரை, திருக்கணாம்பேட்டை, சத்தியமங்கலம், அரவக்கோட்டை, கலையனூர், சிறுமுகை, இருகாலூர், காராப்பாடி, மதிப்பானூர், வானிபுத்தூர், விண்ணப் பள்ளி, இருப்புரை, ஆலத்தூர், கெம்மாநாய்க்கன்பட்டி, சதுமுகைன்னு பதினாறு ஊர்கள் கொண்டு கொங்குநாட்டில் இடம்பெற்றது ஒடுவங்கம்.

இந்த ஒடுவங்கத்துல தணாக்கன் கோட்டையும், படி நாடுங்குற கொள்ளேகாலமும் இணை. சகபதிவர், அண்ணல் மஞ்சூர் ராசா அவர்களுக்கான சிறப்பு இடுகைங்க இது!

10/26/2009

ஆறைநாட்டானின் அலம்பல்கள் - 11

ஒரு வருசம் இருக்கும்னு நினைக்கிறேன்; ஒருநாள் காலையில, நான் வெளில ஓட்டப்பயிற்சிய முடிச்சிட்டு களைப்போட வீட்டுக்கு வரவும், என்னோட அன்பு மகள் மட்டும் வெளில என்னை எதிர்நோக்கிக் காத்துகிட்டு நின்னபடி இருந்தா. ’என்றா தங்கம் நீ மட்டும் வெளில நிக்குறே? அம்மா எங்கடா??’ அப்படீன்னேன்.

குழந்தை, அழகாத் தெளிவா பதில் சொல்லுச்சு, ‘ம்ம்.. ம்ம்.. அம்மா, பாத்திரம் எல்லாம் குளிக்க வெச்சுட்டு இருக்கு!’ அப்படின்னு.

எனக்கா, களைப்பு எல்லாம் நீங்கி, ஒரே சிரிப்பு சிரிப்பா வந்துச்சு. என்னங்கடா இது, அமெரிக்காவுல பாத்திரத்தை எல்லாம் குளிக்க வெக்க ஆரம்புச்சுட்டாங்களே அப்படின்னுதான். அது போலத்தாங்க, சமீபத்துல காக்கா கத்துதுன்னு எதோ படிச்சேன். கழுதைதான் கத்தும், காக்கா கத்துமா? அது கரையும்! இதை மனசுல அசை போட்டுட்டே இருந்தப்பதான், எங்க அண்ணனோட மகள் நேற்றைக்கு மேலும் ஒரு சுவாரசியத்தைக் கொடுத்தா, பிள்ளை.

ஊருக்கு பேசிட்டு இருக்கும் போது, என்னடா வீட்ல சாப்பாடு இன்னைக்குன்னு கேட்கவும், பிள்ளை சொல்லுறா, ’சித்தப்பா, அம்மா இன்னைக்கு வெங்காய இலைப் பொரியல் போட்டுப் பிசைஞ்சு ஊட்டி விட்டாங்க’ அப்படின்னு. என்னங்கடா இது, வெங்காயத்துக்கு எல்லாம் இப்ப இலை முளைக்க ஆரம்பிச்சுடுச்சான்னு அண்ணிய ஒரு கலாய் கலாய்ச்சம்ல? இஃகிஃகி!

நான் பலமுறை சொன்னதுதான், தமிழ்ல ஒவ்வொன்னையும் அதனோட தன்மைக்கு ஏத்தமாதிரி பெரியவங்க தனிச்சுக் காமிக்கும்படியா சொற்களை உண்டு செய்து வெச்சு இருக்காங்க. அதை நாம சரியாப் பாவிச்சா, குழப்பம் (Ambiguity) வராது.

ஆமாங்க, வெங்காயத்தாள், இராகித்தாள், வரகுத்தாள், சாமைத்தாள் அப்படின்னு, நீட்ட வாக்குல முளை விடுறது எல்லாத்தையுஞ் சொல்லுறது தாள். அகத்தி, பசலை, முருங்கை இந்த மாதிரியான தாவரங்கள்ல, உணவுக்கு நேரிடையாப் பாவிக்கக் கூடியது கீரை. கீரை ரெண்டு இணுக்கு முறிச்சுட்டு வாடா கண்ணு அப்படின்னுதான் கிராமத்துல சொல்லுறது. அதுக்காக கறிவேப்பிலைய ஏன் கீரைன்னு சொல்றது இல்லைன்னு மொடக்கடி பேசப்படாது பாருங்க.

சின்ன அளவுல நீட்ட நீட்டமா வர்றது எல்லாம் புல்; அறுகம்புல், கோரைப்புல் இதெல்லாம். அதுவே தரையில படர்ந்து போச்சுன்னா, அதுக்குப் பேரு பூண்டு. புல், பூண்டு அப்படீன்னு சொல்லக் கேள்விப்பட்டு இருப்பீங்க இல்லையா? பரந்து, விரிஞ்சு இருந்தா அது மடல், சப்பாத்திக்கள்ளி மடல்! கரும்பு, நாணல் இதுல வர்றதைச் சொல்லுறது சோகை, நல்ல தமிழ்ல சொல்றது தோகை. அதே போல, குறுகலா நீட்ட நீட்டமா வர்றது ஓலை, தென்னை ஓலை, கமுகு ஓலை இப்படி!

உசிலை, சாணிப்பூட்டான், இந்த மாதிரி பத்தையில பச்சைப் பசேல்னு இருக்குறதெல்லாம் தழை. டேய், அப்ப எதைத்தான் இலைன்னு சொல்லுறதுன்னு எகுர ஆரம்பிக்கிறீங்க பார்த்தீங்களா? பொறுமை சாமி, பொறுமை! எதுவும், செடியானாலும் சரி, கொடியானாலும் சரி, சிறு, குறு, பெரு மரமானாலும் சரி, தன்னிச்சையா எடுப்பா விரியுறது இலை, வேப்பிலை, அரச இலை, மாவிலை இப்படி!

இவன் என்ன, இன்னைக்கு இலைய வெச்சிக் கச்சேரி நடத்திட்டு இருக்கான்னுதானே யோசிக்குறீங்க? விசயம் இருக்குது இராசா, விசயம் இருக்குது. நாம சின்ன வயசுல, வாரக்க நாட்டுல வாழ்ந்த கதையப் படிச்சீங்க இல்லையா? அந்த காலகட்டத்துல வீட்ல சொல்வாங்க, டேய், போடாப் போயி பெதப்பம்பட்டியில நல்ல வெத்தலையாப் பாத்து நாலு கவுளி வாங்கியா போன்னு சொல்லிச் சொல்வாங்க.

நானும் உடுமலைப் பேட்டை போற வண்டியப் புடிச்சு பெதப்பம்பட்டி நாலுமுக்குச் சந்தியில இறங்கி, அங்க வெத்தலைக்கடை வெச்சிருந்த இராமலிங்கண்ணங் கடைக்குப் போவேன்.

“யாரு, சலவநாய்க்கன்பட்டிப் பொன்னானா, வாப்பா, வா! கொழுமம் வெத்தலை, கொமரலிங்கம் வெத்தலை, தாராபுரத்துக் கற்பூர வெத்தலை எல்லாம் இருக்குது. உங்க ஊட்டுல என்ன வாங்கியாறச் சொன்னாங்க?”

”தாராவரத்து வெத்தலைதேன் வாங்கியாறச் சொன்னாங்ண்ணா!”

“அப்படியா, எத்தனை கவுளி வேணும்?”

“அம்மா, அரை முட்டியாவே வாங்கியாறச் சொல்லுச்சுங்!”

”சரி அப்ப, இந்தா புடி அரை முட்டி!”

அப்படின்னு, வாழை மரத்துச் சருகுல சுத்திக் குடுப்பாரு அந்த அண்ணன். அப்படி தாராவரம்ன்னா வெத்தலையும் அமராவதி ஆறும் கரும்பும்தாங்க ஞாவகத்துக்கு வருது. கூடவே, நாம கச்சை கட்டுனதுமு! இஃகிஃகி,

தாராபுரம் V.P.பழனியம்மாள், R.அய்யாசாமி, A.பெரியசாமின்னு நிறைய... ஆமாங்க, நாமதான் பிஞ்சுலயே பழுத்தமல்ல? போடுங்கம்மா ஓட்டு, ரெட்டை எலையப் பாத்து... அடச்சீ, சும்மா நிறுத்து! இஃகிஃகி!! அப்புறம் முக்கியமான் விசியம், நம்ம நடிகர் நாகேசுமு!!

சரி வாங்க, நம்ம சகபதிவர்கள் அப்பன், ராஜ நடராஜன் அவர்களுக்கான சிறப்பு இடுகையா, தாராபுரமுமு அதைச் சுத்தீலுமு இருக்குற ஊர்களை உள்ளடக்கின, கொங்கு நாட்டோட உபநாடுகளான மணநாடு, தலையநாடு பாக்குலாம் இன்னைக்கு!


தென்னிலை கூடலூர் சேர்கோடந் தூர்நடந்தை
சின்னத்தா ராபுரமுஞ் சேர்ந்துமிக உன்னிதங்கள்
சூழ்ராச மாபுரமும் சூடா மணியிலவை
வாழ்மணலூர் நாடாய் வழுத்து!


தென்னிலை, கூடலூர், கோடந்தூர், நடந்தை, சீர்மிகுதாராபுரம், இராசபுரம், சூடாமணி, இலவனூர் என எட்டு பேரூர்கள் கொண்டது மணநாடு!

தங்குபுங்கம் பாடியர வக்குறிச்சி
தகுசேந்த மங்கலமு ந்ன்மு டக்கூர்
பொங்குசாந் தப்பாடி யிணுங்கனூரும்
புகழ்வேளாண் பூண்டியெழிற் றலையூ ரோங்கும்
மங்கைகன்னி வாடிகிழான் கொண்டல் சின்ன
மருதீடக் கலப்பாடி யறிஞ ரெல்லாம்
புங்கமிகு குமரபா ளையத்தி னோடு
போந்தபதின் மூன்றூருந் தலைய நாடே!

புங்கம்பாடி, அரவக்குறிச்சி, சேந்தமங்கலம், முடக்கூர், சாந்தப்பாடி, இணுங்கனூர், வேளாண்பூண்டி, தலையூர், கன்னிவாடி, கிழான்கொண்டல், சின்னமருதூர், இடக்கலப்பாடி மற்றுங் குமாரபாளையம் என ப்தின்மூன்று ஊர்கள் கொண்டது தலையநாடு!

சரி, இன்னைக்கு மணநாடு, தலையநாடு படிச்சாச்சில்ல? போங்க, போயி அம்மணிக்குக் கூடமாட இருந்து ஏனவானம், பண்ட பாத்திரம் எல்லாத்தையும் குளிக்க வையுங்க போங்க!

10/25/2009

எத்தனை எத்தனை உயிர்களடா?

எத்தனை எத்தனை உயிர்களடா?
அரும்பும் மொட்டுகளாய்
பிஞ்சுக் குழந்தைகளாய்
தவழும் மழலைகளாய்
எத்தனை எத்தனை உயிர்களடா??

வாழப்பிறந்த மாந்தர் வாழ்ந்திடல் ஆகாதோ
இறைவா எமக்கு ஏனிந்தத் துயரடா?
அமைதியும் அன்பும் துளிர்த்திடத்
துணிந்திட மாட்டாயோ??
தாயகம் காப்பது குற்றமெனச் சொல்வாயோ?

எத்தனை எத்தனை உயிர்களடா?
அரும்பும் மொட்டுகளாய்
பிஞ்சுக் குழந்தைகளாய்
தவழும் மழலைகளாய்
எத்தனை எத்தனை உயிர்களடா??

புவியே எம்புன்னகைக்கு வழிவகை
வகுத்திட மாட்டாயோ?
அமைதியைத் தந்திட குரல்
கொடுத்திட மாட்டீரோ??

அம்மையும் அப்பனும் முள்வேலியிலடா
உம்பிறப்பு அதை ஆமோதித்திடத்தானா
புவியில் வாழும் மானிட குலத்தோனே
தட்டிக் கேட்டிட மாட்டீரோ மாந்தர்காள்??

எத்தனை எத்தனை உயிர்களடா?
அரும்பும் மொட்டுகளாய்
பிஞ்சுக் குழந்தைகளாய்
தவழும் மழலைகளாய்
எத்தனை எத்தனை உயிர்களடா??





This song is written &sung by Mathurini Yogendran, a girl born and brought up in UK.

10/24/2009

ஆறைநாட்டானின் அலம்பல்கள் - 10

எமது இளம்பிராயத்தின் போது, சேலம் என்றாலே நினைவுக்கு வருவது இரு பற்றியங்கள். ஒன்று சேலத்து மாம்பழம், அடுத்தது பருப்புச் சந்தை. முதலாவதுக்கான காரணமும் இரண்டாவதுக்கான காரணமும் ஒன்றை ஒன்று ஒட்டியதே!

ஆம், எனது தகப்பனார் ஒரு பெருவணிகர் என்ற வகையிலே, திருப்பூர்ச் சந்தையில் பருத்தி, பொள்ளாச்சி சந்தையில் சோளம் மற்றும் இராகி, திருவண்ணாமலை மற்றும் சென்னையில் பல்லாரி வெங்காயம், சேலத்தில் பயித்தை, துவரை மற்றும் கொள்ளு, உடுமலையில் கொத்துமல்லி மற்றும் கொண்டக்கடலை முதலானவற்றை கொள்முதல் அல்லது விற்பனை செய்வது வழக்கம்.

அப்படியாக சேலத்தை நினைக்கிற போது, வியாபார நிமித்தம் அங்கு செல்கிற போதெல்லாம் பருப்பு வகை தானியங்களோடும், சுவையான மாம்பழக் கூடைகளோடும் தந்தையார் அவர்கள் வீடு திரும்புகிற காட்சிகள்தான் மனதில் எழும். பின்னாளில் அந்தக் காட்சிகளோடு மேலதிகமாக இன்னொரு காட்சியும் இணைந்து கொண்டது காலத்தின் கோலம்.

எமது குடும்ப நண்பரொருவரது அழைப்பின் பேரில், அவருடைய மைத்துனரை சபரிமலைக்கு அனுப்பி வைக்கும் வைபவத்திற்காக சேலம், கோரிமேடு பகுதியில் இருக்கும் ஒரு தோட்டத்துச் சாளை ஒன்றுக்குச் சென்றிருந்தேன். கொண்டலாம்பட்டி வழியாக ஏற்காடு சாலையில் சென்று, கோரிமேடு பேருந்து நிலையத்தில் இறங்கி இடது பக்கமாக ஒரு மண்சாலையின் ஊடாக இரண்டு அல்லது மூன்று கல் தொலைவு நடந்து செல்ல வேண்டும் அவரது தோட்டத்திற்கு.

அந்த சாலையின் இருமருங்கிலும் ஏழைகளின் குடிசைகள் ஆக்கிரமித்து இருக்கும். அந்த குடிசைகளை ஒட்டி, விளைநிலங்கள் பச்சைப் பசேல் எனக் காண்பதற்கு பரவசத்தை ஏற்படுத்தக் கூடிய அளவில் இருக்கும்; ஆங்காங்கே வரிசை வரிசையாகத் தென்னை மரங்களும்! எனது நண்பரின் தோட்டமானது, மண்சாலையின் இடது புறத்தில் இருந்தது. வெகு அழகான தோட்டமது.

தோட்டத்தில் ஓலைக் கூரையுடன் ஒரு சாளையும், அதற்குப் பக்கவாட்டில் ஓடு வேயப்பட்ட சாளை ஒன்றும் இருந்தது. ஓடு வேயப்பட்ட சாளையில்தான் நான் தங்கி இருந்தேன். அந்தச் சாளையின் ஒருபக்கச் சாளரத்தைத் திறந்து பார்த்தால், சாளையின் பின்புறம் நீர் ததும்பும் அந்த கிணற்றைக் காணலாம். மறுபக்கத்தில் இருக்கும் சாளரத்தைத் திறந்து பார்க்கின், கோரிமேட்டில் இருந்து அந்த வழியாகச் செல்லும் மண்பாதையின் ஓரத்தில் இருக்கும் குடிசைகளில் ஒன்றினைக் காணலாம்.

வாசலுக்கு வந்து மேற்கே நோக்கினால் ஒரு பெரிய கரடும், அதை ஒட்டிய சேர்வராயன் மலைத்தொடரும் கண் கொள்ளாக் காட்சியாக காட்சியளிக்கும். அந்தக் கரட்டின் மறுபக்கம்தான் தொப்பூர் மேடு எனச் சொல்லக் கேள்விப் பட்டதாக ஒரு நினைவு.

சபரிமலைக்கு வழி அனுப்ப வந்தவன், அவர்களது அன்பு வேண்டுகோளுக்கு இணங்க, நண்பர் தங்கவேலு மலையில் இருந்து திரும்பும் வரையிலும் தங்கி இருந்துவிட்டுப் போகச் செவிமடுத்து, ஒரு வாரகாலம் அந்தத் தோட்டத்திலேயே நாட்களை இனிமையாகக் கழித்தவன் ஆனேன்.

அந்தக் கரட்டுக்குச் சென்று, அங்கு தினந்தோறும் நடக்கும் சமூக விரோத செயல்களை எல்லாம் கண்டதும், தென்னைமரக் கள்ளை மாந்தி மயங்கிச் சொக்கியதும், கிணற்றில் நீச்சல் அடித்து மகிழ்ந்ததும், விருந்தோம்பலில் திளைத்ததுமாய் நாட்கள் நகர்ந்ததே தெரியவில்லை.

அப்படியிருக்க, அந்த ஒரு வாரகாலத்தின் ஒரு நாள், மாலை ஒரு ஆறு மணி இருக்கும், மஞ்சள் வெயிலில் கைரேகை தெரிந்தும் தெரியாத வேளை அது, வலதுபக்க சுவர்ச் சாளரத்தைத் திறக்கிறேன்; அந்த குடிசையைச் சேர்ந்த அந்த ஏழைப் பெண்மணி வாசலில் இருந்த முக்கால்ப்பாகம் தண்ணீர் நிறைந்த ஒரு கொள்கலனை அந்தத் தட்டையான கல் இருக்கும் இடத்திற்கு அருகண்மையில் வைத்து விட்டு, அவசர அவசரமாக குடிசையில் இருந்து வெளியேறிச் செல்கிறார்.

வெளியேறிச் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் அங்கே தெருவில் விளையாடிக் கொண்டிருந்த தன்மகனை, கையைப் பிடித்து வாசலுக்குள் இழுத்து வருகிறார். வந்த வேகத்தில் அவனது துகில் உரியப்பட்டு, பிறந்த மேனியாய் அச்சிறுவனானவன் அந்தக் கல்லின் மீது கோவணம் இல்லாத தண்டாயுதபாணியைப் போல் நிற்கிறான்.

சரியாக ஒரே போசித் தண்ணீர் அவனுடைய முகம் தழுவி, கையிரண்டும் தழுவி, மார்புதழுவி, வயிறு தழுவி, பின் இடுப்பினூடாக கால்களைத் தழுவி, பாதங்கள் நனைந்து வழிகிறது. அப்படியொரு நேர்த்தியாக, அந்த ஒரு போசித் தண்ணீர் கையாளப்பட்டு இருந்தது என்றே சொல்ல வேண்டும்.

அடுத்த வினாடியே, பழுப்பு வண்ண 501 சவக்காரத்துண்டு ஒன்று அவனது மேனியைத் தொட்டுத் தொட்டு வழுக்கிச் செல்கிறது. அந்தத் தோய்தலில் அவனது தேகம் கூசி அவனுள் ஒரு சிருங்காரம் மேலிடுகிறது. தாயானவளோ, இங்கனச் சும்மா கெட எனச் சொல்லி சுறுசுறுப்பாய் தன் காரியத்தில் ஆழ்ந்து போகிறாள்.

சவக்காரத் துண்டின் வேலை முடிந்ததும், மேலுமொரு போசித் தண்ணீர் சவக்காரத்தின் தழுவலை பிரித்தெடுத்துச் செல்கிறது. தேகத்தில் சவக்காரம் படிந்ததை, முற்றிலுமாக இல்லை என்று ஆக்கப்பட்டதை உறுதியுடன் தெரிந்தவளாய், கொடியில் தொங்கிக் கொண்டிருந்த அந்தத் துணியை எடுத்து அவனை அதில் தோய்த்து விடுகிறாள் வேலையின் சிரத்தையின் நடுவேயும் அன்பான அந்தத் தாய்.

பெற்ற மகனை வடிவாய்க் குளிக்க வைத்துக் குடிசையுனுள் அனுப்பித் தானும் தனது முகம், கை கால்களைக் கழுவிய பின் அந்தச் சிறுபாத்திரத்தில் இருந்த எஞ்சிய நீரை, மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றி உள்ளே எடுத்துச் சென்ற அத்தருணம், என்னுள் வியப்புமிகு அதிர்வலைகள் எங்கும் படர்ந்தது. அதன் சுவடுகளே இன்று எம்மை இதை எழுதவும் வைக்கிறது.

சிறுபாத்திரத்துள் இருந்த நீரில் மகனைக் குளிக்க வைத்து, தானும் கைகால் முகம் அலம்பி, அதில் மீதமும் வாய்க்கப் பெற்றாளே அவள்? இது எப்படி சாத்தியமாயிற்று?? எனக்கு அன்றும் புரியவில்லை; இன்றும் புரியவில்லை! சிக்கனம், எளிமை என்பதை, முதன்முதலாய்க் கண்டவன் ஆனேன் அத்தருணத்தில். ஏழைகள் என்ற ஒதுக்குதலில், கண்டு கொள்ளப்படாத மகாத்மாக்கள் எத்துனை எத்துனை பேரோ இப்புவியில்?

நண்பர் தங்கவேல் அவர்கள் மலையில் இருந்து திரும்பியதும், ஒரு குண்டாத் தண்ணியில் மகனையும் குளிக்க வெச்சுத் தானும் கைகால் கழுவிகிட்டாளே அந்தப் பொம்பளை?! என்று சிலாகித்துப் பேசியவுடன், அவர் கூறியதைக் கேள்விப்பட்டு எம் நெஞ்சு பதை பதைத்துப் போனது.


ஆம், அவள் பெற்ற பிள்ளையைக் காப்பாற்றுபவளாய், கணவனால் கைவிடப்பட்டவளாய், தன்னை வட்டமிடும் கழுகுகளினின்றும் தற்காத்துக் கொள்பவளாய் அனுதினமும் போராட்டத்துள் வாழ்க்கை நடத்துபவள் என்று அவர் சொன்னதும், அதிர்வின் எல்லைக்கே சென்றது எம்மனம்.

அதன்பின்னர், நான் கோரிமேட்டிலிருந்து திரும்பும் வரையிலும் அந்தச் சாளரத்தை மறந்தும் திறக்கவில்லை. அந்தத் தோட்டத்தில் களிப்பாய் இருந்தவனுக்கு, அதற்கு மேலும் அங்கு இருக்கப் பிடிக்கவில்லை என்பதே உண்மை. அந்தப் பிள்ளையும் தாயும் இப்போது எப்படி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால், சேலம் என்றால் இந்த ஆத்மா அடங்கும் வரையிலும் இனி எமக்கு அவர்கள்தான்!

அந்த நினைவுகளினூடே, கொங்குநாட்டின் உள்ளடக்கமான இராசிபுர நட்டினுடைய உபநாடான சேலம் நாட்டைக் காண்போம் வாருங்கள் மக்களே!



வளமிகுந்திடு சேர ராயன்மலை நின்றுவரு
மணிமுத்து நதிசெழிக்கும்
வண்மைசேர் சேலம்வெண் ணந்தூ ரமாப்பேட்டை
வளர்செவ்வா ய்ப்பேட்டை மல்லூர்
தளமிகுங் குமரநக ரலைவாய் நடுப்பெட்டி செளதாரபுர மினக்கல்
தணிவில்மிசி நாம்பட்டி குமரசா மிப்பட்டி
தாங்குசெம் மாண்டபட்டி
உளமகிழ நிமிரிளம் பள்ளிராக் கிப்பட்டி யொயிலான வீரபாண்டி
ஓதறிஞர் சந்ததம் வந்துதமிழ் பாடிடு முத்தமச் சோழபுரமும்
அளவில்பய நுதவியின் புறுகாரி பட்டியு மாண்மை
வீராணமுடனே
யயோத்தியணி நகரமுஞ் சேரவரு மிருபதூ ரழகான
சேலநாடே!

சேலம், வெண்ணந்தூர், அம்மாப் பேட்டை, செவ்வாய்ப் பேட்டை, மல்லூர், குமாரபாளையம், அலைவாய்ப்பேட்டை, நடுப்பட்டி, செளதாபுரம் ஓலைப்பட்டி, மின்னக்கல், மிசினாம்பட்டி, குமாரசாமிப்பட்டி, செம்மாண்டப்பட்டி, இனம்பள்ளி, ராக்கிப்பட்டி, வீரபாண்டி, உத்தமசோழபுரம், காரிப்பட்டி, வீராணம் மற்றும் அயோத்திப்பட்டணம் என இருபது நாடுகள் கொண்டதுதான் அழகான சேலம் நாடு.

இந்த இடுகையானது, சிங்கப்பூர்ப் பதிவர் அனபர் யாசவி அவர்களுக்கான சிறப்பு இடுகை!

10/22/2009

அமெரிக்காவில் இப்படியும் வில்லங்கம்!

நாம எப்பவுமே இராத்திரிச் சோறு உண்டதுக்கு அப்புறம் வலையுல மேயுறதும், இடுகை இடுறதும் ஒரு வாடிக்கை. ஆனாப் பாருங்க, நேற்றைக்கு அதுக்கு ஒலை வெச்சிட்டான் கூட வேலை பாக்குற பொட்டி தட்டி; அவம் பேரு Quint! என்னாச்சுன்னுதான கேக்குறீங்க? கதைய மேல படீங்க.

Norfork, VAல வேலை எல்லாம் முடிச்சுட்டு, Virginia Beachல இருக்கிற விடுதிக்கு வந்து, கைகால் முகமெல்லாம் கழுவி, உடுப்பு மாத்திட்டு வெளியில சாப்பிடப் போறது வழக்கம். அதே போல வந்து, மாலைக் கிரியை எல்லாம் முடிச்சுட்டு முன்னாடி முற்றத்துக்கு வந்து, சித்த நேரம் ஊர்ப்பழம பேசிட்டு வெளில கிளம்பவும், கூட இருந்த Quintக்கு அவனோட அம்மணிகிட்ட இருந்து அலைபேசில அழைப்பு.

என்னமோ பேசுறாங்க, பேசுறாங்க, பேசிட்டே இருக்காங்க. இவனுக்கா முகமெல்லாம் சாயங்கால நேரத்துக் கதிரவனாட்டம் செக்கச் செவேன்னு மாறுது. இடையில Shit, Shitனு வேற சொல்லிக்கிடுறான். ஒரு வழியாப் பேசி முடிச்சு, ஒரு நிதானத்துக்கு வரவே மணி எட்டு ஆயிப் போச்சுங்க.

என்னடா ஆச்சுன்னு கேட்கவும், வெவரத்தை சொல்ல ஆரம்பிச்சான். ஆமாங்க, அவங்க வீட்ல நடக்கக் கூடாதது நடந்து போச்சுங்க. இவந்தான், அட்லாண்டால இருந்து எங்கூடப் பொட்டி தட்டுறதுக்கு இங்க விர்ஜீனியாவுக்கு வந்துட்டானே, அங்க அவனோட அம்மணி அவுங்க ஊட்டு சொகுசுந்தை(Car) அங்க எதோ உள்ளூர் சீருந்து(train station)வளாகத்துல நிறுத்திப் போட்டு ஊர் சுத்தப் போயிருக்குறா.

அம்மணி அங்க, Dunwoodyல இருந்து கிளம்பிப் போனதுதான் தாமுசம், எவனோ ஒரு புண்ணியவான் அம்மணியோட வாகனத்தைக் கள்ளச்சாவி போட்டுக் கிளப்பி இருக்குறான். அவனுக்கு எங்க போறதுன்னு அவனுக்குள்ளவே ஒரு கேள்வி? பாத்தான், அங்கயே, (GPS) இடநியசு சாதனம் இஃகிஃகீன்னு பல்லிளிச்சுட்டு இருக்குறதைப் பாக்கவும் அந்தப் புண்ணியவானுக்கு ஒரே எல்லையில்லா மகிழ்ச்சி.

நாமதான் அதிபுத்திசாலிகளாச்சே, நம்ம வீடு எங்க இருக்கு, நம்ம ஆத்தா வீடு எங்க இருக்கு, இப்படி நாம அடிக்கடி போயி வாற இடமெல்லாம் அதுல பதிஞ்சி வெச்சிருக்கமே? புண்ணியவான், நாம மொதல்ல அம்மணி வீட்டுக்கே போவோம்ன்னு, அந்தத் தொடுதிரையில இருந்த வீடுங்ற பதிப்பை அமுக்கவும், வாகனம் எந்த செரமும் இல்லாம ஊட்டுக்கே கொண்டாந்து உட்டு இருக்கு. இனி ஊட்டுக்குள்ள போகணுமே? சுத்தியும் முத்தியும் பார்த்தான். அப்புறம்?

ஆமாங்க, அதுவும் அங்க, காருக்குள்ளவே இருந்துச்சு. எது? வாகன நிறுத்து சாலைக்கான தொடுப்பில்லா சாவி(Garage door remote key). அப்புறம் என்ன, எந்த செரமும் இல்லாமப் பொன்னான் ஊட்டுக்குள்ள போயி, இருந்ததை எல்லாம் சுருட்டிட்டு, வாகனத்தை மறுபடியும் கிளப்பிட்டு எங்க போனான்னே தெரியலையாம். அவ்வ்வ்வ்வ்வ்........ அம்மணி மட்டும் தெருவுல!

இந்தக் கூத்துகளுக்குத்தான் நான் எந்த அதிநவீன சாதனமும் அவ்வளவு சீக்கிரத்துல வாங்குறதே கிடையாது. அப்படியே வாங்கினாலும், அம்மணிக்குத் தாறது இல்லவே இல்லை, நம்ம ஊட்ல! நான் அம்மணியோட திறமையக் குறைச்சி சொல்லலை. அவங்க, குழந்தைகளை வெச்சிச் சமாளிக்கிறதே பெரும்பாடு. அந்த நேரத்துல அவங்களால, இதுகளைக் கட்டி மேய்க்க முடியாதுன்னுதான்! உபகாரம் இல்லாட்டாலும், உபத்திரம் இருக்காது பாருங்க!!

அப்புறம் என்ன? Quintகிட்ட கதையெல்லாம் கேட்ட பொறகு, அவனைக் கொண்டுப் போயி பக்கத்தூர் விமான நிலையத்துல ஏத்தி உட்டுட்டு வரவே மணி இராத்திரி பதினொன்னு! அப்புறம் வெறும் ஆப்பிள் பழத்தை மட்டும் கடிச்சித் தின்னுபோட்டு, நித்திரை கொள்ள வேண்டியதாப் போச்சுங்க நேத்து!

10/20/2009

ஆறைநாட்டானின் அலம்பல்கள் - 9

மக்களே, எதோ ஒரு ஆர்வத்துல கொங்கு நாட்டுல இருக்கிற எல்லா நாடுகளைப் பத்தியும் இருக்கிற விருத்தங்களை எழுத ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சேன், மக்கள் மின்னஞ்சல் மின்னஞ்சலா அனுப்பிகிட்டே இருக்காங்க; நல்லது; மகிழ்ச்சி! நிச்சயமா, எல்லா நாட்டையும் ஒரு கை பார்த்துட்டுதான் ஓய்வான் இந்த பழமைபேசி! இஃகிஃகி!! டிச-2ம் தேதிக்கு முன்னாடி எல்லாமும் வந்திடும்; ஆமா, அதுவரைக்கும் பொறுமையா நம்ம பக்கத்துக்கு வந்திட்டுப் போங்க மக்களே!

ஆனைமலை அப்படீன்னாலே ஒரு குதூகலம்தானே! இந்தவாட்டி ஊருக்கு வரும் போது கட்டாயம் ஆத்தாகிட்ட வந்துட்டுதான் வாறது. கோடித் தாத்தா இருக்குற வரையிலும் புரவிபாளையம் அரண்மனைக்கு போயிட்டு, அப்படியே ஒரு எட்டு ஆனை மலைக்கும் போறது உண்டு. கடைசியாப் போயிட்டு வந்து நெம்ப நாளாச்சு. சரி, நாம இன்னைக்கு ஆனைமலை நாடு பாக்குலாம் வாங்க!

ஆனைமலை காளியர சூர்மஞ்ச நாயக்கனம்பிச்சி
யின்புதூரும்
அர்த்தநா ரிப்பாளையம் பாரமடை ரெட்டி
யாரூர்கோ டங்கிபட்டி
சோனைபொழி பெரியபோ துப்பிலிய நூர்முத்தூர்
சொல்பூச்ச நாரியுடனே
தொகுதியுறு மிட்டுப்புள் ளாச்சிமா றப்பனூர்
சுகசின்ன யன்பாளையம்
ஞானமுறு தாத்தாரா வுத்தன் புதூரோடு
நற்கம்பா லப்பட்டியும்
நாவலர்கள் புகழ்கின்ற வேட்டைக்கா ரன்புதூர்
நவமாகு முடையகுளமும்
வானைநிமிர் மலையோங்கு காடருட நிறவுளர்கள்
மலைசர்களு மடைவதாக மாதங்க
வேட்டைபுரி யானைமலை
தனில்நின்று வளமாகு மிருபதூரே!

ஆனைமலை, காளியாபுரம், அரசூர், மஞ்சநாய்க்கன்பட்டி, அப்பிச்சிகவுணன் புதூர், அர்த்தநாரி பாளையம், பாரமடை, ரெட்டியாரூர், கோடங்கிபட்டி, பெரியபோது, உப்பிலியனூர், முத்தூர், பூச்சநாரி, ஆட்டுப்புள்ளாச்சி, மாறப்பக் கவுண்டன் புதூர், சின்னய்யன் பாளையம், தாதாராவுத்தன் புதூர், கம்பாலப்பட்டி, வேட்டைக்காரன் புதூர், உடையகுளம் என ஆனைமலைநாடு கொண்டது இருபது ஊர்கள்.

ஆனைமலை நாட்டைச் சொல்லிட்டு, பக்கத்துல காவடிக்கனாடு சொல்லாமப் போனா, பக்கத்து நாட்டுக்காரங்க பொக்குன்னு போயிட மாட்டாங்க? ஆமா, பொக்குன்னு போறது என்னான்னு உங்களுக்குத் தெரியுமாங்க?? அதாவது, பொக்குன்னா, உள்ளீடில்லாத நிலக்கடலை, உள்ளீடில்லாத எந்த காயும்... அதே மாதர, மனசுக்கு உள்ள மகிழ்ச்சியில்லாம வாடிருவாங்கன்னு சொல்லிச் சொல்றதுதான், பொக்குன்னு போயிடுவாங்க அப்படீன்னு.

இந்த இடுகையானது, நம்ம சலத்தூர் அன்பர் பொற்செழியன் அவர்களுக்காக! இஃகிஃகி!!


உண்மைமிகு பொள்ளாச்சி நகமஞ்சந் தராவரம்
ஊற்றுநகர் ராமபட்டணம்
ஓதுநா கூர்வடுக பாளையம் கோமங்கை
யொத்தகோ பாலபுரமும்
வண்மைமிகு மாய்ச்சிநகர் மாவலுப் பன்பட்டி
வருசலத் தூர்சிராமி
வண்ணாரின் மடகறைப் பாடிசிங் காநல்லூர்
மருவு வெள்ளாளரூரும்
பண்மைமிகு ராசக்கா பாளையம் மாய்க்கனாம்
பட்டியுட னேபுதூரும்
பருவமழை யகலாது பொழியவள மொடுவயல்கள்
பலனுதவி வினிதினோங்கு
திண்மையொடு குடிசெழித்துத் தானதருமந்
திருக்கோயிலுந் தொழில்களுஞ்
சேரச் சிறந்தழகி தேவடிக் கன்புவினை
செய்காவ டிக்கனாடே!

பொள்ளாச்சி, நகமம், சந்திராவரம், ஊற்றுக்குழி, ராமபட்டணம், நாகூர், வடுகபாளையம், கோமங்கலம், கோபாலபுரம், ஆய்ச்சிபட்டி, மாவலுப்பன் பட்டி, சலத்தூர், சிராமி, வண்ணார்மடை, கறைப்பாடி, சிங்காநல்லூர், வெள்ளாள பாளையம், இராசக்கா பாளையம், மாய்க்கனாம் பட்டி, புதூர் என காவடிக்கனாட்டில் ஆக மொத்தம் ஊர்கள் இருபது.

ஆச்சு ஆச்சுன்னு பொள்ளாச்சி போயி,
பிட்டு வாணிச்சிகிட்ட இளிச்சானாம் பல்லு!

10/19/2009

ஆறை நாட்டானின் அலம்பல்கள் - 8

இடவலம் கேட்பது, பூக்கேட்பது, திருநீறு குங்குமம் கேட்பது என்றெல்லாம் கிராமப்புறத்தில் சொல்வார்கள். அதாவது ஒரு முடிவை எடுப்பதில் மனம் சஞ்சலமாக இருக்கிற நேரத்தில், அருகிலுள்ள, அல்லது அவர்களுடைய குலதெய்வக் கோவிலுக்கு சென்று வழிபட்டு, பின் பூசாரியிடம், பூசாரி ஐயா நான் எடவலம் கேக்குலாமின்னு இருக்கேன் என்று சொல்லி இறைவனை இறைஞ்சி பிரார்த்திப்பார்கள்.

பூசாரியும் தெய்வத்திற்கு பூக்கள் சாத்தி பூசையைத் தொடர்ந்து நடத்துவார். அப்போது, இட்ட பூக்களில் எந்தப் பக்கத்து பூ முதலில் துலங்குகிறதோ, அதாவது எந்தப் பக்கத்துப் பூ முதலில் கீழே இடறி விழுகிறதோ அதைச் சொல்வார், ’ம்ம், ஆத்தா நிறைஞ்ச மனசோட வலங்குடுத்து இருக்குறா இன்னைக்கு!’ என்று.

வழிபடுபவரும் அது என்ன முடிவாக இருந்தாலும், அதை முழுமனதோடு ஏற்றுக் கொள்வார். இதே போன்றதுதான் பூக்கேட்பதும். வெண்பூ, சிவப்புப்பூ என இரண்டில் ஏதோ ஒன்றைச் சொல்லிக் கேட்பது. நான் சிறுவனாக இருக்கும் போது, சுஞ்சுவாடி கிராமம் தேவனல்லூர் புதூரில் இருக்கும் காளியம்மன் கோவிலுக்கு எமது பாட்டனாருடன் செல்வது வழக்கம். பிரசித்தி பெற்ற கோவில் அது.

வருடா வருடம் நோன்பு சாட்டி, தீமிதி விழா எல்லாம் நடக்கும். ஆண்கள் குண்டம் இறங்குவார்கள். பெண்கள் பூச்சாற்றுவார்கள், அதாவது குண்டத்துலே இருக்கும் தழல்ப்படிகங்களைக் கையால் எடுத்து அம்மனை நோக்கிச் சாத்துவார்கள். கோவிலில் பயபக்தியோடு அம்மனை வழிபட்டு, பின் ஊர்க்கிணற்றுக்குச் சென்று நீராடிவிட்டு, அம்மன் கோவில் வாசலில் இருக்கும் குண்டத்திற்கு வந்து பூச்சாற்றுவார்கள்.


அம்மா, ஆத்தா என்று, உடுக்கம்பாளையம், லெட்சுமாபுரம், குண்டலப்பட்டி, கூளநாயக்கன்பட்டி, தொப்பம்பட்டி, சிஞ்சுவாடி என சுற்றுபற்றுக் கிராமத்தாரும் இறைஞ்சி வழிபடுவதைப் பார்க்கும் போது மிக மிக உருக்கமாக இருக்கும். நினைவு தெரிந்த பருவத்தில், எனக்கு முதல் மொட்டையும் காதுகுத்து விழாவும் நடந்தது அந்தக் கோவிலில்தான்.

சின்ன சின்னப் பூக்களுடன் இளஞ்சிவப்பு வண்ண சட்டையும், கறுப்பு வண்ண அரைக்கால் சல்லடமும், மொட்டையும், புதிதாய்க் குத்தப்பட்டு கம்மல்கள் அணியப்பட்ட காதுகளுமாய், அந்தக் கோயிலடி வளாகத்தில் கதாநாயகனாக, மகள் வயிற்றுப் பேரனாக அவ்வூரையே வலம் வந்த இனிமைப் பொழுது இன்றும் மனதில் நிழலாடுகிறது. ஆனால், காதில் குத்தப்பட்ட துவாரங்கள் மறைந்து விட்டன; கம்மல்கள் போன இடம் தெரியவில்லை; அப்பிச்சி அமுச்சியும் மரித்து விட்டார்கள். அதைவிடப் பெரிய இழப்பு, எமது பண்ணையத்தில் காலாகாலத்திற்கும் வேலை பார்த்துக் கொண்டிருந்த முத்தனும் முத்தியும் மறைந்து விட்டார்கள் என்பதே!

ஆனால், அந்த நினைவுகள் எம்முள் என்றென்றும் வாழும்.அந்த நல்ல பசுமையான நினைவுகளோடு, மேற்சொன்ன ஊர்களைத் தன்னகத்தே கொண்ட கொங்கு நாட்டின் ஒரு வேளரசான, நல்லுருக்கனாடு காண்போம் வாருங்கள் மக்காள்!


சமத்தூர்மா னுப்பட்டி அந்தியூர் புக்குளம்
தளிவாழை வாடிசித்தூர்
தாழ்வில்பூ லாங்கிணறு சுஞ்சிவா டியினோடு
சாற்றுடுக் கம்பாளையம்
நிமித்தமுறும் அங்கலக் குறிச்சி யேர்ப்பட்டியும்
நீள்குறிச் சிக்கோட்டையும்
நேமமுறு முடுமலைப் பேட்டைவே லூர்வளம்
நீள்குறுஞ் சேரியூரும்
அமைந்தகோட் டூர்புதூர் மலையாண்டி பட்டண
மழகிளைய பாளயத்தோ
டமர்சடைய பாளையமு மேலமில வங்கமுல
கரியமிள காதிவிளைவும்
திமிர்த்தன மிலங்குவெண் கோட்டிபமு மோங்கிச்
செழித்துவளர் பூனாச்சியுந்
திகழவல் லார்க் குதவி புரியுநல் லார்க்கணியுரை
செறியுந லுருக்கனாடே!

சமத்தூர், மானுப்பட்டி, அந்தியூர், புக்குளம், தளி, வாழைவாடி, சித்தூர், பூலாங்கிணறு, சுஞ்சுவாடி, உடுக்கம்பாளையம், அங்கலக்குறிச்சி, ஏர்ப்பட்டி, குறிச்சிக்கோட்டை, உடுமலைப் பேட்டை, வேலூர், குறுஞ்சேரி, கோட்டூர், புதூர், மலையாண்டி பட்டணம், இளையபாளையம், சடையபாளையம் என, ஆக மொத்தம் 21 ஊர்கள் கொண்டதுதாங்க நல்லுருக்கனாடு.

ஒரு சில ஊர்கள் ஆறை நாட்டுலயும், நல்லுருக்கனாட்டிலும் பொதுவா இருக்கிறதைக் காணலாம். ஆம், இன்றைய ஊர்கள் அந்நாளில் பிரிந்து இரு வேறு நாடுகளின் நிர்வாகத்தில் இருப்பதையே இது காட்டுகிறது. ஆக மொத்தத்தில், உங்கள் பழமைபேசி ஆறை நாட்டுக்கு மகனாகவும், நல்லுருக்க நாட்டின் மகள் வயிற்றுப் பேரனாகவும் இருப்பதையும் இது காட்டுகிறது! என்னா அலம்பல்டா சாமி இவனுது?! இஃகிஃகி!!

10/18/2009

ஆறை நாட்டானின் அலம்பல்கள் - 7!

கிள்ளாக்குச்சீட்டு, கடவுச்சீட்டு(passport)ங்றது எல்லாம் வாங்குறதே ஒரு பெரிய காரியமா இருந்ததொரு காலம். நான் முதன்முதல் கடவுச்சீட்டு வாங்க, உக்கடம் - சோமனூர் வண்டி புடிச்சுப் போயி, அவினாசி சாலையிலிருந்த Tiruppur Travelsல விண்ணப்பிச்சதும் ஏற்பட்ட குதூகலம் இருக்கே? சொல்லி மாளாது போங்க! வெளிநாட்டு வேலை கிடைச்சா, பழனி மலைக்கு பாதயாத்திரையா வாறன்னும், பத்து ரூபா காணிக்கை செலுத்துறேன்னும் ஆனைமலை மாசாணி அம்மன் கையில சிட்டு வெச்சு நேர்ந்துகிட்டதும் இன்னும் பசுமையா நினைவுல இருக்குங்க.

அந்த நல்ல நினைவினூடகவே, பழனிமலைய உள்ளடக்கின, கொங்குநாட்டின் ஒரு சிற்றரசான வையாபுரி நாட்டையும், கடவுச்சீட்டு பற்றின ஒரு விபரத்தையும் பார்க்கலாம் வாங்க. கூடுமான வரைக்கும் நண்பர்கள்கிட்டவும் விபரத்தைப் பகிர்ந்துக்குங்க, சரியா?


திருமிகும் பழனியூர் கோதைமங் கலமுடன்
செப்புகலையம் புதூரும்
சேரமா நூரிறைய மங்கல மடத்தூரு திகழ்கடத்
தூரினூடனே
அருமைமிகு கணியூர்கண் ணாடிப்புதூருடன்
அழகுமிகு கோட்டைத்துறை
ஆகுங்கொழுங் குண்டை மேல்கரைப் பட்டிலூ
ரமர்தேவாதா குடியுமே
மெருமைமிகு மாய்க்குடியி நோடமரர் பூண்டியும்
பிசகாமணிச்சிலம்பு
பீடுறுங் கொழுமம்வாழ் கரையோடீ ரொன்பதூர்
பிறங்குபுக ழோங்குநாடு
முரிமையுட னிரவலர்கள் மனநிலைமை யாய்ந்துள்
ளுவந்துதவு கின்றசெங்கை
உத்தமர்கள் மேவுதிரு வாவினன் குடியென்ன
வுயர்மிகு வளநாடரே வைகாவி நாடர்!

பழனியூர், கோதைமங்கலம், கலையம்புத்தூர், மானூர், இறையன்மங்கலம், மடத்தூர், கடத்தூர், கணியூர், கண்ணாடிப்புத்தூர், கோட்டத்துறை, மேல்கரைப்பட்டிலூர், கொழுங்கொண்டான், தேவதாகுடி, ஆய்க்குடி, அமரர்பூண்டி, மணிச்சிலம்பு, கொழுமம், வாழ்கரை என ஆக மொத்தம் பதினெட்டு ஊர்கள் கொண்டதுதாங்க வைகாவி அல்லது வையாபுரி நாடு. மலைமேலுள்ள ஆலயம் பழம்நீ, இறக்கத்தில் உள்ளது திரு ஆவினன் குடி. மேலும் இந்த வையாபுரி நாடு பற்றிய இடுகையானது, அன்பர், கலையம்பத்தூர் மருத்துவர் சுரேஷ் அவர்களுக்காக இடப்படுகிறது!

இனி கடவுச்சீட்டு பற்றின விபரத்தைப் பார்க்கலாம் வாங்க. இது எனக்கு மின்னஞ்சல்ல வந்த விபரம். ஒன்றுக்கு மேற்பட்ட நண்பர்கள், மின்னஞ்சலில் வந்த விபரத்தை ஆமோதித்ததின் பொருட்டு, விபரம் உங்கள் பார்வைக்காகவும்!


BE ALERT..!!!! Passport Tearing at Indian Airports....Read it Carefully.!!!

Be Careful at the Indian Airports, This is a well organized conspiracy by Indian Immigration, Police, Customs and Air India staff with networking at all the Indian International Airports.. Be careful when ever you give your passport to Immigration/ Customs/Air India staff. The pass port can be easily tampered and can create trouble to you. They have found easy way of making money from NRIs. This is the way it works:

At the time of the passenger's departure, if the passenger is not looking at the officer while he is stamping the exit, the officer very cleverly tears away one of the page from the passport. When the passenger leaves the immigration counter, the case is reported on his computer terminal with full details. Now all over India they have got full details of the passenger with Red Flag flashing on the Passport number entered by the departure immigration officer. They have made their money by doing above.

On arrival next time, he is interrogated.

Subject to the passenger's period of stay abroad, his income and standing etc., the price to get rid of the problem is settled by the Police and Immigration people. If someone argues, his future is spoiled because there are always some innocent fellows who think the honesty is the basis of getting justice in India ....

Please advise every passenger to be careful at the airport. Whenever they hand over the passport to the counters of Air India , or immigration or the customs, they must be vigilant, should not remove eyes from the passport even if the officer in front tries to divert their attention.

Also, please pass this information to all friends, media men and important politicians. Every month 20-30 cases are happening all over India to rob the NRIs the minute he lands. Similar case has happened with Aramco's Arifuddin. He was travelling with his family. They had six passports. They got the visa of America and decided to go via Hyderabad from Jeddah. They reached Hyderabad . Stayed abouta month and left for the States.

When they reached the States, the page of the American visa on his wife's passport was missing. At the time of departure from Hyderabad it was there, the whole family had to return to Hyderabad helplessly. On arrival at Bombay back, they were caught by the police and now it is over 2 months, they are running after the Police, Immigration officers and the Courts. On going in to details with him, he found out the following: One cannot imagine, neither can believe, that the Indian Immigration dept can play such a nasty game to harass the innocent passengers.

All the passengers travelling to & fro India via Bombay and Hyderabad must be aware of this conspiracy. Every month 15 to 20 cases are taking place, at each mentioned airport, of holding the passengers in the crime of tearing away the passport pages.

On interviewing some of them, none of them was aware of what had happened. They don't know why, when and who tore away the page from the middle of the passport. One can imagine the sufferings of such people at the hands of the immigration, police and the court procedures in India after that. The number of cases is increasing in the last 2-3 years. People who are arriving at the immigration, they are questioned and their passports are being held and they have to go in interrogation. Obviously, the conspiracy started about 2 to 3 years ago, now the results are coming. Some of the Air India counter staff too is involved in this conspiracy.

KINDLY SEND THIS TO AS MANY AS YOUR FRIENDS ACROSS THE WORLD AND ALSO REQUEST THEM TO CHECK THE PASSPORT AT THE CHECKING COUNTERS AND BEFORE LEAVING THE AIRPORT!

10/17/2009

ஆறை நாட்டானின் அலம்பல்கள் - 6!

எங்கள் கொங்கு நட்டிலே வெகு அழகாய்ச் சொல்லிடுவர், சொல்லிக் கொடுக்கிற சொல்லும், கட்டிக் குடுத்த கட்டுச் சோறும் எத்தினி நாளைக்கிடா வரும்? என்று! அதைப்போல, இன்னதைச் செய், இன்னதைச் செய்யாதே, அது நல்லது, அது நல்லதல்ல எனப் போதித்து போதித்து ஒரு சமூகத்தைக் கட்டிக் காப்பாற்ற முடியுமா?

முடியாது! அவை அந்த நேரத்திற்கு மட்டும் பயனளிக்குமே அல்லாது நிரந்தரத் தீர்வாக அமையாது. முட்டையை அயலவர் உடைத்தால் நேருவது, ஒரு உயிரின் இறப்பு; அதுவே அந்த முட்டையானது தானாக உடையுமேயானால், அது ஒரு உயிரின் பிறப்பு! அப்படியாக, நல்ல, பெரிய மாற்றம் என்பது ஒருவனுக்கு உள்ளாக உள்ளத்திலே இருந்து பிறக்கக் கூடியது. அதுதான், கொங்குநாட்டிலே அதிகப்படியாக பாவிக்கப்படும் சொலவடையான, சொல்லிக் கொடுக்கிற சொல்லும் கட்டிக் கொடுத்த கட்டுச் சோறும் எத்தனை நாளைக்கு? தாமாக ஒவ்வொருவரும் சிந்தித்து வாழ வேண்டும் என உணர்த்துகிறது இது நமக்கு!

அந்த நல்ல சிந்தனையோடு, இந்த ஆறைநாட்டானின் அலம்பல்கள் வரிசையில், எனது அன்புக்கும் அபிமானத்திற்கும் உரிய மாப்புவிற்கு இடும் இடுகை, அவரது இருப்பிடத்தைக் கொண்ட வடகரை நாடு பற்றிய விருத்தம்!


அந்தியூ ரும்பட்டி லூருங்கு றிச்சிபீ
லாம்பட்டி சம்பைவானி
ஆப்புக் டலினோடு கீழ்வானி மூங்கினக
ரானமூ கப்பனூரும்
பைந்தரு விளங்குகரு வல்லாடி தன்னோடு
பகரமாப் பேட்டை பொன்னிப்
பழநதிக் கரைநெருஞ் சிப்பேட்டை வளவயற்
பரவெண்ண மங்கலமுடன்
செந்திரு விளங்கவளர் கோட்டை பூதப்பாடி
சேருநக லூருலகடம்
செழிய கன்னப்பிலி பருவாசி பிரமயஞ் சீர்கட்டி
யின்சமுத்திரம்
வந்தனை செயும்பெரியர் தங்குபூ னர்ச்சியுடன்
வளர்செனம் பட்டியென்ன
மாகவிஞர் சாற்றுமிகு பத்துநான் கூர்களும்
வடகரைந நாடுதானே!

அந்தியூர், பட்டிலூர், குறிச்சி, பீலாம்பட்டி, சம்பை, பவானி, ஆப்புக்கூடல், கீழ்வானி, மூங்கில்பட்டி, மூகயனூர், கருவல்லாடி, அம்மாப்பேட்டை, நெருஞ்சிப்பேட்டை, எண்ணமங்கலம், கோட்டை, பூதப்பாடி, நகலூர், உலகடம், கன்னப்பிலி, பருவாசி, பிரமியம், கட்டிசமுத்திரம், பூனாச்சி, சென்னம்பட்டி என இருபத்து நான்கு ஊர்கள் கொண்டதுதான் கொங்குநாட்டில் அடங்கிய வடகரை நாடு என்பது!

பண்டைய காலத்திலே, பெயரை ஒட்டி வரும் பட்டங்களை வைத்தே இவர் இன்ன நாட்டைச் சேர்ந்தவர் எனக் கணிக்கும் படியாக பெயர் சூட்டினர். அந்த வகையிலே, கொங்கு நாட்டை உள்ளடக்கிய சேர நாட்டின் பட்டப் பெயர்கள் யாவை? சேரன், வானவன், மலையன், பொறையன் மற்றும் உழியன். சோழ நாட்டவர்க்கு, கிள்ளி, செம்பியன், வளவன், சோழன், காவிரி நாடன் மற்றும் கண்டர். பாண்டிய நாட்டவர்க்கு, வழுதி, மாறன், பாண்டியன், பொருப்பின் மற்றும் செழியன் முதலானவை.

சேர நாட்டுப் பெயர்களிலே, புகழ் வந்து சேரக்கூடியவன் சேரன்; வானுயர உயரக்கூடியவன் வானவன், மலையளவு பெறக்கூடியவன் மலையன், பொறுமையே உருவானவன் பொறையன், உழைத்து வாழ்பவன் உழியன். எனது மாப்பு, இன்று முதல் கதிர்ப் பொறையன் ஆகிறார்! இஃகிஃகி!! (எல்லாம் ஒரு காரணமாத்தான்!)

10/14/2009

பழமை பேசியே ஐநூறு!

அன்பர்களே,

வணக்கம்! பதிவுலகில் நுழைந்து, இந்த இடுகையோடு 500வது இடுகையைக் காண்கிறேன். இடுகை ஒன்றிற்கு சராசரியாக அரை மணி நேரம் என்று வைத்துக் கொண்டாலும் கூட, கிட்டத்தட்ட 250 மணித்தியாலங்கள் செலவழித்திருக்கிறேன் என்பதை உணர முடிகிறது. ஒரு வேளை நான் இதில் ஈடுபடாமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? வீட்டாரோடு செலவழித்திருப்பேனா?


நிச்சயமாக, ஒரு 50 மணி நேரமாவது குழந்தைகளோடு செலவழிந்திருக்கும். ஆனால், மீதி 200 மணி நேரம் வேறெதிலாவதுதான் செலவழிந்து இருக்கும். ஏனெனில், பெரும்பாலான இடுகைகள் நான் வெளியூரில் இருக்கும் போது எழுதியவையே, நான் வாராவாரம் வெளியூர் செல்கிறவன் என்ற முறையில்!

எழுத்திற்கு வந்திருக்காத பட்சத்தில், அந்நேரமானது விளையாட்டுப் போட்டிகள், அமெரிக்க அரசியல், அமெரிக்கக் காணொளிகள் என்று கழிந்திருக்கும் என எண்ணுகிறேன். பதிவுலகில் நுழைந்ததால் எனக்கு ஏற்பட்ட இழப்புகளை விட நிறைவே அதிகம் என இப்போழ்தும் எண்ணுகிறேன். எனக்குத் தெரிந்த, அறிந்த பல பற்றியங்களை வலை ஏற்றி இருக்கிறேன். பதியப்பட்டுக் கிடக்கிறது, எதிர்வரும் சந்ததிக்காக! எனது வாசிப்புத் திறன் மற்றும் ஆய்வுத் திறன் கூடியிருக்கிறது.

கடந்த ஒன்பது ஆண்டுகளில், நான் என் தாய்மண்ணில் வாழ்ந்த காலமென்பது மூன்று மாதங்களுக்கும் குறைவே. பதிவுலகில் செயலாற்றியதால் தாய் மண்ணோடு கூடிய அணுக்கம் பெருகி இருக்கிறது. அங்கு வாழும் மக்களின் மனவோட்டத்தை அறிய நேர்ந்தது. இந்த வழக்கத்தை நல்ல அனுபவம் என்றே எடுத்துக் கொள்வேன்.




எமது இந்த, 16 மாத கால அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் பொருட்டு, வலையுலக அன்பர்களோடு ஒரு அளவளாவுதல், இதோ:

தமிழ்ப் பதிவுலகை எப்படி அறிந்து கொண்டீர்கள்? அறிமுகம் கிடைத்தது எப்படி?

நான் இருக்கும் சார்லட் தமிழ்ப் பண்பாட்டுக் குழுவினருக்காக, குழும மின்னஞ்சலில் எழுத விழைந்து, ஒரு கட்டத்தில் அவற்றைப் பொதுமக்கள் பார்வைக்கும் வைக்க வேண்டும் என அன்பர் ஜெய் சுப்பிரமணியம் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, வலைப்பூ துவங்கினேன். தமிழ்மணத்தை அறிமுகம் செய்ததும் அவரே!

தமிழகச் செய்தி ஊடகங்கள்\மிடையங்கள் தன் கருத்தைத் திணிக்கும் ஊடகங்களாகவும், காசுக்காக உண்மையைத் திரிக்கும் ஊடகங்களாகவும் இருக்கின்றனவே, எப்படி மக்களுக்கு உண்மையான \நடுநிலையான செய்தி சென்று சேரும்?

தமிழகத்தில் மாத்திரம் அல்ல; உலகம் முழுமைக்கும் உள்ள சவால்தான் இது. எனினும் தமிழகத்தில் இது இன்னும் ஒருபடி மேலோங்கி இருக்கிறதையே காண்கிறோம். மக்கள் கல்வியறிவு பெற்று, பகுத்தறிந்து செயல்படுவதின் மூலம் மட்டுமே இதனைக் கடந்து வர முடியும். ஆனால், படித்தவர்களும் விட்டில் பூச்சிகளாய் ஏமாறுவது மிகவும் கவலையளிக்கிறது. பெரியவர்கள், மானம் எனும் மூன்றெழுத்து மந்திரத்தை சமூகத்தில் இழையோட விட்டார்களே, அதைப் போன்றதொரு உளவியல்க் கூறின் மூலமாகவும் எதிர்கொள்ள முடியும் என நினைக்கிறேன்.

தமிழக அரசியல் இன்னும் சீரழியுமா? அல்லது ஏதாவது நல்ல மாற்றம் வருமா? அப்படி வருவதாக இருந்தால் இன்னும் எவ்வளவு காலம் ஆகும் என்று உங்களுக்கு தோன்றுகிறது?

கல்வியறிவும், பொருளாதார மேம்பாடு காண்பதன் மூலமாகவும் ஒரு நல்ல சூழல் வர வாய்ப்பு இருக்கிறது. நிச்சயமாக சீரழிவுக்கு இடம் கிடையாது தமிழகத்தில். எவ்வளவு காலம் என்றெல்லாம் யூகம் செய்யக் கூடிய வகையில் முன்னேற்றமானது இல்லை, ஆனால் மேம்பாட்டில் இருக்கிறது!

அச்சு ஊடகத்தில் (அமெரிக்க ஊடகத்தில் அல்ல, தமிழக ஊடகத்தில் :-)) பங்களிக்க திட்டமிருக்கிறதா?

ஏற்கனவே வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றேன். நுழைந்தால் முழு வீச்சில் நுழைய வேண்டும் என்கிற எண்ணத்தில், தயக்கத்துடன் மறுத்து விட்டேன். எதிர்வரும் காலத்தில் நிச்சயமாக இடம் பெறுவேன்.

இந்த கடைசி 108 மாசத்துல, 3 மாசம் கூட ஊருல இல்லைங்கறீங்க. (கல்யாணத்துக்குதான் ஊருக்கு போயிருப்பீங்க போலிருக்கு :-)) அதனால் இழந்தவை என்னவென்று கருதுகிறீர்கள்? அதை நினைத்து வருத்தப்பட்டது உண்டா?

நான் இழந்தவை ஏராளமானவை. குறிப்பாக எமது கிராமங்களின் தொன்மையை நுகராமல் போனது. அவை எல்லாம் இன்றைக்குப் பொலிவிழந்து காணப்படுவதை எண்ணி ஏமாற்றம் அடைகிறேன். சிற்றாறுகளில் கூட, சதா சர்வகாலமும் நீரோடிக் கொண்டிருக்கும். ஆனால், இன்றைக்கு கானல் நீர் மட்டுமே ஓடிக் கொண்டு இருக்கிறது.

பல லோக்கல் டச் சமாச்சாரங்கள் எப்படி தெரியும்? நீங்கள் சொல்லும் நிறைய விஷயங்கள் ஒரு தமிழாசிரியருக்கே தெரியுமா என்பது கேள்விக்குறியே. எப்படி இந்த ஆர்வம்?

உடுமலை வட்டத்தின் உள்ளோங்கிய கிராமப் பகுதிகளில் பிறந்து வளர்ந்தவன். முதல் பதினைந்து ஆண்டுகளில் கோவைக்கு வந்ததே ஓரிரு முறைதான். முழுக்க முழுக்க கிராமியத்தை நுகர்ந்து பருகியவன், அதுதான் காரணம். திருமூர்த்திமலை துவக்கம், சுல்தான் பேட்டை வரையிலான கிராமங்கள் ஒவ்வொன்றிற்கும் சென்று வந்திருக்கிறேன், அதுவும் கால்நடையாக!

நான் வாகத்தொழுவு வேலூர் எனும் எழில் வாய்ந்த நல்லூரில், இரண்டாம் வகுப்புப் படித்துக் கொண்டு இருந்தேன். அப்போது, முருகுபாண்டியன் கலைநிகழ்ச்சி நடந்தது. அதிலே பேசிய திமுக பேச்சாளர் கூத்தரசன் என்பவர் இலக்கியம் பேசியதில், நான் என்னையே இழந்தேன். அதன்பிறகு, பேச்சாளரைப் போலப் பேசி விளையாடுவது வழக்கமானது. சிறார்கள் மத்தியில் சரளமாகப் பேச வேண்டுமே என்பதற்காக, எதையாவது தமிழில் மனனம் செய்ய ஆரம்பித்தேன். அதுதான் எமது துவக்கப் புள்ளி!



தமிழ் வளர்கிறதா? ஆம் எனில் எப்படி? இல்லை எனில் ஏன்?

வளர்கிறது, புலம் பெயர்ந்த நாட்டிலே இருப்பவர்கள் தொழில்நுட்ப ரீதியாக, மேம்பட்ட கணினி சார்ந்த கட்டமைப்பில் தமிழைப் புகுத்த விழைகிறார்கள். சீரழிகிறது, தமிழ்நாட்டிலே ஆட்சியாளர்கள் இரண்டகம் செய்வதால்!

தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்ததால் என்ன லாபம்? யாருக்கு?

அரசியல் கட்சிக்கு! அதைச் சொல்லி உரையை நீட்டிக்கலாம், மக்களை மேலும் சிறிது நேரத்திற்கு அமர வைக்கலாம்!!

இந்தியா போயிருந்த போது, தமிழ் தினசரிகளில், வாழ்த்து(க்)கள் என்றே பார்த்தேன். இந்த சின்ன விசயம் கூட தெரியாமல் பத்திரிகை ஆசிரியர்கள் / திருத்துபவர்கள் இருக்கின்றனரா?

தலைக்கு மேலே வெள்ளம் போனால், அது சாணென்ன முழமென்ன என்று விட்டிருப்பார்கள். கிரீட்டிங்ஸ் என எழுதாமல் விட்டு வைத்ததை எண்ணி மகிழ்ந்து கொள்வோம் நாம்.

மற்றவர்களால் தமிழன் எப்போதும் வஞ்சிக்கப்படுகிறான் (உதாரணம் : காவிரி பிரச்சினை)? இது எதனால்? நமக்குள் ஒற்றுமை இன்மைக்கு இதை எடுத்துக்காட்டாக கூறலமா?

சாதியுணர்வு மேலோங்குவதுதான் காரணம்.

விளையாட்டுத் துறையில் நம் நாடு முன்னேற்றம் அடையாததற்கு காரணம்.. அரசியலா / பொருளாதாராமா?

பொருளாதாரம். பொருளாதார முன்னேற்றம் தடைபடுவதற்குக் காரணம் அரசியல்!

வெளிநாட்டு வாழ் தமிழர் மகிழ்ச்சியாக இருப்பதாக எண்ணுகின்றீர்களா?

மகிழ்ச்சியாய் இருப்பவர்களே அதிகம்.

மாணவர்களுக்கு அரசியல் தேவையா?

அரசியலுக்கு மாணவர்கள் தயவு தேவை எனும் நிலைமாறி, ஒவ்வொரு மாணவனும் அரசியல் ஆர்வம் பெற வேண்டும்.

வலைப்பூக்களால் நன்மையா / தீமையா?

நன்மையே! வெளிவராத மாய்மாலங்களும், தமிழாட்சி மேலோங்குவதும் உள்ளங்கை நெல்லிக்கனி!!

கச்சா எண்ணை இப்போதெல்லாம் அமெரிக்க டாலரில் விலை சொல்லப்படுகிறது... இது ஈரோவில் மாறினால் என்ன ஆகும்.. (சும்மா.. கோச்சுக்கிடக்கூடாது... ஒரு மாறுதலுக்காக இந்த கேள்வி)

ஈரோ என்பது அமெரிக்காவின் நாணயமாக மட்டுமே இருக்கும்!

இப்போதுள்ள தொழிலுக்கு வரமால் இருந்திருந்தால் என்னவாக ஆகி இருப்பீர்கள்?

எதோ ஒரு இயந்திரவியல் நிறுவனத்தில், மேலாளராக முன்பிருந்த பணியைத் தொடர்ந்து செய்திருக்கக் கூடும்.

2012 - ல் உலகம் அழியும் என சிலர் சொல்லிக் கொண்டு இருக்கின்றார்களே, அதைப் பற்றி உங்க அபிப்ராயம் என்ன?

ஆனாலும் தமிழ் அழியாது என சொல்லிக் கொள்கிறேன்!

நைஜிரியா வரும் உத்தேசம் உண்டா?

என் சகோதரர் வர இருக்கிறார். அங்கே எண்ணெய் சுத்திகரிப்புப் பணிகள் தொடங்க இருக்கிறதாம். எனவே வரும் வாய்ப்பு இருக்கிறது.

ஊக்கம் அவசியமா? (உதா... பின்னூட்டங்கள்)

மிக அவசியம்! ஊக்கு இல்லா வாழ்க்கை, கோர்க்கப்படாத சிதறிய மணிகள் போல்!

’ஆலாப் பறக்கிறான் அவன்’ என்பதின் பின்னணி என்ன?

ஆலா (Haliaetus leucogaster) என்பது வேகமாகப் பறக்கக் கூடிய பறவை. அதைப் போல வேகமாகப் போகிறான் எனும் மரபுத் தொடரே இது.

பெட்னா நிகழ்வுகளை கவர் செய்த கையோடு ஒரு அறச்சீற்றமும் வந்ததே? அதன் விளைவுகள் என்ன?

ஊட்கத்தின் திரிபான கட்டுரையைச் சாடி வந்த இடுகை அது. எமது அந்த இடுகையானது, விழாவுக்கு வந்திருந்த, விழாவைக் கேள்வியுற்ற தமிழரிடத்தே ஒரு பிரளயத்தையே உண்டு செய்தது என்பது மறுக்க முடியாத உண்மை. அதனைத் தொடர்ந்து, பேரவைத் தலைவர் அவர்களே ஒரு அறிக்கை வெளியிட்டார்; அது கிட்டத்தட்ட 3000 புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும், தமிழகத் தலைவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும், நிகழ்ச்சியை நடந்தது நடந்தபடியே தொகுத்து பல இதழ்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அவை பிரசுரமும் ஆனது. ஓரிரு இதழ்களில் எனது கட்டுரையும் இடம் பெற்றது. இந்த இடத்திலேதான், வலைப்பூ எழுத்தாளனின் பணி பேரவைக்கு தெரிய வந்தது என்பதைக் கூறிக் கொள்வதில் உங்களோடு சேர்ந்து நான் மிகவும் அகமகிழ்கிறேன்!

உலக மயமாக்கல், உலக பொருளாதார மயமாக்கல் போன்ற மயமாக்களில் தமிழன் என்ற இனமும், அந்த தமிழினத்தின் திறமைகளும் பணத்திற்காக வெளி நாடுகளில் விற்பனையாகும் அவலத்திற்கு முடிவு இருக்குமா?(வருமா எனத்தான் கேட்க்க ஆசை ஆனால் இருக்குமா என்பது தான் பொருத்தமாக இருக்கும் என மனதில் படுகிறது)

அவலம் என்று ஏன் நாம் நினைக்க வேண்டும்? தமிழ் திக்கெட்டும் பரவுகிறது என ஏன் நினைக்கக் கூடாது?? அமெரிக்காவிலே திருக்குறள் சாதனை செய்த சிறுமி காவ்யா! ஐரோப்பாவிலே, கிழக்காசிய நாடுகளிலே, ஆசியிலே, தமிழ் 24 மணி நேரமும் வானலைகளில் தவழ்கிறதே? வாசிங்டனில், ஹூசுடனில் அமெரிக்க மாணவர்கள் தமிழ் கற்கிறார்களே? தமிழினம் பெருக வேண்டும், தமிழ் மொழி பரவ வேண்டும்.



சிங்கை, மலேயம் போன்ற நாடுகளில் வேலைக்குச் செல்லும் தமிழர்கள் குடியுரிமையைப் பெற்றாலும்கூட, பெரும்பாலும் இறுதியில் தாய்நாட்டில் வந்து நிரந்தரமாக தங்குவதையே விரும்புகின்றனர். அமெரிக்க வாழ்க்கையை அமெரிக்காவாழ் தமிழர்கள் எப்படி உணர்கின்றனர்?

தாய்நாட்டுக்கு வரும் வேட்கைதான் மேலோங்கி இருக்கிறது. ஆனால், ஏமாற்றம் அடைகிறார்கள். காரணம் என்ன? ஒருவர் தமிழ்நாட்டை விட்டு வரும் போது அப்போது இருக்கும் சூழலிலேயே, அவரது மனமானது(mind freeze) தங்கி விடுகிறது. அதனாலே, திரும்பும் போது இருக்கும் மாறுபட்ட சூழலுக்கு அவர்கள் தன்னை ஆட்படுத்திக் கொள்வதிலே சிக்கல் ஏற்பட்டு, மீண்டும் அமெரிக்காவுக்கே திரும்பும் ஒரு முடிவுக்கு ஆட்படுகின்றனர். இந்த இடத்திலேதான், எனது பதிவுலக ஈடுபாடு என்பது, என்னை எம் தாய் மண்ணோடு ஒட்டியிருக்கச் செய்வதில் பெரும் பங்கு வகிக்கிறது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

பதிவுகளை படிக்க ஆரம்பித்ததில் இருந்து, உங்கள் இடுகைகளைப் படித்துக் கொண்டு வருகிறேன். விறுவிறுப்பு குறையாமல் அதே ஆர்வத்துடன் எல்லா இடுகைகளையும் படிக்கின்றேன். மிகவும் நன்றாக எழுதி வரும் நீங்கள், அடுத்து என்ன செய்ய போகிறீர்கள்? நல்ல இடுகைகளை எல்லாம் தொகுத்து அச்சில் அழகிய புத்தகமாய் வெளியிடும் எண்ணம் உள்ளதா?

அடுத்து நிறைய சாதிக்க வேண்டி உள்ளது. நேரம் போதவில்லை. புத்தகம் வெளியிடும் திட்டமும் உள்ளது.

வேர் தொய்ந்து விட்டது, இனி விழுதுகளின் காலம்! தாய் மண்ணை நம்பி, இனி பயன் இல்லை. உலகெங்கும் வாழும் தமிழர்கள்தான், இனி நம் மொழி மற்றும் பண்பாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்பது உங்கள் கருத்தாக தெரிகிறது(தொடர்ந்து உங்களிடம் பேசி, உங்கள் இடுகைகளைப் படித்ததில் நானே புரிந்துகொண்டது :) ) எந்த அளவுக்கு இது சரி என்று நினைக்கிறீர்கள்?

தமிழகம் மாறுபாட்டிலே இருக்கிறது. புலம் பெயர்ந்தவன் வேறுபாட்டிலே இருக்கிறான். மாறுபாட்டில் இருப்பவனுக்கு, மாற்றங்களை ஆய்ந்து பார்க்கக் கூடிய அவகாசம் தரப்படவில்லை. வணிக நிறுவனங்கள் அவ்வாய்ப்பைத் தரவும் மாட்டாது.


ஆனால், புலம் பெயர்ந்த நாட்டிலே ஓடியாடி ஒரு நிலைக்கு வரும் நிலையில், தனது பண்பாட்டை இங்கே இருக்கும் பண்பாட்டோடு ஒப்பிடுகிறான்; இரண்டிலும் இருக்கும் நல்லனவற்றை நுகர்கிறான். தமிழர் பண்பாடு கண்களுக்குப் புலப்படுகிறது. அதை அவன் செம்மையாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதில் நான் தீவிரமாய் இருக்கிறேன்.

உடுமலையில் இருந்து அமெரிக்கா வரையிலான பயணம் குறித்துச் சொல்ல இயலுமா?

உடுமலை அந்தியூரில் பிறந்த நான், கோவை, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர், கனடா - டொரோண்டோ, ஜெர்மனி - மூனிச், இலண்டன், அமெரிக்கா, சைப்ரசு, இசுரேல் - இராணா, மீண்டும் அமெரிக்கா என நாட்கள் வெகு வேகமாக ஓடிக் கொண்டு இருக்கிறது.


டொரோண்டோ யார்க் பல்கலைக்கழக வளாகத்தில் வாழ்ந்த மூன்றாண்டு காலம், உலகில் இருக்கும் அனைத்து நாடுகளையும் பார்த்த அனுபவத்தைக் கொடுத்தது. ஆம், அங்கே பல தரப்பட்ட நாடுகளைச் சார்ந்த நண்பர்களைப் பெற்றவன் ஆனேன். குறிப்பாக, பலதரப்பட்ட விடுதலை இயக்கங்களைச் சார்ந்தவர்களிடம் பழகும் வாய்ப்புக் கிட்டியது.

சொர்க்கமே என்றாலும் நம்மூரைப் போல வருமா? அது உண்மையா??

உண்மையே! பாரெங்கும் ஓடி வந்து கொண்டிருக்கும் எமக்கு, நானுறங்கிய அந்தத் திண்ணையும் கிழிந்த பாயும் ஆழ்மனதில் குடிகொள்ளவே செய்கிறது.

நீங்கள் சந்தித்த முக்கிய நபர்கள் யார், யார்?

பஞ்சீர்ச் சிங்கம் அகமது சா மசூது, N. T. இராமராவ் மற்றும் மதுரை தமுக்கம் மைதானத்தில் டெசோ மாநாட்டின் போது வல்லரசு அவர்களுடன் பல ஈழப் போராளிகள் (அப்போது நான் நான்காம் வகுப்பு என நினைக்கிறேன்).

டொரோண்டோவில் பல நாட்டுப் பிரபலங்கள், சிங்கப்பூர் முசுதபாவில் காலஞ்சென்ற தயாரிப்பாளர் பாலாஜி அவர்கள்! நிறைய திரைப் பிரபலங்களோடு உரையாடி இருக்கிறேன், ஆனால் என்னவோ, தானாக முன்வந்து இவர் என்னோடு உரையாடியது மனதை நெகிழ வைத்த அனுபவம். கூடவே பண்பாளர், நண்பர் C.T.தண்டபாணி அவர்களும் மறக்க முடியாத நபர்.

பள்ளி வாழ்க்கையில் இடம் பெற்ற முக்கிய நண்பர்கள் யார், யார்?

முதலாம் வகுப்பில் இருந்தே என்மீது தீராத அபிமானம் கொண்ட நண்பர்கள் பரமசிவம், ரெங்கராஜ் மற்றும் வெட்டூர்னிமடம் ஜேம்சு பென்சிகர், அப்பநாய்க்கன் பட்டி இராஜேந்திரன், சுல்தான் பேட்டை மேட்டுக்கடை பழனிச்சாமி, வாரப்பட்டி கதிர்வேல், Kerala Queen Bras கிருஷ்ணமூர்த்தி என பட்டியல் நீள்கிறது.

தமிழ் நாட்டிலேயே தமிழ் பேசுவதை கேவலமாக நினைக்கும் போது, (இது உண்மை.. ஓட்டல் கடைக்குச் சென்று “சோறு இருக்கா?”-ன்னு கேட்டுப் பாருங்க தெரியும்.) புலம் பெயர்ந்து வந்து நாம் தமிழை வளர்த்தி என்ன பயன்? நமது அடுத்த தலைமுறைக்கு தமிழ் மீது அவ்வளவு ஆர்வம் இருக்கும் என்று நினைக்கிறீர்களா? நம்முடைய ஊரின் பெருமைகளை நீங்கள் சிலாகித்து எழுதும்போது, எங்களால் ரசிக்க முடிகிறதென்றால் அதற்குக் காரணம் நாங்களும் அந்தப் பாதையை கடந்து வந்ததால்.. ஆனால் நம் குழந்தைகளால் எப்படி இதையெல்லாம் ரசிக்க முடியும்?

எல்லாக் குழந்தைகளாலும் இரசிக்க முடியும் என நான் எண்ணவில்லை. ஆனால், நூறில் பத்து குழந்தைகளாவது எதோ ஒரு சமயத்தில் தனது பூர்வீகத்தின் மீது பற்றுக் கொண்டு நாடவே செய்யும். அது மனித இயல்பு. அப்படி இருக்கையில், நாம் அந்த நாடுவோருக்கான கட்டமைப்பை எழுப்பும் கடமையில் இருந்து தவறலாமா?


முப்பது ஆண்டுகளாக இல்லாத வேட்கை, எனது நண்பர் ஒருவருக்கு இப்போது ஏற்பட்டு இருக்கிறது. அப்படி, எவருக்கு எப்போது ஏற்படும் எனச் சொல்ல இயலாது. இசுரேல் என்ற நாடே இருந்தது கிடையாது. நாடோடிகளாய் ஓடித் திரிந்தார்கள். இரசியாவிலே நிறைய சிறு சிறு நாடுகள். அவர்களெல்லாம் இன்றைக்கு தனது இனத்தை, மொழியை மீட்டெடுத்து இருக்கிறார்களே? எப்படி??

கட்டமைப்புச் சிதையாமல் இருந்ததுதான் காரணம். பாரதி பாடிய முப்பது கோடியில் தமிழன் இரு கோடிகளுக்கும் குறைவே. அப்படியானால், 1000 ஆண்டுகளுக்கு முன்னால்? ஒரு சில ஆயிரங்களா?? ஆயிரங்களை வைத்து இனத்தைக் காப்பாற்றிய போது, நாம் கோடிகளை வைத்துக் கொண்டு இனத்தை, மொழியை, பண்பாட்டைத் தக்க வைக்க இயலாதா?? ஒரு சில நூறுகள் போதும், தமிழ் இனம், மொழி, பண்பாடு வாழ!


நினைவுகளை, சிந்தனைகளை, தகவல்களைப் பதிந்து வைப்போம்... சுவடுகள் முன்னெடுத்துச் செல்லும்!

எவ்வாறு உங்களால் குடும்பத்துக்கும், வேலைக்கும் நடுவில் பதிவுக்கென்று இவ்வளவு நேரம் ஒதுக்க முடிகிறது? நீங்கள் எப்படி தினமும் ஒரு இடுகை இடுகிறீர்கள்? அதுவும் சும்மா மொக்கைகளாக இல்லாமல் ஆழ்ந்த கருத்துடையனவாக... சில சமயங்களில் இவர் என்னேரமும் பொட்டியும் கையுமாகவே இருப்பார் போலிருக்கிறது என எண்ணத் தோன்றுகிறது. இது உங்கள் குடும்ப வாழ்க்கைக்கும், உங்கள் உடல் நலத்துக்கும் சிறிதேனும் கேடு விளைவித்தாலும் நல்லதில்லையே?

நிச்சய்மாக இல்லை. வாரத்தில் நான்கு நாட்கள், தினம் ஒரு மணி நேரம் என உடற்பயிற்சி செய்வது உண்டு. எழுத்து என்று வந்துவிட்டால், பெரும்பாலும் எனது அனுபவத்தில் இருந்தே இடுகைகள் பிறக்கின்றன. எனக்கு கடந்த கால நினைவுகள் என்பது சட்டென இயம்பும் தன்மை கொண்டவை. ஒரு இடுகைக்கு முப்பது மணித் துளிகளுக்கு மேல் ஆகாது. தமிழில், அதுவும் பேச்சுத் தமிழ் என்பதை வெகு இயல்பாகத் தட்டச்சு செய்யக் கூடியவன் நான்.

எல்லாமே பயிற்சியைப் பொறுத்தே அமைகிறது. விமானப் பயணத்தின் போது, நினைவுகள் தானாக மேலெழும். அப்போது சிட்டுக் காகிதத்தில் ஓரிரு சொற்களாக குறித்துக் கொள்வேன். தமிழ்விழாவின் போது கூட, ஓரிரு நிமிடத்தில் சொற்கள் குறிக்கப்பட்டு, 1500 பேர் முன்னிலையில், கொடுத்த தலைப்பை ஒட்டி உடனடிக் கவிதை வாசிக்க முடிந்தது. எல்லாம் பயிற்சி, வாசிப்பு அனுபவம் மற்றும் வேட்கையை வைத்தே அமைகிறது.

தமிழன் என்பதற்காக மனம் வெதும்பியது / குறுகியது எதற்காக?

தமிழன் சாதியின்பால் அளவுகடந்த பற்றுக் கொண்டு சீரழியும் போது!

இயல்பாக பேசும்போது... பிறமொழிச் சொற்களை யூஸ் பண்ணுவதை ஈஸினு திங்க் பண்றமே இது எதனால்?

புழக்கமும், வாடிக்கையாகிப் போனதும்தான் காரணம். அதில் ஊடங்களுக்கு பெரும் பங்கு உண்டு. தமிழனின் தாழ்வு மனப்பான்மையும் உள்ளடக்கம்.

ஏன் தமிழ் வார்த்தைகளிலிருந்து பிற மொழிச் சொற்களுக்கு புலம் பெயர்ந்தோம்.... மீண்டும் தமிழ் சொற்களை மனதின் ஆழத்திற்கு கொண்டு செல்ல என்ன செய்யவேண்டும்?

கிராமத்திலே இருப்பவர்கள் இன்னும் தமிழிலேதான் உரையாடுகிறார்கள். கிராமத்தான் எனும் எள்ளலும், நையாண்டியும் ஒழிய வேண்டும். கிராமத்தான் என்பதைப் பெருமையாக என்ணிப் பாருங்கள், தமிழ் தாண்டவமாடும் நம் நாவில்!

மிக அற்புதமாக நீங்கள் எழுதிவருகிறீர்கள்.... மொழி சார்ந்து மட்டுமே அதிகம் இருப்பதாக எண்ணுகிறேன். ஏன் சமூகம் சார்ந்து, அடிப்படை ஒழுக்கத்தை வலியுறுத்தி உங்கள் எழுத்தைக் கொஞ்சம் பாய்ச்சக்கூடாது?

எழுதலாம்தான்! அக்கப்போர்கள் உருவாகும், அதற்கு வால் பிடிப்பதில் நேரம் வீணாகும். மேலும் அதைச் செய்ய நிறைய இருக்கிறார்கள். ஆனால், எனக்குத் தெரிந்த கிராமியச் சுவடுகள் என்னோடு மட்டுமே அல்லவா? அதனால்தான்!


ஈழம் பற்றி....?

என்னவானாலும், அது எம் தேசம்!

உடன் அளவளாவிய நண்பர்களுக்கு நன்றி!

இராகவன் நைஜிரியா
குறும்பன்
சூர்யா
செந்தழல் ரவி
எம்.எம்.அப்துல்லா
தென்றல் தென்னவன்
கதிர் - ஈரோடு
அப்பாவி முரு
உடுமலை விஜி

எம்மைச் சிறப்பித்தவர்கட்கும் நன்றி!

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை
சாண்டியேகோ தமிழ்ச் சங்கம்
பழமைபேசும் இளைய தாத்தா
எழில் தமிழ்பண்பாட்டுக் குழு, சார்லட்


10/12/2009

பதிவுலகத்தில் அடிதடியும், அதில் தூயமணிகளின் பங்கும்!

மூக்கை நுழைக்க வேண்டாமென்றே எண்ணினோம்; ஆனாலும் எந்த எளியவனுக்கும், வறியவனுக்கும் அவனுடைய குரல் என்று ஒன்று இருக்கிறதுதானே? அவர்களுக்குள் நடந்த இரசாபாசம் என்பது தனிமனிதச் செயல்தான். அதில் தொடர்புடையவரே நிகழ்வைப் பொதுவில் வைத்து, அதற்குப் பின்னர் தெரிந்தோ தெரியாமலோ, அறிந்தோ அறியாமலோ பல பேர் அந்த நிழல்யுத்தத்தில் தத்தம் கடமையை ஆற்றிய வண்ணம் இருக்கும் போது, இந்த எளிவனும் மூக்கை நுழைப்பதில் தவறில்லை என்றே எண்ணுகிறேன்!

தமிழ்ப் பதிவுலகில் இருக்கும் பதிவர்களில் சரிபாதி சென்னையிலிருந்து என்று வைத்துக் கொண்டாலும் கூட, நிகழும் அக்கப்போர்களில் சரிபாதி சென்னை தவிர்த்த ஏனைய இடங்களில் இருந்து தோன்றி இருக்க வேண்டுமல்லவா? இந்த ஒன்னரை வருடத்திய எமது அவதானத்தின்படி, கிட்டத்தட்ட அனைத்துமே சென்னையில் இருந்தே முளைக்கின்றன என்பதுதானே கசப்பான உண்மை?

தாக்குதல் என்றால், கூட்டாகவோ தனியொரு நபராகவோ நாட வேண்டியது, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கிற துறையினரிடம்! ஆனால் சிலவேளைகளில் நட்பும், தான் சார்ந்து இருக்கும் சமுதாயம் முதலான நலன்களைக் கருத்தில் கொண்டு வாளாதிருப்பதும் வழமையே! அப்படி என்றால், இதிலும் இவர்கள் வாளாதிருந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், நட்பு பேணி நண்பர்களுக்கு உள்ளாகவே தகராறைத் தீர்த்திருக்க வேண்டும்.

அதைவிடுத்து, இப்படி ஏதேச்சையான, ஒருமித்த எழுத்து வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவதுதான் எழுத்துரிமையா? பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவும் ஆறுதலும் என்றால், தனிப்பட்ட முறையில் மடலாடல்கள், மின்னாடல்கள் போன்றவற்றில் வைத்துக் கொள்ள வேண்டியதுதானே? இடுகைகள் மற்றும் சிட்டாடல்களில் எழுத்து வன்முறையைக் கையாண்டு நீங்கள் செய்வது என்ன தெரியுமா? Character Assassination!

நான் இந்த நிகழ்வைக் கொண்டு மட்டுமே இடுவதல்ல இந்த இடுகை! கடந்த காலங்களில் எண்ணற்ற முறை, முறைதவறிய எழுத்து வன்முறை அரங்கேறி இருக்கிறது. உடலால் ஏற்படும் ஊறுக்குக் கதறும் நீங்கள், மனதில் ஏற்பட்ட, என்றும் ஆறாத வடுக்களுக்கு வாய் திறக்க மறுப்பது ஏன்? ஏன்?? ஏன்???

”முரட்டுத் துலுக்கன், முட்டா நாயக்கன், செருப்பு, அரைகுறைகள்”, “எழுத்தறிவில்லாத ஆடுமாடுகள்”, இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்... சாதி, மதங்கள், மற்றும் இன்னபிற பிறப்புச் சூழ்நிலைகளைக் கேலிசெய்து எத்துனை எத்துனை இடுகைகள்?

அதற்கு மேல், பிரித்தாளும் மனோநிலையில்.... நம்ம செட் ஆளுக, நம்ம ஆளுக தவிர மத்ததெல்லாம் அஜீரணம், வாயில நல்லா வந்திரும்... இப்படி, மெலியவனை, எளியவனைக் குதறும் பாங்கில் எத்துனை? எத்துனை??

அந்த குரோதத்திற்கு இரையான ஒருவர் மனவேதனையை வெளிக் காண்பிக்கிறார், எப்படி? திமிர், ஆணவம்.... இப்படியாக. மெலியவனும், எளியவனும் அந்த எழுத்து வன்முறைக்கு மேலும் மேலும் ஆட்படும் போது, அதன் வலியில் தன்னையே இழந்து மூடனாகிறான். மூடன் ஆனவனுக்கு தூக்கு தண்டனை என்றால், மூடனாக ஆக்கியவனுக்கு?!

அரசியல் உலகிலே அவ்வப்போது, தூயமணிகள் ஆற்றும் பங்கு மிக முக்கியமானது. ஆம், இவர்கள் நீதிமான்களாகவோ, மொழி சார்ந்த ஆன்றோராகவோ, சமூக சேவையிலோ சிறந்து இருப்பர். அரசியலில் தலைவனுக்கு ஒரு இக்கட்டு என்று வரும்போது, அந்த அபிமானத் தலைவனைக் காப்பாற்றும் பொருட்டு இந்தத் தூயமணிகள் தூதுவராகச் சென்று கடமை ஆற்றிடுவர். அடிப்படை ஒழுக்கத்தில், தான்சார்ந்த துறையில், நற்பெயரோடு இருக்கும் இவர்களுக்கு, ஒரு மதிப்பும் மரியாதையும் இருக்கும். அதை, அந்த ஊழலில் திளைத்த அபிமானத் தலைவனுக்கு ஏதுவாகப் பயன்படுத்தும் பாங்கை நீங்கள் அவ்வப்போது காணலாம்!

அதேபோலத்தான் பதிவுலகமும்! பதிவுலகத் தூயமணிகள், திறத்தால், நற்பண்புகளால்ச் சிறந்தவர்களாக இருப்பர். பதிவுலகின் போக்கை மாற்றுவதிலே, இவர்களுக்குப் பெரும் பங்கு உண்டு. எழுதுகிற எழுத்திலே, வக்கிரமும், ஆணவமும், விரசமும் ஓங்கி, தனிநபர்த் தாக்குதல், வன்மம் என்றெல்லாம் மேலோங்கும். அப்போது இந்தத் தூயமணிகள் அது குறித்து இடுகை இட மாட்டார்கள். ஏன்?

வன்மம் விதைப்பது அவர்களது அபிமானத்துக்கு உரியவர்கள் ஆயிற்றே? அதுவே, அந்த அபிமானத்துக்கு உரியவர்களுக்கு ஒன்று என்றால், சென்னையில் இருந்தும், திருப்பூரில் இருந்தும், கோவையிலிருந்தும் சிலிர்த்துக் கிளர்ந்து எழுந்திடுவர் இவர். பிறகென்ன? ஒட்டு மொத்த பதிவுலகும் இந்த பிம்பத்தைத்தான் பிரதிபலிக்கிறது என்றாகிவிடும்.

இட்ட இடுகைக்கு, ஒத்த கருத்துக் கொண்டவர் இட்ட மறுமொழிகள் இவ்வளவு என்றால், மாற்றுக் கருத்துக் கொண்டவர்கள் இடாத மறுமொழிகள் பலமடங்கு கூடுதலாய் இருக்கும். உலகில் எதோ ஒரு மூலையில் இருந்து கொண்டு, நடப்பவற்றை அவதானிக்கும் சாமான்யர்கள் ஏராளம்! ஏராளம்!! அதற்கு இந்த இடுகையே சான்று!!!

தூயமணிகளே, முலாம் பூசிய கண்ணாடி ஒன்றின் முன்னாற்ப் போய் நின்று, உங்கள் முகத்தை ஒருமுறை பாருங்கள்! உங்களை நீங்களே வினவிக் கொள்ளுங்கள்!! Shame on you Mr. Clean!!!

இனி? இந்த இடுகை இட்ட பாவத்திற்கு, கேலியும் கிண்டலும் நையாண்டியும் ஓங்கும். பழி தீர்க்கத் தருணம் பார்த்து, வழிவகை பார்த்துக் கிடந்திடலாம். அப்படியாயின், அவர்கட்கு யாம் சொல்ல விரும்புவதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்! I am sorry my dear....


அகந்தை அகலட்டும்!
சகிப்பு பெருகட்டும்!!

10/10/2009

மூக்குமயிர் பிடுங்கினாட் பாரங்குறையுமா?

மூக்குமயிர் பிடுங்கினாட் பாரங்குறையுமா? Will one's weight be diminished by pulling out the hair from the nostrils??

ஒருத்தருக்கு உண்மையிலேயே பாரம் குறையினுமின்னா, உணவு மற்றும் இதர பழக்க வழக்கங்களை அலசி ஆராய்ஞ்சி, அதுகளைச் சரி செய்யணும். எம்புருசனும் கச்சேரிக்குப் போறாங்கிற கதையா, ஊரு சனத்துக்கு முன்னாடி நான் உடம்பைக் குறைக்கிறேன், உடம்பைக் குறைக்கிறேன்னு கூவிகிட்டு மூக்குமயிர் பிடுங்குறதால, ஒருத்தர் பாரம் குறையவா போகுது?!

காந்தளஞ் சென்னியன் கடவு மாமயில்
கூந்தொறுங் கூந்தொறுங் குலைந்து பஃறலைப்
பாந்தளங் கசைதலும் பசலை மூக்கினால்
ஆய்ந்திடு கின்றன அகிலங் குத்தியே.

மூக்குடை அலகினால் முகிலைக் கீறியே
ஊக்கொடு பரலென உருமுப் பற்றுமால்
தீக்கிளர் வன்னதோர் செய்ய சூட்டுடைக்
கூக்குரல் வாரணங் கொடிய தாகையால்.

இப்படி நிறையப் பாடல்கள் தமிழ்ல இருக்கு. பறவைகளோட மூக்கு இருக்கிற அலகோட ஒப்புமைப்படுத்தி ஒன்னை வர்ணிக்கிறது. சில சமயங்களில் வெறுமை மேலோங்கும் போது, பறவைகளானது தனது மூக்கிருக்கிற அலகால எதையாவது போயிக் குத்தும், குடையும், உரசும்...

அலகைக் கூர்மையாக்க அது அப்படிச் செய்யுதுன்னும் சிலர் சொல்றாங்க. சிலர், அதுல ஆரம்பிச்சி, அதுக்கு அது ஒரு வாடிக்கையாவே ஆயிடிச்சுன்னும் சொல்றாங்க! இதைப் பார்த்த பெரியவங்க, அதை ஒரு சொலவடையாவே ஆக்கிட்டாங்க!!

ஆமாங்க, மூக்கை நுழைத்து மூக்குடைபட்டு வந்தான் அப்படீன்னு எழுத்தாளர்கள் எழுதிப் பார்த்திருப்பீங்க நீங்களும். ஆங்கிலத்துலயும், keep your nose out of itனு சொல்றது உண்டு.




Yes, I got to keep my nose clean first!

10/09/2009

ஆறை நாட்டானின் அலம்பல்கள் - 5!

என்னுடைய நெருங்கிய பொட்டிதட்டி ஒருத்தர் நாமக்கல்; அவர் கடுமையாச் சொல்லிட்டாரு. டேய், நீ கீழ்க்கரைப் பூந்துறை, வடகரை நாடு, கிழங்கு நாடு, கருவா நாடுன்னு போடுறதை எல்லாந் தினமும் உன்னோட பக்கத்துக்கு வந்து பார்த்திட்டு இருக்க முடியாது. இன்னைக்கு எந்நேரம் ஆனாலும், எங்க வாழவந்தி நாட்டைப் பத்திப் போடுற; இல்லே? மவனே திங்கக்கிழமை தட்டுறதுக்கு பொட்டி இருக்காதுன்னு கூப்ட்டு மிரட்டிட்டாருங்க! பொட்டி போனாப் போகுது, மூக்கு பத்திரமா இருக்கணுமே? அதான், வாழவந்தி நாடு இன்னைக்கு!

வாழவந்திங்ற ஊரை மையமா வெச்சி இந்த நாடுங்க. ஆனா, வாழவந்திக்கு ரெண்டு உபநாடுகள். முதலாவது, தூசூர் நாடு! ரெண்டாவது விமலை நாடு. நாமக்கல், அரூர்க்காரங்க நம்ம திண்ணைக்கு அடிக்கடி வந்து போறவிங்களும் இருக்காங்க. ஆகவே, மொதல்ல தூசூர் நாடு!


மருவுநிலவு தூசியூர் குவளமா பட்டியுடன்
வளம்பெரிய தோகைநத்தம்
வளர்சிதம் பரபட்டி முத்தக்கா பட்டியும்
வருபழய பாளயமுடன்
தருநிலவு வேப்பையும் வசந்தரா யன்கோயில்
தருலத்தி வாடிபரளி
தாதுநிலவு பொன்னேரி புதுபட்டி புதுக்கோட்டை
தங்குமாலப் பட்டியும்
விரிவுமிகு நாமக்கல் கோடங்கிபட்டியும் வெற்றி
சீரங்க நல்லூர்
வீறானதிபிரமா தேவி யெருமைப் பட்டி
வீரசோழரசை நத்தம்
திருவுலவு ரட்டையும் பட்டிமேட் டுப்பட்டி
சீர்கொள்ளு மருவூருடன்
செய்ய புத்துர்ரலங் காநத்த முஞ்சேர்ந்து
செய்தூசூர் நாடுதானே!

தூசியூர், குவளம்பட்டி, தோகைநத்தம், சிதம்பரப்பட்டி, முத்தக்காபட்டி, பழயபாளயம், வேப்பநத்தம், வசந்தராயன் கோயில், லத்திவாடி, பரளி, பொன்னேரி, புதுப்பட்டி, புதுக்கோட்டை, பாலப்பட்டி, நாமக்கல், கோடங்கிபட்டி, நல்லூர், திப்பிரமாதேவி, எருமைப்பட்டி, அரசநத்தம், ரட்டயம்பட்டி, மேட்டுப்பட்டி, அரூர், புத்தூர், அலங்காநத்தம்னு ஆக மொத்தம் இருபத்தி அஞ்சு ஊருக தூசியூர் நாட்டுல!

பூவோட சேர்ந்தா நாரும் மணக்கும்னு சொல்வாங்க அல்ல? அது போல, வாசிங்டன் மாநகர் தமிழ்ப் பெரியவர்களோட ஒரே ஒரு நாள், கூட இருந்ததுக்கே என்னா பெரிய சிறப்பு நமக்கு வந்து சேர்ந்து இருக்குன்னு பாருங்க மக்களே!

உலகில் வலிமையும் ஓங்கிய செல்வமும்
இலகும் அமெரிக்க எழில்சேர் நாட்டில்
வாசிங்டன் டீசி வளமார் நகரில்
நேசமும் அன்பும் நிலவிடத் தமிழர்
தம்மொழிப் பற்றும் தாயகப் பாசமும்
செம்மை யாகச் செழித்திடும் வகையில்;
பற்பல ஊரினர்; பற்பல துறையினர்;
பற்பலப் பணியினர்; பரிந்தொரு மித்துத்
தமிழுக்கு ஆங்கோர் சங்கம் வைத்தே
அமிழ்தாம் மொழிக்கு ஆக்கம் சேர்க்க,
திரைகடல் ஓடியும் செந்தமிழ் வளர்க்கும்
முறையினில் அன்பர்கள் முழுமூச் சுடனே
எண்ணினர்; கூடினர்; இனிதாய் மழலைகள்
பண்ணரும் தமிழைப் பயின்றிட வகுப்புகள்,
நடத்து கின்றனர்; நற்றமிழ் இலக்கியம்
படித்தே ஆய்வுகள் பல்லோர் குழுமி
கருத்துரை யாடியும்; கசடறக் கற்றும்;
ஒருமித்துப் பொருளை உணர்ந்தே மகிழ்வர்;
பெறற்கரும் நல்லார் பிரபா கரனெனும்
திறனுடை யாரின் தேர்ந்தநல் தலைமையில்
எல்லையில் ஆர்வலர் இராம சாமியும்;
செல்லை யாவும்; செந்தில் முருகனும்;
மணிவா சகமும் மாண்புடை செயந்தியும்
அணிசேர் பாஸ்கர் அன்பர் சாமியும்
பீற்றர் மற்றும் பீடுடைப் பெற்றியர்;
வாட்டமில் இளைஞர் வலம்பெறு துணையுடன்
செயற்கரும் செயலைச் செய்து முடிக்கும்
முயற்சி தளரா மொய்ம்புடை உறுப்பினர்
அத்துணை பேரும் ஆழிசூழ்
இத்தரை மீதினில் இனிதாய் வாழ்கவே! "

02 அக்டோபர் 2009

அன்புடன்,
புலவர் வெ.இரா.துரைசாமி,
கல்வெட்டு ஆராய்ச்சியாளர்.

சொந்தக்கதை ஒன்னு சொல்லாமப் போனா, நீங்க கோவிச்சுகுவீங்க அல்ல? அதான், அம்மணிய மடிக்கிறதுக்கு எடுத்து விட்டதுல உங்க பார்வைக்கு ஒன்னு!

மாண்டு மடிஞ்சாலும்
மடிஞ்சழிஞ்சு போனாலும்
மாண்ட எடத்துலதான்
மல்லியப் பூவாவேன்
உனக்கு!
செத்து மடிஞ்சாலும்
சீரழிஞ்சு போனாலும்
செத்த எடத்துலதான்
செவ்வந்திப்பூ நானாவேன்
உனக்கு!

10/08/2009

ஆறை நாட்டானின் அலம்பல்கள் - 4!

அவனாசி சாலை ஓரத்துல, குரும்ப பாளையத்துக்கும் அரசூருக்கும் நடுவில் இருக்கும் அழகான சிற்றூர்தாங்க, செங்கோட கவுண்டன் புதூர். அந்த ஊரில் வாழ்ந்த காலம் என் வாழ்க்கையில மறக்க முடியாத நாட்கள். பல கோவில்களுக்கும் மத்தியில் அமைஞ்ச ஊர்தான் அது.

வருசா வருசம், எதோ ஒரு ஊர்ல ஒரு நோம்பி வந்திடும். குறிப்பா, கோடைகாலத்துல குதூகலந்தான். அரசூர் மாரியம்மன் கோயில், முத்துக்கவுண்டன் புதூர் மாகாளி அம்மன் கோயில், அருகம்பாளையம் காளியம்மன் கோயில், உள்ளூர்ல தங்கநாயகி அம்மன் கோயில் இப்படி....

ஒரு மண்டலத்து நோம்பி, மூனு கிழமை(21 நாட்கள்) நோம்பின்னு வகை வகையாக் குறிப்பிட்டுச் சொல்வாங்க. முதல்ல நோம்பி சாட்டுவாங்க. அப்பறம் ஊர்த்தலைவர் கம்பம் போடுவாரு. கம்பம் போட்டவின்னாடி, அந்த மூனு கிழமையும், சாயங்காலம் சாயங்காலம் கம்பஞ் சுத்தி ஆடுவாங்க.

கொடுமுடி, செஞ்சேரின்னு போயித் தீர்த்தம் கொண்ட்டு வந்து சாமிக்கு படைப்பாங்க. நோம்பி அன்னைக்கு காலையில தீ மிதிக்கிறது, தேர் இழுக்குறது, விளக்கு மாவு, முளைப்பாரி, பூவோடு எடுக்குறதுன்னு கோலாகலமா இருக்கும். கடைசியா சாமி சப்பரம் எடுத்து, மஞ்சத்தண்ணி ஊத்துற வைபவமும்.

இதுல நாம கம்பஞ் சுத்துற பேர்வழிங்க. எங்க நோம்பின்னாலும் வங்கணனுக கூடச் சேந்துட்டு ஏழெட்டுப் பேராக் கிளம்பீருவோம். அங்க போயி வாத்தியத்துக்கு ஏத்த மாதர ஆடி, வேடிக்கை பாக்க வந்த அம்மணிககிட்ட பேர் வாங்குறதுல ஒரு குதூகலம்! மேழியாட்டம், தயிர் சிலிப்பி, தொக்குமிதின்னு அதுக ஒவ்வொன்னுக்கும் ஒரு பேரு இருக்கு.

முதல்ல ஒருத்தர், வாசல்ல இருக்குற அந்த தீபம் எரியுற கம்பத்துக்கு கீழ நின்னுட்டு சாமியப் பாத்து, பாட்டு அடிகளை ஒவ்வொன்னாக் கூவ, கூடி இருக்குறவங்க ‘சபாசு’ சொல்வோம். கடைசியில, போடுறா மத்தளத்தைன்னு முடிக்கவும், பறை அடிக்கிறவங்க எதோ ஒரு தாளத்துக்கு அடிப்பாங்க. அதைச் சரியாப் புரிஞ்சுட்டு, கூடி இருக்குறவங்க எல்லாம் கணக்குத் தப்பாம ஆடணும். இப்ப நினைச்சாலும், ஆடணும் போலவே இருக்கு; சரி ஒரு பாட்டைப் பாக்கலாம் வாங்க!


சின்ன முத்தாம் சிச்சிலுப்பை
சபாசு

சீரான கொப்பளிப்பான்
சபாசு

வண்ண முத்தாம் வரகுருவி
சபாசு

வாரிவிட்டா தோணியிலே
சபாசு

மாரியம்மா தாயே நீயி
சபாசு

மனமிரங்கித் தந்த பிச்சை
சபாசு

தற்காத்து நீகுடும்மா
சபாசு

உஞ்சன்னதிக்கு நாங்கதான வந்திடுவோம்
சபாசு

எங்கூரு மக்களைத்தான்
சபாசு

காப்பாத்த வேணுமின்னு
சபாசு

தனிச்சு அடிச்சா கூடாரம் எங்கமாரி
சபாசு

மாரிக்கு நல்லா நாங்க சீர்வரிசை
சபாசு

சிறப்பாச் செய்திடுவோம்
சபாசு

மாரியுந்தான் மனமிறங்கி மனசுவெப்பா
சபாசு

இப்பப் போடுகணக்கா மத்தளத்தை!
இப்பப் போடுங்கையா மத்தளத்தை!!

சொல்லி முடிச்சதுதான் தாமதம், பறை அடி காதைப் பொளக்குமில்ல! நாங்களும் சாமந்தாண்டி வெடியற வரைக்கும் ஆடுவம்ல?! என்னா சொகமான வாழ்க்கைடா சாமி!

நாம போடுற ஆட்டத்துக்கு அம்மணி கெரங்குச்சா இல்லையாங்குறது, ஆடி முடிச்சவுட்டு குடிக்கிறதுக்கு நீட்டுற சொம்புல தெரிஞ்சிடும்ல?! சொம்பு எதுவும் நீட்டுப்படாம, நாமளாப் போயித் தண்ணி கேக்குற சூழ்நிலைன்னா, நம்ம ஆட்டம் அன்னைக்கு எடுபடலைன்னு அர்த்தம்! இஃகிஃகி!!

சரி சரி, ஈரோட்டு மாப்பு கோவிச்சுக்குவாரு, வாங்க மேல்க்கரை பூந்துறை நாட்டுல எந்தெந்த ஊருக வருதுன்னு பாக்கலாம் இன்னைக்கு!


பூந்துறைசை வெள்ளோடை நசியனூ ரெழுமாதை
புகழ்சேர்ப் பாரிநகரம்
பூங்கமழு மீங்குயூர்பெ ருந்துறை சாத்தனூர்
பொன்காள மங்கலமதும்
ஆய்ந்ததமிழ் கூறுங் குழாநிலை கிழாம்பாடி யாண்மை
கொண்மு டக்குறிச்சி
யநுமரகர் பழமங்கை குளவிளக் குக்காக மறச்சலூர்
விளக்கேத்தியும்
வேந்தர்மகி ழீஞ்சநகர் சத்திமங்கலமதும் மிக்கசே
மூர்மங்கலம்
வீரநகரீரோடு பேரோடு சித்தோடு மிக்கான
திண்டற் புதூர்
சேர்ந்துமழை பேய்ந்தருளி மிலவமலை திருவாச்சி
திகழ்பனசை யோடாநிலை
தென்முருங் கைத்தொழுவு முப்பத்தி ரண்டூர்சி
றந்தபூந் துறைசை நாடே!

பூந்துறை, வெள்ளோடை, நசியனூர், எழுமாத்தூர், பிடாரியூர், ஈங்கூர், பெருந்துறை, சாத்தம்பூர், சாளமங்கலம், குழாநிலை, கிழாம்பாடி, முடக்குறிச்சி, அநுமன்பள்ளி, பழமங்கலம், குளவிலக்கு, காகம், அறச்சலூர், விளக்கேத்தி, ஈஞ்சம்பள்ளி, சத்தி, சேமூர், மங்கலம், வீரகநல்லூர், ஈரோடை, பேரோடை, சித்தோடை, திண்டல்புதூர், இலவமலை, திருவாச்சி, பனயம்பள்ளி, ஓடாநிலை, முருங்கைத் தொழுன்னு ஆக மொத்தம் முப்பத்தி ரெண்டு ஊருக!

நாளைக்கு கீழ்க்கரைப் பூந்துறை நாடு பார்க்கலாஞ் செரியா? இன்னைக்கு ஈரோட்டு மாப்புக்கு வெச்ச ஆப்பு என்ன? நீங்க தெரிஞ்சிக்க ஆர்வமா இருப்பீங்க இல்லையா?! அப்ப, மேல படீங்க!!

“மாப்பு, நான் கேட்டது இன்னும் வந்து சேரலையே?”

“நாளை அனுப்புகிறேன்!”

“நாளை, நீங்க என்ன அனுப்புறது? அதுபாட்டுக்கு வெடியுது; சாயங்காலம் ஆவுது. இப்படித் தானா, கிரமமா அது வந்து போய்ட்டுதான இருக்கு? நீங்க என்ன வெங்காயம், அதை அனுப்புறது??”

“அய்யோ, அய்யோ, தினமும் உங்ககூட என்ன இழவாப் போச்சு எனக்கு! நாளைக்கு அனுப்புறேன் செரியா?”

”இப்பச் சொன்னது செரி!”


இறங்கு பொழுதில் மருந்து குடி! இங்க பொழுது எறங்கி வெகு நேரமாச்சு, நான் வாறேன்! எங்கப்பா இங்க வெச்ச அந்த பாட்டுலைக் காணம்?!

10/07/2009

ஆறை நாட்டானின் அலம்பல்கள் - 3!

மூஞ்சியப் பாரு, மொகரக் கட்டையப் பாரு; மொகானூர் முச்சந்தியில செருப்படி வாங்குனவனாட்டவே இருக்குறாம் பாரு!! இப்படியெல்லாம் நாளொரும் பேச்சும், பொழுதொரு திட்டுமா வாங்கிட்டு குதூகலமா இருந்த பூமிதாங்க, வாரக்க நாடு!

ஆமாங்க, நாம என்னதான் பெருமைமிகு ஆறை நாட்டு மண்ணுல பொறந்து இருந்தாலும், வளர்ந்தது, படிச்சது எல்லாமும் வாரக்க நாட்டுல இருக்குற வாகத்தொழுவு வேலூர், சலவநாயக்கன் பட்டிப் புதூர்லதாங்க! தினமும் நாலு மைல் தொலைவு தோட்டங்களுக்குள்ள பூந்து பூந்து, இட்டேரி வழியாத்தான் பள்ளிக்கூடம் போறது. அப்ப, சன்னமா அல்லக் கண்ணுல அம்மணிகளைப் பாத்தாலே போதும், மேல சொன்ன மாதர அர்ச்சனைக எல்லாம் வாங்க வேண்டி இருக்கும்.

ஒரு சொல்லு, பதிலுக்கு சொன்னாப் போச்சு! மடமடன்னு, அம்மணிகெல்லாம் ஒன்னு கூடித் தூத்துவாங்க பாருங்க, ரொம்ப நல்லா இருக்கும். நாங்க அதுகளைக் கேட்டு இரசிப்போம். ரெண்டு நாள் அப்படி இப்படிப் பேசுவாங்க, மூனா நேத்து நெல்லிக் காய் இருக்கு வேணுமான்னு வாஞ்சையாக் கேட்பாங்க. இஃகிஃகி!!

செஞ்சேரி மலைத் தேருக்கு போனாக்க, வாங்கி வந்த கரும்புல மறக்காம ஒரு சல்லை கொண்டு வந்து குடுப்பாங்க. மாலை கோயிலுக்குப் போனவங்க, தேர் முட்டாய் கொண்டு வந்து குடுப்பாங்க. நாம, நம்ம பங்குக்கு, எப்பவாச்சும் எடுக்குற அடுக்குத் தேன்ல ஒரு ரட்டு அவங்களுக்குத் தாறதுதான்! சரி..சரி.. வாங்க, வாரக்க நாட்டுல எந்தெந்த ஊருகெல்லாம் வருதுன்னு பார்க்கலாம்!


பூமேவு தென்சேரி திருவளர் களந்தையும்
கழ்கொண்ட பல்லடமுடன்
பூமலூரழகாய பேறைமா நஅகரமும்
புகல்குயிலை
சூரவூரும்
தேமேவு சோலைசெறி சாமளா புரமெழிற்
செய்புதுவை வெள்ளலூரும்
திரமான கோடிநகர் மங்கலம் வாகையொளிர்
சேர்நிகம மாவலூரும்
பாமேவு வாணிகுடி கொண்டிலகு மிரவலர்கள்
பகரவரி தாயபுத்தூர்
பன்னுமறை யந்தணர்கள் வாழ்விற் செழித்திடும்
பழமைமிகு சிங்கநல்லூர்
மாமேவு செந்தாமரைப் பொய்கை யுங்காஞ்சி
மாந்திவயங்கு மேலாம்
மாநிலம் புகழ்மந்திர கிரிமுருகர் வாசஞ்செய்
வாரக்க நாடுதானே!

தென்சேரி, களந்தை, சூரவூர், நி(நெ)கமம், பேறை, குயிரை, பூமலூர், பல்லடம், சாமளாபுரம், புதுவை, வெள்ளலூர், கோடிநகர், மங்கலம், ஆவலப்பூம்பட்டி, புத்தூர், கீழ்ச் சிங்காநல்லூர்னு, ஆக மொத்தம் பதினாறு பேரூர்கள் கொண்டதுதாங்க வாரக்க நாடு!

ஆமாங்க, நெகமமும் செஞ்சேரியும் முக்கோணத்துல ரெண்டு மொனையின்னா, மூனாவது மொனைதாங்க வீதம்பட்டி வேலூர். கூடவே, துவால்த் துணியும், துப்பட்டி கதையும் எழுதலாமுன்னு இருந்தேன். ஆனா இன்னைக்கு வேலையிலயே ஒருபாடு நேரம் ஆயிப் போச்சு மக்கா! நாளா மக்காநாள் பார்க்கலாஞ் செரியா?!

10/06/2009

ஆறை நாட்டானின் அலம்பல்கள் - 2!

வணக்கம் மக்கா! நேற்றைக்கு ஆறை நாட்டைப் பார்த்தாலும் பார்த்தோம், ஆளாளுக்கு எங்க ஊர் எந்த நாட்டுல வருதுன்னு கேக்க ஆரம்பிச்சிட்டாங்க பாருங்க. எந்தஊர் எந்த நாட்டுலன்னு பாக்குறதுல கூட ஒரு சுவாரசியந்தேன். கூடவே, திலுப்பூர் அக்காவிங்க நான் போட்ட் புதிரையும் விடுவிச்சுப் போட்டாங்க என்ன?

இதுக்கு நடுப்புல, தாராவரத்துகாரர் வந்து வம்புதும்பைக் கோடி காமிச்சுட்டு போறாரு. வம்பு நம்ம அல்லாருத்துக்கும் தெரியும். அதென்ன தும்பு? அய்ய, பண்டங்கன்னுக கழுத்துல கட்டுற தும்பு இதில்லீங்கோ! தும்புன்னா, குசுகுசூ.. குசுகுசூ... ன்னு பேசறதுதான், Gossip, அடுத்தவங்களுக்கு செரமம் தாற மாதிரியான வீண் பேச்சுக! அதான், வம்புதும்புக்கு போக மாட்டாங்கங்றது!!

அப்பறம் இன்னொரு பொன்னான் வந்து, எங்க ஊரான பொட்டையம் பாளையம், அதான் பொட்டிக்காம் பாளையம் எந்த நாட்டுல வருதுன்னு கேட்டுச்சு. அதான், அந்த ஊர் அடங்குன பொன்கலூர் நாட்டைப் பத்தின விருத்தம்:



பொங்கலூர் கொடுவாயி செம்பை குன்றாபுரம்
புற்றிரைசை யுகாயனகரம்
புகல்பொருந்தா புரி திருப்பையூருடனேற்
புகழ்பெரும் பிள்ளை நகரம்
தங்குமிச்சிக் காணி வானவன் சேரியொடு தளிகைநிறை
யங்கிநகரம்
சாரரவண் நல்லூர்பல் லாபுரி குடிமங்கை
தகைமையுட னோதுதென்னா
மங்கலந் தென்பள்ளி லக்கர் பெற்றம்பள்ளி வாய்த்தநம
நாரியெழில்சேர்
மண்ணறை முகுந்தநல் லூரமுக் கயங்கற்றை
மாலூற்றலூர் சிறந்த
புங்கமிகு காஞ்சிநதி லவணநதி யாண்கொல்லி
புராரிநதி மாமாங்குசூழ்
பூர்வீக வலகுமலை யாண்டவன் அரசுபுரி
பொன்கலூர் நாடுதானே!

பொன்கலூர், இச்சிக்காணி, தென்னமங்கலம், கொடுவாயி, அலகுமலை, தென்பள்ளி, செம்புத்தொழு, தளிகை, இலக்கம்பாடி, சொக்கம்பாளையம், அவினாசிபாளையம், பெற்றம்பள்ளி, குன்றிடம், நிறையூர், நமனாரி, புற்றிரைச்சல், அங்கித்தொழு, மண்ணறை, உகாயனூர், அரவணநல்லூர், நல்லூர், பெருந்தொழு, பல்லாக்கோயில், அமுக்கயம், திருப்பூர், பொட்டிக்காம்பாளையம், கற்றாங்காணி, பெரும்பிள்ளையூர், குடிமங்கலம், ஊற்றுக்குழின்னு ஆக மொத்தம் இருபத்து ஏழு ஊருக!

அப்படித்தான் பாருங்க கண்ணூ, திண்டுக்கல் நாகல்நகர்ல நமக்கு ஒரு வங்கணன் (நண்பன்) இருந்தான். சூலூர்ல, அவுங்க சித்தப்பன் ஊட்ல இருந்து வேலைக்கு எங்கூட வருவான். ஒருநா, எங்கூட்டுக்கு வந்திருந்தப்போ எங்கம்மா சொன்னாங்க, உங்க அண்ணன் மத்தியான சோத்துக்கு வந்தவன் தலைக்கு எண்ணெய் வெச்சும் வெக்காமப் போயிட்டானடா அப்படீன்னு. நானுஞ் செரின்னு கேட்டுகிட்டேன்.

கூட வந்தானே, நம்ம வங்கணக்காரன் சிவப்பிரகாசம், ஒன்னுந்தெரியாம திருட்டாட்டு முழி முழிக்கிறான். என்னடா சங்கதின்னு கேட்டதுக்கு திலுப்பிக் கேக்குறான், மத்தியான சோத்துக்கும் தலைக்கு எண்ணெய் வெக்கிறதுக்கும் என்ன சம்பந்தமுன்னு? அப்பத்தான் எனக்கு புரிஞ்சது, ஏன் அவன் அந்த முழி முழிக்கிறானுன்னு!

ஆமாங்க, அவசரமா வெளில கிளம்பிப் போறதை எங்க கொங்கு நாட்டுல சொல்றது, தலைக்கு எண்ணெய் கூட வெக்காமப் போறான் அவன் அப்படின்னு! இஃகிஃகி, நீங்க எங்க தலைக்கு எண்ணெய் கூட வெக்காமக் கிளம்புறீங்க இப்ப? இருந்து எதனாப் பின்னூட்டம் போட்டுட்டு போவிங்களாமா, சித்த!


அங்கண என்னன்னு கேட்டாக்க, வங்கணச் சிறுக்கி வாடுதேன்னானான் இவன்!

10/05/2009

ஆறை நாட்டானின் அலம்பல்கள் - 1!

இது வேறயா? தமிழ்நாட்டுல இருக்குற பிரிவினை பத்தாதாடா? பழசையெல்லாம் தோண்டித் துழாவி, மெம்மேல கூறு போடணுமா? இப்படியெல்லாம் உங்களுக்கு மனசுல நெனப்பு வரலாம்; வராமலும் போகலாம்! ஆனா, நாங்க அலசுறதை, அலசித்தான ஆகணும்?

கொங்கு செழித்தால், எங்கும் செழிக்கும்! கொங்கு மலிந்தால், எங்கும் மலியும்!! இது நானா சொல்வது அல்லங்க; சங்ககாலப் பழமொழி! கொங்குநாட்டான் அப்படீன்னா ஒரு தனியிடம் எந்த சபையிலும் உண்டு!

நெருக்கடி காலத்துல காரோட்டி உசுரைக் காப்பாத்தினது ஆகட்டும், எங்கும் கோலோச்சி எவரும் அசைக்க முடியாத இராமாவரம் தோட்டத்துக்குள்ளவே புகுந்து மிரட்டினதா இருக்கட்டும், அறிவியல் கண்டுபிடிப்புகளா இருக்கட்டும், அதுல கொங்கு நாட்டுக்கு ஒரு தனியிடம் இருக்கத்தான செய்யுது?!

காரணம் என்ன? வம்புதும்புக்கு போக மாட்டாங்க; தானதர்மம் நெறயவே செய்வாங்க; விருந்தோம்பலுக்கு இலக்கணமா இருப்பாங்க; சமத்துவம் பேணுவாங்க; குழைந்தையக் கூட, வாங்க கண்ணூன்னு மரியாதையா அழைப்பாங்க...

அதான், கூடியிருக்குற பொட்டி தட்டிகள்ல இருக்குற ஒரு பொட்டி தட்டியப் பார்த்துக் கேட்டானாம் வெள்ளைக்காரன், are you from Coimbatore by any chance?னு. எல்லாம், அவனைப் பாத்து அந்த பொட்டிதட்டி கத்தினதுதான் காரணம். ஆமாங்க, அந்த பொட்டிதட்டி, “Will you please set-up'nga, please?"னு கோவத்துல கூட குழைஞ்சுதாம்!

கொங்குநாட்டுல 30க்கும் மேற்பட்ட வேளிர்கள் இருந்ததாக கொங்கு சதகம் சொல்லுது. அதுல, எந்த சிற்றரசுக்கு கீழ நான் பிறந்த மண் வருதுன்னு ஒரு அலசல்... அதுல கிடைச்சதுதான், இந்த ஆறை நாடு பற்றின விருத்தம்.


சேவைநக ரன்னியூர் வெள்ளாதி கோமங்கை திசை
புகழவாழ் முடுதுறை
தென் கவசை துடியலூர் நீலநகர் பேரையொடு
தெக்கலூர் கரை மாதையும்
மேவுபுக ழவிநாசி கஞ்சை கானூர்கரவை வெண்பதியு
மிருகா லூரும்
விரைசேரு முழலையொடு வடதிசையி லுறுகின்ற
வெள்ளையம்பாடி நகரும்
நாவலர்க் கினிதான திருமுருகு பூண்டியொடு
நலசெவளை பழனைநகரும்
நம்பியூ ரோடெலத் துருக்கிரம் புலவர் நகரமுட
னினிமையான
கோவினகர் தொண்டைமான் புத்தூரு முட்டமே கூடலூர்
சிங்கநகருங்
குடக்கோட்டூர் குள்ளந்து றைப்பதியு வாள்வந்தி
கோட்டைகரை யாறைநாடே!

இதுல மொத்தம் 35 ஊர்கள் அடங்கி இருக்குங்க. நான் பிறந்த மண், மொதல் வரியிலயே இருக்கு. ஆமாங்க, கோமங்கலம் புதூர்ல இருந்து ரெண்டு மைல் தள்ளி இருக்குறதுதான் எங்க ஊரான அந்தியூர். இஃகி!

ஆறை நாட்டுக்காரன்னா நீ பெரிய வெண்ணையா? அப்படீன்னு ஒடனே எகுறுவீங்களே? நாங்க அப்படியெல்லாம் நடந்துக்கவே இல்லை. அமைதி! அமைதி!! ஆனா ஏன் அப்படி சொல்லுதோம்?

அதுக்கு முன்னாடி, கொங்குநாட்டுக்கும் வெண்ணெய்க்கும் ஒரு தொடர்பு இருக்கு?? ஆமாங்க, வெண்ணெய்ன்னா அது ஊத்துக்குளிதாங்க. இரயிலெல்லாம் கூட அங்க பிரத்தியேகமா நின்னு வரும் தெரியுமா?

சுலுவுல சிக்காத, கடைஞ்செடுத்தால் மட்டுமே கிடைக்கக் கூடிய வெண்ணெய் மாதிரியான, அரிதான ஆள் அவன் அப்படீன்னு உவமைப்படுத்திச் சொல்றதுதாங்க அது. வெண்மையான நெய்; வெண்ணெய்! அதுவே, வெண்ணைன்னும் புழக்கத்துல வந்திடுச்சி! ஆனா, வெண்ணைன்னா, வெண்மையான நெல்.

வெண்ணையப் பத்தி பேசிட்டு, வெங்காயத்தைப் பத்திப் பேசாட்டா குத்தமாயிடாது? அதுவும், கொங்குநாட்டுல இருக்குற ஈரோடைல இருந்து வந்ததுதான்ங்றது சொல்லித் தெரிய வேண்டியதில்லை! உயிரில்லாத, விதையில்லாத, வெறும் சதைப் பிண்டமானதுன்னு நையாண்டி செய்யுறதுக்கு அதை ஈரோட்டுக்காரர் புழங்கவே, அது பிரசித்தம் ஆயிடுச்சி. என்னா பெரிய வெங்காயம்? வெங்காய தேசியம்... இப்படியெல்லாம் போகும் அது!

வெங்காயமோ, வெண்ணெயோ.... நாம போயி பொழப்பு தழைப்பைப் பார்த்தாதான் நம்ம வண்டி ஓடும்... வாங்க போலாம்!

10/04/2009

பள்ளயம் 10/04/2009

வணக்கம்! பள்ள(ளை)யம் தொடரில் மீண்டும் உங்களை எல்லாம் சந்திப்பதில் பெருமகிழ்வு கொள்கிறேன். பள்ளயம் என்பதின் பொருள் அறிய விழைவோர், எமது இந்த முந்தைய இடுகையினைப் பார்த்துத் தெரிந்து கொள்ளவும்.

---------------------------

நான் எப்படியும் தினம் ஒரு முறையாவது கூகுள் மடல் பேழைக்கு வர்றது உண்டு. வரும் போது, மின்னாடல்த் தெரிநிலையில, இருப்பைக் காண்பிச்சுக்க மாட்டேன்; மாறா உள்ளிரு(invisible)ப்பா இருக்குறதுதான் வழக்கம்! எப்பவாவது ஒருவாட்டி பச்சை வண்ணம் மிளிர விடுவேன். அப்படிதாங்க, நேற்றைக்கு ஒளிரவிட்ட மறு வினாடியே, ‘ப்ளுக்’னு மின்னாடல் பெட்டி மேலெழும்புச்சு!

“நீங்களும் கதிரும் சொந்தக்காரங்களா?”

“ஆமாங்க!”

“எப்படி சொந்தம்?”

“தூரத்து சொந்தம்!”

“அப்படின்னா?”

“அவர் ஈரோட்டுல இருக்காரு; நான், சார்லட், அமெரிக்கால இருக்கேன்!”


அவ்வளவுதான், ஆளே காணோம்! என்னங்யா இது? முன்பின் அறிமுகம் செய்துக்காம உள்ள வந்து கேள்வி கேட்பீங்க...அப்புறம் போயிடுவீங்க... குறைந்தபட்சம் வணக்கமாவது சொல்லிப் பழகுங்கய்யா!


---------------------------

அப்படித்தான் பாருங்க, போன வாரம் வாசிங்டன் போயிருந்தப்ப ஆசான், உயர்திரு. கொழந்தைவேல் இராமசாமி ஐயா அருமையான ஒரு பற்றியம் சொன்னாரு. பொதுவா, இது இந்தியர்களுக்கே உண்டான பழக்கந்தான்.

சக ஊழியர்கள்கிட்டவோ, உயரதிகாரிகள்கிட்டவோ ஒன்னை செய்யச் சொல்லும் போது, ஆங்கிலத்துல ‘Please'ங்ற பதத்தை நாம பாவிப்போம். Kindly do the needfulன்னுவோம். அந்த பதத்தைத் தட்டும் போதே, மனசுல தயவு கூர்வது மாதிரியான ஒரு பணிவு மனசுல தோணுதுதான். அதே நெனப்புல மடலையும் தட்டி வுடுறோம்.

ஆனா, மறுபக்கம் அவன் அதை எப்படி எடுத்துக்குறான்? அது அவனோட பதவியின் நிலையப் பொறுத்து மாறுபடுது. சக நிலையில் இருப்பவனோ, அல்லது கீழ இருக்குறவனோ ஆயிருந்தா பரவாயில்லை. அதே, ஒரு உயரதிகாரியா இருந்தா அதனோட தொனி மாறுபடும். அது உங்களுக்குத் தெரியுமா? உதாரணம்: Please approve my vacation!

தூக்கிவாரிப் போடுதுல்ல? நீங்க என்னதான் ‘please'னு பரிஞ்சி எழுதினாலும், அது அவனை, அதைச் செய்ங்ற தொனியிலதான் இருக்கு! It's more of a direct and demanding. Rather, say, "Will you please approve my vacation when you get a chance?".

”தயவு கூர்ந்து செய்யவும்!” இது நேரிடையா இருக்காம்; ஆகவே மக்கா, ”தங்களுக்கு கால அவகாசம் இருக்கும் போது தயவு கூர்ந்து இதைச் செய்ய முடியுமா?” அப்படீன்னு குழையத் தெரிஞ்சுக்குங்க!

நான் போயி, என்னோட சகாவான Quient Pieskyகிட்ட இதைப் பத்திப் பேசவும், அவன், yeah, we, buggers overused it in America; because of that, you got to work around! but you are alright!! அப்படீன்னான். இஃகிஃகி!!


---------------------------

காத்துல வெண்ணெய் எடுக்குற பய அவன்!
வெறுங் கையில மொழம் போடுற பய அவன்!
ஒன்னுக்கு ஊத்தி மீன் புடிக்கிற பய அவன்!
கோழி மொட்டுக்கு சுருக்கு வெக்கிற பய அவன்!
மொட்டத் தலைக்கு குடுமி வெக்கிற பய அவன்!
காத்துல காப்பி ஆத்துற பய அவன்!
எச்சிக் கையால காக்கா ஓட்டாத பய அவன!
பழசையெல்லாம் இடுகையாக்குற பய அவன்!
- - - - - - - - - - - - - - - - -
- - - - - - - - - - - - - - - - -
- - - - - - - - - - - - - - - - -

(மக்களே! எங்க, உங்களுக்கு தெரிஞ்சதை எடுத்து வுடுங்க பாக்கலாம்!)

---------------------------

ஆசானும் அண்ணனுமான, உயர்திரு நாஞ்சில் பீற்றர் ஐயா அவர்கள்கிட்ட இருந்து, நிறைய தெரிஞ்சிகிட்டேன். அதுகெல்லாம் பிரத்தியேக இடுகையா போடணும். அதுல ஒன்னை இன்னைக்குப் பார்க்கலாம். அவர் சொன்ன பின்னாடிதான், கனடாவுல நடந்த ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது.

ஃபிரான்சிஸ் பெர்னாண்டஸ்னு ஒரு நண்பன், யார்க் பல்கலைக் கழகத்துல என்னோட படிச்சான், நெருங்கிய நண்பன், கோவக்காரன் அல்ல; அவன் கோவாக்காரன். நான் படிப்பை முடிச்ச கையோட அமெரிக்காவுக்குள்ள வந்துட்டேன். அவன், கனடிய நடுவண் அரசுக்கு வேலை பாக்கப் போயிட்டான். இன்னும் அங்கதான் வேலை!

வேலை பார்க்குற எடத்துல பாதுகாப்புக் கெடுபிடிகள் அதிகம். இவனுக்கு அலுவலகத்துகுள்ள நுழையும் போதெல்லாம் அடிக்கடி பிரத்தியேக சோதனை; ஆய்வு, இப்படியான சிரமங்கள். காரணத்தை ஆய்ஞ்சி பார்த்ததுல தெரிஞ்சது, அவனோட உடல் தோற்றமும் அடையாள அட்டையில இருக்குற பேரும் பொருந்திப் போகாததுதான் பிரச்சினைன்னு. அப்புறம், ஃபிரான்சிஸ் குமார் பெர்னாண்டஸ் ஆயிட்டான். இப்ப, எந்த பிரச்சினையும் வர்றதில்லையாம்!

ஆக, ஒருத்தனுக்கு பூர்வீக அடையாளம் முக்கியம் மக்கா! கூடவே, கடந்து வந்த வரலாறும் முக்கியம்!! அதைப் போயிச் சிதைக்கலாமா? சிதைக்கலாமா?? நாம், நாமாக இருக்கிற வரையிலும், நமது நமக்கே!