6/30/2009

அமெரிக்காவில் புதுமையான, சவாலான நிகழ்ச்சி!

மக்கா! நான் சும்மா சொல்லலை! நெசமாலுமே சொல்லுதேன்; இது ஒரு புதுமையான நிகழ்ச்சி, காலத்திற்கேற்ற நிகழ்ச்சி, சவாலான நிகழ்ச்சியும் கூட. ஆமாங்க, முத்தமிழ், இயல், இசை, நாடகம் ஆகியவற்றின் வரலாறு, சிறப்பு, அருமை பெருமைகளை அலசி ஆராயப் போற நிகழ்ச்சி.


பல புத்தகங்கள், குறுந்தகடுகள், இசைப் பேழைகள்ன்னு பல ஆதாரங்களையும் அலசி ஆராய்ஞ்சு கடுமையா நாங்கெல்லாம் உழைச்சி ஆயத்தப்படுத்திகிட்டு இருக்கோம். நான் இடம்பெற்று இருக்கிற அணி, ஈழப்புலவர் பெருமகனார் பூதன்தேவன் அணி. தலைவர் கொழந்தைவேல் இராமசாமி அவர்கள் வழிகாட்டுதலின் பேரில் சிறப்பா வேலைகள் நடந்துட்டு இருக்கு.

நாஞ்சில் பீற்றர் ஐயா ஒருங்கிணைத்து நடத்தப் போகிற தமிழ் இலக்கிய வரலாறு குறித்த இந்த நிகழ்ச்சி, வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் தமிழர் திருவிழாவின் ஒரு அங்கமாக, வருகிற வெள்ளிக்கிழமை காலை 10.46 மணிக்கு நடைபெற உள்ளது. அனைவரும் வாரீர்! ஆதரவு தாரீர்!!

6/29/2009

தூர்ந்து மறைந்த சகோதரர்களே!

சித்திரச் சோலைகளே-உமை நன்கு
திருத்தஇப் பாரினிலே-முன்னர்
எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனர்
ஓஉங்கள் வேரினிலே!

நித்தம் திருத்திய நேர்மையி னால்மிகு
நெல்விளை நன்னிலமே-உனக்கு
எத்தனை மாந்தர்கள் நெற்றி வியர்வை
இறைத்தனர் காண்கிலமே!

தாமரை பூத்த தடாகங் களேஉமைத்
தந்தஅக் காலத்திலே-எங்கள்
தூய்மைச் சகோதரர் தூர்ந்து மறைந்ததைச்
சொல்லவோ ஞாலத்திலே!
--பாவேந்தர் பாரதிதாசன்


Life Goes On...
Keep Your Head Up
My shoulders are there to hug you
Things may go wrong
But take it for advice
From a person who cares you most of all
Keep your head up my friend
Life Goes on...
--பழமைபேசி
Given as due to: Joe

6/28/2009

'விசிறி’ சரியானதல்ல!

மொழி பெயர்த்தல், மொழியாக்கம் இந்த மாதரக் காரியங்கள்ல சித்த கண்ணுங் கருத்துமா இருங்கப்பு. நேற்றைக்குப் பாருங்க, நண்பர் ஒருத்தர் செமக் காந்தலாக் கத்தினாரு, ‘ஏய், நான் அவரோட பரம விசிறி. அவரைப் பத்தி இனிமேலும் தப்பாக் கிப்பாப் பேசினாக் கொலைகூட விழும்!’ன்னாரு.

ஒடனே நமக்குப் பத்திகிச்சு, அது என்ன பரம விசிறி? அவரோட எழுத்தை இரசிக்கிறயா, இரசிச்சிட்டுப் போ. அதுக்கெதுக்கு விசிறி கிசிறின்ட்டு ஒரே அலம்பல்? விசிறின்னா என்ன?

ஆராய்ஞ்சு பார்த்ததுல பாருங்க, பரங்கி மொழியில, அதாங்க ஆங்கிலம்! ஆங்கிலம்!! அந்த ஆங்கிலத்துல சொன்னது Fan. அதை அப்படியே தமிழ்ப்படுத்தினது விசிறி! விசிறி!!

அதாவது ஒருத்தரை வெகு மூர்க்கமா, கலையுணர்வு காரணமாவோ, இசையுணர்வு காரணமாவோ, இலக்கிய உணர்வு காரணமாவோ, எதோ ஒன்றால உந்தப்பட்டு, வெறித்தனமா அவரின்பால் ஈடுபாடு காண்பிப்பதை இலத்தீன் மொழிய மூலமா வெச்சி, பின்னாளில் ஆங்கிலத்துல சொன்னது Fanatic. இது 18ம் நூற்றாண்டுகள்ல தோன்றினதுன்னும் சொல்லுறாங்க. அதுவே பேச்சு வழக்குல சுருக்கமா, Fanன்னும் ஆச்சுது.

கலை, இலக்கியம், பண்பாடு இதுகளைக் கருத்துல கொள்ளாம, வார்த்தைக்கு வார்த்தை மொழியாக்கம் செய்யுறதுல நடக்குற பிறழ்வுகள் போலவே Fanம், விசிறியாயிடுச்சு. ஒரு வேளை, நம்ம திரைப்பட நடிகர்களோட விசிறிகளை மனசுல வெச்சு முன்னமே வெள்ளைக்காரன் Fanaticsன்னு சொல்ல ஆரம்பிச்சிருப்பானோ?

அதை அப்படியே முறைப்படி மொழியாக்கம் செய்தாலும், நான் அவரோட மூர்க்கன்னு சொல்லக் கேவலமா இருக்காது? ஆகவே நான் அவரோட ஆர்வலன்னு சொல்றதுதான் சரியா இருக்கும். அப்ப விசிறின்னு இனி நீங்க சொல்ல மாட்டீங்கதானே? அப்படிச் சொன்னா, உங்களை நீங்களே மூர்க்கன்னு சொல்றதுக்கு ஒப்புதல் வாக்குமூலம் தர்றமாதிரி ஆயிடும். நீங்களே முடிவு செஞ்சுகிடுங்க, நீங்க மூர்க்கனா அப்படின்னு! இஃகிஃகி!!

பொறுப்பி: இந்த இடுகைக்கும், சாறு மோருங்றவங்களோட விசிறிகள், ஆர்வலர்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது! கிடையாது!! Because, I am a well known 'Red Card'ed guy you know?!

6/27/2009

வாடா அப்பா!

முத்தமிழில் ஒன்றான இசைத்தமிழில், இறவாத புகழுடைய காவடிச் சிந்தில் நூல் தந்தவர் அண்ணாமலையார். 31வது வயதிலேயே வாழ்க்கையைத் துறந்துவிட்டாலும், அதற்குள்ளேயே கவியரசர் என்று பெயரெடுத்தவர். அரசவைக் கவிஞர். மண் ஆண்ட மன்னனே மரியாதையுடன் பெருமை அளிக்கப் பெற்றவர் சென்னிகுளம் அண்ணாமலையார். பலே பேர்வழியும் கூட.

பால் ஒளி படர்ந்த நேரம், பாலகன் அண்ணாமலை சாலை வழியே பசுமையை பரவசமாய்க் கண்டு களித்துச் செல்கிறான், எதிரில் மன்னன் மருதப்பர். மாசறு மாணிக்கமே மன்னனாய் எதிரில் கண்டதும் பாலகன் அண்ணாமலை,

“வாடா மன்னா!”

அண்ணாமலை இவ்வாறு விளித்தது கண்ட மன்னருடன் வந்த மந்திரிகள் பதை பதைக்க, மன்னன் திடுக்கிட, பாலகன் தொடர்கிறான்,

வாடா(த) மன்னா, பரம்பொருளே வணக்கம்!”

நிம்மதிப் பெருமூச்சுடன் மன்னனின் புடை சூழ்ந்தோரும், பெருமூச்சுடன் மன்னர்,

“வணக்கம் பிள்ளாய், எங்கு சென்று கொண்டிருக்கிறாயப்பா?”

“இன்று சனிக் கிழமையாதலால் வீட்டிற்கு எண்ணெய்க் குளியல் காணச் சென்று கொண்டிருக்கிறேன் மன்னா!”

“ஆகட்டும், நல்லதொரு குளியல் கொள்வாயாகட்டும்!”

பரபரவென வீட்டை அடைகிறார். வீட்டில் இருந்த ஏவலர் புறக்கொல்லையில் இருக்கும் அண்ணாமலையாரை அடைகிறார். ஏனோ அண்ணாமலையார் சற்றுக் கடுகடுப்புடன் இருப்பதை அவர் உணர்ந்திருக்கவில்லை போலும். எண்ணெய்க் கோப்பையுடன் பாலகனைச் சென்றடைகிறார்.

“என்ன ஏவலரே, இரு கைகளுடன் எண்ணெயுடன் வந்து விட்டீரோ? இரு கைகள் மட்டும் போதாது எனக்கு, பல கை வேணுமெனக்கு!”

“பல கை எதற்கு பிள்ளாய்? இரு கைகளால் தேய்த்துக் குளித்தால் போதாதா?”

”வெறும் தரையில் நான் ஏன் அமர வேண்டும். ஆகவே பலகை கேட்டேன் ஏவலரே! பல கைகள் அல்ல!!” என்று புன்முறுவலுடன் சொல்கிறான் பாலகன் அண்ணாமலை.

பின்னர் பலகையில் அமர்ந்து குளித்துச் சிற்றுண்டி உண்டு விட்டு கோயிலடி செல்கிறான் அண்ணாமலை. அங்கே தன் தந்தையிடம் அலுவல் பார்க்கும் வேலையாள்,

“தம்பீ, காளி கோயிலுக்கு படையல் வைக்க வேண்டும். ஆகவே உம்வீட்டில் சொல்லி ஆடும், அரிசியும் வாங்கித் தருவீராக!”

சற்று யோசித்த பின், “ம்ம், அதில் ஒன்று நடக்கும், ஒன்று நடக்காது!”

“தம்பீ, எது ஒன்று இல்லாவிட்டாலும் படையல் நடக்காதல்லவா? ஆகவே இரண்டையும் பெற்றுத் தாருங்கள் தம்பீ!”

“யாராலும் அது முடியாது பெரியவரே!”

“என்ன தம்பீ இப்படி விதண்டாவாதம் செய்யலாமா நீங்கள்?”

“பெரியவரே, கோபப்படாதீரும்! ஆடு நடக்கும், அரிசி நடக்காது!! அதைத்தான் நான் சொன்னேன்!” என்று பெரியவரை ஆசுவாசப்படுத்தி விட்டு, வீட்டிற்குச் சென்று ஆடும் அரிசியும் பெற்றுத் தந்தான் அண்ணாமலை.

அப்போது அந்த ஆட்டைக் கண்டதும், “பெரியவரே உமக்குக் கிடைத்த இந்த ஆட்டின் கொம்பில் முத்திருக்கு கண்டீரோ?”

“இல்லையே தம்பி, ஆட்டின் கொம்பில் ஏது முத்து? அப்படி ஒன்றும் இல்லையே?”

“என்ன பெரியவரே?! இதோ இந்த கொம்பில் மூன்று திருக்கு(வளைவு) இருக்கிறது பாரும், அதைத்தான் முத்திருக்கு என்றேன் நான்!”

“தம்பீ, உங்களிடம் இருந்தால் என்னைக் கிறுக்கன் ஆக்கிவிடுவீர் போல் இருக்கிறது. நான் காளி கோயிலுக்குச் செல்ல வேண்டும்!” என்று கூறிய பெரியவர் கோயிலுக்குச் செல்ல, அண்ணாமலையார் சிந்துப் பாட்டுடன் ஊருக்குள் தன் வேலையைக் காண்பிக்கப் புறப்படுகிறார்.


அமெரிக்காவாழ் பொட்டிதட்டிகளே!

வணக்கம் கண்ணுகளா! பொருளாதார மந்தம், கடுமையான வேலைவாய்ப்பின்மை... இது எதுல போயி முடியும்? மென்பொருள்க் கட்டமைப்புல எந்த நெளிவு சுழிவுகளுக்கு சுலுவுல வேலை கிடைக்கும்? இப்பிடிப் பல கேள்விக நம்மளைச் சுத்தியுமு...

இந்த சூழ்நிலையிலதாங்க, தொழில் செயல்முறையாக்க மென்பொருளுக்கு (Business Process Management) சந்தையில இருக்குற அபரிதமான வளர்ச்சி, அது சம்பந்தமான வேலைவாய்ப்புகள் பெருக்கம், இதெல்லாம் மகிழ்வான விசயம். நாம அதுலதான கடந்த மூனு ஆண்டுகளா பொழப்பை ஓட்டிட்டு வர்றோம். உண்மையிலேயே நல்ல நிலையை நோக்கிப் போயிட்டு இருக்குற துறைதாங்க இது.

இங்கதாங்க, ஒரு கவன ஈர்ப்புத் தகவல்! இன்றைய சூழல்ல, Pega - PRPCங்ற மென்பொருளுக்கு ஏக மவுசு, சந்தையில படு கிராக்கி, அந்தத் துறையில அதான் முதல் இடத்துல இருக்கு. ஆகவே, நம்மூர்ல இருந்து நிறையப் பேரு அந்த மென்பொருள் பாவிக்கிறது எப்படின்னு தெரிஞ்சிட்டு இங்க வர்றாங்க. வந்து அவங்க நடத்துற பட்டயத் தேர்வுல தேர்ச்சி பெற்றதாகவும் உபசங்கார(resume)த்துல குறிப்பிடுறாங்க.

இவ்வளவு நாள் பெருசா அதை யாரும் கண்டுகிடலை. பாருங்க, போனவாரத்துல நிறைய பேர்த்தை ஆய்வு செய்ததுல வெறும் 2 பேர்தான் உண்மையாலுமே அந்த certification, pass ஆகி இருக்காங்க. மத்தவங்க எல்லாம் ச்சும்மாவே தேர்ச்சி பெற்றதா போட்டுகிட்டாங்க. ஆக அவங்க first name, last namesystemல பதிஞ்சாச்சு. இனி அவங்க அந்தத் தேர்வுல கலந்துக்க முடியுமா? இஃகிஃகி!

அதனால certified PRPC System Architectனு, ச்சும்மா ச்சும்மா கொல்டிகளை மாதர நீங்களும் போட்டுடாதீங்க என்ன? அது ஒன்னும் பெரிய IAS தேர்வு கிடையாது. நம்ம சனங்களுக்கு அது நெம்பச் சுலுவு இராசா, நெம்பச் சுலுவு!

அடுத்து? அண்ணே, அட்லாண்டாவுல Fetna ஆண்டு விழா நடக்குறது உங்க எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். நான் நுழைவுச் சீட்டு வாங்காமத் தவறிட்டேன் கண்ணுகளா! நிகழ்வுகள்ல கலந்துக்குறதுக்கு பதிஞ்ச நான், நுழைவுச் சீட்டுக்குப் பதியாம விட்டுட்டேன். அவ்வ்வ்வ்... தயவு செய்து யாராவது உபரிச் சீட்டு வெச்சு இருக்குறவங்க ஒன்னு குடுத்து உதவுங்க ஐயா! உங்களுக்கு சித்த புண்ணியமாப் போகும்!! மக்களே என்னோட விபரப் பட்டையில இருக்குற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளுங்க... நன்றி உடையவனாயிருப்பேன்!

நன்றி! நன்றி!!நன்றி!!!

Fetna, தமிழ்விழாக் குழுவினரே தொடர்பு கொண்டு ஒரு நுழைவுக்கான அனுமதியை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். மிகுந்த சிரமத்திற்கு இடையில அப்படியொரு வாய்ப்பை எமக்கு வழங்கிய அவர்களுக்கு மிக்க நன்றி!

6/26/2009

பிரபலப் பதிவரும், நாடகமும்!

தனிமனித வாழ்க்கையில இடம்பெறுகிற நாடகத்தன்மை நல்லதா, தீமையானதா? இந்த ஒத்தைச் சொற்றொடர்லயே வில்லங்கம் ஆரம்பிச்சிடுச்சு. என்னன்னு கேக்குறீங்களா? வழக்கத்துல இதை பெரும்பாலானவங்க எப்படிக் கேப்பாங்க?? நல்லதா, கெட்டதா? கெட்டதான்னு எப்படிக் கேட்க முடியும்? கெட்டதுன்னா, கெட்டுப்போனதான்னு கேக்குற மாதிரி ஆகாதா?

ஆக, நல்லதா கெடுதியானதான்னு கேட்கலாம். அல்லது, தீமையானதான்னு கேட்குறதுதான் சரியா இருக்கும். அடுத்து நாடகத் தன்மை?! இதுக்கு உண்டான அர்த்தமே அனர்த்தமாயி, ஒரு தலைப்பு! நாடகத்தன்மை என்பது வாழ்க்கைக்குத் தேவையா? தேவையற்றதா??

என்னங்க ஐயா இது? திடீர்ன்னு ஒரு பெரியவர் வர்றாரு. அதைக் கண்டதும், இவன் எழுந்து நின்னு அடக்கமானவனா இருக்குறது போல பாசாங்கு காமிக்கிறான். இது நாடகமா?

மகனோ, மகளோ எதோ ஒரு தவறான காரியத்தை செய்துடறாங்க. தகப்பன் வந்து கேட்கும் போது, தாயானவ பெற்ற மகனையோ மகளையோ விட்டுக் கொடுக்காம சாக்கு போக்குச் சொல்லி திசை திருப்புறாங்க. இது நாடகமா?

வீதியில அவனோட அம்மணி வர்றதைப் பார்த்ததும், கையிலிருந்த வெண்குழலை வீசிட்டு சிட்டுக் குருவிய வேடிக்கை பாக்குற மாதிரி ஒரு கண்டுபாவனை. இது நாடகமா?

இந்த மாதிரி லெளகீகத்துல நிறைய சின்னச் சின்ன நிகழ்வுகள். இதெல்லாம் நாடகமா? அந்த சின்னச் சின்ன பாவனைகளும், பாசாங்குகளும் நாடகத்தன்மையா?? என்னங்க ஐயா கொடுமையா இருக்கு?? கழிப்பிடத்துக்கு போறான் ஒருத்தன். போகும் போது வெளிய போய்ட்டு கால் கழுவிட்டு வர்றேங்கறான். அப்படி அமங்கலகரமான ஒன்னைச் சொல்லாம, இங்கிதமா மங்கலச் சொல்லைப் பாவிக்கிறான். அது நாடகத்தன்மை ஆயிடுமா??

ஆகாது! ஆகாது!! ஆகாது!!! ஏன்னா நாடகம்ங்ற சொல்லுக்குண்டான பொருளையே குனிய வெச்சுக் கும்மியடிக்கிறமே, அதனாலதான்! பாசாங்கும், கண்டுபாவனையும் வாழ்க்கைக்குத் தேவையானதான்னு விவாதிக்கிறதுதான் சரியானதா இருக்கும்.

அப்ப நாடகம்ன்னா என்ன? குறித்த கால வரையறைக்குள், முதல் நிலையிலிருந்து கடை நிலை வரையிலான அத்தனை நிகழ்வுகளும், காட்சியமைப்புக்கான இலக்கணங்களை உள்ளடக்கி, தேவைப்பட்ட ரூபகங்களின் மேல் ஏற்றிச் செயல்படுத்துவது நாடகம்.

உதாரணமா சொல்லணும்ன்னா, வேலைக்காரி நாடகம். அதற்குண்டான வசனம், காட்சியமைப்பு, ரூபகங்கள் (தோற்றம்) முதலான எல்லாமே முன்கூட்டியே தீர்மானம் செய்தபடி செயல்படுத்துற ஒரு நிகழ்வு. பெரியவர் வர்றதுங்றது, எதிர்பாராத நிகழ்வு. அவரைக் கண்டவுடனே இவன் எழுந்து நிக்கிறது ஒரு பாசாங்கு, அவ்வளவுதான்!

அப்ப, அம்மா வந்த உடனே ஒருத்தன் வயித்து வலி வந்த மாதிரி நடிக்கிறானே? அது கபடநாடகம் ஆகாதா?? முன்கூட்டியே திட்டமிட்டுச் செய்திருந்தா, அது நாடகந்தான். ச்சும்மா, பாத்த உடனே இயல்பா அவன் அப்படிச் செய்திருந்தா அது பாசாங்கு காட்டி நடிக்கிற கண்டுபாவனை. அதே போல, போலியா போடுற வணக்கமும் ஒரு கண்டுபாவனைதான்!

”ஆகவே, முன்கூட்டியே திட்டமிட்டுத் தவறான தகவலை வெளிப்படுத்தும் நாடகம் போன்ற செயல் வாழ்க்கைக்குத் தேவையற்றது. இங்கிதம் கடைபிடிப்பது நாகரிகம். போலிப் பாசாங்கும், கண்டுபாவனையும் வாழ்க்கைக்கு அனாவசியமானது” அப்படீன்னு சொல்றதுதான் சரியா இருக்கும்.

ஏகத்துக்கு எல்லாத்தையும் நாடகத்தன்மைன்னு சொல்லிக் கவுத்துட முடியாது இராசா! இலக்கணமும் தோற்றமும் கலந்து வெளிப்படுத்துறது பத்து வகையான நாடகம். அதெல்லாம் என்னென்ன?? இதெல்லாம் கருவின் தன்மையப் பொறுத்தது. செறிவு, தெளிவு, சமநிலை, இன்பம், ஒழுகிசை, உதாரம், உய்த்தலில் பொருண்மை, காந்தம். வலி, சமாதிங்ற அமைதின்னு பத்து வகையான குணங்களை வெச்சி சொல்றது.

ஆமா, இங்கெங்க பிரபலப் பதிவர் வந்தாரு? எனக்கு மனநிறைவில்லாத, உடன்பாடில்லாத இடுகைகள் நிறைய இட்டிருக்காருதான்! ஆனாலும், இந்த போலிப் பாசாங்கு, கண்டுபாவனை இல்லாம மனுசன் பொளந்து கட்டுறாரே? அதெல்லாம் அவர்கிட்ட இருக்குற மாதிரித் தெரியலை. இன்னைக்கு காலையில CNN பார்த்திட்டு இருக்கும் போது, அவரோட நினைவு வந்தது, அதான் இந்த பழமை... மத்தபடி நான் யாரோ! அவர் யாரோ!! அவரோட மனவலிமையப் பார்த்துக் காதுல புகைவிட்டுக்க வேண்டியதுதான் மிச்சம்!!

6/24/2009

படித்ததில் உறைப்புக் காட்டியது!

”இப்போது கற்றவர் தொகை பல மடங்கு பெருகி வருகிறது. அந்தப் பலருக்குள் பெரும்பாலோர் ஆழமின்றி மேம்போக்காகப் படிப்பவர்களே! முன்பெல்லாம், ஒரு நூல் எழுதப்பட்டால் படித்தவர்கள் அதைப் பாராட்ட வேண்டும் என்ற கவலை எழுத்தாளனுக்கு இருந்தது. ஆகவே, கவலையோடு பொறுப்புணர்ந்து எழுதினார்கள்.

இன்றைக்கு பெரும்பாலானோர் அப்படி எழுதுவது இல்லை. அவ்வாறு உணர்ந்து எழுத வேண்டிய கவலையும் அவர்களுக்கு இல்லை. கற்றவர் தொகை பெருகிவிட்ட இன்றைய சூழலில், ஆழ்ந்த சிந்தனை இல்லாமல் மேற்போக்காகப் படிக்கும் வெள்ளம் போன்ற கூட்டத்தில் ஏதேனும் ஒரு பகுதியாரின் ஆதரவு தமக்குக் கிடைத்தால் போதும் என்று அந்த எழுத்தாளர்கள் எண்ணுகிறார்கள்.

மேலும் மேலும் அவர்களின் ஆழம் இல்லாத, பண்படாத சுவைக்கு ஏற்ற உணவை நூல்களில் தந்து, எழுத்துலகில் தன்னை வளர்த்துக் கொள்கிறார்கள். பலர் விரும்பிப் படிக்கும் எழுத்தாளர் யார் என்று இதழ்களின் ஆசிரியர்கள் தேடுகிறார்களே அல்லாமல், நடுநிலைமையாகவும் தரமாகவும் எழுதுகிற எழுத்தாளர் யார் என்று தேடுவதில்லை. ஆகவே, பத்திரிகையுலகத்திலும் முன்கூறிய எழுத்தாளர்கள் செல்வாக்குப் பெற முடிகிறது.

எப்படியாவது பணம் வந்தால் போதும் என்ற துணிச்சலான மனநிலை வந்த போது, கவலை இல்லாமல் மக்களை ஏய்த்து மயக்கும் போக்கை நேரே நாடுகிறார்கள்! சிலர், தனக்கென்று புகழ் வளர்ந்தபின் பழைய தவறான முறையைக் கைவிட்டுப் பண்பட்ட - சிந்தனை வளம் உள்ள படைப்புகளைத் தந்து நல்ல எழுத்தாளர்களாய் விளங்குவதும் உண்டு!”

தமிழ் இலக்கிய வரலாறு, பக்கம் எண் - 327, மு.வரதராசன்

6/22/2009

கனவில் கவி காளமேகம் - 15

வணக்கம் அன்பர்களே! கடந்த வாரம் கடுமையான வேலைப்பளு, வெளியூர் போக வேண்டி இருந்தது. மறுபடியும் இன்னைக்கு சாயுங்காலம் பெட்டி கட்டியாக வேண்டிய சூழ்நிலை. இதுக்கு நடுப்புல பாருங்க, நேத்து இராத்திரி கனவுல நம்ம அப்பிச்சி கவி காளமேகம் வந்துட்டாரு. கனவுல அவரு என்ன அக்கப்போர் செய்தாருன்னு மேல படிக்கலாம் வாங்க!

“அப்பிச்சி வாங்க வாங்க, என்ன நெம்ப நாளா உங்களை இந்தப் பக்கமே காணமுங்களே?”

“ஆமாடா பேராண்டி, நீயுமு விடுப்புல கொழந்தைகளோட நெம்ப முசுவா இருந்துட்டு கூடவே இடுகைகளையும் போட்டுட்டு இருந்தியா, அதான் எதுக்கு தொந்தரவுன்னு வருல!”

“ஓ அப்பிடீங்ளா?”

“ஆமா, நீயி இன்னியுமு முசுவாத்தான் இருக்குற மாதரத் தெரியுதூ? தமிழ்ச்சங்க விழாவுக்கு எதோ படிக்கிறயாமா? என்றா சங்கதியது?!”

“அதொன்னுமில்லீங், பல்லூடக(multimedia) நிகழ்ச்சியில கலந்துக்கலாமுன்னு....”

“அட்றா சக்கை, அட்றா சக்கை... நீயே ஒரு அரை வேக்காடு, நீ என்னத்தறா அவுங்க கேக்குற கேள்விகளுக்கு பதிலு சொல்லப் போற?”

“என்னுங்க அப்பிச்சி இப்பிடிக் கேட்டுப் போட்டீங்? நீங்க இப்பிடி வந்து சொல்லிட்டுப் போறதெல்லாமு ஞாவகத்துல வெச்சிருந்து சொல்லமாண்டனாக்கூ? அப்பிடியே அட்லாண்டாவுல நம்ம சனத்தையுமு பாத்து போட்டு வர்லாமல்லோ, அதான்...”

“அப்பச்செரி, அப்பச்செரி”

“நீங்க அப்ப எதுனா சொல்லுங்க இன்னிக்கி!”

“ஆமாமா, உங்கிட்ட கேக்குறதுக்கு விசியம் இருக்குதுறா... ஆமா, நாவல்ன்னா என்ன? சிறுகதைன்னா என்ன? காப்பியம்ன்னா என்ன??”

“நாவல்ன்னா பெரிய அளவுல எழுதுறது. சிறுகதை சின்ன அளவுல எழுதுறது. காப்பியம்ன்னா நெம்பப் பெரிய அளவுல எழுதறது. செரிதானுங் அப்பிச்சி?”

“நீயி இன்னமு ஒரு அரை வேக்காடுங்றது செரிடா பேராண்டி! ஏஞ்சொல்லுறேன்னா, நீயி சொன்னதுல அரவாசி செரி, அரவாசி செரியில்ல, அதான்!”

“என்னுங் அப்பிச்சி இப்பிடிச் சொல்றீங்? அப்ப நீங்களே சொல்லுங் சித்த!”

“செய்யுள், அல்லன்னா பாட்டுலயே ஒரு கதை, கருத்தைத் தொடர்ந்து சொல்லுறதுதான் காவியம், காப்பியம்ங்றது. அந்தக் காலத்துல எல்லாமே பாட்டுத்தேன்... அப்பறமா, நாம பேசற மாதரயே, பழமயிகள அடிப்படையா வெச்சி எழுதுனது நாவல். இந்தப் பழக்கம் சீமையில இருந்து வந்த பழக்கம்!”

“ஆமாங்க அப்பிச்சி, இப்பத்தான் இது ஞாவகத்துல வருது... அப்ப சிறுகதைக்குமு நாவலுக்குமு?”

“அந்த ரெண்டுமே உரைநடைகதான். சிறுகதைங்றது, ஒன்னைப் பத்தி தனிமரமாட்டம் நின்னு சொல்றது. நாவல்ங்றது பலதரப்பட்ட மரங்க ஒன்னு சேந்தா மாதர இருக்குற தோப்பு போலக் கட்டி எழுதுறது!”

“அப்ப புராணம், இதிகாசமுங்றது?”

புராணம்ன்னா நெம்ப பழையது, அதுனால பழைய பழக்க வழக்கங்கள், வரலாறு இதுகளையெல்லாமுஞ் சொல்ற நூல் புராணம். இதிகாசமின்னா, வட மொழியில உண்மை நிகழ்வுகளைத் தழுவினதுன்னு அர்த்தம்.”

“ஆகமமுன்னா?”

ஆகமம் அப்படின்னா வந்ததுன்னு அர்த்தம். ஆக, வழி வழியா தொன்று தொட்டு வர்ற மரபுகள், பழக்க வழக்கங்களை விவரணம் செய்யுறது ஆகமம்ன்னு சொல்லிச் சொல்றதுறா பேராண்டி!”

“இவ்வளவு இருக்குதுங்ளா இதுல?”

“ஆமாடா பேராண்டி, அப்ப இன்னைக்கு இது போதும். நீ தூங்கு, நான் வாறன்!"

இன்னைக்கு இதாங்க சொன்னாரு! அடுத்த தடவை என்ன சொல்லப் போறாரோ? வந்து, மனுசன் கேள்வி வேற கேப்பாரு. சும்மா, சொல்லிட்டுப் போகலாமில்ல?? எதுக்கும், மறுபடியும் வருவாருன்னு நம்புவோம்.

(......கனவுல இன்னும் வருவார்......)

இடுகைக்கு எதிர்வினை!

அபிமானத்திற்கு உரிய தம்பி, சின்னாளப்பட்டி சிங்கம் முருவின் இன்றைய இடுகைக்கான எதிர்வினையாக இந்த இடுகை!


“பாலுணர்வைக் கிளர்த்துகிற கதைகளை நான் எழுதியது இல்லை. பாலுணர்வு பற்றிய பிரச்சினைகளைப் பற்றியே நான் கதை எழுதுகிறேன்.

வறுமையையும் ஏழ்மையையும் காட்டியபோது நான் அனுதாபப் பிச்சை கேட்டதில்லை. அங்கேயும் வாழ்வின் துடிப்பையும் அதன் மகத்துவத்தையும் நான் காட்டி இருக்கிறேன்.

அந்த மகத்துவத்தைக் காட்டவே வறுமையைப் பின்னணியாக வைத்தேன்.

ஏழைகளின் உழைப்பைத் திருடுகிற மாதிரி, அவர்கள் உணர்ச்சியைத் திருடுவதும் ஒரு கேவலமான சுரண்டல் என்று நான் உணர்ந்திருக்கிறேன்.”

- ஜெயகாந்தன்

உப்பைக் குறைச்சிக்கலாம்!

6/21/2009

கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்டவன்!

இராமசாமி நாயுடு வித்தியாலயம்! எண்ணற்ற கல்விமான்கள் உருவான கருவறை அது. அந்தக் கருவறையைத் தரித்த அழகுபொழில் நல்லூர்தான் இலக்குமி நாயக்கன் பாளையம்! பேருந்துக் கட்டுமானத்திலும், நூற்பஞ்சாலைகளிலும், பற்சக்கர உற்பத்தியிலும் கோலோச்சி கொங்கு நாட்டுப் பொருளாதாரத்தின் விடிவெள்ளியெனத் திகழ்ந்த L.G.B Brothers Ltd, Elgi Equipments, LRG Naidu Trust என எண்ணற்ற நிறுவனங்களின் நிறுவனர் பாலகிருஷ்ணன் அவர்களைப் பெற்றெடுத்த நல்லூர்தான் இந்த இலக்குமி நாயக்கன் பாளையம்!

ஊரின் தென்கிழக்கில், அழகிய மரங்கள் புடைசூழ கண்ணுக்கு விருந்தாய் ஊருக்கு எழிலாய் இருப்பதுதான் கல்விக்கண் திறக்கும் அந்த பாடசாலையான இராமசாமி நாயுடு வித்தியாலயம். பிற்பகல் நேரம், பள்ளியில் இருக்கும் விடுதியில் மதிய உணவின் போது சர்க்கரை கலந்து உண்ட புளித்த மோரின் கள்ளுக்குண்டான சுதியுடன் இவன்; தமிழ் ஆசிரியர் அமரநாதன் போதிக்கிறார்! மாணவர் பகுதியில் இருந்த இவனுக்கு, மாணவிகள் பகுதியில் இருக்கும் ரேணுகாவின் பக்கவாட்டு முகச்சாயலே இவ்வுலகமாய்!!

நித்தம் நித்தம் அவளழகில் சொக்கி அதிலவன் தன்னையே தொலைத்தவனாய் இருக்கக் கண்டு, அவனைத் தட்டி எழுப்புகிறார் ஆசிரியர் அமரநாதன் அவர்கள். இவன் மறுமொழிகிறான்,



மாமரத்தில் கொம்புத்தேனடை
என அவள் அழகாய்
இருக்கக் காண்கிறேன்!
அம்மரத்தினடி நானமர்ந்து
தேன்வடியுமெனக் கையேந்தி
இம்முடவன் காத்திருக்கிறேன்!!
இன்றில்லா ஆயினும்
என்றோ ஒருநாள் அதுவடிய
நக்குவன் நானாவேன்!
இப்பொழுதில் வெறும்நினைவே
தேனாய் நான்னக்க நீர்
காண்கிறீர் ஆசானே!!!


என்றான். வகுப்பினர் கொல்லென சிரிக்க, சினமுற்ற ஆசிரியர் யாதென வினவ, இவன் சிலேடையில், ”தேன் கூட்டைக் கண்டு முடவன் ஆசைப்பட்டுத் தேன்வடியுமெனக் கையேந்திக் காத்திருப்பது போன்று காத்திருக்கிறேன். இப்பொழுதில் ஆசையெனும் வெறுங்கையை நக்குபவன் நான் ஆயினும், என்றோவொரு நாள் எம்கரம்தனில் அவள் தவழத்தான் போகிறாள்!” என்பதே தாங்கள் சொன்ன பாடலின் பொருள் என்று முடித்தான். அத்தருணத்தில் ஆசிரியர் போதித்த குறுந்தொகைப் பாடல்,

குறுந்தாட் கூதளி ஆடிய நெடுவரைப்
பெருந்தேன் கண்ட இருக்கை முடவன்
உட்கைச் சிறுகுடை கோலிக் கீழிருந்து
சுட்டுபு நக்கி யாங்குக் காதலர்
நல்கார் நயவார் ஆயினும்
பல்கால் கண்டாலும்
உள்ளத்துக்கு இனிதே!

(குறிப்பு: அந்த கொம்புத்தேன் எந்த மவராசனுக்கு வாய்ச்சதோ தெரியாது! அந்த நினைவுகள் மட்டுமே இவனுக்கு; கும்மியடிச்சி விட்டுறாதீக என்ன?! இஃகிஃகி!!)

6/14/2009

யோசனையா இருக்கு!

மக்களே வணக்கம்! கடந்த இரண்டு மூன்று வாரங்களாக வளர்ந்த நாடுகளில் இருந்து வரும் பண வீக்கம் தொடர்கிறது. இதனால் கடன் வட்டி, கல்நெய் விலை மற்றும் இதர பொருட்களின் விலையும் உயர்ந்து வருவதைக் காண்கிறோம். பொருளாதார மந்தம் தெளிந்தது போல்க் காணப்பட்டாலும், இன்னும் சரிவிலிருந்து மீளவில்லை. இந்நிலையில் G8 மற்றும் BRIC கூட்டங்கள் என்ன விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது என அனைவரும் எதிர்நோக்கி உள்ளனர். இவ்விரு கூட்டங்களும் இவ்வாரத்தில் நடைபெற உள்ளது. மொத்தத்தில், கையிருப்பு இருக்கும்பட்சத்தில் பணமாக இருப்பது குறித்து யோசிக்க வேண்டிய தருணம் இது. :-0(

நாம் ஒரு மாத விடுப்பில் 33 இடுகைகளை இட்டு, அவற்றில் பெரும்பாலானவை உங்களால் பெரும் வரவேற்பைப் பெற்றன. மிக்க மகிழ்ச்சி! ஆனால் விடுப்பு முடிந்து, Virgenia Westin Beachல் அமைந்திருக்கும் ஒரு நிறுவனத்திற்கு கட்டமைக்கப் போகும் பெரும் தொகையான ஒப்பந்த வேலைக்கு அச்சாரம் இட வேண்டியுள்ளதால் இடுகை இடுவதில் தற்காலிகத் தொய்வு!! எனினும் அவ்வப்போது வழமையான இடுகைகள் இட முயற்சிக்கிறேன் என்ற தகவலுடன்,

பழமைபேசி (எ) மணிவாசகம்.


6/12/2009

தட்டச்சு எழுத்துக காத்திருக்கு!

வேலூரு சிந்திலுப்பு
அணிக்கடவு பெதப்பம்பட்டி
புக்குளத்து ரோட்டுவழி
ஒய்யாரமா உடுமலை வந்துசேர
மாரியம்மன்கோயல் வீதிவழி
அலுங்காம அன்னநடை நடந்துவர
காது லோலாக்கு குலுங்கிவர
தாவணிக்கங்கு அசைஞ்சுவர
ஊர்க்கண்ணு மொய்யுதுன்னு
குனிஞ்சதலை நிமுராம
வாறவளோட அந்த பிஞ்சுவிரலுக
பட்டுச் சொகங்கொள்ள,
தட்டச்சு எழுத்துக காத்திருக்கு!
கூட அந்த அல்லப்பார்வைக்கு இந்த
பூத்துப்போன கண்ணுகளும் பாவிமனசும்!!

6/11/2009

என் மனைவி திருமணம்!

நீலமலைச் சாரலில் நெளிந்து வரும் தென்றலினை வளைய விட்டு, பால் போன்ற இதயங்களை உயிர்ப்பித்து, பண்பினையும் அன்பினையும் ஊட்டி விடும் பேரூர்தான் அந்த வஞ்சி நாட்டின் வாஞ்சை பொழில் நல்லூர் கோயம்பத்தூர்! பரந்து விரிந்த பல பஞ்சாலைகள் ஊருக்கு முதுகெலும்பென்றால், தொழில்நுட்பத்தில் மேலோங்கி அந்தநல்ல ஊருக்கு இதயமென அன்றைய காலத்தில் இருந்ததுதான் இலட்சுமி இயந்திர ஆலை, Lakshmi Machine Works(LMW).

ஊட்டிக்குச் செல்லும் மேட்டுப்பாளையம் சாலையிலும், தேசிய நெடுஞ்சாலை நாற்பத்தேழு(NH-47) அவினாசி சாலையிலும் இயந்திர ஆலையின் இளம்பச்சைச் சொகுசுப் பேருந்துகள் தவழ்ந்து திரிய, பெருமையாய்ப் பார்த்திடுவர் ஊர் மக்கள். தன் பிள்ளை, தன் மகன், தன் மகள், தன் பேரன், தன் பேத்தி இதிற்சென்று வேலை பார்த்து ஊதியம் ஈட்டுவது எந்நாளோ என ஏங்கித் தவித்ததும் உண்டு.

பிறவியிலேயே சற்று உயரமாய்ப் பிறந்ததின் பயனாய் நான்கு வயதிலேயே தன் வலக்கை தலைமேற்ச் சென்று மறுபக்கத்து காதைத் தொட்டுவிட, குடும்பத்து ஆசிரியர் அவனை ஐந்து வயதுப் பாலகனாக்கி பெயரையும் மாற்றி முதல் வகுப்பில் உட்கார வைத்துவிட, அந்த பாலகன் பதினேழு வயதிலேயே பட்டயப் படிப்பு முடிந்த கையோடு, கல்லூரியே நேரடியாக வேலைக்கு அமர்த்தியதின் பொருட்டு இயந்திர ஆலையில் பணி புரியலானான்! அதுவும் ஒரு பிரிவின் மேற்பார்வையாளனாக!!

மீசை முளைக்காத பாலகன், தன்னைவிட பல வயது மூத்த பணியாளர்களுக்கு முதன்மைப் பொறியாளனானான். உடன் பணிபுரிந்த ஏனைய அலுவலர்களும் அவனைவிட பல வயது மூத்தவர்களாகவே இருந்தனர். அதன்பொருட்டு அவன் அவர்களுக்கு குழந்தையானான். ஆம், “குழந்தை” என்றே அழைக்கப்பட்டானவன்.

பதின்மவயதுப் பாலகன் குழந்தை பணி புரிந்த பிரிவு, இழை உருளிப் பிரிவு( Flutted Rollers - FRS Department). அதே பிரிவில் உடன் வேலை செய்த தரக் கட்டுப்பாட்டு அலுவலர்கள் நாகராஜ், மனோகரன், ஜெயச்சந்திரன் முதலானோர். இவர்கள் அனைவருமே குழந்தையைவிட ஆறிலிருந்து பத்து வயது மூத்தோர், எவருக்கும் திருமணம் ஆகவில்லை. நல்ல குணமுடைய, சுவாரசியமிக்க இளைஞர்கள், நல்ல நண்பர்களும்கூட!

திங்கட்கிழமை மாலை நான்கு மணி இருபது நிமிடம்! இரண்டாவது நேர வேலைக்கு அலுவலர்களை ஏற்றி வந்த சொகுசுப் பேருந்து, இயந்திர ஆலையின் வாசலில் வந்து நிற்கிறது. சொகுசுந்தை விட்டிறங்கிய ஜெயச்சந்திரன் ஆலையினுள் உள்ள பதிவேட்டு அட்டையில்(time card) பதிந்து விட்டு உள்நுழைய, கண்காணிப்பாளர் கேசவன் பரிதாபமாகப் பார்த்துவிட்டுச் செல்கிறார். ஜெயச்சந்திரனுக்கு அவரது வித்தியாசமான பார்வை ஒரு வித வியப்பைத் தந்தது. அவர் ஏன் அப்படிப் பார்த்து விட்டுச் செல்கிறார் என்ற சிந்தனையினூடே தன் பிரிவான FRSக்குச் செல்கிறார்.

“Good Eveningடா நாகராஜ்!”

“Good Eveningடா!”

“எங்கடா மனோகரனைக் காணம்?”

“அவன் இங்கதாண்டா இருந்தான். ஒரு வேளை Sheet Metalக்கு அரவிந்தனைப் பாக்கப் போயிருப்பான்!”

“ஓ, அப்பிடியா? அப்புறம் எல்லா Machineம் நல்லாப் போகுதுதானே?:

“ஒன்னும் பிரச்சினை இல்லடா ஜெயச்சந்திரா! டேய், நான் மறக்கத் திரிஞ்சேம்பாரு, JB உன்னை வந்து பாக்கச் சொன்னாரு!”

“எதுக்குடா? எதும் பிரச்சினையா?”

“தெரியலடா, ஒன்னும் பிரச்சினை இருக்குற மாதரித் தெரியல!”

தரக்கட்டுப்பாட்டுக்கு(Quality Control) மேலாளரான இவர் (QC Manager) எதுக்கு தன்னை வந்து பார்க்கச் சொல்லி இருக்கிறார். நாம் ஏதும் வேலையில் தவறு செய்து விட்டோமோ? அல்லது, யாராவது தன்னைப் பற்றி மோசமாகக் கோள்மூட்டி விட்டார்களோ? இப்படிப் பல விதமான யோசனைகளின் ஊடே தனது மேலாளரான J.பாலகிருஷ்ணன் அவர்களுடைய அறையை அடைந்தார் ஜெயச்சந்திரன்.

“Sir, May I come in?"

"Yes!"

"Sir, Good Evening Sir!"

"வாப்பா ஜெயச்சந்திரா! உனக்கு ரொம்பப் பெரிய மனசு!! ஆனாலும் மனசு ரொம்பச் சங்கடமா இருக்குப்பா, வாழ்க்கைன்னு இருந்தா இப்படித்தான். அதுக்காக நாம நொடிஞ்சு போய் உக்காந்துற முடியுமா? அதையே நினைச்சுட்டு இருக்காத, ஆமா வீட்ல நீ ஒருத்தந்தான?”

அவர் பேசியது ஒன்றுமே விளங்காத ஜெயச்சந்திரன், “ஆமாங்க சார்!”

“நல்லதாப் போச்சு, இன்னும் ஒரு வருசங்கழிச்சு இன்னொன்னு பாத்துகிடலாம், நொம்ப செளரியமாப் போச்சு போ!”

“சார், நீங்க என்ன பேசுறீங்கன்னே ஒன்னும் புரியலீங்க சார்!” என்று தயங்கித் தயங்கி பயங்கலந்த மரியாதையுடன் சொன்னார் ஜெயச்சந்திரன்.

“யோவ், எனக்கெல்லாம் தெரியும்யா! இது உன்னோடதுதானே?” என்று வினவியபடியே எதையோ காண்பிக்க, ஜெயச்சந்திரனின் முகம் ஆப்பிள்பழத் தோல் போலச் சிவந்தது. பின் ஓரிரு நிமிடம் தனது மேலாளரிடம் ஏதோ பேசிவிட்டு வேகமாக அறையை விட்டு வெளியேறினார்.

நேராக தனது பிரிவான FRSக்கு வந்த ஜெயச்சந்திரன், கடுமையான முகத்துடன் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு,

“டேய் நாகராஜ், எங்கடா அந்த நாதாரி மனோகரன்?”

“டேய் என்றா நடந்துச்சு, இவ்ளோ கோவமா இருக்கே?”

“இல்லடா, அவனைக் கையக் கால ஒடைக்காம விடப் போறதில்லை இன்னைக்கு!”

“அண்ணா ஏனுங்ண்ணா இவ்ளோ கோவமா இருக்கீங்க, கொஞ்சம் அமைதியா...” என்றான், அந்த நேரத்திற்கு எங்கிருந்தோ வந்த குழந்தை.

“நீ ச்சும்மா இரு குழந்தை! நாயி, அவன் மண்டையப் பொளக்காம விடுறதுல்ல இன்னைக்கி, என்ன ஆனாலுஞ்சரி!”

இடைமறித்த நாகராஜ் மிகக் கடுமையான குரலில், “நிறுத்துறா! மொதல்ல என்ன நடந்துச்சு சொல்வியா? ச்சும்மா எகுறாங் கெடந்து?!”

நாகராஜின் கடுமையை எதிர்பார்த்திராத ஜெயச்சந்திரன், ”இல்லடா, நான் சனிக்கிழமை ஒரு கல்யாணத்துக்கு போக வேண்டி இருந்ததால வேலைக்கி வரல பாரு. அதுக்காக மனோகரங்கிட்ட லீவு கார்டைக் குடுத்து JB ரூம்ல போடச் சொல்லியிருந்தேன்!”

“சரீ, அதுக்கென்ன இப்போ?”

“Reason columnல நான் எழுதி இருந்த மேரேஜ்ங்றதுக்கு முன்னாடி மை வொய்ஃப்ங்றதைச் சேத்தி, மை வொய்ஃப் மேரேஜ்(my wife marriage)னு வர்றமாதிரி மாத்தி அவரு ரூம்ல போட்டுட்டான் இந்த நாயி. ரொம்ப மானக்கேடாப் போயிருச்சு தெரியுமா?”

அடக்கமுடியாத சிரிப்புடன் அண்ணன் நாகராஜும் குழந்தையும் ஆளுக்கொரு திசையாய் சிட்டெனப் பறந்தனர்!

6/09/2009

அமெரிக்கா: கிலி பிடித்தவன் எஞ்சி, மிஞ்சி நிற்பான்!

1996 ஆம் ஆண்டு! அமெரிக்கப் பொருளாதாரம் தொழில் நுட்பத்தில் கொடிகட்டிப் பறந்த நேரம். உலகமயமாக்கல், பொருளாதார மயமாக்கல், தாராளமயமாக்கல், அயலாக்கம்(outsourcing), இப்படிப் பல புதிய பரிமானங்களுடன், மென்பொருள், கணினி, வலைச்சந்தை, நவீனமயப்படுத்தும் வேலைகளுடன் ஏற்றம் ஒன்றே கண்களுக்கு புலப்பட்ட தருணமது என்று சொன்னால் மறுப்பதற்கு இல்லை. அந்த காலகட்டத்தில், Intel Andrew S. Grove அவர்கள் வெளிப்படையாகச் சொன்னார்,

கிலி பிடித்தவன் எஞ்சி நிற்பான்!
Only the Paranoid Survive!

உலகமே ஏற்றத்தில் பயணிக்கும் போது இவர் ஏன் இப்படிச் சொல்கிறார் என மற்றவர்கள் வியந்தனர். வெகு சிலரே அவரை ஏறெடுத்துப் பார்த்தனர். மற்றவர்களுக்கு அவர் சொல்வதைப் பரிசீலித்து, சரியான திறம்(strategy) கொள்வதற்கு நேரம் இருந்திருக்கவில்லை என்பதுதான் உண்மை. ஏற்றத்தில் இருப்பவனுக்கு ஒவ்வொரு மணித் துளியும் அறுவடைத் தருணம்; அதை அவன் வேறொன்றில் முதலீடு செய்யும் போது, உடனடி இலாபம் பாதிக்கப்படும், எனவே எவரும் அதைக் கவனிக்கவில்லை.

இனி, ஏன் அவர் அப்படிக் கூறினார் என்பதைப் பார்ப்போம். முதலாவது காரணம், அசுர வேகத்தில் நிகழும் தொழில்நுட்ப மாற்றங்கள். அதுமட்டுமே முக்கிய காரணம் என்றும் சொல்லிவிட முடியாது, கூடவே மனித சக்தி, சந்தையின் புதிய பரிமானம், போட்டியாளர்கள், கச்சாப்பொருட்கள், உற்பத்தி நிகழும் இடம் என பல அம்சங்களில் நிகழும் மாற்றங்கள். இந்த மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.

வியாபாரமாகட்டும், தொழிலாகட்டும் எந்தப் புள்ளியில் துவங்குகிறதோ, அங்கிருந்து சில காலத்திற்கு முன்னேற்றப் பாதையில் செல்லும். ஏனென்றால், அது நடப்புத் தொழில் நுட்பத்தையும் இன்ன பிற அம்சங்களையும் துவங்கும் தருணத்தில் கொண்டிருப்பதால்! B'se they are up-to-date!!

ஆனால் நாட்கள் செல்லச் செல்ல, வியாபாரமோ தொழிலோ, அது மேற்கூறிய மாற்றங்களையும் அவ்வப்போது உள்வாங்கி இருக்க வேண்டும். இல்லாவிடில், அந்த ஒரு நிலையில் வியாபாரம் வீழ்ச்சியை நோக்கி இறங்கு முகமாகப் பயணிப்பதைத் தவிர்க்க இயலாமற்ப் போகும். அந்த ஒரு நிலைதான் திறம்மாறு புள்ளி என்பது(Strategic Inflection Point).
ஆக, நிகழும் மாற்றங்களை உள்வாங்கித் தகுந்த திறம்(strategy) பாவிக்கத் தவறினால், வியாபாரம் வீழ்ச்சியடையுமே என கிலி கொண்டவனாக இருத்தல் ஒருவனுக்கு அவசியம். அப்படியாகக் கிலி கொண்டவன் எஞ்சி நிற்பதைக் காணும் நிலையில்தான் இன்று அமெரிக்கா! மற்றவர்கள் நிலை??

நிறுவனங்கள் கிலி பிடித்தவையாக இருக்க வேண்டும் என்கிற நிலை, தற்போது தனி மனிதனுக்கும் ஏற்பட்டு இருக்கிறது என்பது கண்கூடு. உலகின் மறுபக்கத்தில் எப்படியோ தெரியாது, அமெரிக்காவில் இன்றைய நிலை இதுதான்!

ஆக, ஒருவன் இனியாவது கிலி பிடித்தவனாக இருப்பது அவசியம் ஆகிறது. நன்னம்பிக்கை கொண்டவனாக இரு! அதே தருணம் மாற்றங்களைக் கற்பவனாகவும் இரு!! Be a paranoid optimist!!!

தொழிலில், வியாபாரத்தில் நிகழும் மாற்றங்களைக் கவனித்து அதற்கேற்றாற்ப் போல் தம்மையும் மாற்றிக் கொள்ள வேண்டும். பணிபுரிவோர், புதிதாக அறிமுகப் படுத்தப்படும் தொழில்நுட்பக் கூறுகள், நேரடி உற்பத்தி(hands on) முதலியவற்றிலான தேர்ச்சியை மேம்படுத்துதல் வெகு முக்கியம்.

எந்தத் தொழிலாக இருப்பினும் சரி, அது நிரந்தரம் அல்ல! யாருக்கும் உச்சம் என்பது கிடையாது; பிரபலம், வெற்றி, புகழ், நல்ல வேலை, கை நிறைய சம்பளம் என்பதெல்லாம் இன்றைய உலகில் வெறும் தற்காலிகம் மற்றும் மாயை! ஆகவே, உங்களுக்கான அடுத்த சவாலுக்குத் தயாரா? Only the Paranoid Optimist Survive!!

(இது குறித்து இடுகை இடக் கோரிய அண்ணன் சீமாச்சு அவர்கட்கு, இந்த இடுகை அன்புடன் சமர்ப்பிக்கப்படுகிறது)

6/08/2009

தலைவர்களுக்குத் திறந்த மடல்!

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களே,
புரட்சித் தலைவி வெற்றிகொள்அம்பிகை அவர்களே,
புரட்சிக் கலைஞர் வெற்றிச்செல்வன் அவர்களே,


எங்கள் செந்தமிழ் நாட்டில், மக்களின் ஏகோபித்த ஆதரவு பெற்ற மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் நீங்கள் மூவருமே! இது எந்த தனி மனிதனின் விருப்பு வெறுப்பின் அடிப்படையிலும் தெரிவானது அல்ல. மக்களாட்சிக் கோட்பாட்டின் அடிப்படையிலான தேர்தலில், மாநிலந் தழுவிய மக்களால் தெரிவான ஒன்று. உங்கள் மூவருக்கும் முதற்கண் வணக்கங்களை உரித்தாக்குகிறேன்!

தமிழ்நாட்டில் இல்லாத இவனுக்கு, பொதுமடல் எழுத என்ன முகாந்திரம் இருக்கிறது என்று நீங்கள் வினவலாம். மேலை நாடுகளில், புலம் பெயர்ந்து வாழும் வாக்களர்களுக்குத் தரும் வாக்குரிமையைப் போன்று, இந்தியாவிலும் கொடுத்தால் என்னவென்று எந்த அடிப்படையில் இந்திய தேர்தல் ஆணையம் யோசிக்கிறதோ, அதே அடிப்படையில் எழுதுவதுதான் இந்த மடல்.

இன்றைக்குத் தமிழ்நாட்டிலே, எந்த ஒரு தனிமனிதனும் தனது வசதிக்கேற்ப கட்சி துவங்கி, தேர்தலில் பங்கு பெறலாம் என்கிற நிலை கோலோச்சுகிறது. அதன் விளைவாய், தான் நடித்ததில் மூன்றாவது அல்லது நான்காவது திரைப்படம் வெற்றி பெறும் போதே, கட்சிக்கு பெயர் தேடும் பணிக்கு ஒப்பந்தப் புள்ளி கோரும் வழக்கம் வந்து விட்டதைத் தாங்கள் அறிவீர்கள்.

சாதி என்றால் மனம் கூச்சப்படுகிறதென்று, சமூகமாகிவிட்ட அந்த மக்கள்த் திரள் ஒவ்வொன்றுக்கும் ஒரு கட்சி. வசதி வாய்ப்பு வாய்க்கும்பட்சத்தில் இரண்டு அல்லது மூன்று கட்சிகள். இந்த மக்கள்த் திரள்களில் உள்ள மூத்தோர், இளையோரைக் கட்சி துவக்க வாய்ப்பளிக்க விடாமல் அவர்களே கட்சிகளைத் துவக்கி ஆக்கிரமித்துக் கொள்வதால், புது மக்கள்த் திரள்களை உருவாக்குவது எப்படி என்று தமிழகத்தின் பிரபல எழுத்தாளர் ஒருவர் முழு வீச்சில் புத்தகம் எழுதி வருவதாகவும் நம்பகமான செய்திகள் கூறுகின்றன.

நிலமை இவ்வாறிருக்க, தமிழகம் எங்கும் வியாபித்திருக்கிற மற்றும் வரப்போகிற எண்ணற்ற கட்சிகளால் மக்கள் சலிப்படைந்து வருவதையும் அறிய முடிகிறது. அதன் விளைவாய், அதிகப்படியான கட்சிகளால் மக்களுக்கு ஏற்படும் பாதகங்கள் என்னென்ன என்று ஆராய்ந்து பார்த்ததில், நமக்குத் தெரிந்தது கீழே வருமாறு:

1. சமூகப் பிரச்சினைகளுக்கு யாரை அணுகுவதென்றே தெரியவில்லை.

2. உணர்வுப் பூர்வமான பிரச்சினை என்றால், ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகள் அதைக் கையிலெடுத்துக் கொண்டு, ஊதிப் பெரிதாக்கிப் பெரிதாக்கி, இறுதியில் பாதிக்கப்பட்ட மக்களையே அழித்தொழிக்கிற அவலம்.

3. கட்சிகள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு அறிவிக்கும் போராட்டங்களினால், வெகுசன மக்களுக்கு பெருத்த கால விரயம் மற்றும் பணநட்டம்.

4. ஒற்றுமையாக இருக்க வேண்டிய சமூகம், பல பிரிவுகளாகப் பிரிந்து அல்லல்படுகிறார்கள்.

5. ஒவ்வொரு கட்சியும் தனக்கென காணொளி அலைகள் வைத்திருப்பதால், நம்பகமான செய்திகள் கிடைக்கப் பெறுவதில்லை. அதில் ஏற்படும் குழப்பத்தின் காரணமாய் பல சிக்கல்கள்.

6. கட்சியை மாற்றச் சொன்னார்கள். பிறகு பிடித்த நடிகனை மாற்றச் சொன்னார்கள். இப்போது இல்லாத சாதியையும் மாற்றச் சொல்கிறார்கள். மாநில எல்லையில் இருப்போரை, இனத்தையும் மாற்றச் சொல்கிறார்கள். இப்படி மாறி மாறி, மாறுவதே ஒரு கூடுதல் தொழிலாக ஆனதினால், பொது மக்களுக்கு கூடுதல் பணிச்சுமை.

7. எண்ணற்ற கட்சிகள் இருப்பதால், அரசியல் ரீதியாகக் கொள்கை கோட்பாடுகளுடன் இருந்த நீங்களும், பொறுப்பு(accountability)லிருந்து தப்பித்து உங்கள் கட்சியின் அடிப்படைக் கோட்பாடுகளையே காற்றில் பறக்கவிட்டு வருகிறீர்கள்.

இதைப் போல நிறைய பாதகமான அம்சங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இருந்தாலும் உங்களுடைய நேரத்தை வீணடிக்க விரும்பாததால், நேரடியாக விசயத்துக்கு வருகிறோம். மக்களாட்சித் தத்துவத்தின்படியும், தனிமனித உரிமைகளின்படியும் நாம் எவரையும் கட்சி ஆரம்பிக்க வேண்டாமென்றோ, இருக்கும் கட்சியைக் கலைத்து விடும்படியோ வற்புறுத்த முடியாது, வற்புறுத்தவும் கூடாது. எனவேதான் உங்களுக்கு இந்த மடல்!

ஆமாம். நீங்கள் மூவரும் மனமாச்சரியங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். ஏற்கனவே, மத்திய நிதியை மாநிலங்களுக்கு ஒதுக்குவதில், அந்தந்த மாநிலங்களின் பங்களிப்பைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதில் ஒன்றிணைந்து இருக்கிறீர்கள். பாராட்டுகள்!

அது போலவே, தேசியக் கட்சிகள் தவிர மற்ற சிறு சிறு கட்சிகளுடன் உடன்பாடு கொள்ளாமல் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என உங்கள் தலைமையிலான கட்சிகள் ஒருமித்த முடிவு மேற்கொள்ள வேண்டும். இதனால், சிறு அளவிலான கட்சிகளைக் கட்டுக்குள் வைத்திருக்க இயலும். மேற்கூறிய பாதகமான அம்சங்களும் ஒழிந்து போகும். செய்வீர்களா?

இல்லாவிடில், தமிழ்ச் சமுதாயம் மேலும் பிரிந்து பிரிந்து சிறு சிறு குழுக்களாக ஆவதில் இருந்து தப்பவே முடியாது. தமிழனைச் சீர்குலைத்த பழி பாவம் உங்களையே வந்தடையும். மாநிலந் தழுவிய ஆதரவு இல்லாத கட்சிகள், வெறும் துணைநிலை குழுக்களே!

அவர்களின் ஆதரவு தேவைப்படுமாயின், அவர்களுக்கு ஆதரவு உள்ள பகுதிகளின் உள்ளாட்சி அதிகாரங்களை அவர்களுக்கு அளிக்கலாம். அவர்களும் கைமாறாக, அவர்களது ஆதரவினை சட்டமன்ற, பாராளுமன்றத் தேர்தல்களில் உங்களுக்கு அளிக்கலாம்.

இதன் மூலம், அவர்களும் சமுதாயக் கடமை ஆற்றுவதில் பங்கு பெற முடியும். சட்டமன்ற, பாராளுமன்றத் தேர்தல்களில், கணக்கு அடிப்படையிலான முடிவு அல்லாது, மக்களின் நேரிடையான முடிவு வெளிப்படும். உங்களுக்கும் களப்பணி ஆற்றுவது எளிமையாக இருக்கும். எனவே, இவ்விசயத்திலும் ஒன்றிணைந்து செயல்படுமாறு வேண்டுகிறோம்.

வாசகர்களுக்கு:

இந்த மடல் எழுதியவனுக்கும் உங்களுக்கும் உள்ள தோழமை அல்லது பகைமையக் கருத்தில் கொள்ளாது, சிறு சிறு கட்சிகள் நாட்டிற்கு இம்சை என்று கருதினால் தமிழ்மணப் பட்டையில் உள்ள மேல்நோக்கில் ஒப்பமுக்குங்கள்! சிறு கட்சிகளின் பங்களிப்பு தேர்தலில் தேவை எனக் கருதினால், கீழ்நோக்குப் பொத்தானில் ஒப்பமுக்குங்கள்!!

இதன் மூலம் வாசகர் கருத்து வலையுலகினருக்கும், மேற்கூறிய தலைவர்களுக்கும் தெரிய வருமன்றோ? ஆகவே கட்டாயமாக உங்கள் கருத்தை ஒப்பமுக்குவதின் வழியாகத் தெரிவித்துச் செல்லுங்கள்!

6/07/2009

மகிழ்விப்புநர்

”என்னங்கடா இது? இடுகை இடுறேம்பேர்வழின்னு ஊருக்கு உபதேசமா? மனவெறுமை(boredom)ங்கறான்... கிருதா(ego)ங்றான்... என்ன வெளையாட்டா இருக்கா எங்களைப் பார்த்தா?”, இப்படியெல்லாம் ஊருக்குள்ள பேசுவாங்க... இஃகிஃகி, அது நமக்குந் தெரியும்... ஆனா, அவிங்க நெனைக்குறா மாதர இல்லை நம்ம பொழப்பு.

நெசந்தாங்க, சொன்னா நம்போணும்! வெளிநாட்டுக்கு வந்தப்புறம் கொஞ்ச நாள் அமைதியா இருந்துதான் பாத்தேன். குழுமங் குழுமமா எங்கியோ ஒரு எடத்துல எதோ ஒரு காரியத்துக்கு கூடுறது உண்டு. அங்க அரைச்ச மாவையே அரைச்சிகினு, பாடுன பல்லவியே பாடிகினு... வெறுமையாத்தான் இருந்துச்சு... கூடவே வாற சனங்களுக்குள்ள அவிங்க அவிங்க தகுதிக்கேத்தாப்புல கிருதாவும்...

நம்ம சனங்கன்னு இல்ல, அது எல்லார்த்துகிட்டயுந்தான் ஒளிஞ்சிட்டு இருக்குது. கிருதாமானின்னு ஒன்னு இருந்து அதை வெச்சுப்பாத்தா தெரியும், ஒவ்வொருத்தர்கிட்டவும் அது எவ்வளவு இருக்குன்னு... அப்ப, கூடுன எடத்துல, முன்பின் தெரியாத நம்ம சனத்தை ஒருத்தொருக்கொருத்தர் எப்பிடி சகசமாப் பழக வெக்கிறதுன்னு யோசிக்க, அப்புறமேல்ட்டு கட்டுனதுதான் இந்த மகிழ்விப்புநர் வேசம்.

ஆமாங்க, அஞ்சாறு வருசமா வாய்ப்பு கெடைக்கும் போதெல்லாம் நாம இந்த வேசங்கட்டிட்டு வர்றோம். நூறு பேர் வரைக்கும் கூடுன கூட்டத்தை எல்லாம் நாம சிரிக்க வெச்சு, ஒரு நல்ல சூழ்நெலைய உண்டு பண்ணி இருக்கோம். பிறந்த நாள் விழாக்கள் நடத்தி இருக்கோம்... நல்ல அனுபவம் இருக்கு கைவசம்... இஃகிஃகி!

வந்த சனங்களுக்குள்ள பேதமை கலந்த, அதாவது நல்ல தமிழ்ல சொன்னா கேனத்தனமான வெளையாட்டு நடத்துறதுதாங்க இந்த மகிழ்விப்புநர் வேலை. அதென்ன கேனத்தனமான வெளையாட்டு? ஆமாங்க, நல்ல வெளையாட்டுலயும் கிருதா வந்து உக்காந்துக்குறதுக்கு வாய்ப்பு இருக்கே, அதான் இந்த பேதமை கலந்த வெளையாட்டு.

Small Fish, Big Fish

வந்திருக்குற சனத்தை எல்லாம் வட்டமா உட்கார வெச்சிடணும். பத்து பேர்ல இருந்து எவ்வளவு பேர் வேணுமின்னாலும் இதுல கலந்துகிடலாம். ஒருத்தர் பெரியமீனைக் காண்பிக்கற மாதிரி கைய விரிச்சிட்டு சின்னமீன் அப்படீன்னு சொல்ல, அடுத்தவர் சின்ன மீனைக் காண்பிக்கிற மாதிரி கையக் காண்பிச்சிட்டு பெரியமீன் அப்படீன்னு சொல்லணும். இப்படியே மாறி மாறி சொல்லிட்டே வரணும். அப்ப யார் தப்பா சொல்றாங்களோ, அல்லது தப்பா கையக் காண்பிக்கிறாங்களோ அவங்க ஆட்டத்துல இருந்து விலக்கம். இப்படியே, ஒருத்தர் ஒருத்தரா விலக்கிட்டு வந்து கடைசியா யார் மிஞ்சி இருக்காங்களோ, அவர் வெல்லுனவர். விளையாடிப் பாருங்க, ரொம்ப நல்லா இருக்கும். மகிழ்விப்புநர் சிரிப்பைக் கட்டுப்படுத்தி நடத்தணும், அதுலதான் அவரோட திறமை இருக்கு.

Plain Bun, Plum Bun, Bun without Plum

ஆட்களை வட்டமா உட்கார வெச்சிடணும், அல்லன்னா நிக்க வெச்சுடணும். ஒருத்தர் Plain Bun சொல்ல, அடுத்தவர் Plum Bun சொல்லணும், அடுத்தவர் Bun without Plum சொல்லணும். இப்படியே மாறி மாறி சொல்லிட்டு வரணும். அப்படி சொல்லிட்டு வரும்போது யார் தவறுதலா சொல்றாங்களோ, அல்லது கேனத்தனமா சிரிச்சிட்டு காலம் தாழ்த்துறாங்களோ அவங்க விலக்கம். இப்படி விலக்கிட்டு வரும்போது கடைசியா யார் மிஞ்சி இருக்காங்களோ அவங்க வெற்றியாளர். ஆங்கிலத்துல இதை tongue twistterனு சொல்றது.

இப்படி நிறைய விளையாட்டுகள்... ஒரு இருபது, முப்பது விளையாட்டுக தெரியும். எல்லார்த்தையும் சொல்ல ஆரம்பிச்சா விடிஞ்சிடும். அதுனால இதோட நிறுத்திக்கிறேன். கடைசியா, நம்மூரு tambolaவும் விளையாடுறது உண்டு. அதுக்குண்டான சீட்டுகளை இங்கியே உங்களுக்கோசரம்... இஃகிஃகி!!









கடைசியா திரி ஒன்னை கொழுத்திப் போடுலாம், இப்ப என்ன? தலைகீழா நின்னுட்டுப் பொய் சொல்ல முடியாதுன்னு சொன்னோம் இல்லீங்களா? அதே மாதிரி, கண்ணைத் திறந்திட்டே தும்ம முடியாதுங்களாமே? அப்பிடிக்கிப்பிடி தும்ம(sneeze) முடிஞ்சா சொல்லி அனுப்புங்க, சரியா? வர்றேன்??

6/06/2009

வெறுமை ஒழிக!

மாந்தனுடைய வாழ்க்கையில் அடிக்கடி தென்படுவது மனவெறுமை (boredom); அதனால் அவனுக்கு அவதி! மனம் தவிக்கிறது, இருந்த இடத்தில் இருக்கப் பிடிக்கவில்லை, உடன் இருப்போரைக் கண்டால் பிடிக்கவில்லை, எதைச் செய்யவும் சலிப்பு மேலிடுகிறது, இதை ஒருவழிக்குக் கொண்டு வர வேறேதோ ஒன்றை நாடுகிற சூழ்நிலை.

திரைப்படம் பார்க்கிறான், சலிப்பாக இருக்கிறது. கதை கட்டுரை படிக்கிறான், அதில் மனம் ஒன்றவில்லை. ஏன்? அவனது மனம் இது வரையிலும் கண்டிராத எதோ ஒன்றுக்கு இட்டுச் செல்கிற தூண்டுதல் (stimulation) அதில் இருந்திருக்கவில்லை(lack of variety). மனமானது மாற்றங்களுக்கும் மாற்றான உணர்வுகளுக்கும் ஏங்கிக் கொண்டே இருக்கும். அதையறிந்து, மாந்தனை வேறொரு எண்ணச் சூழலுக்கு இட்டுச் செல்கிற வகையில் படைப்புகள் தருவதில்தான், படைப்பாளியின் வெற்றி அடங்கியுள்ளது.

இந்திய சமூகத்தில், குறிப்பாகத் தமிழ்ச் சமுதாயத்தில் நடந்து கொண்டிருப்பது என்ன? மாற்றங்களைக் கொணர்கிறோம், இரசிப்புத் தன்மையை மெருகேற்றி சுவராசியத்தைக் கூட்டுகிறோம் (variance in variety) என்று சொல்லி, தனிமனிதனின் உணர்ச்சிகளைக் கிளர்ந்தெழச் செய்து, அதன்மூலம் இலாபம் ஈட்டப்படுகிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

இங்கே நீங்கள் கையாளப்படுகிற வார்த்தைகளைக் கூர்ந்து கவனித்தாக வேண்டும். சுவராசியம் என்பார்கள். சுவராசியம் என்றால் என்ன? சுவை + இராசியம்! இராசியம் என்றால் ஏதோ ஒன்றை மறைபொருளாக வைத்துச் செயல்படுதல். நாங்கள் இராசி ஆகிவிட்டோம் என்று சொன்னால், எங்களுக்குள் நட்பு எனும் மறைபொருள் துளிர்த்து விட்டது என்று பொருள்.

அப்படியாக சுவராசியம் என்பது, சுவையான பாங்கில் மறைபொருள் ஒன்றை வெளிப்படுத்தும் செயல். ஆனால், நடப்புச் சூழலில் அது எப்படிக் கையாளப் படுகிறது? பெரும்பாலான படைப்புகளில், தனிமனிதத் தாக்குதல், உணர்ச்சிகளை அடிப்படையாக வைத்து மனத்தை ஆட்கொள்தல், குறை சொல்லிச் சுட்டுதல், புறம் பேசுதல், ஆதிக்கம் செலுத்துதல் முதலான, மாந்தனுக்கு எதிரானவற்றை லாவகமாகக் கையாளும் போக்கு சுவராசியம் என்படுகிறது.

உதாரணத்திற்கு ஒரு காணொளிக் காட்சி என்று வைத்துக் கொள்ளுங்கள். நாயகன், வில்லன் ஆகிய இருவரும் சொல்லவொண்ணா அவலங்கள் செய்வர், நாயகியையும் அவர் சார்ந்தோரையும் அவலநிலைக்கு ஆளாக்குவர்(domestic violence), அல்லது பாலியல் ரீதியான கொடுமைகள் (sexual harassment), அதனை எதிர்கொண்டு நாயகன் வெல்வதுதான் கதை. பெரும்பாலான படைப்புகளில், இந்த அடிப்படையில் எந்த மாற்றமும் இருப்பதில்லை. அப்படியானால் மேலே குறிப்பிட்டபடி varience in variety, சுவ்ராசியம் மற்றும் புதுமையான சூழலை உண்டு செய்து படைப்பில் வெற்றி பெறுவது எப்படி?

அங்கேதான், இன்றைய சூழலைப் பொறுத்த மட்டில், நமது சமுதாயம் படைப்பில் வெற்றி பெற்று, அதே நேரத்தில் மனிததர்மத்தில் (ethic) தோற்றுப் போய்க் கொண்டிருக்கிறது. எப்படி?

பெரும்பாலான படைப்பாளிகள், புறநிலையில் வெகுவாக மாற்றத்தைக் கொணர்ந்து, மனிதனின் எண்ண மாறுதலுக்கான ஏக்கத்துக்குத் தீனி இட்டு வருகிறார்கள். அது என்ன புறநிலை? வில்லன் நாயகியைக் கொடுமைப் படுத்துவதில் புதிய யுக்திகள். நாயகனைச் சிறுமைப் படுத்துவதில் புதிய நேர்த்தி. பின்னர் வில்லனை வெற்றி காண்பதில் புதிய வழிமுறை. இப்படியானவற்றில் சமுதாயம் சோரம் போனதுதான் வேதனையான ஒன்று!

பின் எப்படியான மாற்றங்கள் மாந்தனுடைய எண்ண மாறுதலுக்கு உகந்ததாக இருக்கும்? அகநிலை மாற்றங்கள்! படைப்பின் கருவில் மாற்றம் இருக்க வேண்டும். அவன் கடந்த முறை கண்டது காதல் கதை என்றால், அடுத்த முறை அது வேறொன்றாக இருக்க வேண்டும். அந்தக் களம், மனிதனின் மனதைக் கொள்ளை கொள்ள வேண்டும்.
Iyer the Great, வரவேழ்ப்பு, வந்தனம், New Delhi, வைசாலி என்று தொடர்ந்து ஒன்றுக்கொன்று மாறுபட்ட கோணத்தில் படைப்புகள் வர, தமிழ் வணிகசக்தி ஆடிப் போய், அவை தமிழகத்தில் வெளிவரத் தடை வந்தமை இதற்குத் தகுந்த உதாரணமாகச் சொல்லலாம்.

மனவெறுமையைத் துடைத்தெறிந்து மகிழ்வு கொள்வதில், தனிப்பட்ட மனிதனுக்கும் உரிய கடமைகள் உண்டு. அவன் அவனது மனதை எளிமையாக, ஏழ்மையாக வைத்திருத்தல் மிக அவசியமானது. ஒருவனுடைய வாழ்வுக்கு உண்டானது 100 பெட்டி மகிழ்ச்சி என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த 100 பெட்டிகளையும் முதல் 25 ஆண்டுகளிலேயே செலவழித்து விட்டான் என்கிறபோது, எஞ்சிய நாட்களுக்கு அவன் மேலதிக மகிழ்ச்சியைத் தேடித்தான் திரிய வேண்டும். அந்த காலகட்டத்தில் மனநிம்மதியை அவன் இழப்பது தவிர்க்க இயலாதது ஆகிவிடுகிறது.

இன்றைய நிலையில், மனமகிழ்ச்சி என்பது மற்றவர்களின் வணிகரீதியான வெற்றிக்காக, விரைவில் செல்விடப் படுகிறது. மேல்நாட்டவன் ஒற்றைத் தூண்டில் கொண்டு மீன்பிடிப்பதை நாட்கணக்கில் இரசித்து மகிழ்கிறான். நமது சமுதாயம், அதை அந்த அளவில் வைத்திருக்கிறதா? இல்லை. காரணம், நமது மனது சிறுவயதிலேயே உச்சம் எய்தி விட்டதுதான் நிதர்சனம். அந்த மனதுக்கு இது போன்ற சிறு சிறு செயல்களில் மகிழ்ச்சி ஏற்படாது. உணர்ச்சிகள் என்ற கடப்பாரை கொண்டு, நெஞ்சினுள் நச் நச்சென்று இடிக்க வேண்டிய அளவுக்கு அது முதிர்ச்சியாகி விட்டதென்பதே உண்மை.

ஆகவே வெகுளித் (Innocence) தன்மை கொண்டு, மனதை ஏழ்மையாக வைத்திருத்தல் அவசியம். அதை வளர்த்தெடுக்க, குழந்தைகளோடு பெற்றவர்கள் நிறைய நேரம் செலவிட வேண்டும். வக்கிரங்கள் கொண்ட படைப்புகளைத் தவிர்த்திடுவதால், மகிழ்ச்சியானது விரைவாகவும் மலிவாகவும் செலவிடப்படுவது தடைபடும்.

வக்கிரப்படுதலை ஊக்குவித்து, நாட்டத்தை உண்டுபண்ணி, உங்களது நீண்ட நாளைய மகிழ்ச்சியை குறுகிய நேரத்தில் செலவிடச் செய்து படைப்பை வெற்றி பெறச்செய்வது என்பது, ஒரு பொருளீட்டும் மாயை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அதே நேரத்தில், விளையாட்டு, குழந்தைகளுடன்கூடிய தொடர்பை மேலும் வலுப்படுத்துதல், கலை இலக்கியங்கள், சமூகப் பங்களிப்பு, ஆன்மீகம், உடற்பயிற்சி போன்றவை மனதுக்கு மகிழ்வளித்து, கூடவே மனவெறுமையையும் வென்றொழிக்கும் என்பது சொல்லித் தெரிவதில்லை!

“The good things of life are not earned, but obtained with little or no effort!”

6/05/2009

சுயங்கிருதானர்த்தம்!

முதல்ல கொஞ்சம் கட்டையப் போட்டுட்டு, அப்புறமா ஆக வேண்டியதைப் பாக்கலாஞ் செரியா கண்ணுகளா? பாரு கண்ணூ, பரங்கிப் பழமயில Ego, Egoன்னுச் சொல்லிச் சொல்றாங்களே, அப்படீன்னா என்ன?

ஒருத்தர் ’நான்’, ’தனது’, ’என்’ இந்த மாதரயெல்லாம் தன்னையே பிரதானமா வெச்சிப் பேசறதும், அந்த நெனப்புல திரியறதுன்னும்ன்னு சொல்றாங்க. அதைத்தான் நம்ம தமிழ் சொல்லுது, ’கிருதா’ன்னு.

அவன் ஒரு கிருதா கொணங்(குணம்) கொண்டவன், அவன் ஒரு கிருதன்ன்னு சொல்றது. அர்த்தம், அனர்த்தம்ன்னு சொல்லிக் கேட்டு இருப்பீங்க. அர்த்தமுன்னா சுலுவுல தெரியும் உங்குளுக்கு! அனர்த்தம்ன்னா? தத்துபித்துன்னு தப்புத் தப்பா எதனாச்சும் பேசி வெக்கிறது. சுயம்ன்னா, தனக்குத் தானே!

இப்ப உங்குளுக்கு நான் என்ன சொல்ல வாறேன்னு தெரிஞ்சி போச்சாக்கூ? இஃகிஃகி! ஆமாங் கண்ணூ, என்னைப் பத்தி நானே, கிருதனாட்டம் அனர்த்தம் சொல்லப் போறேன். பொறுத்துகுங்க என்ன? நெம்பக் கோவம் வந்தா, அதுக்கு நாம்பொறுப்புக் கெடையாது! என்னைய இப்பிடி எழுதச் சொன்னவிங்க சிங்கப்பூரு ஞானியாரு, அவரை வெய்யுங்கோ, என்ன வேணுமின்னாலும் செய்யுங்கோ!! என்னிய உட்ருங்க செரியா??

1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

பழமைபேசிங்றதா? எங்க ஊர்ல பழமை பேசுறதுன்னா, திண்ணையில, பொடக்காளீல, கோயல்வாசல்ல, சத்திரத்துலன்னு பொதுவான எடங்கள்ல, காத்தோட்டமா ஒக்காந்து பேசுறதைச் சொல்றது கண்ணு. அதான், உங்ககோடெல்லாம் பழமை பேசுறவன்ங்ற அர்த்தத்துல பழமைபேசின்னு எனக்கு நானே வெச்சிகிட்டன்.

நெசப் பேரு கேக்குறீங்களா? எங்க பெரியண்ணம் பேரு பிரபாகரன், சின்ன அண்ணம் பேரு சந்திரசேகரன்; அதுனால, கரன்னு முடியோணுமின்னு எங்கப்பனாத்தா வெச்ச பேரு மனோகரன். ஆனா, எங்களுக்கு நெம்ப வேண்டப்பட்ட வாத்தியாரு ஒருத்தரு மணிவாசகம்ன்னு பள்ளிக்கூடத்துல காதைத் தொட்டுச் சேத்தும் போது எழுதிப்போட்டாரு. அதேவும் நெலைச்சும் போச்சு கண்ணூ. எனக்குமு புடிச்சுத்தான் இருக்குது.

2. கடைசியாக அழுதது எப்பொழுது?

அன்புப் பதிவரு அகநாழிகை, அவ்ரோட இடுகை ஒன்னுல ’இப்படிக்கு ரோசு’ன்னு சொல்லிச் சொல்ல, நான் அது யாருன்னு வலையில மேய, காணொளி ஒன்னு அகப்பட்டுது. சரி பாப்பமின்னு அதைப் பாக்க, அதுல எனக்குத் தெரிஞ்ச ஈழம் - உடுப்பிட்டி அக்காவுங்க மாதரயே, ஒரு சகோதரி கதைக்குறதப் பாத்தமுமே ஒரே அழுகாச்சி. நாள் பூராவுமு ஒளிஞ்சி இருந்து, ஒளிஞ்சு இருந்து அழுதனாக்கூ. அதுவுமு, அந்த சகோதரி தன்னோட சகோதரனைப் பத்தி சொல்லும் போது, எனக்கு தாங்க முடியல.



3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

நெம்பப் புடிக்கும்.

4.பிடித்த மதிய உணவு என்ன?

முருங்கைக்கா சாம்பாருமு, தயிருமு சோத்தோடொ!

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

என்ன கேளுவியிது? நட்புன்னாலே, மத்தவங்க கூடப் பழகுறதுதான?!

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

கண்ணூ, நான் கெராமத்துல பொறந்து வளந்தவன். எங்கூர்ல இந்த ரெண்டும்மில்லை. அதுனால, எனக்கு ரெண்டும் புடிக்கும்.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

என்னியப் பாத்து அகோ சொல்றது, குறுஞ்சிரிப்பு சிரிக்குறது, இப்பிடி சொல்லுற வணக்கத்துக்கு எதோ ஒரு விதத்துல பதில் வருதான்னு கெவினிப்பேன்.

8.உங்ககிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

புடிச்சது, வெளிநாட்டுக்கு வந்து நெம்ப வருசங்களானாலும் இன்னியுமு ஊர் ஞாவகத்தை வெச்சிருக்குறது. புடிக்காதது, செஞ்ச தப்புகளையும் சேத்தி மறக்காம இருக்குறது.

9. உங்க சரிபாதி கிட்ட உங்களுக்கு பிடித்த, பிடிக்காத விஷயம் எது?

புடிச்சது பொறுமை; புடிக்காதது, வெகுளியா இருக்குறது.

10.யார் பக்கத்தில் இல்லாமல் இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

அப்பா, அம்மா!

11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

வெள்ளை நெற பனியனாவு, நீல நெறத்துல சல்லடம்.

12. என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

இப்ப பாட்டுக் கேக்குலியே!

13. வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

ஆகாயத்துல இருக்குற நீல நெறம்.

14.பிடித்த மணம்?

பழனி சித்தனாதன் துண்ணூறு வாசம்.

15. நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார் ? ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன ?

குறும்பன்
ராஜ நடராஜன்

இவங்க நல்லா எழுதுறவங்க! ஆனா, எப்பவாச்சும் ஒரு இடுகைதான் இடுறாங்க, அதான் காரணம்; நான் இந்த இடுகை இடுறது, நிமித்தம்!!

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

கேள்வியில பிழை இருக்கு. பிடித்த இடுகை எதுன்னு கேட்டு இருக்கோணும். சிங்கை ஞானியார் பதிவுல இருக்குற இடுகை எல்லாமே பிடிச்சு இருக்கு.

17. பிடித்த விளையாட்டு?

கபடி

18. கண்ணாடி அணிபவரா?

அல்ல!

19. எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?

கிராமியச் சூழல்ல இருக்குற படம்.

20.கடைசியாகப் பார்த்த படம்?

எம்மக வரைஞ்ச குதரை!

21. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?

தென்பாங்குப் பூந்தமிழ்

22.உங்களுக்கு பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?

அயோத்தி, மதுரை, மாயை, காசி, காஞ்சி, அவந்தி, துவாரகை. இது எல்லாமும் புடிக்கும். இது தவிர வேறெதுனா சத்தம் சொல்லி இருக்காங்களா கண்ணூ?!

23.பிடித்த பருவ காலம் எது?

மழலைப் பருவம்.

24. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

தமிழ்ல கேளுங்க, தெரிஞ்சா சொல்றேன்.

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிகபட்ச தொலைவு?

பதினோராயிரம் மைல்கள்.

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

தனித் திறமைக்கும், பொதுத் திறமைக்கும் என்ன வித்தியாசமுன்னு தெரியலீங்களே.

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

புருசனோட கண்ணாலம்.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

அளவு கடந்த நித்திரை.

29. உங்களுக்கு பிடித்த சுற்றுலாத்தலம்?

மலையாள தேசம் பூராவுமு.

30. எப்படி இருக்கணும்னு ஆசை?

நோவு நொடி இல்லாம!

31. மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம்?

தூங்குறதுதான்!

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?

வாழ்க்கை நல்லா இருந்தா, வாழ்வும் சிறப்பா இருக்கும்ன்னு நம்புறவன் நானு!

6/04/2009

’நறுக்கு’ன்னு நாலு கேள்வி -- 1?

குதிரைகள்ல தலைவர்கள், வீரர்கள் உட்கார்ந்திருக்கிற மாதிரியான சிலைகள் பார்த்து இருப்பீங்க. அப்படிப்பட்ட சிலைகள்ல முன்னிரு கால்களும் தூக்கினா மாதிரி இருந்தா, அவர் போர்க்களத்துல இறந்திட்டாரு. வலதுபக்க முன்கால் மட்டும் தூக்கினா மாதிரி இருந்தா, போர்ல பட்ட குண்டடியினால இறந்திட்டாரு. இடதுபக்க முன்கால் தூக்கினாமாதிரி இருந்தா, போர்க் களத்துல ஏற்பட்ட விபத்துனால இறந்துட்டாரு. நாலு காலும் நிலத்துல இருந்தா, அவருக்கு ஏற்பட்டது இயற்கை மரணம். நாலுகாலும் நிலத்துல ஊன்றி இருக்காம இருந்தா, உங்களைப் போல அவரும் உயிரோட இருக்கார்ன்னு தானே அர்த்தம்?

அவாய்த் தீவுகள் வருசத்துக்கு நாலு விரற்கடை, சப்பானை நோக்கி நகருது. அப்ப இலங்கை, இந்தியாவை நோக்கி நகருதா?

ஒருத்தர் நாய் மாதிரி, எட்டு வருசம் ஏழு மாசம் ஆறு நாட்களுக்கு குரைக்குறதுக்கு செலவாகுற சக்தியானது, ஒரு கோப்பை காப்பித் தண்ணி சூடு செய்யுறதுக்கு உண்டான அளவாம். அதான் வீட்ல சத்தம் அடங்கவே மாட்டேங்குதா?!

உலக மக்கள் தொகையில 51% பெண்கள்; 49% ஆண்கள். உலகப் பணத்துல பாதி, வெறும் ஆறு சதமான மக்கள்கிட்டவே முடங்கி இருக்கு. இந்த ஆறுல ஒரு சதம் சாகும் தருவாயில இருக்குறவங்க. ஒரு சதம் பிறந்து சில நாட்களே ஆனவங்களாம். இந்த ஆறு சதத்துல, இந்தியாவுக்கு எத்தனை சதம்?

தன்னோட சாம்பலை எடுத்து, அதை சுருக்கிப்(compress) படிகக் கல்லா மாத்தி, அந்தக் கல் வெச்ச மோதிரத்தை விருப்பமானவங்ககிட்டத் தர ஒரு நிறுவனம் $14000 விலை வெக்கிறாங்களாம்; விருப்பமிருக்குறவங்க கிட்ட இருந்து விண்ணப்பங்களைக் கோரி விளம்பரமும் செய்யுறாங்களாம். மோதிரத்துக்கு ஆசைப்பட்டு, உசுரோட இருக்குற ஆட்களைப் போட்டுத் தள்ள மாட்டாங்களா?

வருசத்துக்கு சராசரியா நாற்ப்பத்து இரண்டு இலட்சம் தடவை ஒருத்தரோட கண் இமைகள் மூடித் திறக்குதாம், அதாவது அவ்வளவுதடவை அவரு கண் சிமிட்டுறாரு. தமிழ்நாட்டுலதான் மின்பற்றாக் குறை ஆச்சே, அங்க இருக்குறவங்க கண் சிமிட்டுறதுல இருந்து மின்சாரம் தயாரிச்சா என்னன்னு கேக்குறாரு வடஅமெரிக்க வலைஞர் தளபதி நசரேயன். கேள்வி நியாயமானதுதானே?

இது இதுதான்....

சில பல நேரங்களில் நாம் ஒன்றைச் சொல்ல, அது அதுவாக எடுத்துக் கொள்ளப்படுவது இல்லை. அதைப் பரங்கியர் மொழியில் misunderstanding என்கிறோம். நமது மொழியில் விகற்பம் என்கிறோம்.

அந்த ஒன்றே அதுவாகவும், வேறொன்றுமாகவும் இருப்பது உண்டு. அந்த நேரத்தில், மறுபக்கத்தில் இருப்பவர் வேறொன்றாகக் கருத்தில் கொள்வதை பரங்கி மொழியில் misinterpreted என்கிறோம். தமிழில் பிறழ்ச்சி என்கிறோம்.

ஒன்று, அதுவாகவும் வேறொன்றாகவும் பொருள் கொள்ளும் வகையில் குறிப்பிடுவது சிலேடை நயம். ஈரடிப்பயன் என்றும் சொல்கிறோம்.

இந்தப் பின்னணியில் நாம் இப்போது காணப்போவது சில விகற்பங்கள். கடந்த சில இடுகைகளில், நாம் உணர்ச்சி வசப்படுவதைத் தவிர்த்தல் நலம் என்று தகுந்த இடங்களில் எழுதி வந்தோம். இன்றும் அதையேதான் சொல்கிறோம். அதில் எந்தவிதமான மாறுபட்ட கருத்தும் இல்லை.

ஆனால் உணர்ச்சி வசப்படுவதைத் தவிர்த்தல் நலம் என்றதை, உணர்வு வயப்படுதலைத் தவிர்த்தல் நலம் என்ற பொருளில் பலர் பொருள் கொண்டதை நாம் காண முடிந்தது. ஆகவே இந்த விகற்பத்தைக் களைய முற்படுவோம் வாருங்கள்.

உணர்வு என்றால் மனதில் ஏற்படும் ஒரு மாற்றம். உணர்வு(conscious)வயப்படுதல் என்பது, மனதார ஒன்றை கிரகித்துக் கொண்டு செயல்படுதல், mentally responding. உணர்ச்சி(feeling)வசப்படுதல் என்றால், ஏதோ ஒன்று உங்களை ஊக்குவித்ததின்(trigger) நிமித்தம் நீங்கள் உணர்ச்சியினூடாக செயல்படுதல், with physical response. உணர்ச்சிகள் என்பது, அழுகை, கோபம், மகிழ்ச்சி, வெறுப்பு முதலானவை.

போராளி(militant) என்பவன் தலைவன் இட்ட கட்டளைகளை உள்வாங்கி, உணர்ச்சி வசப்படாமல் செயல்படுபவன். இலக்கு இது என்று கணித்து, உபாயங்களை வகுத்துச் செயல்படுபவன். அமைதியே உருவாக இருப்பான், சுக துக்கங்கள் போன்ற உணர்ச்சிகளுக்கு ஆளாகாமல் காரியத்தில் கண்ணாயிருப்பான்.

மருளன்(fanatic) என்பவன் உணர்ச்சிகளுக்கு ஆட்படுபவன். ஏதோ ஒரு கிரியாவூக்கிக்கு(trigger) ஆட்பட்டவுடனே, உணர்ச்சிப் பூர்வமாக செயல்படுபவன். மகிழ்ச்சியான தருணமானால், எள்ளி நகையாடுவான். சினமாயிருந்தால், அடித்து நொறுக்குவான். வெறுப்பாயிருந்தால், கொச்சையால் பேசி உமிழ்வான்.

மேலே சொன்னவை ஒரு உதாரணத்துக்கு மட்டுமே. ஆனால், உணர்வு வயப்படுவதும் உணர்ச்சி வசப்படுவதும் சாமன்யனுக்கும் பொருந்தும். தமிழ்த் தலைவரின் உரை கேட்டு, இனி தமிழில்தான் எழுதவேண்டும் என எண்ணும் போது அவன் உணர்வுமயம் ஆகிறான். அதே தலைவரின் பேச்சைக் கேட்டு அழுதான் என்றால், அவன் உண்ர்ச்சிமயம் ஆகிறான் என்றாகிறது.

இல்லை என்பதும், அல்ல என்பதும் ஒன்றல்ல. ஆனாலும் நாம் ஒன்றுக்கொன்று இடம் மாற்றிப் பாவிக்கிறோம். அது விகற்பம்! நான் அவன் இல்லை என்பது தவறு. நான் அவன் அல்ல என்றே வர வேண்டும். தமிழில் நுண்ணியம் இருக்கு, தமிழில் நுண்ணியம் இல்லை என்பது சரி. ஆகவே, எங்கெல்லாம் உண்டு, இல்லை, இருக்கு என்கிற சொற்களைப் பாவிக்கிறோமோ அங்கு மட்டுமே இல்லை என்பதுவும் வரும்.

அதே போல வாழ்வும், வாழ்க்கையும் ஒன்றல்ல. அவன் வாழ்க்கை நன்றாகவே இருக்கிறது, ஆனாலும் அவனுடைய வாழ்வு சிறப்பாக இல்லை. இது சரி. எப்படி? அவன் அன்றாட நியதிகளைச் சரியாகக் கையாண்ட போதும், பிறந்ததிலிருந்து இன்றைய நாள் வரையிலான நாட்கள் அவனுக்கு சிறப்பாக அமையவில்லை என்று பொருளாகிறது. பரங்கியர் மொழியில் சொல்ல வேண்டுமானால், வாழ்வு என்பது life. வாழ்க்கை என்பது livelihood. ஆக, ’அவனுக்கு கிடைச்ச வாழ்க்கையப் பாரு’ என்பது தவறு. ’அவன் வாழுற வாழ்க்கையப் பாரு’ அல்லது ’அவனுக்குக் கிடைச்ச வாழ்வு பாரு’ என்று வர வேண்டும்.

இயன்றது செய்கிறேன் என்பதும், முடிந்தது செய்கிறேன் என்பதும் ஒன்றல்ல. I do whatever I could என்பதும், I do whatever I am able to என்பதும் ஒன்றல்ல. என்னால் இயன்றது என்றால், தன் சக்திக்கு ஆன வரையிலும் என்றாகிறது. முடிந்தது என்றால், தன் சக்தியோடு சேர்த்து இன்ன பிற அம்சங்களையும் கூட்டி அதனால் ஆவது என்று பொருளாகும்.

கொசுறு: உணர்ச்சி வசப்படுதலைக் குறைக்க, மிதமிஞ்சிய உப்பு, காரம், புளியுடன் சேர்த்து கத்தரிக்காயையும் குறைப்போம். உணர்வுவயப்படுதலை ஊக்குவிக்க, வெண்பூசணிக்காய் மற்றும் மோர் பாவிப்பதை அதிகப்படுத்துவோம்!

6/03/2009

உப்பைக் குறைச்சிக்கலாம்!

உடுக்க உடை! உண்ண உணவு!! உறங்க உறைவிடம்!!! வாழ்வாதாரங்களான இந்த அடிப்படை வசதிகளைத் தராத ஆட்சி, ஒரு ஆட்சியா? இவர்களுக்கு ஓட்டு ஒரு கேடா?? இவைகளுக்கு உத்தரவாதம் தராத தலைவன், ஒரு தலைவனா???

மேலே கூறியது போல வெகு காரசாரமாக உணர்ச்சி உரைகளைப் பொழிவார்கள்! ”ஆகா, என்ன உரை? என்ன உரை??” என்றெல்லாம் பொங்கி, சீட்டி அடித்து, கனகச்சிதமாகக் கை கொட்டி ஆர்ப்பரிப்போம். இது இன்று, நேற்றல்ல, கி.பி 400ம் ஆண்டிலிருந்து இந்த வழக்கம் நடைமுறையில் இருக்கிறது என்கிறது வரலாறு. எப்படி?

ஆம். அன்றிலிருந்து எந்த மன்னனும் சரி, மக்களாட்சி செய்தவர்களும் சரி, தன்னுடைய மக்களுக்கு, அவர்கள் வாழும் நாட்டுக்கு சரியானதொரு பாதுகாப்பைத் தரத் தவறியதைக் காணலாம்! மக்களும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதும் இல்லை.

உணவு, உடை, உறையுள் இருக்கட்டும், எங்கள் உயிருக்கு என்ன உத்தரவாதம் என்று எப்போதாவது, யாராவது கேட்டதுண்டா? உயிருக்குத்தானே உணவு, உடை, உறையுள்? ஆனால், நாம் அதை நினைத்துக்கூடப் பார்ப்பது கிடையாது. காரணம், நாம் மேலே சொன்ன உரையில் நம்மை நாமே இழந்ததுதான்.

இந்த வரிசையில் இந்திராவும், சஞ்சய் காந்தி மட்டும் விதிவிலக்கு. அண்டை நாடான சீனா, இந்தியா சீனா பாயி பாயி என்று சொல்லி நட்பு நாடகம் ஆடி, நேருவின் முதுகில் குத்தியதின் விளைவாய், அவர் தீராத வேதனையுடன் உயிர் நீத்ததின் தாக்கம்தான் அதற்குக் காரணம். இந்திராவின் மறைவுக்குப் பின் எந்தத் தலைவருக்கும் நாட்டின் பாதுகாப்பில் அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை. மக்களும் அதைக் கண்டு கொள்வதாக இல்லை.


தேர்தல் வரும். ஒருவரை ஒருவர் புழுதி வாரித் தூற்றுவார்கள். நாமும் நம் பங்குக்கு அந்த ஆட்டத்தில் வெகு மகிழ்ச்சியோடு கலந்து கொள்கிறோம். இதனால் நாட்டின் பாதுகாப்பு கேலிக்குரியதாகி, பின்னர் அதுவே மாநிலத்தின் பாதுகாப்பு அல்லது உரிமைகள் என்ற அளவுக்கு கீழிறங்கி, தற்போது அது இன்னும் ஒருபடி கீழிறங்கி, சமுதாயம் என்கிற மக்கள்த் திரள் சிதறத் துவங்கி இருக்கிறது.

எப்படி அதைத் தீர்மானிக்கிறோம்? இது அவநம்பிக்கை(pessimism) ஆகாதா என்றெல்லாம் வினவலாம்?? இது அவநம்பிக்கை அல்ல. ஒருவனுக்கு தன்னுடைய உள்ளார்ந்த நிலை தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் அவன் தனது குறைகளைக் களைய ஏதுவாக இருக்கும்.


மாறாக அதை மறைக்க முற்பட்டு மழுப்புவதால் மேலும் பின்னடைவே ஏற்படும்; ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை. ஈழத்தின்பால் மனிதாபக் குரல் கூட எழுப்ப முடியாமல் போனதும் இதன் காரணமாகத்தான். அது காவிரிக்கும் தொடரும், பெரியார் அணை தாவாவுக்கும் தொடரும், எதற்கும் தொடரும் என்ற நிலையில்தானே நாம்?!

தமிழனின் இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் என்ன காரணம்? உணர்ச்சி வசப்படுவது, அதனால் திட்டமிட்ட போலிப் பரப்புரைகளுக்கு இரையாவது என்பதுதானே? அறிவியல் என்ன சொல்கிறது? உப்பும், புளிப்பும், காரமும் அளவுக்கு அதிகமானால், அது மாறுபட்ட விளைவுகளைத் தூண்டுகிறது என்பதுதான்.

தெலுங்கனுக்குத் தலைவலி அவன் உண்ணுகிற காரத்தைத் தரவல்ல மிளகாயில் என்றால், தமிழனுக்குத் தலைவலி அவன் உண்ணும் உப்பில்தான்! இதில் பெருமையாக உசுப்பல், என்னவென்று? நீயெல்லாம் உப்புப் போட்டுத் தின்கிற தமிழனா? சூடு சொரணை என்கிற பெயரில், இனியும் எத்தனை நாட்களுக்கு நம் சிந்திக்கும் ஆற்றலை மழுங்கடிக்கப் போகிறோம்??

உப்பு என்பது உடலுக்குத் தேவை, ஆனால் அது தேவையான அளவில்! உப்பே உணவாக உட்கொண்டால்? உணர்ச்சி வசப்படுவோம், இருதய நோய் வரலாம், வாதநோய் வரலாம், மன உளைச்சல் நேரிடும், இரத்த அழுத்தம் மேலோங்கும், சிறுநீரகக் கோளாறுகள் ஏற்படலாம் என்றெல்லாம் மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

தேவையான உப்பு என்பது, உணவின் மூலப் பொருள்களிலேயே அடங்கி உள்ளது, அதாவது காய்கறிகளில், பதனிட்ட உணவுகளில் என்று. அமெரிக்க மருத்துவக் கழகம் சொல்கிறது, தினமும் ஒரு கிராம் உப்பைக் குறைத்துக் கொள்வதின் மூலம், அமெரிக்காவில் மாத்திரமே பத்தாண்டுகளில் 2 லட்சம் பேரின் இழப்பைத் தவிர்க்கலாம் என்று.

ஆகவே உட்கொள்ளும் உப்பு, கூடவே காரம் மற்றும் புளிப்பைக் குறைத்து வாழ்வில் உணர்ச்சி வசப்படுவதைக் கட்டுப்படுத்துவோம். அதோடு தனிநபரின் உயிருக்கு உத்தரவாதம், சமூகத்தின் நலன் மற்றும் நாட்டின் பாதுகாப்புக்கு உரிமை கோருவோம்!

ஒரே ஆணி!

வணக்கம் மக்களே! இன்னைக்கு வீட்ல ஒரே ஆணி! குழந்தைகளை கோயிலுக்கு அழைச்சிட்டுப் போய்வர ரொம்ப நேரம் ஆகும். ஆகவே நான் எழுத இருந்த என்னோட நினைவுகளுக்கு மூலமானவங்க, இளஞ்சிங்கம் சஞ்சய் அவ்ர்களோட நிழல்படம் மாத்திரம்!

6/02/2009

அதிரடி! ஆச்சரியம்!!

உரக்கப் பேசினா உண்மை! உண்மை அல்லாததை கூட்டத்தை சேர்த்துகிட்டு, மொத்தமாப் பேசுனா அதுவே உண்மை!! பத்திரிகை அல்லது ஊடகத்துல எது வந்தாலும் அது உண்மை!! இது யதார்த்தம்; அந்த யதார்த்தம் உண்மை அல்லாதப்ப அதை முறியடிக்க வேண்டிய கடமை நம்ம எல்லாருக்கும் இருக்கு!!

ஆனா இந்த உலகத்துல நமக்குத் தெரிஞ்சே தெரியாம நிறைய; தெரிஞ்சே தெரிஞ்சது ரொம்பக் கொஞ்சமா; தெரியாம தெரிஞ்ச விசயங்களும் நிறைய இருக்கு; தெரியாம தெரியாத விசயங்கள் எவ்வளவு இருக்குன்னு யாருக்கும் தெரியாது, ஆனா இருக்கு; இந்த இடத்துலதாங்க, ‘நான்’ங்ற அகம்பாவம் அடிபட்டுப் போகுது.


இதைத் தெளிவாப் புரிஞ்சிட்டா, வாழ்க்கையில நிறையப் பிரச்சினைகள் வராதுன்னு சொன்னாரு ஒரு பெரியவர். உடனே அது யார் அந்தப் பிரபலம்ன்னு யோசிக்க ஆரம்பிச்சிடாதீங்க! அது எங்க பூட்டன் வெண்குடை சுப்பையாங்ற விவசாயி எழுதி வெச்ச விலாக்குறிப்பு (புத்தகத்துப் பக்கங்களின் விளிம்பில் எழுதி வைப்பது).

அந்த வகையில ஒரு சில உண்மைக் கூற்றுகள்:

எப்ப வேணாலும் பொய் சொல்லலாம். ஆனா ஒருத்தர், தலையில நிக்கும் போது, அதாவது தலைகீழா நின்னுட்டு பொய் சொல்லவே முடியாதாம். முயற்சி செய்து பார்த்துட்டு சொல்லுங்க, என்ன?

அமெரிக்கக் குடிமக்கள்ல நாலு பேர்த்துல ஒருத்தர் எதோ ஒரு தொலைக் காட்சியில தோற்றம் அளிச்சவங்களா இருக்காங்களாம். நான் அமெரிக்கக் குடியுரிமை பெற்றவன் கிடையாது, இருந்தாலும் உள்ளூர்த் தொலைக் காட்சியில இந்திய விழா பற்றி ஓரிரு மணித்துளிகள் பேசி, அதுவும் ஒளி பரப்புல இடம் பிடிச்சது.

நீங்க தும்மும் போது வாய்/மூக்குல இருந்து பறக்கக் கூடிய துகளின் வேகம் மணிக்கு 100 மைல்களுக்கும் மேல்.

குதிக்க முடியாத ஒரே மிருகம் யானை!

சரி வரட்டுமாங்க? இஃகிஃகி!!

6/01/2009

அமெரிக்காவுக்கு பதிலடி! பெண்டிர் வளர்ச்சிக்கு முதல்படி!!

சமீபத்தில் அமெரிக்காவின் உச்ச நீதிபதியாக ஒரு சிறுபான்மை இனத்தைச் சார்ந்த, அதுவும் வரலாற்றில் முதன் முறையாக ஒரு பெண்மணியை அந்நாட்டு அதிபர் நியமனம் செய்தது பெரும் வரவேற்பைப் பெற்றது. அது போலவே இந்தியாவிலும் வரலாற்றில் முதல் முறையாக, மக்கள் சபைத் தலைவர் பதவிக்கு தலித் இனத்தைச் சார்ந்த ஒரு பெண்மணியை நியமிப்பதற்கான பூர்வாங்க வேலைகள் நடந்து வருகிறது என்பதை நாம் அறிகிறோம்.

எம்மைப் பொறுத்த மட்டிலும், மாநில முதல்வர், இந்தியாவின் பிரதமர், ஏன் அமெரிக்காவின் அதிபர் பதவியைக் காட்டிலும் சவாலான பதவி இந்த இந்திய பாராளுமன்ற சபாநாயகர் பதவி என்பது. 545 உறுப்பினர்களைக் கட்டுப்படுத்தி அவையை நடத்துவது என்பது மிகவும் கடினமான காரியம். அதைக் கையாளும் பொறுப்பு, இப்போதுதான் ஒரு பெண்மணிக்கு கிடைக்க இருக்கிறது என்பதும் தாமதமான ஒன்றுதான்.

இவரது தலைமையில் நடக்கப் போகும், இந்த 15வது மக்கள் சபையின் காலத்திலேயே, பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறுமானால், அதைவிட அளப்பரிய சாதனை வேறெதுவும் இருக்க முடியாது.


பெண்களின் வளர்ச்சி துரிதமாக முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும். அந்த வளர்ச்சிக்குத் தேவையானது, நாம் முன்னரே உரைத்தது போல பாரிய அளவிலான உளவியல்ப் புரட்சியாக மட்டுமே இருக்க முடியும்.

முதற்கட்டமாக, பெண்ணடிமை, ஆணாதிக்கம், பெண் விடுதலை போன்ற சொற்களை அறவே ஒழித்தாக வேண்டும். ஏன்? இவையெல்லாம் எதிர்மறைப் (negative approach) பார்வையோடு, துயரச் சிந்தனை(pessimism)யோடு சமூகத்தை நாடும் சொற்கள். அவற்றைக் கையாளுவதால், மறைமுகமாக (indirect) பெண் அடிமையானவள், ஆண்களின் ஆதிக்கத்தில் தாழ்ந்து போனவர்கள், விடுதலையற்றுக் கிடப்பவர்கள் போன்ற உணர்வைச் சமூகத்தில் நாமே விதைக்கும் காரியத்திற்கு துணை போகிறோம்.

அப்படியானால் என்ன செய்ய வேண்டும்? மங்கயர்தாழ் நிலையை, தாழ்ந்த நிலையில் இருந்து மேன்மை நிலைக்குக் கொண்டு செல்லும் முகமாக, பெண் வளர்ச்சி, மங்கையர் மறுமலர்ச்சி போன்ற மேன்மைச் சிந்தனை(Optimism)யுள்ள சொற்கள் கொண்டு சமூகத்தை அணுக வேண்டும்.

சொற்களை மாற்றிக் கையாளுவதன் மூலம் மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியுமா? இங்கே சொற்கள் என்பது முக்கியமல்ல. சிந்தனையும் மாறுபடுகிறது! இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்ச் சமுதாயத்தின் எந்த ஒரு பிரச்சினைக்கும் இதுவே அடிப்படை. சமூகத்தில், தெரிந்தோ தெரியாமலோ அவநம்பிக்கையுள்ள(pessimism) சிந்தனை வேரோடிப் போயிருக்கிறது. சமூகத்தின் லெளகீக வாழ்வில் நிகழும் சிலவற்றை இப்போது பார்ப்போம்.

காலையில் எழுந்ததும் மனைவி, “ஏங்க, வேலைக்குப் போகலையா?”. அதற்கு கணவன், “நீ இன்னும் காபி போடலையா? காபி போடாம என்ன செய்யுற??”.

அதுவே பக்கத்து வீட்டில், “வேலைக்குப் போறீங்கதானே? நேரம் ஆகுது அதான்!”. உடனே கணவன், “காபி போட்டுட்டியா, இதோ வர்றேன்!”.

இந்த இரு வீடுகளிலும் என்ன வேறுபாடு? முந்தைய வீட்டில், எதிர்மறைச் சிந்தனை தாண்டவமாடுவதை உணரலாம். அதுவே பக்கத்து வீட்டில், இன்பமயச் சிந்தனை வழிந்தோடுகிறது என்பதுதான்.

இரு நண்பர்கள், அவர்களுக்கு வயது 8. முதலாமவன் மாட்டு வண்டியில் இருந்து வீசப்படும் திரைப்பட அறிவிப்புத் துண்டுகளைப் பெறச் செல்கிறான். திரும்பி வருபவனைப் பார்த்து, “டே குமாரு, நோட்டீசு கெடச்சுதாடா?”. அதே நண்பர்கள், வயது 18, உடுமலை லதாங்கி திரையகம் முன்பு, “என்றா, டிக்கெட் கெடைக்கலையா?”. “கெடச்சது, வா போலாம்!”. ஆக இடைப்பட்ட இந்த பத்துவருட காலத்தில், அவர்களுக்குள் இந்த எதிர்மறைச் சிந்தனையை ஊட்டியது யார்? சமூகம்!

திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருக்கிறது. மணமகன், மணமகள் வீட்டார் ஏதோ குறித்து மறைவாகப் பேசிக் கொண்டு உள்ளனர். அதையறிந்த மூன்றாம் நபரான இவர், “என்ன, கல்யாணத்துல ஏதும் பிரச்சினையா?” என்று கேட்கிறார். கல்யாண வேலை எல்லாம் நன்றாக நடக்கிறதாயென ஏன் இவர் கேட்கக் கூடாது?? அவர் திட்டமிட்டு, வேண்டுமென்றே எதிர்மறைச் சிந்தனையோடு கேட்பது கிடையாது. இயல்பாகவே அப்படித்தான் பேச்சு வருகிறது சமூகத்தில். இதில் அந்த தனிப்பட்ட நபரைக் குறை சொல்வது சரி ஆகாது.

இப்படி உரையாடல்களைக் கூர்ந்து கவனித்தால், pessimism என்கிற அவநம்பிக்கை எங்கும் வியாபித்திருப்பதைக் காணலாம். கடை இன்னும் திறக்கலையா? பஸ் போயிருச்சா? பள்ளிக்கூடத்துல இடம் கிடைக்கலையா? அரிசி தீர்ந்து போச்சா? இப்படி நிறைய! சரி, இனி இவற்றின் மூலம் மற்றும் விளைவுகளைப் பார்ப்போம்.

மூலம் என்று பார்த்தால், பேச்சாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் ஊடகங்கள். பேச்சாளர்கள் என்பவர்கள் வெகுவாகக் குறைந்து விட்டனர். பெரும்பாலும் பரப்புரையாளர்கள்தானே?! ஊடகங்களிலும் எதிர் மறையான காட்சிகள் கொண்டு வெகுவாக துயரத்தைக் காண்பித்து, எதிர்மறையை விதைத்து வளர்த்து விடுகிற நிலையை நீங்கள் சுலபமாக உணரலாம்.

நான் 1990களிலே பள்ளியில் படித்துக் கொண்டு இருக்கும் போது, பெரும்பாலும் 1980களுக்கு முன் வந்த நாவல்கள், நூல்களை வாசிப்பது உண்டு. அவற்றிலெல்லாம் நல்ல சிந்தனைக்குரிய, வெற்றியை அடிப்படையாகக் கொண்ட நேர்மறைக் காட்சிகள் வெகுவாக வர்ணிக்கப்பட்டு இருக்கும். இன்றைக்கோ வதைபடுவதை இரசிக்க சாரை சாரையாய் மக்கள் கூட்டம். இரசனையே மாற்றப்பட்டு விட்டதுதானே காரணம்?!

இன்றைய உலகில் அறிவியல் சாதனம் கொண்டு, ஒருவர் எந்த மாதிரியான உணர்வுடன் இருந்தார் என்று தெரிந்து கொள்ள முடிகிறது. எப்படி? அவன் உணர்வுகள் மூளையில் அதற்கான சுவடுகளைப் பதிக்கிறது. அதைப் படம் எடுப்பதின் மூலம், மருத்துவர்கள் பதிந்த உணர்வுகளைக் கணக்கிடுகிறார்கள் என்பதே!

ஆக, வெந்தசாமியோ நொந்தசாமியோ, யாரோ ஒருவர் தெருமுனையில் நின்று கொண்டு பரப்புரையாற்றும் போது கேட்கப்படும் வக்கிரங்கள், அவனுள்ளும் அவளுள்ளும் சுவடுகளாய் விதைக்கப் படுகிறது. அது போன்றதுதான் காணொளிக் காட்சிகளும்.


அச்சுவடுகள், குரோமோசோம்கள் வழியாகச் சென்று பிறக்கும் குழந்தையினுள்ளும் தங்குகிறது. சமூகத்தில், வெளிச் சக்திகளால் விதைக்கப்படுகிற வக்கிரங்கள் நம்முள் செல்வதைத் தவிர்ப்பதை விட்டுவிட்டு, கர்ப்பம் தரித்த பின் அமைதியாய்ப் பாடல்கள் கேட்பதின் மூலம், குழந்தையினுள் பதிந்த சுவடுகள் அழிந்து விடுமா?

நன்னம்பிக்கையோடு பிரச்சினையை அணுக வேண்டும், எனவேதான் முன்னாள் குடியரசுத் தலைவர் நல்ல கனவு காணுங்கள் என்றார். அதையும் கனவு காணச் சொல்கிறார் என்று பொத்தாம் பொதுவாகக் கூறி, சிந்தனையை மழுங்கடித்து விட்டோம்.


மனநல மருத்துவர் ருத்திரன் ஐயா அவர்களைப் போன்று, ஆயிரமாயிரம் ருத்திரன்கள் வர வேண்டும். அவர்கள் எல்லாம், கலை, இலக்கியம், பத்திரிகை, ஊடகங்கள் என எங்கும் வியாபித்து உளவியல்ப் புரட்சியைக் கொண்டு வரவேண்டும்.

அவ்வாறு உளவியல் ரீதியாக, பெண்களின் வளர்ச்சி குறித்த விழிப்புணர்வுகள் சமூகத்திற்குக் கொண்டு செல்லப்பட வேண்டும். நல்ல நம்பிக்கையை ஊட்டி, பெண்களுக்கு சமூகத்தில் உள்ள தடைகள் அகற்றப்பட வேண்டும்.


மக்கள் சபைத் தலைவராக பதவி ஏற்கும்பட்சத்தில், வேளாண்மைத் துறையில் புரட்சிகளைக் கொணர்ந்த பாபு ஜெகஜீவன்ராம் அவர்களைப் போலவே, அவரது புதல்வி மீரா குமார் அவர்களும் புரட்சிக்கு வித்திட வேண்டும் என்ற நல்ல சிந்தனையோடு,

பழமைபேசி.