8/31/2009

கனவில் கவி காளமேகம் - 16

நேற்றைக்கு இட்ட காணொளியப் பார்த்திட்டு, என்னுடைய 12 ஆண்டுகால நண்பர், வகுப்பறைத் தோழர், கனடாவில் இருக்கும் சண்டிலிப்பாய் சகோதரன் சதீசு எழுதி இருக்கிற கடிதம் பாருங்க மக்களே! சந்தடி சாக்குல jokerனு சொல்லிப் போட்டாரே? அவ்வ்வ்வ்வ்.............

இதுல வேற நான் உடம்பு போட்டுட்டன்னு சொல்லி... அடக் கடவுளே... நெசமாலுமே போட்டுட்டனா? அல்லது, அப்ப அவ்வளவு ஒல்லியா இருந்தனா?? நல்லா இருடாப்பா மகராசா....

************************************************
Hello Sir,

I was wondering how did you get this tremendous interest in Tamil and making poems, speaches and other research in Tamil. I saw you before like a joker, human, helper, friend etc .. but I did not imagine you have such potential and influence person on Tamil literacy and language. Once in a while I see your blog and read "palamoli" translations. Keep it up your work.

You have putup some weight it seems.

Thanks.
Sathis

************************************************

சரி, நாம விசயத்துக்கு வரலாம் வாங்க. இப்பதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி விமானத்துல இருந்து எறங்கி வந்தேன். பயணத்தின் போது வழக்கம் போல, ஏன் நம்ம பெரியவங்க தா, கொடு, அளி, ஈ, வீசு இப்படி பல சொற்களை ஒரே அர்த்தத்தைக் கொடுக்கிறதுக்கு வெச்சிருக்காங்கங்ற கேள்வி தோணிச்சு.

யோசனையால இருக்க இருக்கவே நித்திரை வந்திட்டுது. குறிப்பறிஞ்சு, நித்திரையில எண்ட அப்பிச்சி கவி காளமேகம் வந்திட்டாரென்ன? வந்து, ஏண்டாப்பா மண்டையிடியே? நாஞ்சொல்றன் உனக்கு விசியமண்டு, கதைக்க வெளிக்கிட்டாரென்ன?

நானுஞ் சொல்லிட்டுத்தான் போங்கோவனென்டு சொல்லைக்க, அவர் சொன்னவர், ”நாங்கள் காரண காரியமாத்தான் பிரிம்பா ஒன்டு ஒன்டுக்கும் ஒரு சொல் பாவிக்கக் கொடுத்து வெச்சம். நீங்கள்தான்டாப்பா, எல்லாத்தையும் ஒன்டாப் போட்டு குழப்பியடிச்சுப் பாவிக்கிறீங்கள் என்டு” சொன்னவர் அவர். பேந்து சொன்னார்,

”இந்த சொற்கள் அனைத்தும் இரத்தலுக்கு பாவிக்கும் சொற்கள். உயர்ந்தவன் இடத்தே இரப்பது ’ஈ’யென. ஒப்பானவன் இடத்தே இரப்பது (யாசிப்பது) ’தா’வென. வறியவன் இடத்தே யாசிப்பது ‘கொடு’வென. கொடையில் கருணையுடன் செயல்படுவது, ‘அளிப்பது’. கொடையில் கருணையற்றுச் செயல்படுவது ’வீசுதல்’”.

அவர் சொல்லைக்கே வடிவா விளங்கிட்டது, ஆனா விமானத்துல இருந்த பெட்டை கதைக்கவும் கனவு கலைஞ்சிட்டதென்ன? ஆனால்டப்பா, நாம இனி இந்த சொல்லுகளைப் பாத்து பாவிக்கணுமென்ன?? குடுங்கோவென்டெல்லாம் சொல்லப்படாதென்ன? தாங்கோ என்டு சொல்லப் பழகிக்கணும்.

அவர் சொன்ன பாட்டு இதுதான்:

தா கொடுஎனக் கிளக்கும் மூன்றும்
இரவின் கிளவி யாகிடன் உடைய!
அவற்றுள் யென் கிளவி இழிந்தோன் கூற்றே!
தாவென் கிளவி ஒப்போன் கூற்றே!
கொடுவென் கிளவி உயர்ந்தோன் கூற்றே!

சரி நான் வரட்டே, பேந்து நாளைக்கி வந்து வேற புதினம் எதன்டாலும் கதைப்பமென்ன? வாறன்ஞ் செரியே?!

8/30/2009

வட அமெரிக்க, ’நீயா? நானா??’ நிகழ்ச்சியில் பழமைபேசி!



தெளிவான காட்சிக்கு, காணொளிச் சாளரத்தைப் பெரிதாக்கிக் காணவும்!



வென்றாக வேண்டும் தமிழ்!



FeTNA தமிழ்விழா 2009 குறித்த அனைத்து காணொளிகளையும் காண, வட அமெரிக்க தமிழ்ச் சங்கத்தின் வலையகத்தைக் காணவும்!

காணாமற் போனோர் தினம்!

ஆகசுடு 30 அன்று காணாமற் போனோர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. காணாமல் போனோர் என்பது இன்று உலகளாவிய ரீதியில் ஒரு முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. மனிதாபிமானம் பற்றி, மனித உரிமைகள் பற்றி எத்தனை அமைப்புகள் செயற்பட்டாலும் கூட இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாதுள்ளது.

காணாமற்போனோர் எனுமிடத்து இது ஒரு நாட்டிற்கு மாத்திரம், அல்லது ஒரு கண்டத்திற்கு மாத்திரம் உரித்தான பிரச்சினையாக எடுத்துக்கொள்ள முடியாது. இது உலகளாவியது. அதுவும் நம் தமிழினத்திற்கு நேர்ந்து கொண்டிருக்கிற அவலம் சொல்லி மாளாதது.

உலக அரங்கில் எடுத்துச் சொல்லி, செவிமடுக்கச் செய்ய தமிழனுக்கு இந்தியாவை விட்டால் ஆள் இல்லை. ஆனால், இந்தியாவோ இன்னும் இத்துப் போன தலைவர்களைப் பற்றிப் பேசிக்கொண்டும், அயல்நாட்டுக் கொள்கையில் தனக்குத் தானே சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டும் உள்ளது. அதுவும் தாவீது - கோலியாத் கதை போல, சுண்டைக் காய் இலங்கையிடம் மானம் மரியாதையை இழந்து வருகிறது.

எனவே இந்த காணாமற் போனோர் தினத்தில், காணாமல் போய் வரும் இந்தியாவின் மானத்திற்கும் நமது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்வோம். இந்த காணாமற் போனோர் தினம் என்பது பற்றிய
மேலதிகத் தகவலுக்கு இந்தச் சுட்டியைச் சொடுக்கவும்.

மேலும் காணாமற்போன கீழ்க்கண்ட பதிவர்களையும் இந்த நாளில் நினைவு கூர்ந்து, அவர்கள் எப்படியாவது பதிவுலகிற்கு மீட்டிட சபதம் ஏற்றிடுவோம்.

வடஅமெரிக்க வலைஞர் தளபதி நசரேயன்
உருப்புடாதது_அணிமா
'பார்வையில்' இராஜ நடராஜன்
வசந்த் கதிரவன்
கபீஷ்
ஆட்காட்டி அண்ணன்
S.R.ராஜசேகரன்
மன்மதக்குஞ்சு
தீரன்
Natty
கூடுதுறை

8/29/2009

தோழமைச் சீற்றம்!

எரியும் நெருப்பின் சூட்டால்
பிரிந்தது இரண்டறக் கலந்த
நீர்; நெருப்பைப் பொசுக்கப்
பொங்கி எழுந்தது பால்!

*************************

ஆகா, வண்ண மலரென உவகையுடன்
அதைக் கைவிட்டுப் பறித்த அக்
கணத்தில் தன்கொடுக்கால் போட்டுத்
தள்ளியது மலரில் வாசங்கொண்ட தேனீ!

****************************

ஆவாரம்பூச் செடியின் நிழலில்
பாங்காய் கெளதாரி இட்ட முட்டைகள்,
அதைப் பதமாய்ப் பருக பவ்யமாய் பாம்பு;
சீறிநின்றது குறுக்கே கீரிப்பிள்ளை!

ஆனால் இந்த நாதியத்த தமிழினத்துக்கு ஒரு தலைவன் உண்டா? தோழமை உண்டா?? பணம், பணமென்று பராரிகளாய் நம்மை விற்றுப் பிழைக்கும் அரசியல் விற்பன்னர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், படைப்பாளிகள் பலருக்கும் மத்தியில், சாமான்யர்கள் நம்மால் என்ன செய்துவிட முடியும் மாப்பிள்ளை கதிர் அவர்களே?

உமது அந்த இடுகை கண்டேன். சொல்லவொன்னா வேதனை உற்றேன்! என்றென்றும் நாட்டை ஆள்வது எழுத்தாளர் வர்க்கம் மட்டுமே. மேடையில் பேச வேண்டுமா? தான் எழுதிய எழுத்தைப் படித்தோ, அல்லது யாரோ எழுதியதைப் படித்த, கேட்ட விபரங்களை வைத்தோதான் ஒருவன் பேசியாக வேண்டும்.

திரைப்படமா, நாடகமா, இசையா, ஊடகமா... எந்த ஒரு ஆக்கத்தையும் எழுதித்தான் படைத்திட முடியும். இப்படியாக, சமுதாயத்தை ஆட்டிப் படைப்பது எழுத்தாளன்.

அந்த எழுத்தாளன் படைக்கிற படைப்பில் தோழமையுணர்வு இருந்திடல் வேண்டும். நடந்தது, நடப்பது என்ன? பணம்! பணம்!! வெற்றி கொள்வதில் பணம், மக்களை எப்படியாவது ஈர்த்துப் பார்க்க வேண்டும் பணம். இப்படித்தானே வாழ்க்கைச் சக்கரம் சுழல்கிறது நாட்டில்?

மக்களே, இன்றைய பதிவர்கள் நாளைய எழுத்தாளர்கள்! நீங்களும் அந்த சங்கமத்தில் கலந்து, பணம் பார்க்கத்தான் செல்லப் போகிறீர்களா? அவலத்தைச் சுட்டிக் காட்டுவோம்; பதிவர்களாகவே தொடருங்கள், தோழமையோடே இருப்போம்... மனிதநேயம் வெல்லட்டும்!

8/27/2009

டேய் நட்டாமுட்டி, வாடா இங்க!

”சில்லறைகளைப் பத்தி என்றா நீ பேசறது? நீயே ஒரு பெரிய நட்டாமுட்டி, இதுல நீ வேற பழமயிகளைப் பேச வந்துட்டே?! கலிகாலம்டா, செரிப் பேசு! பேசு!!”

இப்படியெல்லாம் நீங்க நினைப்பீங்க இராசா, அது நமக்கும் தெரியும். அதுக்காக சொல்ல வேண்டியதைச் சொல்லாமப் போக முடியுமா? என்ன நாஞ்சொல்றது??


விசயம் என்னன்னா, நான் சும்மா அப்படியே நம்ம ஈரோட்டு மாப்புளை கதிர் எழுதின கவிதைகளை வாசிச்சுட்டு இருந்தேன். அப்ப, சில்லரை அப்படீன்னு ஒரு சொல் தென்பட்டுது; அதான், சில்லறை ஞாவகம் வந்திட்டுது! இஃகிஃகி!!

பாருங்க கண்ணூ, நான் நெகமத்துக்குப் பக்கத்துல இருக்குற பொம்மநாய்க்கன் பட்டிக் குசுவான், ச்சீ.., விசுவாங்கூட அவங்க தோட்டத்துச் சாளைக்கு வெளையாடப் போயிருந்தேன். அப்ப அவஞ்சொன்னான், ’டேய் பழமை வாடா போயி, எங்க தாத்தனோட அங்கராக்குச் சோப்புல இருக்குற அல்லறை சில்லறை எல்லாத்தையும் எடுத்துட்டு வரலாம்’ன்னான்.

நாந்திருப்பிக் கேட்டேன், ‘அது என்றா அல்லறை சில்லறை?’ன்னு. அதுக்கு அவஞ்சொன்னான், அல்லறைன்னா தட்டுத் தடுமாறுறது. சில்லறைன்னா, சின்ன சின்ன சிறுவாட்டுக் காசு. ஆக, தட்டுமுட்டுச் செலவுக்குன்னு இருக்குற சிறுவாட்டுக் காசுகதான் அல்லறை சில்லறைன்னான்.

அதையே, எங்க அப்பிச்சி சொல்லுவாரு, ‘டேய் பழமை, போயிக் கரியூட்டு அங்காத்தா கடையில நாஞ்சொன்னேன்னு சொல்லி, இந்த அஞ்சு ரூவாயை முறிச்சு சில்வானம் வாங்கியாடா! செஞ்சேரி மலைச் சந்தையில பொரி உருண்டை வாங்குறதுக்கு, நான் உனக்கு நாலணாக் குடுத்து உடுறன்!!’ன்னுவாரு. சில்வானம்ன்னாலும் அதே சில்லறைதான்!

அதேபாணியில, கீழ்த்தரமான வேலைகளைச் செய்யுறவனை சில்லறைப் பயன்னும் திட்டுவாங்க. அவன் சில்லறை வேலை பாக்குற சல்லிப் பயன்னும் சொல்லுவாங்க. அதையே, நட்டாமுட்டிப் பயன்னும் சொல்றது உண்டு.

அதென்ன அந்த நட்டாமுட்டி? அது ஒரு பெரிய கதைங்க. முட்டின்னா, மரத்தாலான சிறு கட்டை. அப்ப அந்த சிறு முட்டிய நட்டு வெச்சி, வாகா பாத்திரங்கள்ல இருக்குற ஒடசலை எடுக்கலாம். உருண்டு போற வண்டிச் சக்கரத்துக்கு அடியில போட்டு அதை நிப்பாட்டலாம். இப்படிச், சின்ன சின்ன வேலைகளுக்கு சாதுர்யமாப் பாவிக்கலாம் அதை.

அப்படிச் சாதுர்யமாக் காரியஞ் சாதிக்கிறவங்களைக் குறிக்கிற மாதிரிச் சொன்னதுதான், இந்த நட்டாமுட்டிப் பய. அதுவே பின்னாள்ல, தந்திரமாவும், வஞ்சகமாவும், சூதாவும் காரியஞ் சாதிக்கிறவங்களையும் குறிப்பிட்டுச் சொல்லுற சொல்லா மாறுச்சுது அந்த நட்டாமுட்டி.

இப்ப இந்த பாத்திரங்கள்ல ஒடசல் எடுக்குறதுன்னதும், எனக்கு இன்னொன்னும் ஞாவகத்துக்கு வருதுங்க. எங்க ஊருக்குள்ள எப்பிடியும் மூனு மாசத்துக்கு ஒரு வாட்டி, ’யே... இந்த ஓட்டை ஒடசல் அடைக்குறது... பாத்திரத்துக்கு ஈயம் பூசுறது... ஓட்டை ஒடசல் அடைக்குறதே... ’ன்னு சொல்லிட்டு வருவாங்க. அவங்க கிட்டவும் இந்த நட்டாமுட்டி இருக்கும்.

எங்கூர்ச் சந்தைப் பேட்டைக்கு பக்கத்துல இருக்குற அரச மரத்துக்கு அடியில, பொண்டாட்டியானவ ஒரு கையில காத்துப் பைய அமுக்க, மறு கையில கொரட்டுல பாத்திரத்தைப் புடிச்சி, தீயில வெச்சிக் குடுப்பா. புருசங்காரன், வாகா உள்ள பூச்சுப் பூசிட்டு, துணிய வெச்சித் தொடச்சி எடுத்து வெப்பான். அதை மணிக்கணக்குல நின்னு பாக்க, அம்புட்டுப் பிரியமா இருக்குமாக்கும்.

இங்க அறிவியல்ப் பூர்வமா உங்களுக்கு ஒரு விசயஞ் சொல்லோணும். பாத்திரத்துக்கு ஈயம் பூசுறது, ஈயம் பூசுறதுன்னு சொல்றாங்களே?! பாத்திரத்துக்கு உள்ள பூசுறது ஈயமா? அதாங் கிடையாது!

Tin அப்படின்னா, அது தகரம். Lead அப்படீன்னா அது ஈயம். இரும்பு, தாமிரம், வெங்கலம் இதுகளாலான பாத்திரத்துல உணவுப் பொருட்களை இட்டா, அது இரசாயன மாற்றத்துக்கு ஆட்படும்.


அதுல இருந்து தடுக்கவே தகரப் பூச்சு பூசுவாங்க. சொத்தைப் பல் அடைக்கிறதுக்குப் பூசுறது கூட டின்பாதரசம்தாங்க. இந்தத் தகரத்தைப் பத்தி நிறைய உண்மைக் கதைகள் இருக்கு. அதை அடுத்த இடுகைகள்ல பாக்கலாஞ் செரியா?

எல்லாத்தையும் ஒரே நாள்ல சொல்லிப் போட்டா, நாங்க கடை நடத்துறது எப்படின்னு வேண்டாம். போங்க, போங்க, போயிப் பொழைப்பு தழைப்பப் பாருங்க.... இஃகிஃகி!!!

8/25/2009

அமெரிக்கா: Flu உத்தேச உயிரிழப்பு எண்ணிக்கை 30000 - 90000

அமெரிக்காவில், வருகிற செப்டம்பர் மாதம் துவங்க இருக்கும் இலையுதிர் காலத்தில் Fluவானது தலையெடுத்து, சுமார் 30,000ல் இருந்து 90,000 வரையிலானோரின் உயிருக்கே கூட பாதிப்பு இருக்கும் என வெள்ளை மாளிகை மருத்துவக் குழு தெரிவித்து உள்ளது. இருபது இலட்சம் பேர் வரையிலும் மருத்துவமனைக்கு வரக்கூடுமெனவும் உத்தேசித்து இருக்கிறார்கள்.

இதற்கு முன்னர் பெருந்தொகையான அளவில், 1957ல் 70000 பேரும், 1968ல் 34000 பேரும் இந்த வகையான நோயால் உயிரிழப்புக்கு ஆளானார்கள் என்றும் தெரிகிறது. மக்கள் அனைவரும் முன்னெச்செரிக்கையாக இருந்திட அறிவுறுத்தப் பட்டு இருக்கிறார்கள்.

================================================

கட்டுரைகள், செய்திகள், கதைகள் என்பன பல்வேறு கருத்துகளைத் தாங்கி வரும். பிரபலங்கள் அவற்றை நன்றாக எழுதி இருப்பார்கள். ஆனாலும், அவற்றை பகுத்தறிந்து நுகர்வது வாசகனின் இன்றைய தேவை என்பதை வலியுறுத்திச் சொன்ன கதை இது.

அறிவியல் மாணவன் இட்ட கட்டளையை ஏற்றுச் செய்யும் தவளையை ஆய்வுக்கு உட்படுத்தி, நிகழ்ந்த சம்பவத்தின் அடிப்படையிலேயே, பிறழாமல் தவறாமல் ஆய்வுக் கட்டுரையும் எழுதி வந்தான். அதிலே அவன் குறிப்பிடுகிறான்,

“தாவு என்றேன், ஒரே பாய்ச்சலில் தாவியது பழக்கப்பட்ட அந்தத் தவளை. பிறகு முன்னங்கால்களில் இடது காலை எடுத்த பிறகு, கட்டளையிட்டேன். சிறு தாமதத்திற்குப் பிறகு எந்த இடையூறுமின்றித் தாவியது தவளை.

இப்படியாக, ஒவ்வொரு காலை எடுத்த பிறகும், தலைவன் இட்ட கட்டளைக்குச் செவி மடுத்துத் தாவியது அந்தத் தவளை. ஆனால், நான்கு கால்களை எடுத்த பிறகு அது தாவாமல் தரையில் படுத்தே கிடந்தது; ஆம், நான்கு கால்களையும் எடுத்தவுடன் அதற்கு காது கேட்கவில்லை, ஆதலால் படுத்தே கிடந்தது!”

தண்ணீர் வெந்நீரானாலும், அது நெருப்பை அவிக்கும்!

8/23/2009

தமிழ்மணமும், தமிழர் காவலர் செ. தெய்வநாயகமும்!

திருச்செந்தூர்க் குலசேகரன் பட்டணத்தில் 1878ம் ஆண்டு பிறந்து, நீதிக் கட்சியை நடாத்தி, தமிழர்களுக்கும் பெண்கள் மேன்மைக்கும் அருந்தொண்டாற்றிய, பெரியார், அண்ணா அவர்களால் தமிழர் காவலர் என்றழைக்கப்பட்ட, எமது எழில் தமிழ்ப் பண்பாட்டுக் குழுவின் நிறுவனர் செந்தாமரை அவர்களின் முப்பாட்டனார், உயர்திரு. செ. தெய்வநாயகம் என்ற மாபெரும் அறநெறி வழிநடத்துனர் அவர்களது வரலாற்றை வாசிக்கும் பேறு கிட்டியது. அத்தகைய வாசிப்புனூடே, கீழ்க்கண்ட வாசகங்களைக் கண்டு வலைக்குள் வரலானேன்.

தமிழ் மணம் கமழவேண்டும்

“எதிர்கால உலகம் வாலிபர்களுடையது. ஆகையால், தமிழ்மணம் கமழ, தமிழ்மொழி வாழ தமிழர்கள் நிலை உயர, தமிழகம் தனியாக என் செய்தல் வேண்டும்?


ஒவ்வோர் வீட்டிலும் திரைப்படங்களிலும் சொற் பொழிவுகளிலும் சொற்போட்டிகளிலும் பள்ளிச் சிறார் உள்ளத்திலும், உணவிலும், உறக்கத்திலும், ஊக்கத்திலும் பச்சிளங்குழவிகளின் பாலூட்டல், தாலாட்டல், சீராட்டல் ஆகியவைகளிலும் செய்தித்தாள்களிலும் தெருக்களிலும், ஒலியலைச் செய்திகளிலும் தமிழ்மணம் கமழ வேண்டும்!” என்று தமிழர்காவலர் 30.07.1936ல் திருப்பத்தூரில் கூடிய மாபெரும் கூட்டத்தில் பெரியார் முன்னிலை வகிக்க உரை நிகழ்த்தினார்.

--பாவலர் கதிர். முத்தையன் எழுதிய நூலில் இருந்து.

அன்றைய பொழுதில் தமிழ்மணம் பற்றிக் குறிப்பிட்ட தமிழர் காவலரின் உரையானது, இன்றைய பொழுதில் வலையுலகில் கோலோச்சித் தமிழ்மணம் கமழச் செய்து வருகிற தமிழ்மணம் திரட்டியை நினைவுபடுத்த, அத் தமிழ்மணத்தின் ஊடேயே உள்புகுகிறோம். என்னே ஒரு வியப்பு?

ஐந்தாண்டு நிறைவு விழாக் காணும் செய்தியை அறிய நேரிடுகிறது. பற்றுக்கட்டு என்பதிருந்தால், எதுவாயினும் அதையும் தாண்டி அது நடக்கும் என்பார்களே, அதை இக்கணம் மெய்ப்பிக்கிறதோ என எண்ணும் மனநிலைக்கு ஆட்பட்டேன் எனக் கூறுவது மிகையாது. ஆம், தமிழ்மணத்தின் பிறந்த நாளும், மணிவாசகத்தின்.......


தமிழ்மணம் கமழுதலுக்கு வித்திட்ட வலைவிற்பன்னர் அண்ணன் காசி அவர்கட்கும், தமிழ்மணம் நிர்வாகத்தாருக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும்!!


8/21/2009

வெட்டாப்பு!

கண்ணுகளா, வணக்கம்! வட அமெரிக்கத் தமிழ்விழா ஆரம்பிச்ச நாள்ல இருந்து, July 03 2009, இன்னைக்கு வரைக்குமு கொஞ்சங்கூட வெட்டாப்பு இல்லாம, கொறைஞ்ச பட்சம் தினமொரு இடுகைன்னு இட்டுட்டு வந்தமில்ல?! இப்ப அதுல இருந்து வெட்டாப்பு உடுற நேரம் வந்துடுச்சு.

ஆமாங், ஊருல இருந்து எங்க தாய்மாமம் பையன், என்ற மாப்புளை இன்னிக்கி கோயமுத்தூர்ல இருந்து, சாயங்காலம் அமெரிக்காவுக்கு வாறானுங்... அவனைக் கெவனிக்கோணுமல்லோ? அதான்! எழுதுறலிருந்து வெட்டாப்பு!

எங்க ஊருல அப்பிசி மாசம் அடை மழை, கொஞ்ச நேரம் தூத்துறதுல இருந்து இடைவெளி விடும்போது சொல்லுறது வெட்டாப்புன்னு.


செரி, தகவலைச் சொல்லிப் போட்டு எங்கூர்க் காடுகளைப் பத்தி ஒரு தகவலைச் சொல்லாமப் போனா நல்லாவா இருக்கும்?

கோம்பைன்னா கண்ணூ, தோட்டங்காட்டுல ஓரத்துல இருக்குற வேலியைச் சொல்றது கண்ணு. அதான், வேலி பிரதானமா இருக்குற காட்டைச் சொல்றது கோம்பைக்காடு.

தாழ்வான பகுதிகள்ல, அதாவது இறங்குமுகமாகவோ, இறக்குத்தலயோ இருக்குற காடு, எறங்காடு (இறங்கு + காடு). மேடான பகுதியில இருக்குறது மேட்டாங்காடு.


இப்ப எல்லாக்காடும், புழுதிக்காடாவோ கட்டங்களாவோதான் இருக்கும். என்ன செய்யுறது கண்ணு, காலந்நேரமும் ஒரே கெடையிலா இருக்குது? மாறிட்டேதான இருக்கு? அதான், எல்லாமே மாறுது...

அப்ப நான் வெட்டாப்பைக் கலைச்சிட்டு மறுக்காவும் வர்ற வரைக்கும் நீங்களும் பாத்துப் பதனமா இருங்க... குதூகலமாவும் இருங்க! வாறங்கண்ணூ அப்ப!!

8/19/2009

தலைகால்ப் புரியலை!

வணக்கம்! இப்பதான் ஏழாவது இடத்துக்கு வந்திருக்கு. மகிழ்ச்சிதான்! ஆனா, நாங்க ஊர் ஊராப் போயி பொட்டி தட்ட வேண்டியதா இருக்கே? அது மட்டுமா? நுகர்வோர்கிட்ட கேள்வி மேல கேள்வி கேட்டு, வியாபாரத்தைப் பொட்டியில புகுத்துறதுக்குள்ள தாவு தீர்ந்து போகுது!

என்னடா இவன் தலைகால்ப் புரியாதபடிக்கு உளறுறானேன்னுதான நினைக்கிறீங்க? ஆமாங்க, நாம வேலை செய்யுற நிறுவனம் தொழில்நுட்ப ரீதியான வகையில உலக அளவுல ஏழாவது இடமும், பொது அளவுல 19வது இடமுமா வந்திருக்கு. அந்த வளர்ச்சியில நமக்கும் ஒரு சிறு பங்குண்டுன்னு நினைக்கும் போது, சின்ன மகிழ்ச்சிதான்!

ஆமா, அதென்ன தலைகால்ப் புரியாமல்? அது ஒன்னும் இல்லைங்க, அந்த காலத்திலெல்லாம் பாய், படல், கிடுக்கு இப்படியான விரிப்புகள்ல மக்கள் நித்திரை கொள்ளுறது வழக்கம். அப்படி, நித்திரை கொள்ளப் போகும் போது, எல்லாரோட தலை ஒரு பக்கமும் கால் மறுபக்கமுமா இருக்கும். விடிய எழுந்து பார்த்தா, தலை எங்க கால் எங்கன்னு புரியாதபடிக்கு இடம் மாறி அங்க இங்கயின்னு கிடப்பாங்க. அதை உவமைப் படுததிச் சொல்லுறதுல வந்ததுதான் இந்த மரபுச் சொல்.

அமெரிக்க மக்களிடத்துல மனமாற்றம் மெளனமாய் நிகழுறது உள்ளமையே! ஆனா, இந்த அளவுல அது பிரதிபலிக்கும்னு நான் எதிர்பார்க்கலை. காலஅவகாசம் இருந்தா, இந்தச் சுட்டியையும் ஒரு தடவை பார்த்திடுங்க!

BBC செய்தி நிறுவனத்துல, தொழில்நுட்ப நிபுணருக்கு பதிலா, தவறுதலா ஒரு வாகன ஓட்டியோட பேட்டி ஒலிபரப்பானதாக இந்த காணொளி! அந்த வாகன ஓட்டியோட முதல்க் கணமும், அந்த ஆள் சமாளிக்கிற விதமும் அலாதி!

8/18/2009

ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு எட்டுத் தாழ்ப்பாள்?

அது சரி said...

நன்னாயிட்டு உண்டு...ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு எட்டுத் தாழ்ப்பாள்...இதுக்கு பின்னாடி என்ன அர்த்தம்?? :0))

இலண்டன் மாநகர், அது சரி அண்ணாச்சி அவர்களே வணக்கம்! சமுதாயத்திலே, பிறழ்தலும் திரிதலும் மருவுதலும் இயல்பே; அவற்றிற்கு காரணம் என்னவாக இருக்க முடியும்? திரிதலுக்கு காரணம், தகவல் தொடர்பில் ஏற்படும் உணர்ச்சிகள் என்க; மருவுதலுக்குக் காரணம் வெகுளித் தன்மையும், பாமர இயல்புமென்க; பிறழ்தலுக்குக் காரணம் அதன் மூலம் தெரியாமையும் மறைதலும் என்க! அந்த வகையிலே இன்றைக்கு அவற்றில் சிலவற்றைக் காண்போம்.

திரிதலுக்குக் காரணம் உணர்ச்சிகள் என்றோம். ஒருவன் எதிர்ப்படுகிறான்; மற்றவன் அவனது சினங்கொண்ட தோற்றத்தைக் கண்டதும், ‘ஏன்டா மூஞ்சிய உர்ன்னு வெச்சிகிட்டு இருக்கே?’ என்கிறான்.

அதற்கு அவன், ‘அவன் என்னடா எக்கச்சக்கமா வாயுடமாப் பேசிட்டே இருக்கான். மண்டை காஞ்சி போச்சி தெரியுமா?’ என அங்கலாய்த்துக் கொள்கிறான்.

இந்த இடத்திலே என்ன நடக்கிறது? சினம் என்கிற உணர்ச்சியானது, வாயுடாமப் பேசிட்டே இருந்தான் என்கிற தகவலுடன் சேர்ந்து, ‘எக்கச்சக்கமா’ என்கிற சொல் திரிபடைகிறது.

ஆம் மக்களே! ‘எக்கச்சக்கமா’ என்றால் என்ன? தாறுமாறாகப் பேசுவது, அல்லது எக்குத்தப்பாகப் பேசுவது என்று பொருள். இந்த சொல்லானது, அனைத்துத் திராவிட மொழிகளிலும் இருப்பதை நீங்கள் காண்லாம். ‘வாடு எக்கசக்காலு மாட்லாடுத்தாடு’, ‘நூவு எக்கசக்கா கெலித்து’ என மற்ற மொழிகளிலும் அதே பொருளில் காணலாம்.

ஆனால், தமிழில் இதன் இன்றைய பயன்பாடு என்ன? நிறைய, ஏராளமாக, அளவுக்கதிகமாக எனும் பொருளில் இயல்பாகப் புழங்கப்பட்டு வருகிறது. இது திரிதலுக்கு நல்ல உதாரணம்.

மேலே நடந்த உரையாடலில், ‘ஏன் முகத்தை உர்ரென வைத்துக் கொண்டிருக்கிறாய்?’ என்று வினவும் போது, முகமானது மூஞ்சியென மருவியதை நாம் காணலாம். அதாவது உச்சரிப்பானது மாறிக் கலந்தது.

பிறழ்தல் என்பது, மூலத்தை அறியாததாலோ அல்லது மறைந்து போவதாலோ ஏற்படுவது எனக் கண்டோம். அந்த வகையிலானதுதான் அண்ணாச்சி அவர்கள் வினவியிருக்கும் இந்தக் கேள்வியும் என்பது அடியேனின் தாழ்மையான எண்ணம். இனி, மூலத்தைக் காண்போமாக!

ஒட்டக்கூத்தர் பாட்டுக்கு எட்டுத் தாழ்ப்பாள் என்பது அல்ல சொலவடை! ஒட்டக்கூத்தர் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்பதே பிறழாத சொலவடை எனக் கேள்விப்பட்டு இருக்கிறேன்.

சீரும் சிறப்புமாய் ஆண்டு வந்த சோழமன்னன் இராஜ இராஜ குலோத்துங்கனின் மனைவியானவள் இராஜகுமாரி. பட்டத்து இராணி இராஜகுமாரியின் ஆசான், நளவெண்பா பாடிய புகழேந்திப்புலவர். பாண்டிய நாட்டில் இருந்து மணம் முடித்து சோழ நாட்டுக்கு வந்த இராஜகுமாரியின் அழைப்பின் பேரில், பாண்டிய நாட்டுப் புலவர்களில் ஒருவரான புகழேந்திப் புலவர் சோழ நாட்டில் வந்து சிலகாலம் தங்கி இருந்தார்.

அந்த காலகட்டத்திலே, சோழ நாட்டுப் புலவரான ஒட்டக்கூத்தருக்கும் பாண்டிய நாட்டுப் புலவரான புகழேந்திப் புலவருக்கும் மனத்தாங்கல் என்றாகிவிட, அதன் விளைவாய் புகழேந்திப் புலவர் சிறையில் அடைப்படுகிறார்.

இதுகேட்ட மகாராணி இராஜகுமாரி, கடும் சினங்கொண்டு அந்தப்புரத்தில் உள்ள அறைக்குச் சென்று தாழிட்டுக் கொண்டு உண்ணா நோன்பில் ஆழ்ந்து விட, குலோத்துங்க சோழன் தன்னாட்டுப் புலவரான ஒட்டக்கூத்தரை விட்டு இராணியைப் புகழ்ந்து பாடி, எப்படியாவது அவரைக் கோபத்திலிருந்து விடுவிக்குமபடி கேட்டுக் கொள்கிறார்.

அவ்விதமே ஒட்டக்கூத்தரும் அந்தப்புரத்திற்கு சென்று, அறையின் வெளியே நின்று கொண்டு பாடுகிறார். ஆண் சிங்கம் போன்றதொரு வீரனாகிய மன்னன் குலோத்துங்கன் வர, உன் தாமரை போன்ற கைகள் தானாக வலியச் சென்று கதவைத் திறந்திடச் செய்யுமன்றோ எனப் பாடுகிறார்.

தனது ஆசானும், பாண்டிய நாட்டுப் புலவருமான புகழேந்திப் புலவரைச் சிறையிலடைக்கக் காரணமான ஒட்டக்கூத்தரின் குரலைக் கேட்டு மேலும் பல மடங்கு சினங்கொண்ட இராஜகுமாரி, இருந்த மற்றுமொரு தாழ்ப்பாளைப் போட்டுக் கொண்டாள்.

அதன்பிறகு, ஒட்டக்கூத்தரால் புகழேந்திப் புலவர் சிறையில் அடைக்கப்பட்டதுதான் மனைவியின் சினத்திற்குக் காரணம் என்பது மன்னனுக்குத் தெரியவர, பின்னர் புகழேந்திப் புலவர் விடுவிக்கப்பட்டு, அவர் சென்று பாடியதும் இராணி அந்தப்புரத்தில் இருந்து வெளிப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

8/17/2009

தெள்ளு விளையாடிட்டு, அப்புறம் இலக்கியம் பேசுலாம் வாங்க!

//Venkatesan said...
எல்லாம் புரிஞ்சது ..ஆனா ஒன்னு... தெள்ளு விளையாடுறதுன்னா என்ன சார்? இதுக்கு தனி பதிவு போடனும்மோ ;-)

-வெங்கி//

வாங்க வெங்கி! நீங்க அலைபேசியில அழைச்சி, என்ன ஐயா நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் சொல்லலையேன்னு கேட்டப்ப மிரண்டு போயிட்டேன். அதுக்கு முன்னாடி, ஒரு சின்ன கதை; அதை மொதல்ல பார்க்கலாம் வாங்க!

20-25 ஆண்டுகளுக்கு முன்னாடி, தெலுகு தேசத்துல இருக்குற இராயல்சீமா பகுதியில எப்பவும் உள்தகராறு, வெடிகுண்டு, கொலை, கொள்ளைன்னு நடந்துட்டே இருக்குமாம். அந்த நேரத்துல ஒரு பகுதியச் சார்ந்தவங்க, அந்த ஊருக்குள்ள போகவே அங்க யாருமே இல்லையாம்.

வந்த மக்கள் செய்வதறியாது நிக்கவே, அந்த கூட்டத்துல இருந்த ஒருத்தன், ‘ரே சீனிவாசு!’ன்னு உரக்கக் குரல் கொடுத்ததுதான் தாமதம், ’பொலு பொலு’ன்னு ஊர்ல ஒளிஞ்சிருந்த ஆண் பிள்ளைகள்ல பாதிப்பேர் அங்க இங்கன்னு இருந்து குதிச்சாங்களாம். அப்புறம் என்ன? ஒரே போடு; அத்தனை பேரும் போய்ச் சேர்ந்துட்டாங்களாம்.

அந்த மாதிரி, வெங்கடேசன், வெங்கி, வெங்கட்ன்னு நிறைய வாசகர்கள் நம்ம பக்கத்துல அப்ப அப்ப தலை காண்பிக்கிறது உண்டு. அதுபோல நம்ம பதிவுலக நண்பர்கள்ல, இந்த வெங்கியும் ஒருத்தர்னு நினைச்சிட்டேன். நீங்க அலைபேசில அழைச்சப்பதான் தெரிஞ்சது, ரவ்வும்பகலும் கூட இருந்து குப்பை கொட்டுன வெங்கின்னு, மன்னிச்சுகுங்க!

ஆனாக் கேட்டது எந்த வெங்கியா இருந்திருந்தாலும், கேட்ட கேள்விக்கு நிச்சயமா பதில் சொல்லி இருப்பேன், சொல்லிட்டு இருக்கேன்; வாங்க மேல படிக்கலாம்!

தெள்ளு விளையாட்டுன்னா என்ன? பாருங்க கண்ணுகளா, இது நான் கடைசியா எட்டாம் வகுப்பு விடுமுறையில விளையாடினதுன்னு நினைக்குறேன். சலவநாயக்கன் பட்டிப் புதூர் மாகாளியாத்தா கோயல் மைதானத்துல நாங்க எல்லாம் ஒன்னாக் கூடுவோம். கூடும்போதே, தட்டையா, வட்ட வடிவத்துல ஆளுக்கொரு கல் கையில வெச்சிருப்போம்.

ஒரு கோட்டைக் கிழிச்சிட்டு, ஒவ்வொருத்தரா கல்லை நேர் வாக்குல வீசணும்; அப்ப யாரோட கல் குறைஞ்ச தூரம் வீசப்பட்டு இருக்கோ அவங்க ஆட்டத்துக்கு இலக்காளி. அதே கோட்டுல இருந்து, காலடியில ஆறு எட்டு நடந்து போயி, அங்க வட்டமா ஒரு கோடு கிழிச்சி, அதுல இலக்காளியோட கல்லை வெச்சிடுவோம்.

இப்ப ஆட்டம் ஆரம்பிக்கும். கிழிச்ச கோட்டுல இருந்து ஒருத்தன், வட்டத்துல இருக்குற கல்லை, நல்லாக் குனிஞ்சு, தன்னோட காலுக்குள்ள ஒரு கைய விட்டு இலாவகமா அடிக்கணும். அப்ப வட்டத்துல இருந்த கல் முன்னோக்கி நகரும்.

இப்ப அடுத்தவன், இலக்காளியோட கல் முன்னாடி இருந்த இடத்துல இருந்து அதேபோலக் காலுக்குள்ள கைய விட்டுத் தன்னோட கல்லால அடிக்கணும். இப்படியே, அடிக்கிறதுல குறி தவறாத வரைக்கும் அடிச்சி நகர்த்திட்டே போவோம். எங்க தவறுதோ, அந்த இடத்துல இருந்து, தள்ளு ஆரம்பிச்ச வட்டத்து வரைக்கும் இலக்காளியானவன் நொண்டி அடிக்கணும்.

நொண்டி அடிக்கும் போது, காலைக் கீழ ஊனிட்டா, மறுபடியும் திரும்பப் போயி குறி தவறுனதுல இருந்து அடிச்சிட்டு வரணும்; என்ன கொடுமைடா சாமி? இதாங்க, தள்ளு விளையாட்டு. ஆனா, நாங்க தெள்ளு விளையாடுறதுன்னுதாஞ் சொல்றது! இஃகிஃகி!!


//ஆரூரன் விசுவநாதன் said...

"இலக்கியம்" என்னும் வார்த்தை சங்க இலக்கியங்களில், திருக்குறளில், தொல்காப்பியத்தில் இல்லை???????? இலக்கியம் என்ற வார்த்தைக்கு பொருள் என்ன? இது எங்கிருந்து வந்தது. கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள் நண்பரே....

நானும் நண்பர் கதிரும் நீண்ட வாதத்திற்கு பின் உங்களை கேட்பது என்ற முடிவிற்கு வந்துள்ளோம்.//

ஆமா, நீங்க என்ன நினைச்சிட்டு இருக்கீங்க மனசுல? அவ்வ்வ்.... நான் எதோ எனக்குத் தெரிஞ்சதை எழுதி காலத்தை ஓட்டிட்டு இருக்கேன். இப்படி எல்லாமா, ஒருத்தனை அந்தலை சந்தலை ஆக்குறது? மாப்பு, சீர் வரிசை எல்லாம் ஒழுங்காத்தான எங்க ஊட்டுல இருந்து அனுப்பியுட்டோம்?!

கேட்டு போட்டீங்க; இனி சொல்லுலைன்னா அங்க ஊட்டுல போயி அம்மிணிகோட ஓரியாடுவீங்க! சரி வாங்க படிக்கலாம் மேல!! பாருங்க கண்ணுகளா, திருவாச்கத்துல ஒரு பாட்டு:

பேசும் பொருளுக் கிலக்கிதமாம் பேச்சிறந்த
மாசின் மணியின் மணிவார்த்தை பேசிப்
பெருந்துறையே என்று பிறப்பறுத்தேன் நல்ல
மருந்தினடி என்மனத்தே வைத்து!


உங்க மாமனுக்குப் புடிச்ச பாட்டு, அதனாலத்தான் உங்க மாப்புளையோட பேரு மணிவாசகம். இஃகி! வழிஞ்சது போதும், பாட்டு என்ன சொல்லுதுன்னு பார்க்கலாம் வாங்க!!

நல்ல அமிர்தம் போல்பவனாகிய பெருமானது திருவடியை என்மனத்தில் இருத்திச் சொல்லளவைக் கடந்த, அவனது திருவார்த்தையைப் பேசி, அவன் திருப்பெருந்துறையை வாழ்த்தி என் பிறவித் தளையை ஒழித்தேன். இங்க, பொருள் கொண்ட மணியான வார்த்தைகள் கொண்டு பேசும் பேச்சை இலக்கிதம்ன்னு குறிப்பிடுறாரு மணிவாசகர்.

அது போக, திருவருட்பா, ஆறாம் திருமுறையில இராமலிங்க அடிகளார், அதாங்க நம்ம வள்ளலார் சொல்றாரு,

குணப்பொருளும் இலக்கியமும் கொடுத்து மகிழ்ந்தருளே!

இது மாத்திரம் இல்லீங்க, இன்னும் சீவக சிந்தாமணி போன்ற பல நூல்கள்ல இலக்கிதம்ங்ற சொல் பாவிக்கப்பட்டு இருக்கு. மற்றபடி எந்த நூல்கள்ல இருக்குன்னு எனக்கு இப்பத் தெரியாது. இப்போதைக்கு ஏழாம் நூற்றாண்டுதான் இச்சொல்லின் பிறப்புன்னு வெச்சிக்கலாம். இன்னுந் தேடுவோம். மக்கள்கிட்டக் கேட்போம், அதுபோக, இங்கயும் ஒரு எட்டுப் போயிட்டுப் போங்க!!

ஆனா, அதுவரைக்கும் ஊட்ல போயி அம்மணிகளையுமு, சின்ன பாப்பாத்தியையுமு தொந்தரவு பண்ணக் கூடாதாமா, சொல்லிப் போட்டேன்!

8/16/2009

இது பெரிய கம்ப சூத்திரம்? போங்கடே!!

அவன் எதோ ஒன்னை வெச்சிப் படம் போட்டுட்டு இருக்குறான். நம்மாள் சித்த நின்னு, அதைக் கவனிக்கிறான். அப்ப, உள்ளபடியே அது அவனுக்கு சுலுவானதாவும் தெரிஞ்சதாவும் இருக்கும். சில நேரங்கள்ல அது தெரிஞ்சிருக்காமலும் இருக்கும்.

ஆனாலும், நம்மாள் அதை ஒத்துக்குவானா? பாக்குற வரையிலும் பார்த்துட்டு, மீசையில மண் ஒட்டலைங்ற கதையாச் சொல்றது, ’இது பெரிய கம்ப சூத்திரம்? நானும் நாளைக்கு செய்து காட்டுறேம்பாரு!’ன்னு சொல்லிட்டுக் கம்பிய நீட்டிடுவான்.

ஆமா, அதென்னங்க அந்த கம்ப சூத்திரம்? இஃகிஃகி! வாங்க, நமக்கு தெரிஞ்ச கதைய மேல படிக்கலாம்.

வடமொழியில வால்மீகி எழுதின இராமாயணத்தைக் கேள்விப்பட்ட நம்ம இராசா, குலோத்துங்க சோழன் அந்த காப்பியத்தைத் தமிழ்லயும் படைக்க ஆவல் கொண்டாரு. நாட்டுல இருந்த புலவர்கள், ஒட்டக்கூத்தர் மற்றும் கம்பரைக் கூப்பிட்டு வேண்டிய பொன்னும் பொருளுங் கொடுத்து எழுதச் சொன்னார்.

நாளுங் கிழமையும் நிற்குமா? அதுபாட்டுக்கு போறது போயிட்டே இருந்துச்சு. திடீர்னு ஒரு நாள் சோழ மன்னன், அவங்க இரண்டு பேரையும் அழைச்சு, 'என்ன காப்பியம் தயார்தானா? இல்லாவிட்டாலும் பரவாயில்லை, எழுதின வரைக்கும் எடுத்து விடுங்க கேட்கலாம்!'ன்னு சொன்னாரு.

உடனே ஒட்டக்கூத்தர், அயோத்தியிலிருந்து துவங்கி, சீதா தேவியை மீட்கும் பொருட்டு இராமன் படை கடலைக் கடக்க வானரங்களோட உதவியோட கடலில் பாலம் அமைக்க எத்தனிச்சது வரைக்கும் விவரிச்சிட்டு, அங்க தன்னோட கதை நிக்குதுன்னு சொன்னார்.

கதையில அவ்வளவு சிரத்தை காண்பிச்சு எழுதாத சூழ்நிலையில இருந்த கம்பர், மன்னருக்கு ஏதாவது சொல்லி ஆகணுமே? சமயோசிதமா, ஒட்டக்கூத்தர் விட்டதிலிருந்து அவருக்கே உரிய பாணியில், எந்தக் காட்சிகளையும் சித்திரத்தைப் போல வர்ணிச்சு இயம்பும் வல்லமை படைத்த கம்பர் ‘சடார்’னு வர்ணிச்சாரு,

துமிதம் தெறித்து மேலோகம் செல்ல
அமிர்தமென தேவர்கள் வாய் பிளந்தனரே!

துமிதம்ன்னா திவலைகள் அல்லது துளிகள். அதாவது இராமன் படை அம்புகளை விட்டெறிய, அவை கடலினுள் சென்று நீரின் மீது மோதியதில், நீர் சிதறித் துளிகளாக இந்திரலோகம் வரைக்கும் செனறு தெறித்து, அமிர்தமோ என அங்கிருந்த தேவர்கள் வாய் பிளந்தனர்ன்னு அந்தக் காட்சியைச் சித்திரத்தைப் போல கண் முன்னாடி கொண்டு வர்றாரு.

அதைப் பார்த்த ஒட்டக்கூத்தர், துமிதம்ங்ற சொல்லே, புழக்கத்தில் இல்லை. தூதம் எனும் சொல்லாட்சியே புழக்கத்தில் இருக்கிறதுன்னு வாதம் புரியுறார். கம்பர், துமிதம்ங்ற சொல்லாட்சி, நாட்டில் இருப்பதை உறுதிப்படுத்தப் பணிக்கப்படுறார்.

அதன்பொருட்டு, இரண்டு பேரும் சோழ நாட்டுக்குள்ள போறாங்க. கம்பரோ, கலைவாணி மேல பாரத்தைப் போட்டுட்டு நாட்டுக்குள்ள, ஒட்டக்கூத்தரோட போறார். அப்ப அங்க ஒரு பெண்மணி தயிர் கடைஞ்சிட்டு இருக்காங்க. சுற்றிலும் விளையாடிட்டு இருக்கிற குழந்தைகளைப் பார்த்து, அந்த மோர்க்காரி சொல்கிறாள், ‘பிள்ளைகளே தூரப் போய் விளையாடுங்கள், துமிதம் உங்கள் மேல் விழுமன்றோ?’.

அந்தக் காட்சியைப் பார்த்த ஒட்டக்கூத்தர், தான் அதுவரைக்கும் எழுதின இராமகாதையின் காண்டங்களை விட்டெறிய, அதில் ஒரு சிலவற்றைக் கம்பர் கைப்பற்றி, பின்னாளில் முழுமையாகப் படைத்துப் பெருமை பெற்றார். எதையும் சித்திரம் போல் வர்ணிக்கும் ஆற்றல் கொண்ட கம்பனின் வர்ணிப்பு, கம்ப சித்திரமானது; பின்னாளில் சித்திரமே சூத்திரமாக மருவி, கம்பர் சூத்திரமாக ஆனது.

மக்களே, மேல சொன்னது ஒரு சாரார் சொல்ற கதை. அது மெய்யா, பொய்யா, திரிபா, திரிபற்றதா, இதெல்லாம் அந்த கலைவாணிக்கே வெளிச்சம்! ஆனாலும், நமக்குன்னு ஒரு ஆற்றல், சிந்தனைன்னு இருக்குதுதானே? அதை வெச்சி மேற்கொண்டு அலசித் தொவச்சிக் காயப்போடலாம் வாங்க!

சூத்திரம்ன்னா என்ன? எதோ ஒன்றைக் கட்டுதல். கட்டுதல்னா, கயிறு வெச்சிக் கட்டுறது அல்ல மக்காள். அமைத்தல் அல்லது உண்டுபண்ணுதல் என்பதுதான் இங்க நாம சொல்றது. அதனால, உண்டுபண்ணக் கூடிய எந்திரங்களை சூத்திரம்ன்னு தமிழ்ல சொல்றது உண்டு. அதே போல, ஏதோ ஒன்றை கட்டமைத்துச் சொல்லப்படுகிற சொல்லாட்சிக்கும் சூத்திரம் என்று சொல்வது உண்டு.

தொல்காப்பியப் பெருந்தகை சொல்லும் விளக்கம் என்ன? செறிந்து விளங்கும்படியான சொற்களை அமைத்து முடிக்கப்படும் யாப்பு சூத்திரம் ஆவது, அப்படின்னு சொல்றார். யாப்புன்னா? கட்டுகை. ஆடுகளைக் காக்க, குடை போல ஒன்றைக் கட்டுவது குடை+யாப்பு, கொடாப்பு. மார்புப் பகுதியை அண்மித்துக் கட்டப்படுவது மார் + யாப்பு, மாராப்பு! மக்கா, இப்பக் குதூகலமா நிமிர்ந்து உட்காருவீங்களே? இஃகிஃகி, சரி வாங்க மேல படிக்கலாம்!

அந்த மாதிரி, செறிவான, வளமான சொற்கள் கொண்டு யாப்பது சூத்திரம். சூத்திரத்துல அறுவகைச் சூத்திரம் இருக்கு, பெயர்ச் சூத்திரம், விதிச் சூத்திரம், விளக்கியல்ச் சூத்திரம், நியமச் சூத்திரம், அதிகாரச் சூத்திரம், ஞாபகச் சூத்திரம், இந்த ஆறும்தாங்க. அதாவது, சூத்திர ஆக்கத்திற்கான நிமித்தத்தைப் பொறுத்து இது அமைகிறது.

இநத பின்னணியில, ’இப்படியான யாப்புகளைக் கொண்ட படைப்பை இலக்கண சுத்தமாகப் படைத்ததின் பொருட்டே, கம்பனின் படைப்புகளைச் சிலாகிக்கும் பொருட்டு கம்ப சூத்திரம் எனும் சொல்லாட்சி மேலோங்கியது’ அப்படீங்ற ஒரு முடிவுக்கு வர முடியுதா? இல்லையா??

8/15/2009

கொடைக்கு மாறுங்க மக்களே!

தானந் தவமிரண்டுந் தங்கா தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின் - குறள்.

மானங் குலங் கல்வி வண்மை அறிவுடமை
தானந் தவம்உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்!
- நல்வழி

தானம் என்பது தமிழ்ச் சொல்லே அல்ல என்பது சரியன்று; அப்படி இருப்பின் இந்த சங்ககாலப் பாடல்களில் அச்சொல் இடம் பெற்றிருக்காதே?


வானம்பாடிகள் said...

ஈகையும் தானமும் ஒன்னில்லிங்களா பழமை?

பாலாண்ணே, நான் இது போலச் சிக்கலான இடங்கள்ல நாடுவது G.U. போப் அவர்களைத்தான். மனுசன், ஆங்கிலச் சொற்களோடு ஒப்பிட்டு அவ்வளவு சுலுவா விளக்குவாரு. இஃகிஃகி, அவரோட புத்தகத்துலதான்; பின்ன என்ன அவரு எங்க அப்பிச்சியாட்டம் கனவுலயா வர்றாரு?

ஈகை, தானம், கொடை, ஐயம் இந்த சொற்களை நாம, நாம படிச்ச அளவுல தெரிஞ்சிக்கலாம் வாங்க.

ஈகை: ஒருத்தர், அடுத்தவர்க்கு எதனாக் கொடுத்தாதான் அது ஈகையா? கண்ணுகளா, இது ஒரு பண்புச் சொல். ஆங்கிலத்துல, caringனு சொல்லுறாங்களே, அதுக்கு இந்த ஈகை வரும்ங்றாரு G.U.P. யாருடைய குழந்தையோ ஒன்னு, அங்க விளையாடிட்டு இருக்கு. அந்த பக்கமாப் போற, பாம்பைக் கண்டதும் பதறியடிச்சி துடிதுடிக்கிறான் ஒருத்தன். அவன் ஈகைக் குணம் உள்ளவன், அதனால அவன் பதறுறான்.

தானம்: தானாக எனும் நிலையில் இருப்பது தானம்; நிலை கொள்வது தானம்; சன்னிதானம், சமீபத்தில் நிலை கொள்வது; பிர + தானம், முதன்மை நிலை கொள்வது பிரதானம்; அவம் என்கிற நம்பகமற்ற நிலையைக் கொள்வது அவதானம். ஆக, தானாகச் செய்வது தானம்.

கொடை: கேட்டுக் கொடுத்தாலும் சரி, கேக்காமக் கொடுத்தாலும் சரி, கொடுக்கும் குணமிருந்தா அது கொடைதான். என்ன, அதுல உதவும் மனப்பாங்கு இருக்கணும். அதுக்காக பிரதிபலனை மனசுல வெச்சிக் கொடுத்தா, அது கொடையாகாது!

ஐயம்: பிச்சை எடுத்தல் என்பது ஐயம். ஐயம் இட்டு உண் என்றால், இரப்போர் யாராவது இருந்தால், அவர்களுக்கு இட்டு உண் என்றாகும்.

ஆகவே, நாம புரிஞ்சிகிட்டதுல இருந்து சொல்ல வர்றது என்னன்னா, இந்த சொற்கள் எல்லாமே ஒன்னுக்கொன்னு தொடர்புடையதுதான், ஆனால் அவை தனித்தன்மை கொண்ட சொற்கள். Yes, they are unique!

வரவழைச்சுக் கொடுத்தாக் கொடை, போய்க் கொடுத்தா தர்மம் (அ) தானம். உயர்த்திக் கொடுத்தா கொடை, கை தாழ்த்திக் கொடுத்தா தானம். இதை எல்லாம் ஏற்க மனசு தயங்குதுங்கோ!

8/14/2009

பசி வந்திடப் பத்தும் பறந்து போகும்!

வணக்கம் மக்கா! நேற்றைக்கு பணம் பத்தும் செய்யும் எனும் தலைப்புல ஒரு இடுகை இட்டு இருந்தோம். அதைப் பார்த்த ஆசான் உயர்திரு. கொழந்தைவேல் இராமசாமி அவர்கள், ’பசி வந்தால் பத்தும் பறந்து போகும், இதுல வர்ற பத்து என்ன?’, அப்படீன்னு கேட்டு இருந்தாரு.

நாமளும் நம்ம பங்குக்கு,

பசி வந்தால் பற்றும் பறந்து போகும்;

பசி வந்தால் சட்டி பானையில் இருக்குற அடிப்பத்தும் பறந்து போகும்;

நாட்டில் பசி எனும் வறுமை மேலோங்கினால், மன்னனிடம் இருக்கும் நாடு, ஊர், ஆறு, மலை, புரவி, படை, பறை, தார், கொடி ஆகிய பத்தும் பறந்து போகும்!


இப்படி நம்முடைய யூகத்துக்கு கிடைச்சதை எல்லாம் விட்டுப் பார்த்தோம். ஒன்னும் வேலைக்கு ஆகலை; கடைசில, யோசிச்சு யோசிச்சு பசிதான் வந்திருக்குன்னு சொல்லிச் சொன்னோம். அதைக் கேட்ட ஐயா அவர்கள், ஒளவையார் எழுதின நல்வழியில இருந்த ஒரு பாடலை நினைவு படுத்தினாங்க. அதுதாங்க, இந்தப் பாடல்:

மானங் குலங் கல்வி வண்மை அறிவுடமை
தானந் தவம்உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்!


பசிநோய் வரின், மானம், குடிபிறப்பு, கல்வி, ஈகை, அறிவுடமை, தானம், தவம், உயர்வு, தொழில், முயற்சி, தேன் போலும் இனிமை பொருந்திய சொல்லை உடைய மங்கையர்மேல் ஆசை கொள்ளுதல் ஆகிய பத்தும் ஓடிப்போம்!

8/13/2009

டேய், பணம் இருந்தா பத்தும் செய்யும்டா!

இன்னைக்கு கிட்டத்தட்ட 12 மணி நேரம், நாள் முச்சூடும் அந்த ஒரே அறையில உட்கார்ந்து வெள்ளையம்மாமாருக கூடவும், வெள்ளைச்சாமிகளோடவும் மாரடிச்சு மாரடிச்சு மண்டையெல்லாம் நோவுதுங்க. சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி, அடக் கடவுளே... ஒன்னைப் புரிய வைக்குறதுக்குள்ள பேசாம நாலு இடுகையே எழுதிடலாம் போல இருக்கு?!

என்ன? இடுகையே எழுதிட்டு இருந்தா, மண்டையில இருக்குற தொப்பியக் கழத்தி முன்னாடி வெச்சிட்டு தெருவுல உட்காரணும். அவங்ககூட மாரடிச்சா கொஞ்சமாப் பணங்கிடைக்கும்; இதையெல்லாம் நெனச்சிட்டே அறைக்கு வந்தா, நம்ம நாஞ்சில் பீற்றர் ஐயாவுங்க மின்னஞ்சல்...

Dear Thampi Manivasagam:

PaNam pathum seiyum. What are the TEN elements/events? Are there any references in our Tamil Illakkiyam? Please write a blog about paNam.

Regards
Peter Yeronimuse.

அண்ணே, ஒரு குடியானவன் தன்னோட மகளுக்கு ரொம்ப நாட்களா வரன் தேடிட்டு ஒரு வித சலிப்போட இருந்தானாம். அந்த நேரத்துல அந்த குடியானவனுக்கு வேண்டிய கெழுமிய நண்பன் ஒருத்தன் எதிர்ப்படவே, இவன் தன்னோட புலம்பலை எடுத்து விட்டிருக்கான்.

ஏன் உன்னோட மகளுக்கு, திருமணம் தள்ளிப் போய்கிட்டே இருக்குதுன்னு கேட்கவும், எங்கடா பத்தும் இருக்குற மாதிரி வரன் கிடைக்கவே மாட்டேங்குதேன்னு வருத்தப்பட்டான். அடப் போடாப் போடா, பணம் இருந்தாப் போதாதா? பணம் பத்தும் செய்யும்டா, அதான் அந்தப் பையனோட குடியில போதுமானதுக்கும் அதிகமாவே சொத்து இருக்கே, அப்புறம் என்னன்னு கேட்டானாம்.

ஆமாங்க, அதென்ன அந்த பத்து? நம்ம தொல்காப்பியர், மெய்ப்பாட்டியல் வரிசையில சொல்றாரு:

பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டோ
டுருவு நிறுத்த காமவாயில்
நிறையே அருளே உணர்வொடு திருவென
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே
!

நல்பிறப்பு, பண்பாடு, ஆள்வினையுடைமை, வயது, அழகு, காமக் கிளர்ச்சி, மேன்மை, அருளுடைமை, உள்ளக் குறிப்பறிதல் மற்றும் தெய்வப் பொலிவு, இதாங்க அந்தப் பத்தும்.

நிச்சயமா, பணத்தால இந்த பத்தும் கிடைச்சிடாது. ஆனாலும் பணத்துக்குன்னு ஒரு வலிமை இருக்கத்தான செய்யுது? என்ன செய்ய??

இன்னைக்குத்தான் வெள்ளைச் சாமிகளோடவும், வெள்ளை அம்மாக்களோடவும் பொழுது முசுவாப் போச்சுதுங்களே?! அப்ப, Jeff Schreckன்னு ஒருத்தரோட மதியச் சாப்பாடு. அவங்கேட்டான், ‘பழமை, ஒருத்தனுக்கு வயசாயிடிச்சா, இல்லையான்னு எப்படிக் கண்டுபிடிக்கிறது?’ன்னு கேட்டான்.

நான் சொன்னேன், ‘அய்ய, அதுக்கென்ன? ஆளைப் பார்த்தா தெரிஞ்சிடப் போகுது!’ன்னேன். அதுக்கு அவன்,


‘அது அப்படியில்லை. ஒருத்தன் முப்பது வயசுலயும் வயசாகிப் போலாம். அதே போல 90 வயசாகியும், வயசாகாம இருக்கலாம்’ன்னான். அதெப்பட்றான்னேன் நானு!

‘ஆமா பழமை, ஒருத்தன் எப்ப கடந்த காலத்தை நினைச்சு பெருமை அடிச்சுட்டு, தற்கால இளைஞர்களை குறை சொல்ல ஆரம்பிக்கறானோ, அப்ப அவனுக்கு முதுமை தட்டிடுச்சுன்னு நாம ஒரு கணக்குக்கு வந்திடலாம்’ன்னான். இஃகிஃகி!

கூடவே நம்ம நண்பர் நந்து சொன்ன, ஒரு நல்ல விபரத்தை உங்ககிட்ட பகிர்ந்துகிடலாம்ன்னு... ஆமாங்க!

”பிச்சைக்காரர்களுக்கு ஊட்ட மாட்டேன், ஏனென்றால் அவர்கள் பிச்சை எடுத்து சாப்பிட்டுக் கொள்வார்கள். ஆனால், வீதிகளில் பசியோடு திரியும் இந்த மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு ஊட்ட யார் இருக்கிறார்கள்?”

இப்படித் தன்னைத் தானே கேள்வி கேட்டுட்டு, ஐந்து நட்சத்திர விடுதியில பார்த்துட்டிருந்த நல்ல வேலையையும் விட்டுட்டு, முழு நேரப் பணியா, மதுரை வீதிகளில் இருக்கும் 400 மனவளர்ச்சி குன்றிய மக்களுக்கு தன் கையால, 365 நாளும், மூன்று வேளைகளிலும் ஊட்டிக் கொண்டு இருக்கும் கிருட்டிணன் மனிதர் அல்ல; மகான்!

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கமானது, இது போன்ற மனிதநேய மறவர்களை அழைத்து சிறப்புச் செய்யுமா? செய்ய வேண்டும்!

பசி வந்தாப் பத்தும் பறந்து போகும். அந்த பத்து?

8/12/2009

நீட்டி மொழக்காதடா, டேய்!

பாருங்க மக்களே, சிலபல நேரங்கள்ல நாம உச்சரிக்கிற விதம் ஒரு சொல்லுக்குண்டான அர்த்தத்தையே மாத்திடும். இயல்பா, ‘வீட்டுக்கு போயிட்டு வர்ற போல இருக்கு?’ன்னு கேட்டா, அது நேரிடையான கேள்வி. அதே, ‘என்ன, வீஈஈஈட்டுக்குப் போயிட்டு வர்ற போலிருக்கு?’ன்னு நீட்டி மொழக்கும் போது, அவன் யாரோ, போகக் கூடாதவங்க அல்லது அந்த வீட்டுக்குப் போயிட்டு வர்றதைக் கேட்டது போல ஆயிடும். அதாவது சொல்ல வந்ததை உச்சரிப்புல நீட்டி, முழக்குதல்.

அதே நேரத்துல ஒருத்தர் உங்க வீட்டுக்கு சாயுங்காலம் வரலாமுன்னு இருக்கேன். ஊர்த் தலைவாசல்ல இறங்கி, எப்படி வர்றதுன்னு கேட்டவுடனே, அவரு வீட்டுக்கு வர விரும்பாத நாம,


‘ஓ அதா, ரொம்ப சுலுவு. அங்க இறங்கி, வலது பக்கமாப் போயிடாதீங்க. அல்லாரும் அதே தப்பைத்தான் செய்யுறது. அதனால யாருகிட்டவும் கேக்காமக் கொள்ளாம நேரா வந்திட்டு இருங்க. வரும் போது ஒரு வேப்ப மரம் இருக்கும். அந்த இடத்துல இடது பக்கம் திரும்புனா, திரும்பவும் தலைவாசலுக்கே போயிடுவீங்க. அதனால அங்க திரும்பிடாதீங்க என்ன?...’

இப்படி அளவுக்கு அதிகமான தகவல்களைக் கொடுத்து நீட்டி முழக்குறது அடுத்த இரகம். வர்ற யோசனையில இருந்த அந்த ஆள், தலை தெறிக்கக் காத தூரம் ஓடிடுவாரு. அதான நமக்கு வேணும்?! இஃகிஃகி!!

இப்படி நீட்டி முழக்கினாவே விவகாரந்தாங்க. இப்படித்தாங்க நான் இலட்சுமி நாயக்கன் பாளையத்துல இருக்குற பள்ளியில படிச்சுட்டு இருந்தேன். அப்ப ஒன்பது, பத்தாம் வகுப்புத் தேர்வுல ஆங்கிலப் பாடத்துல கேள்வி வரும்.


Describe briefly about Gandhi அப்படின்னு இருக்கும். அதைப் படிச்ச உடனே, வகுப்புல வாத்தியார் ’Describe ப்ரீஈஈஈஇஃப்லி’ன்னு நீட்டி முழக்குனது ஞாவகத்துக்கு வரும். நாமளும் வெச்சு ஒரு பக்கத்துக்கு வெளுத்து வாங்குவம்ல?!

அப்படித்தாங்க, மாதிரித் தேர்வுல வெச்சு வெளுத்து வாங்கிட்டு இருந்தேன். மேற்பார்வையாளரா இருந்த தமிழ் வாத்தி வந்து, பக்கத்துல நின்னு பார்த்தாரு. பார்த்துட்டு காதைப் பிடிச்சித் திருகுனாரு.

’என்னடா இது? உம்பாட்டுக்கு எழுதிட்டே இருக்க?’

‘ஐயா, ப்ரீஈஈஈஈஈஈஃபா எழுதச் சொல்லி இருக்குங்க ஐயா, அதான்!’

’அடேய், ப்ரீரீரீஃப்கேசுன்னு சொல்லிச் சொல்றாங்க. அதுக்காக பெரிய பொட்டி எடுத்துட்டு போவீயளோ?’ன்னு நெல்லைத் தமிழ்ல கேட்டாரு.

அப்பத்தாங்க இந்த சொல்லுக்கு அர்த்தம் வெளங்குச்சு. அது போல, அதீதம்ங்ற சொல் வடமொழியில என்ன பொருள் தரும்ன்னு எனக்குத் தெரியாது. ஆனா, இந்த சொல் தமிழ்லயும் இருக்கு. தேவாரம், திருவாசகம்ன்னு நிறைய பண்டைய இலக்கியங்கள்ல நீங்க பார்க்கலாம்.


அதாவது, அதீஈஈஈதம்ங்றதால இது, மிகையான, நிறையங்ற பொருள்ல நடைமுறையில இருக்கு. ஆனா, சங்க இலக்கியத்துல அந்த பொருள் அதுக்குக் கிடையாது.

எனதியானும் வேறாகி எவரும் யாதும் யானாகும்
இதய பாவனாதீத மருள்வாயே!


இது அருணகிரி நாதரோட திருப்புகழ்ல பாடி வெச்சது. தனதுங்கற சுயநலம் நீங்கி, பொதுநலம் ஓங்கக் கூடிய அரிய பண்பைப் பெற்றுத் தந்திடுவாயேங்றது பொருள்.

ஆக, அதீதம் அப்படீன்னா, அரிய அல்லது கிடைக்கப் பெறாதங்றது பொருள். அந்த அடிப்படையில, சாமான்யனின் பாவனாதீதம் அப்படின்னா, என்னோட சிற்றறிவுக்கு இது கிடைத்தற்கரிய ஒன்னுன்னு சொல்றதுதாங்க, அது!

அதீஈஈதம்ன்னு நீட்டுறதுல விழுந்திடாதீங்க என்ன? அதீத கற்பனைன்னா, நிறைய (அ) மிகையான கற்பனை அல்ல; அது அரிய கற்பனை!

சரி, சரி, நீட்டி முழக்குனது போதும், போயி வேலைப் பாருடா பழமைன்னு நீங்க சொல்லுறதுக்கு முன்னாடி, நானே போயிடுறேன்!


விண்ணாளக்காரனுக்கு வீதி முச்சூடும் வெவகாரம்!

8/11/2009

ஏன்டா நீ அரக்கப் பறக்க இதைச் செய்யுற?

//வானம்பாடிகள் said...

அரக்க பறக்க கிளம்புறீங்க. போய்ட்டு வந்து இதுக்கு விளக்கஞ்சொல்லுங்க! //


பாலாண்ணே, நாங்க காலாண்டுத் தேர்வு, அரையாண்டுத் தேர்வு, முழு ஆண்டுத் தேர்வு, இப்படி எந்த ஆண்டுத் தேர்வு முடிஞ்சி, பள்ளிக்கூடம் விடுப்பு விட்டாலும் சரி, பைக்கட்டுல அங்கராக்குக ரெண்டைப் போட்டுட்டு தெக்க எங்க சின்னம்மாவிக ஊருக்கு கிளம்பீருவம்ல?!

உடலப் (உடுமலை) பேட்டைக்குத் தெக்க ஏழு குளம் இருக்குதுங்க. அதனால அந்தப் பக்கத்தை ஏழு குளத்துப் பாசன பூமின்னுதேன் சொல்றதே! அதென்ன ஏழு குளம்ன்னு கேக்குறீங்களா? அதாவது, ஒட்டுக்குளம், பெரியகுளம், செங்குளம், செட்டிக்குளம், தினைக்குளம், கரிசல்குளம், ஒடையகுளம்ன்னு ஏழு. அது போக அம்மாபட்டிக் குளம், மேட்டுக் குளம்ன்னு இதர குளங்கள் வேற.

நாம பிரதானமாச் சுத்துறது, எலையமுத்தூர்ப் பிரிவுக்குமு பள்ளபாளையத்துக்கும் ந்டுப்புல இருக்க்ற செங்குளத்துலயும் பெரிய குளத்துலயுமு. என்ன பெரிய வேலை? நீச்சல் அடிப்போம், தெள்ளு விளையாடுவோம், அப்பறம் குளத்தோரத்துல இருக்குற பத்தையில மாடு மேய்ப்போம்... அவ்வளவுதான்!

அப்ப, குளத்துல வாத்து மேய்க்க சனங்க வருவாங்க. கூடவே கருவேலமுள், வேலி முள்(டில்லி முள்) வெட்டுறதுக்கும் ஊர் சனங்க வருவாங்க. அப்ப அந்த அம்மணி சொல்லுச்சு அவங்க ஊட்டுப் பொன்னாங்கிட்ட, “டேய் இராசூ, அரக்கப் பறக்குறதுல கண்ணு பத்தரம்!”.

அதென்ன அரக்கப் பறக்குறது? வேலிமுள்க் கோல்களை வெட்டி, அதுல ஓரத்துல இருக்குற முள்ளுகளை நல்லா அரக்கோணும். அரக்குறதுன்னா, அரிவாளை வெச்சி, கோலோட பக்கவாட்டுல அழுத்தி உரசுறதுதான்!

இல்லாட்டி, முள்ளு கையில கால்ல ஏறீருமல்லோ? அப்படி வேக வேகமா அரக்கும் போது, சின்ன சின்னப் பிசிறுக எகுறிக் கண்ணுல விழுந்திரும்ன்னு அக்காகாரிக்கு ஒரு பயம். அதான், பொன்னானைப் பாத்துப் பதலமா அரக்கச் சொல்லுதாக்கூ!

இதுல இருந்து உங்களுக்கு என்ன தெரியுது? இப்படி அவசரமா, வேக வேகமாச் செய்யும் போது சொல்றதுதான் அரக்கப் பறக்கறதுன்னு. எங்கூர்ப் பழமையிகளைப் படிக்கறதுக்கு நெம்பப் பாடா இருக்குதா? மன்னிச்சுகோங்.. செரியா? இஃகிஃகி!

மேக்க மழை பேஞ்சா கிழக்கமின்னா வெள்ளம் வரும்!

வாட்டி வளவெடுத்துறவன்டா......

சூர்யா said...

................... பதிவுலகத்துல யாரப்பாத்தாலும் இவிங்களையே வம்புக்கிழுத்து அவிங்கள பெரியாளாக்கிப்புட்டாங்கன்னு நெனக்கிறேன்.. அப்புறம் இப்படி ஒருத்தர கன்னா பின்னான்னு (இதுக்கும் ஒரு விளக்கம் குடுங்க..) ......


வணக்கம் மக்களே! இந்த இடுகை நம்மூர் அன்புத் தம்பி சூர்யாவுக்காக!! இஃகிஃகி... அல்லாம் நம்மூர் சமாச்சாரந்தான்... வாங்க படிக்குலாம்....

திடீல்னு குறுக்கால வந்தான் குணான். ”என்றா கோவமா இருக்குறயாட்ட இருக்குதூ?”

”ஆமாடா, அந்த கணக்கு வாத்தியார் வாட்டி வளவெடுத்துப் போட்டான்டா... மணல்ல மண்டி போட்டு நிக்கவுஞ் சொல்லிட்டான் மீசைக்காரன்!”

அதென்ன வாட்டி வளவெடுக்குறது? அதாவது கண்ணூ, தச்சுப் பட்டறையில வளைவுகளை நிமுத்துறதுக்கு அந்த இரும்புத் துண்டை நல்லாத் தணல்ல காய்ச்சி, அப்புறம் தட்டி, நிமித்தி, அந்த வளைவை எடுத்து உடுறாங்க பாருங்க, அதான் வாட்டி வளவெடுக்குறது!

“டேய், ஒழுங்கு மரியாதியா இருக்கப்பழகிக்க; இல்லே, குடும்பத்தையே சின்னாபின்னமாக்கிருவேன் பாத்துக்க!”

அதென்ன சின்னாபின்னம்? சின்ன சின்னதா பின்னங்களா ஆக்கிடுவாராமா தொரை.... அதாவது ஒற்றுமையா இருக்குற பெரிய குடும்பத்தை வகுந்து வகுந்து, சின்னச் சின்னதா ஆக்கிடுவேன்னு ஒரு மிரட்டல்...இஃகிஃகி! சிறுசா இருக்குற சுக்கை நூறாக்குறது... சுக்குநூறாக்கிருவன் சாக்குரதை... இதுவும் அதேதானுங்...

“டேய் மாப்பிளை, உங்க அக்கா புருசன் என்னடா, வந்தாரு, ச்சும்மா கன்னாபின்னானு எதையோ உளறுனாரு... கொட்டிகிட்டாரு... அப்பறம் பொறப்பட்டு போய்கிட்டே இருக்காரு.... என்னதான் நடக்குது உங்க ஊட்ல?”

அதென்ன கன்னபின்னான்னு? அதாவது கண்ணூ, கன்னா அப்படீன்னா தொகையாக் குமிச்சு வெச்சுருக்குற சர்க்கரை. பின்னான்னா வகுந்து வகுந்து பொடிப்பொடியாக்குறது.

அந்த மாதர, சொல்ல வந்ததை உருப்படியா சொல்லாம, குமிச்சு வெச்சுருக்குற சர்க்கரைய எடுத்து பின்னங்களாக் கெடக்குறது போல, ஏகத்துக்கும் விட்டெறியுற மாதர கண்டபடி உளறுறது.

“டேய் கந்தசாமி, அவனென்றா எக்கச்சக்கமா கவுறு திரிக்கிறான். நாமல்லாம் கேனயனுகன்னு நெனப்பு அவுனுக்கூ....”

கவுறு திரிக்கிறதுன்னா? ஒரு விபரத்தை திரிபுறச் சொல்றது. அதாவது மாத்தி மாத்தித் திரித்துச் சொல்றது. திரிக்கிறதே திரிஞ்சி கவுறு திரிக்கிறதாயிடிச்சி...

“டேய் பழமை, போதும் போதும்டா திரிச்சது; வேலைக்கு நேரமாச்சு, ஓடு!”

ஆமாங்க, வேலைக்கு நேரமாச்சு; வரட்டா?......

8/09/2009

உண்மை!

இன்மைக்கு மட்டுமே ஒரு இடுகைன்னா, உண்மை கோவிச்சிக்கிடும்ல பழமை? உள்ளது உள்ளபடி சொல்றது உண்மைன்னா, சத்தியம்னா என்ன? உண்மைக்கு நிரூபணம் தேவை. சத்தியத்துக்கு தேவை இல்லைன்னு சொல்லுவாங்களே. அதனாலதான் நீதிமன்றத்தில் நான் சொல்லுவதெல்லாம் உண்மைன்னு பிரமாணம் வாங்குறாங்களா?

--வானம்பாடிகள்

எங்க ஊர்ப் பெருசை நினைச்சு இடக்குமுடக்கு! இடுகை இட்டாலும் இட்டோம், எத்தனை மின்னஞ்சல்கள்? விவாதங்கள்? பாராட்டுகள், விமர்சனங்கள், கேள்விகள்?! நெம்ப மகிழ்ச்சியா இருக்குங்க. இந்த காலகட்டத்துல இந்த மாதிரியான விபரங்களைக் கூட, கேட்க, படிக்க ஆட்கள் இருக்குறாங்கன்னு நினைக்கும் போது பெருமையா இருக்கு.

திருப்பூர்ல இருந்து நிகழ்காலத்தில் பதிவர்கிட்ட இருந்து வரவும் போகவுமா வினாக்களும் விடையளித்தலுமா மின்னஞ்சல் தொடர்! கடைசியில, உங்ககிட்ட இப்ப வைர மாலை இருக்கான்னு ஒரு கேள்வி கேட்டேன். மச்சான் ஒரேயடியா சரண் அடைஞ்சுட்டாரு! இஃகிஃகி!!

சரி, விசயத்துக்கு வருவோம் வாங்க. உண்மைன்னா உள்ளமைன்னு முந்தைய இடுகையில விபரமாவே அலசித் தொவச்சிக் காயப்போட்டாச்சி. பாலா அண்ணன், அப்ப சத்தியம்ன்னா என்னன்னு கேட்டு இருக்காரு.

உண்மைக்கு மெய்ப்பு (அ) நிரூபணம் தேவை. அதேபோல சத்தியத்துக்கும் மெய்ப்பும் தேவை; சான்றும் தேவை. இங்கதான் நாம அடிக்கடி சொல்ற, தமிழ் ஒரு நுண்ணிய (sensitive language) மொழிங்றதை நாம எல்லாரும் கவனத்துல கொள்ளணும்.

சத்தியம்(திசைச்சொல்)ன்னா என்ன? வாக்குக் கொடுப்பது அல்லது உறுதிமொழி அளிப்பது, வாய்மை(தப்பாமொழி)! வாய்மொழி வாக்கும் புழக்கத்துல, பண்டைய காலத்துல இருந்தது. அதை மெய்ப்பிக்கிறதுக்கு ஒரு சான்றுதான் சாட்சி. அதாவது அவர் சொன்னதைக் கேட்டதாகச் சொல்ல மற்றொருவர்.

வாய்வாக்குத் தவறுதல் ஓங்கி வந்த காரணத்துக்காக, பின்னாளில் வந்தது அத்தாட்சி. அதாவது சொல்வதை எழுத்தில் பதிந்தது. அந்த அத்தாட்சியை, சாட்சியுடன் முழுமைப்படுத்துவதும் செயலில் வந்தது. அதன் கூறுகள்தான், சான்றவன், சான்று, சான்றுரைஞர், சான்றோன் இப்படி எல்லாமும்.

சத்தியம் தவறிட்டான் அவன்னு சொன்னா, உண்மையில் இருந்து பிறழ்ந்தவன்னு சொல்ல முடியாது. இது முழுக்க முழுக்க பொருட்பிழையான புரிதல். கொடுத்த வாக்கில் இருந்து தவறிவிட்டவன், அல்லது வாக்கு காப்பாற்றும் நீதியிலிருந்து தவறியவன்னுதான் வரும், வரணும்.

நான் சொல்லுவதெல்லாம் உண்மைன்னு நீதிமன்றத்துல ஒருத்தர் சொல்றார். அதுக்கென்ன அர்த்தம்? உள்ளவற்றை மட்டுமே சொல்வேன் நான் அப்படீங்றதுதான் பொருள். அந்த வாக்கைச் சான்றுரைக்க நீதியரசரே இருக்கிறார்.

ஆக முடிவா நாம சொல்றது என்னன்னா, உண்மைக்குத் தேவை மெய்ப்பு. சத்தியம் (அ) உறுதிமொழிக்குத் தேவை சாட்சியும், அத்தாட்சியும் உள்ளடக்கிய சான்று. வாய்வாக்குக்குத் தேவை மானம். மானம் என்கிற வார்த்தையெல்லாம் அகராதிய விட்டு ஓடி, நெம்ப நாள் ஆச்சுங்க! அதுவும் கழகங்கள் வந்ததின் பிறகு சொல்லவே வேணாம்!

இதுமாதிரி (Semantic) பொருட்பிழைகள் சமீப காலங்கள்ல நிறைய புகுத்தப்பட்டு வருது. சாமான்யர்கள் இதை அதிகமாச் செய்யுறது கிடையாதுங்றது என்னோட தனிப்பட்ட அபிப்ராயம். எல்லாமே, நாலுந்தெரிஞ்ச ஆட்சியாளர்கள், எழுத்தாளர்கள், ஊடகங்கள் செய்யுற வேலைதான்.

மொழியைக் கட்டி எழுப்புறதுக்கு நம்ம மூதாதையர்கள் எவ்வளவு உழைச்சிருப்பாங்க?! பல்லாயிரக்கணக்கான வருடங்களாகக் காப்பாற்றிட்டு வந்து நமக்குக் கொடுத்துட்டுப் போன செல்வம் அது அல்லவா? அடுத்த தலைமுறைக்குத் தந்துட்டு போகணுமா, வேண்டாமா?

தமிழ்ன்னு அல்ல, எல்லா மொழிகளையும் நேசிக்கணும். We are not here to abuse any language; Building such a sensitive language takes so many years, efforts and dedication. Let's try to make use of it, rather abusing!!

8/08/2009

இன்மை!

வணக்கம் மக்களே! கடந்த 2004 - 2005ம் ஆண்டுகள்ல இசுரேல் நாட்டைச் சார்ந்த நிறுவனமான Amdocsங்ற நிறுவனத்துல நாம வேலை செய்துட்டு இருந்தோம். அந்த சூழ்நிலையில இசுரேல் மற்றும் சைப்ரசு நாடுகள்ல ஒரு ரெண்டு மாசம் பொட்டி தட்டப் போயிருந்தேன்.

ஒரு நல்ல நாள் அதுவுமா புராதன தொல்பொருள் ஆராய்ச்சி வளாகங்களைச் (archaeological sites) சுத்தி பார்க்கப் போயிருந்தோம். நிறைய இடங்கள் பார்த்தோம். அதுல ஒரு ஓவியம் என்னை மிகவும் பாதிச்சது.

ஆமாங்க, மொழியியல் அறிஞர்கள் எல்லாரும் உட்கார்ந்து பேசிட்டு இருக்குற மாதிரியான வண்ண ஓவியம் அந்த அரண்மனைக் கூடத்தோட மையப் பகுதியில இருந்தது. கரிய நிறத்துல ஒருத்தர் முழுக்கை சட்டையோட. கூட வந்த வழிகாட்டி தெளிவா சொன்னாரு, ‘He is a representative of Thamizh!.

உடனே எனக்கு, உலகின் ஆதி மொழிகள் சீனம், இலத்தீனம், கிரேக்கம், இப்ரூ, தமிழ், சமசுகிருதம் ஆகியவைன்னு எங்கோ படிச்சதை உறுதிப்படுத்திக்க முடிஞ்சது. இப்ப அதுக்கு என்ன வந்ததுன்னு நீங்க கேட்கலாம். அதுல ஒரு நியமக்கூறு இருக்குது இராசா, இருக்குது!

நேற்றைய இடுகையில உண்மைக்கு எதிர்ப்பதம் இன்மைன்னு சொல்லவே, நண்பர்கள் ஒன்னு ரெண்டு பேர், அதை ஏத்துக்க மூளை ஒத்துழைக்க மாட்டேங்குதுன்னு குறிப்பிட்டு இருந்தாங்க.

நான் என்னோட முந்தைய இடுகைகள்ல சொன்னதுதான், ஆதி மொழிகளில் ஒன்னான தமிழ்ல எந்த உணர்வு, செய்கை மற்றும் பொருளையும் தனித்துக் குறிப்பிடும்படியான சொற்கள் கிட்டத்தட்ட கி.பி 1900ம் ஆண்டு வரையிலும் இருந்தது. அதற்குப் பின்னாடி, தமிழ் மொழிய விஞ்ஞானம் மற்றும் இதர துறைகளின் வளர்ச்சிக்கு இணையாக் கொண்டு போகாம விட்டுட்டாங்க.

அது மட்டுமா? இருந்த மொழியின் பயன்பாடும் குறைஞ்சு போச்சு, அதனோட விளைவுதான் இன்றைக்கு இன்மைங்ற சொல்லை, உண்மைக்கு எதிர்ப்பதமா ஏற்றுக் கொள்ள முடியலை! அந்த பின்னணியில விபரத்தைப் பாக்கலாம் வாங்க!

இன்மை, இல்லை, இன்றி, இல்லாதது இதெல்லாம் non existanceஐ குறிக்கிறது. உண்மை, உள்ளது, உள, உளல் இதெல்லாம் existanceஐ குறிக்கிற சொல். ஆக, உண்மைக்கு எதிர்ப்பதம் இன்மைதான்!

உண்மை: இருப்பதை இருப்பதாகக் குறிப்பிடல்

இன்மை: இல்லாததை இல்லாததாகக் குறிப்பிடல்
பொய்: இருப்பதை இல்லாததாகவும், இல்லாததை இருப்பதாகவும் குறிப்பிடல்
மெய்: இருப்பதை இருப்பதாகவும், இல்லாததை இல்லாததாகவும் குறிப்பிடல்

ஆக, உண்மை X இன்மை, பொய் X மெய் என்பதே பொருத்தமாக இருக்கும். ஆனா, நடைமுறையில இதெல்லாம் சாத்தியமா? ஆனா இதாங்க சரியானது. மெய்யுரை, பொய்யுரை கேள்விப்பட்டு இருப்பீங்க. உண்மையுரை கிடையாது. உண்மை(யை) உரைன்னு சொல்லலாம். அதேபோல இன்மையுரை கிடையாது. இன்மை(யை) உரைன்னு சொல்லலாம்.
உள்ளமை உண்மை; இல்லாமை இன்மை! சரியானது மெய்; தவறானது பொய்!!


பல் போனா சொல் போச்சு!
சொல் போனா மொழி போச்சு!!
மொழி போனா இனமே போச்சு!!!

8/07/2009

இடக்குமுடக்கு!

ஒரு நாள், பெண்ணைப் பெத்த அந்தம்மா அழுது புலம்பிட்டு இருந்தாங்க. உடனே அந்தப் பெரியவர்,

”இதுக்கு ஏன் இப்ப அழுதுட்டு இருக்கே நீ? சேய் அப்படீன்னா, ஒரு நாள் இல்லாவிட்டாலும் ஒரு நாள் பிரிஞ்சி எட்டத்தான போகும்? அதனாலத்தான அவுகளை சேய்ன்னு சொல்றது?”

பக்கத்துல இருந்த நாம உடனே அந்த பெருசுகிட்ட, ”அய்யா, என்ன சொல்றீங்க நீங்க?”

“ஆமா சேய்ன்னா தூரம், அண்மைன்னா கிட்டக்கங்றதுதான் தமிழ்?”

“அய்யா, சித்த வெவரமாச் சொல்லுங்க! நீங்க எடக்குமொடக்கா சொல்றீங்க போலிருக்கு?”

“டேய், டேய்... அது எடக்குமொடக்கு அல்லடா! இடக்குமுடக்குன்னு சொல்லணும்!!”

“செரி வுடுங்க. இடக்குன்னா என்ன? முடக்குன்னா என்ன??”

“இடக்குன்னா குதர்க்கம். முடக்குன்னா ஒழுங்கில்லாதது. குதர்க்கமாப் பேசி ஒழுங்கில்லாமச் செய்யுறதுதான் இடக்குமுடக்கு”

“ஓ அப்படியா? அப்ப ஏடாகூடான்னா என்னங்க பெரியவரே?”

”டேய், நீயென்னடா வெவகாரமாவே கேள்வி கேக்குற? இருந்தாலும் வயசுல சின்னவங் கேக்குறதால சொல்றேன், கேட்டுக்க; ஏடன், ஏடான் அப்படின்னா, தோழன் அல்லது நட்பானவன்னு அர்த்தம். கூடான் அப்படின்னா, சேரக் கூடாதவன். ஆக, எதிர்ப்பதமா இருக்குறதைச் சொல்லுறது ஏடாகூடான்னு!”

”பெருசூ.... அப்ப எதிரும் புதிருமாப் பேசுறான்னு சொல்றாங்களே? அது?? இஃகிஃகி!”

“டேய், கேனக்காத்தானாட்டம் இளிக்காத! ஒன்னுக்கொன்னு எதிர்ப்பதமா இருக்குற அர்த்தத்துல பாவிக்கிறது அல்லடா அது! ஆனாக் காலவட்டத்துல நீங்கெல்லாம் இப்படி மாத்திபுட்டீகடா... எதிர் அப்படீன்னா முன்னாடி நிக்கிறது. புதிர் அப்படீன்னா, சுலுவுல புரிஞ்சிக்கும் படியா இல்லாம இருக்கிறது. ஆக யாராவது முன்னாடி வந்து, சொல்லவந்ததை நேரிடையாச் சொல்லாமச் சொல்லுற பழமதாண்டா அந்த எதிரும்புதிருமாங்றது!”

”ஓ இதுல இத்தனை கதை இருக்கா? அப்ப எதிர்ப்பதம்னா என்ன பெருசு?”

“எதிர்ப்பதம்னா, முரணான பதம்ங்றதுதான். இப்ப கொஞ்சம் எதிர்ப்பதங்களை சொல்லுறேன் கேட்டுக்க,

சிறுமை X பெருமை
சேய்மை X அண்மை
தீமை X நன்மை
வெம்மை X தண்மை
புதுமை X பழமை
மென்மை X வன்மை
மேன்மை X கீழ்மை
திண்மை X நொய்மை
உண்மை X இன்மை
நுண்மை X பருமை"

"நல்லா இருங்க பெரியவரே, நான் கழண்டுக்குறேன் இப்போதைக்கு! இஃகி!!”

வாங்க மக்கா, நாம போயி நம்ம பொழப்பு தழைப்பப் பாக்கலாம். விட்டாப் பெருசு விடிய விடியத் தமிழ்ப் பாடம் எடுக்கும் போல இருக்கு?

கறக்குற பசுவையும், கைக்குழந்தையையும் கண்ணுல வெக்கணும்ன்னா,
தமிழை இரசிச்சு அனுபவிக்குறதுல வெக்கணும்யா!!

8/06/2009

கவக்கோலை எடுத்தாடா!

வணக்கம்! விமானப் பயணம் என்பது எமக்கு தவிர்க்க முடியாத ஒன்று. அப்படி விமானத்தில் சென்று வருகிற போதெல்லாம், இளம்பிராயத்தை நினைத்து அசை போட்டுக் கொண்டே செல்வதில் கிடைக்கும் பேரின்பம் போல எதுவுமில்லை. அப்படிச் சமீபத்தில் நிகழ்ந்த நினைவசையில் அகப்பட்ட சொல்தான், ‘கவக்கோல்’. எங்கள் ஊர்ப் பக்கம், ‘டேய் மாசாணி, அந்த கவக்கோலை எடுத்தாடா!’ என்பார்கள்.

நுனியில் இரண்டாகப் பிரியும் தடியை கவட்டிக்கோல் என்று சொல்வார்கள். அப்படியானால், இந்த கவக்கோல் என்றால் என்னவென்று மனம் கிடந்து தவித்தது. ஊரில் இருக்கும் என் பெற்றோர்களைக் கேட்டால், அது கவைக் கோல்தானடா என்றார்கள். இறுதியில் பல புத்தகங்களை புரட்டிப் பார்த்ததில் விபரம் தெரிய வந்தது. இதோ அது உங்கள் மேலான கவனத்திற்கு:

அடி மரத்தினின்று பிரிவது கவை.
கவையிலிருந்து பிரிவது கொம்பு.
கொம்பிலிருந்து பிரிவது கிளை.
கிளையிலிருந்து பிரிவது சினை.
சினையிலிருந்து பிரிவது போத்து.
போத்திலிருந்து பிரிவது குச்சு(சி).
குச்சு(சி)னின்று பிரிவது இனுக்கு.

இதிலிருந்து மரத்தின் பாகங்களை எப்படியெல்லாம் பெரியவர்கள் துல்லியமாகக் குறிப்பிட்டுள்ளார்கள் என்று உணர முடிகிறது. அதே போல ஊறு (feeling) என்பது எப்படியெல்லாம் இருக்கிறது என்று பார்ப்போம்.


வெம்மை, தண்மை, வன்மை, மென்மை, நொய்ம்மை (கனமற்றது), சீர்மை(கனமானது), இழுமை (வழுவழுப்பு), சருச்சரை( சுரசுரப்பு) என எட்டு வகையாகக் குறிப்பிட்டுள்ளார்கள். அப்படியாகத்தான், சீரும் சிறப்புமென்பது, வலுவாகவும் சிறப்பாகவும் என்று பொருள்படுகிறது.


கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டு போய்விடுமா?

8/05/2009

வலைச்சரத்தில் எழுதியது!

வணக்கங் கண்ணுகளா! நம்ம ஊர்ப் பழமையிகளைச் சித்த பாத்துட்டு, வலையில புதுசா எழுத வந்துருக்குற சனங்களைப் பாக்குலாஞ் செரியா?!

பாரு கண்ணூ, நான் ஒரு நாள் பொழுது விடிஞ்சதும் ஏழு மணி வண்டிக்கு நெகமம் போயி உரக் கடையில உரமும், பருத்திக் காட்டுக்கு சிம்புசு மருந்தும் வாங்குலாமுன்னு போயிட்டு இருந்தன். அப்ப வடக்காலூட்டு பாப்பாத்தி அக்கா, அங்க நின்னுட்டு இருந்த பூவாத்தக்கா கிட்டச் சொல்லுது,

பெத்தவ ஒரு
பாவமுஞ் செய்யுல;
ஆனாலும் பெத்த
புள்ளை இந்த
சின்ன வயசுலயே
செமக்குது புத்தக
பாரம்!

அதைக் கேட்டுட்டே ஊர் வாசலுக்குப் போயிச் சேரவுமு, கல்யாணி வண்டி வரவுமு செரியா இருந்தது. செஞ்சேரி மலையில இருந்தே வண்டி நெறய சனங்க தொங்கிகிட்டுத்தேன் வந்தாங்கலாமா கண்ணூ. நானுஞ் சேரின்ட்டு ஏறி கம்பியப் புடிச்சுட்டு நின்னுட்டேன். பக்கத்துல இருந்த சுண்ணாம்புக் காளவாய் கோயிந்தன் சொன்னான்,

எந்தத் தப்புஞ்
செய்யாம
நிக்கற தண்டனை
இந்த பேருந்துல!


என்றா கோயிந்தா, நெம்பத்தான் சலிச்சுக்குறன்னு அவனை ஒரு கேள்வி கேட்டுப் போட்டு, உள்ள நகுந்து போயி நின்னுட்டேன் நானு. வீதம்பட்டி மாரியாத்தா கோயில்ல வண்டி நிக்கவுமு, சனங்க உள்ள ஏறி வந்தாங்க. உள்ள ஏறி வந்ததுல இருந்த அந்த களையா இருக்குற அம்மணியப் பாத்துக் கோயிந்தன் சொன்னான், காஞ்ச கருவாட்டுக்கு ருசின்னா, கறுத்த கட்டைக்கு அழகு கழுத்துமணி! இதைக் கேட்ட அந்த அம்மணி சொல்லுச்சு, கழுத்துல இருக்குற மணி என்னவோ கறுப்புத்தான்! ஆனாக் கால்ல இருக்குறது வாகான பழைய செருப்பு!!

அதுக்கு மேலயும் கோயிந்தன் பேசுவான்னு நீங்க நினைக்குறீங்க?! இழுத்துச் சாத்திட்டு வந்தவன், சின்ன நெகமத்துலயே மொதல் ஆளா இறங்கி கண்ணு மூடி முழிக்கிறதுக்குள்ள மாயமாப் போயிட்டான்!


"அழுதிட்டு இருந்தாலும் உழுதிட்டு இரு!"

அடச்சீ... சும்மா இரு; மாத்திச் சொல்லாத! அதை இப்படிச் சொல்லோணும், "அழுதிட்டு இருந்தாலும் எழுதிட்டு இரு!
"

8/02/2009

கவிச்சோலை அண்ணன் ஜான் பெனடிக்ட் அவர்கள் மற்றும் பழமைபேசி!

வட அமெரிக்கக் கவிச்சோலை அண்ணன் John P. Benedict அவர்கள்...

கூட நானும் எதோ சொல்லி இருக்கேன்... இஃகிஃகி...

தமிழ்த் திருவிழாவில் புதுமை!

சேரன் செங்குட்டுவன் அணி

ஈழப்புலவர் பூதன்தேவனார் அணி


வட அமெரிக்கத் தமிழர் பேரவையின் தமிழ்த் திருவிழாவில், நாஞ்சில் பீற்றர் ஐயா அவர்கள் நடத்திய புதுமையான பல்லூடக நிகழ்ச்சி அனைவரது வரவேற்பையும் பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே! இந்த நிகழ்ச்சி, தமிழ் இலக்கிய விநாடி வினாவாக மலர்ந்தது. அதன் காணொளியைக் கீழே கண்டு களிப்பீராக!




இந்நிகழ்ச்சி கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் இடம் பெற்றது. நிகழ்ச்சியில் இடம் பெற்ற முழு பல்லூடக மூலக் கோப்புகளை இந்தச் சுட்டியில் இருந்து தரவிறக்கிக் கொள்ளலாம். நிறையத் தமிழிசை மற்றும் சுவாரசியமிக்க விபரங்களுடன் கூடிய இந்நிகழ்ச்சியின் கோப்புகளை ஒரே உறையில் (folder) இட்டு, அனைவரும் கண்டு களித்து இன்புறலாம்.

நிகழ்ச்சியின் மூலக் கோப்புகள் முழுக்க முழுக்க தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு மட்டுமே பாவிக்கப்பட வேண்டுமே அல்லாது, வணிக ரீதியாக பயன்படுத்தக் கூடாது என்பதை, நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் மேன்மைமிகு நாஞ்சில் பீற்றர் அய்யா அவர்கள் சார்பாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கோப்புகள் மற்றும் நிகழ்ச்சியைப் பற்றிய மேலதிக விபரங்களுக்கு நாஞ்சில் பீற்றர் அய்யா(peter.yeronimuse@gmail.com) அவர்களைத் தொடர்பு கொள்ளவும். மேலும் அருமையானதொரு நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தி, தமிழ் வளர்ச்சிக்கு அயராது உழைக்கும் அவர்தம் பணியை தமிழுலகம் பாராட்டக் கடமைப்பட்டு உள்ளது.

திரு நாஞ்சில் பீற்றர் அய்யா அவர்களுடன்!



(விழா பற்றிய மற்ற இடுகைகளுக்கு தமிழ்விழா(Fetna) எனும் வகைப்பாட்டுச் சுட்டியைச் சொடுக்கவும்)

01 Aug 2009, Charlotte, NC பதிவர் கூடல் - நடந்தது என்ன?

பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு
மேய்ப்பாருமின்றி வெறித்துத் திரிவன
மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால்
பார்ப்பான்பசு ஐந்தும் பாலாய்ச் சொரியுமே!
திருமந்திரம் (2843)

வணக்கம்! பார்ப்பான் அகத்திலே ஐந்து பசுக்கள் உண்டு, அவையாவும் மேய்ப்பர் அற்று மனம் போன போக்கில் சென்று திரிவனவாம். அவற்றை கட்டுப்படுத்தி மேய்க்கும் மேய்ப்பர் கொண்டு செயல்படும் பட்சத்தில் அவையாவும் பாலாய்ச் சொரிந்திடச் செய்யும் என்கிறார் திருமூலர்.

அதாவது பார்ப்பவன் உடலிலே ஐந்து பசுக்கள் எனப்படுகிற ஐம்புலன்கள் உள்ளது. பார்க்கும் எல்லாவற்றிலும் அவை ஈடுபடத் துவங்கும். அது அவ்வாறில்லாமல், கட்டுப்பாட்டுடன் தேவையானவற்றுடன் மட்டுமே மனம் கொண்டு இருப்பின் பேரின்பம் தழைக்கும் என்பதைத்தான் சொல்கிறார் திருமூலர்.

இன்றைய இதழியல் என்பது பெரும்பாலும் கசடு கலந்த இதழியலாகவே இருக்கிறது என்பது சொல்லித் தெரிவதில்லை. வன்முறை, வக்கிரம், தனிநபர்த் தாக்குதல், உள்ளதை உள்ளபடி கூறாமல் ஏற்றியும் இறக்கியும் சொலல் என எண்ணற்ற மாச்சரியங்களைக் கொண்டே உள்ளது. ஆகவே, பார்ப்பவன் அது உணர்ந்து செயல்பட வேண்டும்.

அதே வேளையில், பதிவர்களும் அதையுணர்ந்து மக்கள் இதழியலில் பெரும்பாங்கு ஆற்றிட முன்வர வேண்டும் என்கிற எண்ணத்திலே குழுமியதுதான் இந்த பதிவர் சந்திப்பு என்பது.

காலையிலேயே அட்லாண்டா மாநகரிலிருந்து, கல்விமான்களின் குடும்பப் பாரம்பரியத்துக்குச் சொந்தக்காரரான தென்றல் தென்னவன் அவர்கள் சார்லத் வந்தடைந்தார். கோயம்பத்தூர் விருந்தோம்பல் என்றால் என்ன என்பதை அவர் நன்றாகவே உணர்ந்திருப்பார் என எண்ணுகிறோம்.

ஏற்பாடுகளுக்கு இடையே வட கரோலைனா மாகாணத்தின் மறுகோடியில் இருக்கும் Cary எனும் இடத்தில் இருக்கும் மருத்துவர் ஐயா உயர்திரு. ஆத்திகம் VSK அவர்கள் அழைத்து இருந்தார். முன்கூட்டியே அவரைத் தொடர்பு கொள்ளாமல் சொதப்பியதற்கு அடியேன் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் எனவும் எதிர்வரும் காலங்களில் இக்குறைபாட்டினை களைய முற்படுவேன் எனவும் உறுதி அளித்தோம்.

திட்டமிட்டபடி மாலை ஆறுமணிக்கு சந்திப்பென்பது எந்தவிதமான சடங்குகளும் அற்று இயல்பாகத் துவங்கியது என்றே கூறலாம். ஆம, சந்திப்பின் தலைவர் அண்ணன் சீமாச்சு அவர்கள், சுவையானதொரு இனிப்பான பொங்கலை வழங்க இனிமையான அந்த மாலைப் பொழுது நகர ஆரம்பித்தது.

பின்னணியில் செந்தமிழில் சிலப்பதிகாரமானது வில்லுப்பாட்டாக இசைத்துக் கொண்டிருந்தது. மிகவும் இரம்யமாக இருந்தது. ஆனாலும் அந்த நிகழ்ச்சியின் முக்கிய கர்த்தாவான பாடகியானவர் அடிக்கடி கோவலன் செட்டியார், மாசாத்துவன் செட்டியார், மாநாயக்கன் செட்டியார் என விளிப்பதை சற்றும் இரசிக்காத அண்ணன் சீமாச்சு அவர்கள், இலக்கியமான வில்லுப்பாட்டு என்பது இப்படி செட்டியார் பாட்டாக்கப்படுவது நியாயம்தானா எனக் குறைபட்டுக் கொண்டார். நாங்களும் அதை ஆமோதித்துக் கொண்டோம். இலக்கியங்களில் இனியாவது இது போன்றவை அகலும் என எதிர்பார்ப்போமாக!

சர்க்கரைப் பொங்கல் சுவைத்தானவுடன், கலந்துரையாடல் என்பது சமூகத்தின்பால் பயணிக்கத் துவங்கியது. நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளன் என்கிற அடிப்படையில் என்றும் உடனுக்குடன் குறிப்பெடுப்பவனே ஆயினும் இம்முறை அதைக் கடைபிடிக்க இயலவில்லை. எனவே நினைவில் இருப்பவற்றை வைத்தே இந்த இடுகையை எழுதிக் கொண்டு இருக்கிறேன்.

இன்றைய இதழியலின் முக்கியக் கரு என்ன என்பதை அலசிப் பார்த்ததில், I-I-I, அதாவது Information, Importance, Interest என்பது புரிந்தது. தகவல், தணிக்கை, தன்னிலை என்பவைதான் அது. கிடைக்கும் தகவலைத் தணிக்கை செய்து, தன்னிலையை ஏற்றிச் சொல்வது என்பதையே காண்கிறோம்.

இதைப் பற்றி உரையாடிக் கொண்டிருக்கும் போதுதான், இந்நிலை உங்களுக்கு இப்போதுதான் தெரியுமா என வினவப்பட்டது. காலங்காலமாகவே நடந்து வருவதே ஆயினும், இன்றைக்கு பதிவுலகம் என்கிற கூரிய ஆயுதம் கிடைத்திருக்கிறது என்பதை நினைவு கூர்ந்து கொண்டோம்.

மேற்கத்திய நாடுகளிலே பதிவுகள் வாயிலாக பெரிய பெரிய அவலங்கள், உண்மைகள் வெளிக் கொணர முடிந்தைதையும் நினைவு கூறிக்கொண்டோம். இடையிடையே நகைச் சுவையோடு தீர்மானம் குறித்துக் கொள்ளுங்கள் எனச் சொல்லியபடி நிறைய கருத்துகள் பரிமாறப்பட்டது. எனினும் பதிவர்கள் நடுநிலைமை கொண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவது, நேரிடையே காண்பவற்றை ஆதாரத்தோடு வெளிக் கொணர முயற்சி செய்ய வேண்டும் என்ற கருத்தே வெளிப்பட்டது.

உரையாடல் சுவாரசியத்துடன் பயணித்துக் கொண்டிருந்தது. இதன் இடையில் பானங்களுடன் கோழி வறுவல் மற்றும் சிறுதீன்கள் வழங்கப்பட்டது. தமிழுலகத்தில் ஒருவனுக்கு அவனை அறியாமலேயே ஒரு பிம்பம் ஏற்படுத்தப் படுகிறது. அவன் இன்னாருடைய ஆள், அவன் இந்த சாதிக்காரன், அவன் இந்த கட்சியைச் சார்ந்தவன் என்கிற பிம்பம் ஏற்பட்டு விடுகிறது. அதனாலேயே சாமான்யர்களால் அண்டிப் பிழைக்க நேரிடுகிறது எனக் கூறிக் கொண்டோம்.

அதிலிருந்து சிறிதளவாவது தப்பிக்க வேண்டுமானால், எவரிடத்தும் மலிவான உதவிகள் கேட்கப்படக் கூடாது. சில பல நேரங்களில் ஒருவனை ஆட்படுத்தும் பொருட்டு, ஆதிக்க சக்திகள் வலிய வலிய வந்து உதவி செய்ய முற்படுவர். அத்தகைய நேரங்களில் சாமான்யர்கள் கவனத்துடன் செயல்படுதல் இன்றியமையாதது என அனைவரும் ஒப்புதல் வழங்கிக் கொண்டோம்.

இப்படி நிறைய, சுவையான செறிவான பல கருத்துகள் சிந்தனையைத் தூண்டும்படியாக இருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. ஆறு மணிக்குத் துவங்கிய கலந்துரையாடல் ஒன்பது மணி வாக்கில், சிரத்தையான கலந்துரையாடல் என்பதில் இருந்து விலகி, அளவளாவல் எனும் பாங்குக்கு மாறியது. கூடவே இரவு உண்டிக்குத் தாவினர் அனைவரும்.

அதற்குப் பிறகு கலாய்த்தல், காலை வாருதல், சாமியார்களின் அடாவடி குறித்த நையாண்டி எனப் பயணித்தது ஒரு மணி நேரம். பத்து மணிக்கு விடை பெறும் நேரம் நெருங்கியது. கலந்துரையாடல் என்பது சிறப்பானதொரு முடிவுக்கு வந்ததை எண்ணிப் பெருமிதம் கொண்டோம் நாம்.

கழுத்திலே இருக்கிறது ருத்திராட்சம்!
மடியில் இருப்பது கன்னக்கோல்!!

FeTNA: தமிழ்த் திருவிழா சிதறல்கள் - 7

’பிரதி மெய்’ நாடகத்தில் இராஜேந்திர சோழன்

சிலம்பாட்டம்

(விழா பற்றிய மற்ற இடுகைகளுக்கு தமிழ்விழா(Fetna) எனும் வகைப்பாட்டுச் சுட்டியைச் சொடுக்கவும்)

வலைச்சரத்தில் நான்!

நண்பர்கள் அனைவருக்கும் நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்!

செயகாந்தன் அய்யா அவர்களிடம், நீங்கள் வாசகர்களுக்குப் பிடித்த மாதிரி எழுதுகிறீர்களாவென வினவியதற்கு, அவர் கூறியதாவது, ‘நான் வாசகர்களுக்குப் பிடித்ததாக எழுதுவதில்லை. எனக்குப் பிடித்தவற்றை எழுதுகிறேன். அது அவர்களுக்கும் பிடித்துவிட்டதால், அவர்கள் எனது வாசகர்கள் ஆனார்கள்!”

நல்ல ஆழமான கருத்து இல்ல? அதுசரி இப்ப நம்ம பற்றியத்துக்கு வருவோம். ஆமாங் ஒரு வாரம் கடைக்கு விடுப்பு... இஃகிஃகி... நான் வேற கடையில பொழப்பு பாக்க ஆரமிச்சுட்டனுங்... இன்னைக்கே பூசை போட்டுட்டமல்லோ?!
சித்த இங்க வந்துட்டு போங்க...

8/01/2009

நம்மிலும் விதி வலியது!

கொங்கு நாட்டு
அவினாசி சாலையில்
அரசூர்ப் பிரிவில்
அவனும் இவனும்!

அவனும் இவனும்
யாரென வினாவுங்காற்ச்
சொல்லிடுவர் எவரும்,
கனியனும் மணியனுமென!

அவனும் இவனும்
யாரென வினாவுங்காற்ச்
சொல்லிடுவர் எவரும்,
கனியனும் மணியனுமென!

அவன் முன்னுரைக்க
இவன் கண்ணசைக்க
சென்றனர் இருவரும்
அருகண்மைச் சூலூர்
சொர்க்கம் Wines நோக்கி!

செல்லுங்கால் உடன்
உண்ண வறுவல்
வாங்கும் பொருட்டுச்
சென்றனர் பாண்டியன்
அங்காடிக்கு!

சென்ற இடத்து இவன்
நினைத்தான் சொச்சப்
பணத்தில் வத்தலைத் தான்
வாங்கிவிட்டால் அவன்
அழுவான் பெரும்பணம்
புட்டிகள் வாங்க என!

அவ்விதமே வாங்கிவிட்டு
பத்து உருவாத் தாள்நீட்ட
கடைக்காரன் சொன்னான்
அது செல்லாதென; அதுகேட்டு
இருந்த நூறு உருவாவை
நீட்டியதும் சில்லறை
இல்லையெனச் சொல்லியதில்
இவன் நினைப்பில்
மண்ணா? அல்ல, பெரும்கல்!

இவன் நினைப்பில்
மண்ணா? அல்ல, பெரும்கல்!

பின்பந்த நூறும் பத்தும்
இரண்டுமாய்ச் சேர்ந்து
புட்டிகளுக்குப் பலியான
கதை யாரறிவார்?!

--பழமைபேசி