11/30/2008

இந்தப் பதிவுடன் நிறைவு செய்து கொள்கிறேன்!

தரக் குறைவான சொற்களோட தாக்கம் கொஞ்சமா, நஞ்சமா? போங்க, நம்ப வாசகர்கள் ரொம்பவே கடுப்பாயிட்டாங்க. அதுவும் தலைப்பைப் பாத்துட்டு எங்க நவசக்தி தமிழ் பண்பாட்டுக் குழுவினர் மத்தியில நமக்கு நல்லாக் குட்டு விழுந்துச்சு. சரியான பொருள் தெரிஞ்சுக்கணும்னு ஆசைப்பட்டோம், தெரிஞ்சுகிட்டோம், தெரிஞ்சுகிட்டதை அப்பிடியே மத்தவங்களுக்கும் போட்டுக் காமிச்சோம், அவ்வளவுதான்! மத்தபடி அதுல ஒரு உள் நோக்கமும் இல்லைங்க அன்பர்களே!! சரி, சரி, பீடிகை நொம்ப இருக்குன்னு நீங்க நெளியுறது தெரியுது, விசயத்துக்கு வருவோம்.

எடுபட்ட பய: நாம அடிக்கடி சொல்லுறதும், சொல்லக் கேட்டதுந்தான் இது. எடுபட்ட நாதாரின்னுவோம், எடுபட்ட சிறுக்கின்னுவோம், எடுபட்ட பயலைக் காணோம்னு சொல்லுவோம். எடுபட்டன்னா என்ன? நீங்க சொன்னா அது எடுபடும்ன்னு சொல்லுறோம். அதாவது, நீங்க சொன்னா அந்த சொல்லை சபையினர் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வாங்கங்றதுதான் அது. நான் சொன்னா எடுபடாதுன்னா, என்னோட பேச்சை கூட்டத்துல கேக்க மாட்டாங்க, எடுத்துக்க மாட்டாங்கன்னு அர்த்தம் வருதுங்ளா? அந்த மாதிரிதாங்க, இந்த எடுபட்ட பயலும். சமுதாயத்துல இருந்து விலக்கி விடப்பட்ட, ஊராரால் தீய செயல்களின் காரணம் கருதி ஊரில் இருந்து எடுக்கப்பட்ட பயல்ங்றதுதான் எடுபட்ட பய ஆயிடுச்சு.

பொறம்போக்கு: புறம்போக்கு நிலம்ன்னா, யாருக்கும் சொந்தமில்லாத, எவரும் சொந்தம் கொண்டாடுகிற, எல்லாருக்கும் பொதுவான நிலம். அதுக்கு ஒப்பிட்டு, இழிவா சொல்லுற சொல்லுதாங்க இது. இது வரைக்கும் பாத்ததுல இது தாங்க ரொம்ப இழிவான சொல், எந்த சமயத்துலயும் இதைப் பாவிக்காதீங்க.

பொறுக்கி: இதை நாம நொம்ப சுலபமா யூகிச்சுகிடலாம், ஆமுங்க, இங்கயும் அங்கயும் பொறுக்கித் தின்னுகிறவன்ங்ற அர்த்தத்துல பொழங்குற ஒரு சொல்லு. பலான, பலான மேலதிக (டங்குவார், தாராந்துடுவே, சாவுகிராக்கி, பாடு, ....) சொல்லுகளுக்கு உண்டான விளக்கத்துக்கு, இந்தத் தொடுப்பை சொடுக்குங்க! மேலும் பல சொற்கள்!!

இதுக்கு மேலயும் இதுகளைப் பத்தி எழுத வேணாம்ங்ற ஒரு முடிவுக்கு வந்துட்டேன். அதான், பதிவோட தலைப்பே சொல்லுதே! ஆமுங்க, ஏச்சுப் பேச்சுகளுக்கு விளக்கம் எழுதறதை, இந்த பதிவோட நிறைவு செஞ்சுகிடுறேன்! பதிவுலகத்தை விட்டே ஒழிஞ்சான் இவன், இனி நமக்கு நிம்மதின்னு நினைச்சு வந்தீங்ளா?! இஃகி! இஃகி!!


அடாது செய்தவன் படாது படுவான்!

11/29/2008

தெள்ளவாரி, நாதாரி தெரிஞ்சுக்கலாம் வாங்க!

மொல்லமாறி, சோமாறிக்கு விளக்கம் போட்டாலும் போட்டோம், அன்பர்கள் எது எதுக்கோ விளக்கம் கேக்க ஆரம்பிச்சுட்டாங்க. சரி, நம்மால ஆனதைச் செய்வமேன்னுதான் இந்தப் பதிவும் அதன் தொடர்ச்சியா.

நாதாரி: பாருங்க நாதார்ன்னா, ஏழ்மை, பொய்த்துப் போன வெள்ளாமைக்குச் சொந்தமான நிலம்ங்றது அர்த்தமாமுங்க. இந்த மாதிரியான நிலத்தின் காரணமா உண்டாகுற வரி பாக்கிய நாதார்பாக்கின்னு சொல்லுறதாமுங்க. அந்த ஏழ்மையான ஆசாமி, நாதாரியாமுங்க.

பன்னாடை: இது நாம எல்லார்த்துக்கும் தெரிஞ்சதுதான். தென்னை மரத்துல, பாளைகளக் காப்பாத்துற வலை நார். அந்த வலைய, கள்ளை வடி கட்டுறதுக்கும் பாவிப்பாங்களாமுங்க. அப்பிடி, குப்பை கூழத்தை தாங்கி இருக்குற பன்னாடைய மலிவாத் தூக்கி எறியுறது வாடிக்கை. அந்த தாக்கத்துல, உதவாக்கரை ஆசாமிகளை திட்டுறதுக்கு பன்னாடைய பாவிக்கறதும் வழக்கமாயிடுச்சு.

கேப்புமாரி: அகராதி சொல்லுதுங்க, இது செங்கல்பட்டு தென்னாற்காடு மாவட்டத்துல அந்த காலத்துல இருந்த, திருட்டும் தப்புத் தண்டா செய்யுற ஒரு கூட்டத்தோட பேருங்ளாம். அதுவே மருவி கேப்மாரி ஆயிடுச்சுங்ளாம்.
கேப்புமாரி (p. 292)
[ kēppumāri ] , s. (for.) a knave, a rogue; 2. a crimainal caste in South Arcot & Chengleput districts.

தெள்ள‌வாரி: அப்புறம் பாருங்க, கோயம்பத்தூர்ல எங்க வீட்ல இருக்கும் போது, அப்பப்ப எங்கம்மாகிட்ட வாங்கிக் கட்டுறது வழக்கம். அம்மா சொல்வாங்க, இந்தத் தெள்ளவாரி எப்பிடி உருப்பட்டு பொழப்பு நடத்தப் போறானோ? குடியானவனுக்குப் பொறந்தவன் எவனாவது இப்பிடி பொச்சுக்கு வெயில் அடிக்குற வரைக்கும் தூங்குவானா?? இந்த மாதிரி போகும்ங்க, அவுங்க நம்மளத் திட்டுறது! அவங்க கெடக்கட்டும், நம்மளுக்கு கொட்டாய்ல போயி ரெண்டாவது ஆட்டம் பாக்குறதுதான முக்கியம், என்ன சொல்றீங்க?! ஆமுங்க, தெளிவு இல்லாமச் சுத்துறவன் தானுங்க தெள்ளவாரி ஆயிட்டான்.


நன்றி: நா. கணேசன்

தள்ளவாரி (< தள்ளமாறி) தான் தெள்ளவாரி ஆகியது.
தள்ளம்பாறுதல் = தடுமாறுதல்/ தள்ளாடுதல்.
மனம் (அ) வாக்கு (அ) காயம் இவற்றால் தள்ளாடினால் தான் தள்ளவாரி.

மனம் அலைந்தால் (மனத்)தள்ளவாரி.

வாக்கு/பேச்சுத் தடுமாற்றம், உடலில் (சோம்பலால்) தடுமாற்றம் தூக்கமிகுதிஉடையவன் தள்ளமாறி/தள்ளவாரி:(தூங்குதல் = தடுமாறுதல், சங்க இலக்கியம்).

கட்சி மாறிய தம்பி வீடணனைஇராவணன் தள்ளவாரி என்றழைப்பதாகச்சொல்கிறார்.
யுத்த காண்டம்9. ஒற்றுக் கேள்விப் படலம்ஒற்றர் வருகையும், இராவணன் அவர்களை வரவழைத்துச் செய்தி கேட்டலும் (56)


'வெள்ள வாரி விரிவொடு, அவ் வீடணத் தள்ளவாரி நிலைமையும், தாபதர்உள்ளவாறும், உரைமின்' என்றான் - உயிர்கொள்ள வாய் வெருவும் கொடுங் கூற்று அனான்


ராஜ நடராஜன்: பழமை!தாய்மாமன் இந்த தெள்ளவாரிய அடிக்கடி உபயோகிப்பாரு. "டேய் நடராஜா, அஞ்சு நிமிசம் நில்லு!" ன்னு சொல்லி நிறுத்தி வச்சிட்டு, எங்கயோ போய்ட்டு தள்ளாடிகிட்டே வந்து டவுன்பஸ்சுக்குள்ளே ஏறச்சொல்லிட்டு எப்படியாவது முண்டியடிச்சு ட்ரைவர் சீட் பக்கம் போக முயல்வார். பிரேக் போடறதையும், கியர் மாத்தறதையும் உன்னிப்பாக் கவனிச்சுகிட்டே திடீர்ன்னு என்கிட்ட சொல்லும் வார்த்தை "தெள்ளவாரி எப்படி கியர் மாத்துறான் பாரு! தெள்ளவாரி எப்படி பிரேக் பிடிக்கிறான் பாரு!!".

கெரடி கற்றவன், இடறி விழுந்தால் அதுவும் ஒரு வித்தை என்பான்!

11/28/2008

காந்தி தேச‌ம் சாயாது!!

பண்பான பாரத தேசம்!
அன்பான காந்தி தேசம்!!
துயரான நேர மெல்லாம்
பகவானைப் பார்த் தெழுதோம்!!!

பாம்புக்கோ ரெண்டு கண்ணு
பகவான் கொடுத்த கண்ணு
பாவிப் பயலுக செயலால‌
பாம்பாச் சுருண்ட ழுகுறோம்!

தேளுக்கோ ரெண்டு கண்ணு
தெய்வங் கொடுத்த கண்ணு
பொல்லாத பயலுக செயலால‌
தேளாச் சுருண்ட ழுகுறோம்!!

எங்க ஒத்துமை பாரறியும்,
துங்க மது நாங்கறிவோம்,
சூழ்ச்சி நெடுநாளு கொள்ளாது!
வஞ்சகம் எல்லாநாளும் வெல்லாது!!
ஊரு ச‌ன‌ம் ஓயாது! காந்தி தேச‌ம் சாயாது!!

எளியாரை வலியார் அடித்தால், வலியாரை தெய்வம் அடிக்கும்!

11/26/2008

தனக்குத் தானே தோண்டிக்கிற குழி!

வணக்கம்! பாருங்க, பல நேரங்கள்ல நமக்கே தெரியாம, சொந்த செலவுல சூனியம் வெச்சுக்குவோம். அவசரத்துல தப்பை செஞ்சுட்டு, அவகாசத்துல ஒக்காந்து பொலம்புவோம். அந்த வகையில நம்ம வாழ்க்கையில நடந்த ஒன்னுதானுங்க, இன்னைக்கு நாம சொல்லப் போற விசியம்.

தங்கமணி எதையும் ஒரு தயக்கத்தோடயே செய்துட்டு இருந்தாங்க. சில நேரங்கள்ல, அந்த வேலைய செய்யவும் மாட்டாங்க. அப்ப நாம சொன்னோம், "எங்க ஊர்ல எல்லாம் கர்ப்பிணியா இருக்குறவங்க களை வெட்டப் போவாங்க, விறகு வெட்டப் போவாங்க. இப்பிடியெல்லாம் இருந்தா எப்பிடி அவிங்க வாழ்க்கை ஓடும்"ன்னு. இதைக் கேட்ட அவிங்க, சரி ஒக்காருங்கன்னு சொல்லி, ஒரு கதையச் சொல்ல ஆரம்பிச்சாங்க.

காட்டுல ஒரு நாள், விறகு வெட்டுறதுக்கு ஒரு நிறைமாத கர்ப்பிணி போனாங்ளாம். போயி வெட்டிட்டு, விறகுக் கட்டைத் தலையில வெச்சுட்டு குடிசைக்கு வாற வழியில, வயிறு வலி எடுத்துகிச்சாம். ஒடனே அந்தப் பொம்பளை, வெறகுக் கட்டை கீழ போட்டுட்டு மரத்தோட மறைவுல குழந்தையப் பெத்துகிட்டு, அங்க ஓடுற ஆத்துல எல்லாம் கழுவி சுத்தம் செய்துட்டு, மறுபடியும் குடிசையப் பாத்து போக ஆரம்பிச்சுட்டாங்ளாம்.

இதைப் பாத்த இராசா, எதுக்கு அரண்மனையோட அந்தப்புரத்துல நூத்துக் கணக்கான வேலையாள்? இராணிமார் எல்லாம் அவிங்க அவிங்க பிரசவத்தை, வேலைகளை, அவிங்க அவிங்களே செய்யட்டும்னு எல்லா வேலையாளையும் வேலைய விட்டு அனுப்பிட்டாராம்.

இதைப் பாத்த மந்திரியும், தோட்டத்துல வேலை செய்யுற வேலையாளுக எல்லார்த்தையும் வேற வேலைக்கு அனுப்பிட்டாராம். இதைப் பாத்த இராசா, "என்ன மந்திரி, தோட்டத்துல பூச்செடி கொடிகெல்லாம் காயுது, எதுக்கு வேலை செய்யுறவிங்களை அனுப்பிட்டீங்க?" ன்னு கேட்டாராம்.

மந்திரி சொன்னாராம், "காட்டுல தண்ணி பாய்ச்சியா எல்லாச் செடி கொடி வளருது, அதான் அனுப்பிட்டேன்" னு சொன்னாராம். இராசாவுக்கு கோபம் வந்துச்சாம். அதைப் பாத்த மந்திரி, "இராசா, உங்க கோபம் ஞாயமானதுதான். அதே மாதிரிதான், காட்டுல இருக்குற பொம்பளைகளுக்கு பிரசவம் பாக்குற வலு இருக்கு. வீட்ல இருக்குறவிங்களுக்கு ஒதவி தேவைப்படுது!" ன்னு சொன்னாராம். அப்புறம் இராசா, அந்தப்புரத்து வேலையாளுகளை திரும்பக் கூப்ட்டு கிட்டாராம்.

இந்த கதைய‌ச் சொன்ன தங்கமணி, "இந்தப் பொது அறிவு கூட இல்லாம நீங்க எல்லாம் அப்பிடி என்ன படிச்சீங்க?"ன்னு கேக்க, நாம வழக்கம் போல கீழயும் மேலயும் பாத்ததுதான், வேறென்ன?!

மிதித்தாரைக் கடியாத பாம்பு உண்டோ?

11/25/2008

சோமாறி, மொல்லமாறி தெரிஞ்சுக்கலாம் வாங்க!

அன்பர்களே வணக்கம்! நேத்தைக்கு ஊருக்கு பேசிட்டு இருந்தப்ப சொன்னாங்க, கார்த்திகை மாசத்து கனமழை விட்டபாடு இல்ல இன்னும்ன்னு. அப்புறம் அதப் பத்தி மேலும் மேலும் பேச்சுக் குடுத்ததுல நிறையப் பழமைகளை வாங்க முடிஞ்சது. அதைப் பத்தி சீக்கிரமே பதிவு போடுறேன். அதுக்கு முன்னாடி நாம கிட்டடியில எதிர்கொண்ட சில சொல்லுகளைப் பாப்போம்.

எதேச்சையா நான், எங்க‌ இங்க‌ இருந்த‌ க‌ளிம்பு ம‌ருந்த‌க் காண‌மேன்னு கேக்க‌, த‌ங்க‌ம‌ணிக்கு கோவ‌ம் வ‌ந்திடுச்சு. அமெரிக்கா வ‌ந்த‌ பின்னாடியும், ஏன் என் க‌ழுத்த‌ அறுக்குறீங்க‌ன்னு ச‌ண்டைக்கு வ‌ந்துட்டாக‌. அப்புற‌ம் நாம‌ வ‌ழ‌க்க‌ம் போல‌, லேசு பாசாப் பேசி ச‌மாளிச்சோம். அப்புற‌ம் அவிங்க‌ளும் அதப் ப‌த்தி கேட்டுத் தெரிஞ்சுகிட்டாக‌. ஆமுங்க‌, திர‌வ‌ நிலைக்கும் திட‌ நிலைக்கும் இடைப் ப‌ட்ட‌த‌த்தான் க‌ளிம்புன்னு சொல்லுற‌து. சுண்ணாம்புக் க‌ளிம்புன்னு சொல்வாங்க. க‌ளிம்பு ம‌ருந்துன்னு சொல்வாங்க‌.

அப்புற‌ம் பாருங்க‌, ந‌ம்ம‌ ந‌ண்ப‌ர் அணிமாவை ஊர்மாறின்னு நாம‌ அப்ப‌ப்ப‌ அன்பா சொல்லுற‌து உண்டு. அவ‌ர் அடிக்க‌டி ஊர் மாறிட்டு இருப்பாரு. அத‌னால‌தான். அப்ப‌ பாருங்க‌, இதென்ன‌ சோமாறி, மொல்ல‌மாறி போல‌ இருக்குதுன்னு ஒரு பேச்சு வ‌ந்த‌து. அப்ப‌ அதுக‌ளுக்கான‌ அர்த்த‌ம் என்ன‌ங்ற‌ பேச்சும் வ‌ந்துச்சு. எதோ எல்லாரும் பொழ‌ங்குறாங்க‌, நாம‌ளும் பொழ‌ங்குறோம்ங்ற‌துல‌ வ‌ந்து நின்னு போச்சு. அதான் இந்த‌ ப‌திவு மூல‌மா அதைப் ப‌த்தின‌ மேல‌திக‌த் த‌க‌வ‌ல்.

சோமாறி: சோமாறுத‌ல்ன்னா ந‌ல்ல‌ பொருளை எடுத்துகிட்டு, அது இருந்த‌ இட‌த்துல‌ கெட்டுப் போன‌ அல்ல‌து த‌ர‌க் குறைவான‌ பொருளை வெக்கிற‌துங்க‌. அந்த‌ மாதிரி செய்யுற‌வ‌ங்க‌ளை சோமாறின்னு சொல்ல‌ப் போய், நாள‌டைவில‌ திருட‌ற‌வ‌ங்க‌ளையும் அப்பிடியே சொல்லித் திட்டுற‌துன்னு வாடிக்கை ஆயிடுச்சாம்.

மொல்ல‌மாறி: மொல்லுமாற‌ல்ன்னா, குர‌லை மாத்திப் பேசுற‌துங்க‌. குர‌லை மாத்திப் பேசி ஏமாத்துற‌வ‌ங்க‌ளை மொல்ல‌மாறின்னு சொல்லி ஏசின‌து, நாள‌டைவில‌ பேசின‌ பேச்சை மாத்திப் பேசுற‌வ‌ங்க‌ளையும் மொல்ல‌மாறின்னு சொல்லித் திட்டுற‌ வாடிக்கை ஆயிடுச்சாம்.

இன்னொரு விளக்கம்: குறுந்தொகை (28)பாட்டுக்கு "Shall I charge (like a bull)?" என்று அ. கி. ராமாநுஜன் மொழிபெயர்த்துள்ளார்.கடனைப் தருகிறேன் என்று வாங்கிக்கொண்டு தராது ஏமாற்றிக்கொது திரிபவன் மொல்லமாறி. கடன் கொடுத்தவர்கள் மொலுமொலு என்று மொய்த்தாலும் கவலைப்படாத, நேர்மையற்ற புரட்டன். அவனுக்கு மானமில்லை, ஆனால் ஆடம்பரம் உண்டு. இதனால் கடனைத் திருப்பிக் கட்டாமல் ஏமாற்றியை மொல்லமாறி என்பது வழக்கம். கொங்குப் பழமொழி:"மொல்லப்பையன் சின்னான் நெல்லஞ் சோத்துக்கு அஞ்சான்". நன்றி: நா. கணேசன்

முடிச்சவிக்கி: அடுத்தவங்க கட்டுச் சோத்து மூட்டைய அவிழ்த்து, அதுல இருக்குற சோத்தைத் திருடி திங்குறவங்களை ஏசுற வாடிக்கை.

இன்னொரு விளக்கமும் உண்டு.அக்காலத்தில் பயணம் செய்பவர்கள் தங்களின் முக்கிய உடைமைகளை மூட்டையாகக் கட்டி எடுத்துச் செல்வார்கள். பணத்தை முடிந்து மடியில் செருகிக்கொள்வார்கள். (இப்போதும் புடைவைத்தலைப்பில் பணத்தை முடிந்துகொள்ளும் பழக்கம் உண்டு)உடையவர்களுக்குத் தெரியாமல் முடிச்சை அவிழ்த்துப் பொருளையோ பணத்தையோ திருடுபவர்களை முடிச்சவிழ்க்கி என்பர். நன்றி: அ. நம்பி

காற்றில்லாமல் தூசி பறக்குமா?

11/21/2008

பாத்துங்க அப்பு!


வேலை வேலைன்னு வேலைலயே இருக்காதீங்க! இப்படிக் கிப்படி மண்டை தட்டிடப் போகுது?!

11/20/2008

பதிவரின் பரிபாலனம்!

நியூயார்க்(New York)ல வேலை பாக்கும் பதிவரும், அவிங்க அலுவலக பட்சியும் அலுவலக வேலை முடிஞ்சு வீட்டுக்குப் போகும் போது பேசுற பழமைகதான் இது: வேலையில அன்னமுன்னைக் கண்டேன்,
வீதியில அதே பெண்ணைக் கண்டேன்,
அந்தச் செவத்தப்புள்ள நெத்தியிலே - ‍ ஒரு
செந்துருக்கப் பொட்டைக் கண்டேன்!

ஒட்டாரம் பூவே நீ,
ஒசந்திருக்கும் தாழம்பூவே,
கண்ணொளிப் பூவே உன்னைக்,
கண்டுநானு பேச வந்தேனடி!

மானே மரகதமே,
மனசுக் கேத்தக் குஞ்சரமே,
தேனே திரவியமே உன்னைத்
தேடாத நாளில்லை!

ஒடம்பு குத்தும் குளிருல‌,
ரயிலெடுக்கும் பெண்மயிலே!
நீலவண்ணக் கருங்குயிலே - ‍ நான்
நிக்கட்டுமா போவட்டுமா?

வலை மேயும் வெள்ளச்சாமி
பின்னூட்டம் போடும் வேலுச்சாமி
காத்திருக்கேன் உன்னை நாடி - நீ
வந்து பேச லாகாதோ?

ஒதட்டுச் சாயம் மணக்கப் பூசி
ஒடம்புத் திரவியம் தெளிச்சு விட்டு
மனம் நெறஞ்சு வந்திருக்கும்
மங்கையாளே இதோநானு வந்துட்டேன்!

அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்!

11/19/2008

மீளாக்கம்!

அன்பு வாசகர்களே, வணக்கம்! எங்க நவசக்தி தமிழ் பண்பாட்டுக் குழுவில இருக்குற குழந்தைகளுக்கான ஒரு விழிப்புணர்வுக் காணொளியா, செந்தாமரை அவிங்க இந்த தொடுப்பைக் கொடுத்து, குழந்தைகளுக்கு படிப்பினைக்கான ஒரு போட்டி வெச்சு இருக்காங்க.

மிகவும் பயனுள்ள காணொளி இது. 21 மணித் துளிகள் காணக் கூடியது. உங்களுக்கும் இது உபயோகமா இருக்கும்னு நினைக்குறேன். மண்ணில் விழும் குப்பை கூழங்கள் என்னவாகிறது? உள்ளூர்ச் சந்தைப் பொருளாதாரம், இன்னும் பல தகவல்கள்.


மீளாக்கம்

கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும்!

11/18/2008

மாமன் மவளும், அத்தை மகனும்!

முல்லைச் சிரிப்புக்காரி
முந்தானை நனையுதடி
நெல்லு வெளஞ்சிடுமே
ஒன்நேக்கான கைநடவால்!

நடவுக் கொறச்சல் இல்லை
நல்லவேலை செய்துடணும்
அடுக்குஅடுக்கு பேச்சால‌
ஆளைத்தான் மயக்காதடா!!


அழகான கொண்டைக்காரி
ஆசை வெச்சேன் ஒம்மேல‌
பாசமாப் பழகியே வாரனடி
பசை ஒன்னும் இல்லையடி!

நாலு காசு பாத்து வெச்சு
நல்ல நாளும் பாத்து வெச்சு
வாலுத்தனஞ் செய்யாமே
ஒம்மாமனத்தான் கேட்டுமுடி!!


காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்!

11/17/2008

ரத்தினக்கிளி வாலு!

வணக்கம்! இன்னைக்கு நமக்கு பிரயாண நாளுங்க. கெடச்ச அவகாசத்துல எதையாவது பதியணுமே?! அதான், நாம‌ சின்ன வயசுல சொல்லிகிட்டுத் திரிஞ்ச‌ ஒன்னு.

ஒன்னு: ஒங்கவீட்டுப் பொண்ணு
ரெண்டு: ரத்தினக்கிளி வாலு
மூணு: முருங்கக்காய்த் தோலு
நாலு: நாய்க்குட்டி வாலு
அஞ்சு: அவரக்காப் பிஞ்சு
ஆறு: அருவாமணக் காலு
ஏழு: எலிக்குட்டி வாலு
எட்டு: அத்தமகளக் கட்டு!

11/15/2008

நாகரிகந் தெரிஞ்சுக்கலாம், வாங்க!

அன்பர்களே வணக்கம்! இந்த நாகரிகம், பண்பாடு, கலாசாரம் இவற்றைப் புழங்குகிறோம். ஆனால், எனக்கு பல சமயங்களில் எதை எந்த இடத்தில் பாவிப்பது என்ற‌ குழப்பம் இருந்து வந்தது. ஏனெனில் இவை மூன்றும் கிட்டத்தட்ட ஒன்று போலவே இருப்பவை. ஆகவே அவற்றுக்கான சரியான பொருள் தேடிக் கொண்டு இருந்தேன். பல நண்பர்கள் தகவல்களை அறியக் கொடுத்தார்கள். அவர்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டு உள்ளேன். மேலும், மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்களின் விளக்கம் இன்று எனக்கு கிடைக்கப் பெற்றது. அதன் அடிப்படையில், விபரம் கீழே வருமாறு:

நாகரிகம் என்பது மேம்பட்ட ஒழுக்கம் மற்றும் செயல். அது எல்லாப் பொருள்களையும் தனக்குப் பயன்படுத்தும் போது, அவற்றை மேம்பட்டு பயன் படுத்துவது. பிழையின்றி நல்லவிதமாகப் பேசுவதும், எல்லா வகையிலும் துப்புரவாயிருப்பதுவும், சுகாதாரத்தைப் பேணி காப்பதுவும், நன்றாகச் சமைத்து உண்பது போன்றன நாகரிகத்தின் கூறுகள்.

பண்பாடு என்பதும் தனித்தன்மை வாய்ந்த, நல்ல ஒழுக்கம் மற்றும் செயல்கள். இது எல்லாப் பொருள்களையும் தனக்கும், சமுதாயத்திற்கும் மேம்பட்டுப் பயன்படுத்துவது. மற்றவரிடத்து இனிமையாகப் பேசுவதும், விருந்தோம்பலும், இரப்பவர்க்கு இடுவதும், உதவுதலும், மானம் காத்தலும் பண்பாட்டுக் கூறுகள். நாகரிகத்தினும் பண்பாடு சிறந்தது. நாகரிகமின்றிப் பண்பாடு காக்கலாம். ஆனால், பண்பாடு இல்லையேல் நாகரிகம் சிறப்புக் கொள்ளாது. பண்பாடு இல்லா நாகரிகம் பாழ்! வீட்டில் அனைவரும் ஒன்று குழுமி உண்பார்கள் என்றால் அது பண்பாடு. கை அலம்பி விட்டு உண்பது நாகரிகம். இந்த உணவு உண்பது என்பது இரண்டுக்கும் பொதுவாக இருப்பதைக் காணலாம்.

கலாசாரம் என்பது ஒரு சமூகத்தின் கலை மற்றும் இலக்கியங்களின் தனித்தன்மை பற்றியது. பொழுது போக்கு அம்சங்கள், சிறப்பான வீர விளையாட்டுக்கள், இசை, நாடகம் போன்ற கலைகள் குறித்த செயல்கள், அதில் ஒழுக்கம், வழிமுறை முதலானவை கலாசாரத்தைக் குறிக்கும்.


கட்டிக்கொடுத்த சோறும்,
கற்றுக்கொடுத்த சொல்லும்,
எத்தனை நாள் நிற்கும்?!

11/14/2008

ஊர் - தமிழர் பண்பாடு திரைப்படம்

அன்பர்களே வணக்கம்! நான் இன்னைக்கு பார்த்த ஒரு பயன்மிகு வலைப்பூ, அண்ணன் நா.கணேசன் அவிங்க படைப்புகள் கொண்ட தமிழ்க் கொங்கு. அந்த வலைப்பூல இருக்குற, ஊர் அப்படீங்ற குறும்படத்திற்கான தொடுப்பு இதோ. 28 மணித் துளிகள் ஓடக் கூடிய படம். அப்படியே அண்ணன் அவிங்களோட மத்த படைப்புகளையும் பாருங்க, பல அரிய தகவல்கள் இருக்குற களஞ்சியம் அது.


ஊர் - தமிழர் பண்பாடு திரைப்படம்

பாத்து போங்க அப்பு!

பாத்து போங்க அப்பு, பாத்து போங்க!




சனத்தார் அறியாங்க!

இஞ்சி எலுமிச்சங்கா
இளங்கொடி நார்த்தங்கா
இளப்பமாப் போறேன்னு
இனத்தார் அறியாங்க!

தண்ணி எலுமிச்சங்கா
தனிக்கொடி நார்த்தங்கா
சனத்தாரு கண்ணெதிரே
தனித்தனியாப் போறமுன்னு
சனத்தார் அறியாங்க!
தாம நிலை கொள்ளாம!!


காலம் போம் வார்த்தை நிற்கும்! கப்பல் போம் துறை நிற்கும்!!

11/13/2008

சட்டக் கல்லூரி அவலம்: யோசிப்போம்!

அருவாவும் கம்புமா கதாநாயகனும் வில்லனும் வெறி பிடிச்சுத் திரியறதை கை கொட்டி இரசிக்குறோமே? அப்பிடிச் செய்யலாமா?? அந்தத் திரைப் படந்தானே வெள்ளி விழா, வைர விழாக் காணுது?!

இவன் நம்ம பயன்னு சொன்னவுடனே, மனசு நெகிழுதே? அப்ப மத்த பயலுவ??

சபைத் தொடர்ன்னா, உள்ளயோ அல்லது வெளிலயோ எதோ ஒரு அசம்பாவிதம் காலங் காலமா நடக்குதே? அதுக்கு யார் காரணம்??

மொழிக்கும், தமிழ் இனத்திற்கும், சமுதாயத்திற்குமான‌ ஒரு அறப் போராட்டம்ன்னு வந்தா, கிடைச்ச‌து வாய்ப்புன்னு நல்லா ஒக்காந்து வடை போண்டா சாப்ட்டுட்டு காணொளியில காலத்தை ஓட்டுற நாம, சங்கத் தலைவனுக்கு ஒன்னுன்னா கெடந்து தவிக்கறமே?

அந்த‌ நேர‌த்துக்கு உண‌ர்ச்சியில‌ ப‌ரிதாப‌த்தைக் கொட்டிட்டு, அப்புற‌மா எல்லாத்தையும் ம‌ற‌ந்து போற‌மே?

சிவ‌காசிக் க‌ல‌வ‌ர‌ம்ன்னா யாருக்காவ‌து தெரியுமா? அதில இருந்து நாம‌ க‌த்துகிட்ட‌து என்ன‌??

இந்த அவலத்தை மாஞ்சி மாஞ்சி காமிச்சுக் காசு பாக்குறானே ஊடக வியாபாரி? இவனுக்குத் தெரியாம ஒலகத்துல எதுவுமே நடக்காது. சுவாசிக்கிற காத்து இருக்குற பக்கம் எல்லாம் பத்திரிக்கைகாரன் இருப்பானாம். இதை தடுத்து நிறுத்த அவிங்க செஞ்சது என்ன? அப்பிடியே செஞ்சாலும் நாம அதக் கண்டுக்குவமா??

இல்ல, அவனுங்களை கூண்டுல அடைச்சி சித்திரவதை செஞ்சா மட்டும், இந்தப் பிரச்சினை தீந்திடுமா?

கொலைக் குற்றத்தை, முதல், இரண்டாவது, மூணாவதுன்னு வகைப் படுத்தினாங்களே? அது ஏன்?? இது அதுல எது???

சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு மட்டுந்தான் அந்த வெறி இருக்கா?மத்தவங்களுக்கு இல்லையா??

எய்த‌வ‌ன் இருக்க‌ அம்பை நொந்து ப‌ய‌னில்லை!

குற்ற‌ம் புரிந்த‌வ‌ர்க‌ள் த‌ண்டிக்க‌ப்ப‌ட‌ வேண்டிய‌வ‌ர்கள், அது யாராக‌ இருப்பினும்!!

அதற்கு முன்பாக, நாம் திருந்த வேண்டியவர்கள்!!!

இது எனக்கும் பொருந்தும். சுய பரிசோதனைக்கான‌ தருணம் இது!

படிச்சதுங் கேட்டதும்!



வேலக்காரப் பெண் வந்தாள்,
வளைந்து, நிமிர்ந்து, குனிந்து,
பெருக்கிப் போனாள்;
அறை சுத்தமாச்சு!
மனம் குப்பையாச்சு!!


‍‍---அற்பதுகளில் கணையாழியில் படித்ததாக வரதராசன் ஐயா அவர்கள்.

நான் ஒரு நாலஞ்சு வாட்டி இதைக் கேட்டு இருப்பேன். நொம்ப நல்லா இருக்கு. நீங்களும் ஒருக்கா கேட்டுப் பாருங்க. ஏற்கனவே கேட்டு இருந்தா, மறுக்காவும் பாருங்க.



11/12/2008

வக்கணையாப் பேசுற நீ?!

அன்பர்களே வணக்கம்! நாம சின்ன வயசுல, திண்ணையில, ஆட்டாங் கல்லுகிட்ட, நல்ல தண்ணிக் கெணத்துகிட்டன்னு பொம்பளைங்க ஒன்னு கூடிப் பேசுற பக்கம் போயி ஒன்னுந் தெரியாத சின்னவனாட்டம், அவிங்க பழம பேசுறதக் கேக்குறது உண்டு. நொம்ப சுவராசியமா இருக்கும்.

"வக்கத்தவ வக்கணையாப் பேச வந்துட்டா சிறுக்கி!" ன்னு சொல்வாங்க. "அவன் ஒரு துப்புக் கெட்டவன்!" ன்னு சொல்வாங்க. "என்ன ஒரு சாமார்த்தியம், வாங்கிட்டே வந்திட்டாளே?!"ன்னு பெரு மூச்சு விடுவாங்க. "ஓகோ! நான் நாதியத்தவன்னு நெனச்சிட்டாளா, அவ?"ன்னு சீறிப் பாய்வாங்க. "பசப்புறதப் பாரு!"ன்னு சிறு மூச்சு விடுவாங்க.

நான் இந்தப் பழமைகெல்லாங் கேட்டுப் பல வருசம் ஆச்சு போங்க. ஊர்ல இன்னமும் இப்படியெல்லாம் பேசிட்டு இருக்காங்ளாங்றதே சந்தேகந்தான். அப்புறம் பாருங்க, அதுகளுக்கான பொழக்கமும் மாறிப் போச்சுங்றது என்னோட தாழ்மையான எண்ணம். சரி, அந்தப் பழமைகளப் பத்தி எனக்குத் தெரிஞ்சதை இப்பப் பாப்பமா?! சொல்லுறதுல எதனா மாத்தம் இருந்தாலும் சொல்லுங்க.

வக்கு(வழிமுறை): செய்யுறதுக்கு உண்டான‌ வழிமுறை தெரியாதவிங்கள, வக்கில்லாதவன்னு சொல்வாங்க.

வக்கணை: இதனோட பொழக்கம் இப்ப நல்லாவே மாறிப் போச்சு. இப்பெல்லாம் சாமார்த்தியமாப் பேசுறதை, வக்கணையாப் பேசுறதுன்னு பொழங்கறோம். ஒருத்தங்க மத்தவங்க கிட்டப் பேசும்போது குறை சொல்லியும், எதிர் மறையாவும் பேசினா அது வக்கணை. இந்த எடத்துல பழமொழி ஒன்னு ஞாபகம் வருது. கட்டுன ஊட்டுக்கு எட்டு வக்கணை!
அதாவது, புதுசாக் கட்டின வீட்டைப் பத்திப் பொறாமைல கொற சொல்லிப் பேசுறது.

சாமார்த்தியம் அப்படீன்னா, சமர்த்தாப் பேசி காரியம் சாதிக்குறது. ஈழத்துல பொண்ணுக பெரிய மனுசி ஆனதை சாமத்தியம்னு சொல்வாங்க. பூப்புனித நீராட்டு விழாவைச் சாமத்திய சடங்குன்னு சொல்வாங்க.

துப்பு: இதுக்கு நெற‌ய‌ அர்த்த‌ம் இருக்கு. துப்புற‌து ஒன்னு. ம‌ர்ம‌ம் ப‌த்தின‌ த‌கவ‌லை துப்புன்னு சொல்வோம். திருடு போன‌ வ‌ண்டிய‌ப் ப‌த்தி துப்பு ஒன்னு கெட‌ச்சிருக்கு. அப்புற‌ம், துப்புங்ற‌துக்கு உண‌வுங்ற‌ அர்த்த‌மும் இருக்கு. ஆக‌, துப்பு கெட்ட‌வன், துப்பு இல்லாதவன்னு சொன்னா, ஒரு வேளைச் சாப்பாட்டுக்குக் கூட‌ வ‌ழியில்லாத‌வ‌ன்னு இடிச்சு சொல்லுற‌து.

சரிங்க, மத்ததை (நாதி, பசப்பு, பெரு மூச்சு, சிறு மூச்சு) எல்லாம் நாளைக்குப் பாப்போம். இப்ப நீங்க போயி வக்கணையாப் பின்னூட்டம் போடலாம். சாமார்த்தியமாவும் பின்னூட்டம் போடலாம். எப்படி வேணாலும் போடுங்க. ஆனா அந்த ஓட்டை மட்டும் நல்லபடியாப் போட்டுட்டு, அப்புறமா பின்னூட்டம் போடுங்க.

குப்பைல கெடந்தாலும், குன்றிமணி நெறம் போயிருமா?

11/11/2008

காதல் அம்பு தைக்குமா?!

இளகிய மனம் கொண்டவர்கள், இந்த காணொளியைப் பார்க்க வேண்டாம்!

மென் பொருட்களில் என் பொருட்கள்!

நம்மூட்டுத் திண்ணைக்கு வாரவிங்க, வராதவிங்க எல்லார்த்துக்கும் வணக்கம். பதிவுக்குப் பதிவு எசப் பாட்டு பாடுற அண்ணன் மகேசு அவிங்களுக்கு இன்னும் கெளரவப் படுத்த வேண்டியது ஒன்னு இருக்கு. அதாங்க, நம்ப திரைப்பட அனுபவங்களைப் பத்தி எழுதணுமாம். அதுக்கு முன்னாடி அண்ணன் அவிங்களத் தொடர்ந்து, மறுமொழியர்த் திலகம் மலைக் கோட்டையார் அவிங்களப் படுத்துறதுக்கு ஒன்னு. இல்லங்க, கெளரவப் படுத்துறதுக்கு ஒன்னுன்னு சொல்ல வந்தேன். ஏன்னா, அவருதான் இந்தப் பதிவு போடச் சொல்லி கொக்கி போட்டது.

கோடம்பாக்கத்துல ஓடாத படங்களை எல்லாம் வடிவேலு அண்ணன் ஓட்டுறார் இல்ல?! அது மாதர, எங்க பதிவுகளை எல்லாம் செல்லுபடி பண்ணுறதுல இவருதான் நொம்ப முக்கியமானவரு. ச்சும்மா சொல்லக் கூடாது, சங்க்கடமே இல்லாம மறு மொழிகளை வாரி வழங்குவாரு. நொம்ப நன்றிங்க மலைக்கோட்டை!

நாம இவரை நாடோடின்னு எல்லாம் சொல்லி, மதிப்புக் கொறச்சலாப் பேசறது இல்ல பாருங்க. அன்பா, ஊர்மாறின்னு தான் சொல்லுறது. வார நாள்ல ஒரு நாட்ல இருக்காரு. வாரக் கடைசில ஒரு நாட்ல இருக்காருன்னா பாருங்க. ஆனாத் தங்கமான மனுசன். (இப்படிச் சொல்லலைன்னா கோவிச்சுக்குவாரு!) வலைக்குள்ள வந்த ஒடனே, எல்லா ஊட்டுக்கும் சரி சமமாப் போய்ட்டு வருவாரு. ஒரு நாளும் ஒரு ஊட்டுக்குப் போய்ட்டு, இன்னொரு ஊட்டுக்குப் போகாம வந்தது இல்ல. ஆனா, தன்னோட ஊட்டை மட்டும் குப்பை மாதர வெச்சி இருக்காரு. நேத்து அவரூட்டுத் திண்ணைக்குப் போனம் பாருங்க, கசகசன்னு என்னமோ ஒன்னு போட்டுத் தாக்கிடுச்சு. அண்ணா சித்த உங்க ஊட்டையும் பாருங்க. சரி, இனி விபரத்துக்கு வருவோம்,

Amaya software: வலையகப் பக்கங்களை வடிக்க.

WordWeb Pro: ம‌கேசு அண்ண‌ன் சொல்லுற‌ ஆங்கில‌ வார்த்தைக‌ளுக்கு அர்த்த‌ம் பாக்க‌.

Primopdf: ந‌ம்ம‌ எழுத‌ற‌ ப‌திவுக‌ளை ப‌த‌மா(pdf) ப‌துக்கி வைக்க‌.

ம‌த்த‌தெல்லாம், நீங்க‌ எல்லாம் பொழ‌ங்குற‌து தான். அதுக‌ள‌ச் சொல்லி உங்க‌ நேர‌த்த‌ எதுக்கு வீண‌டிக்கோனும்? பொழ‌ச்சிப் போங்க‌!

கொக்கி:

ஒருத்த‌ர் ரெண்டு பேர்த்த‌ச் சொல்லி, ம‌த்த‌வ‌ங்க‌ள‌ விடுற‌துக்கு ம‌ன‌சு வ‌ர‌ல‌. யாருக்கு, எழுத‌ற‌துக்கு ஒன்னும் கெடைக்க‌லையோ, அவிங்க‌ தாராள‌மா கொக்கியில‌ மாட்டுப் ப‌டுங்க‌. பொழ‌ங்குற‌ மெனபொருள் சாமானைப் ப‌த்தி எழுதுங்க‌.


நடந்தா நாடெல்லாம் ஒறவு!

11/10/2008

எலி வ‌ளையானாலும் த‌னி வ‌ளை! புலிக‌ளுக்கு?


புலிகள் இருந்த‌
இடத்துல‌
பூனைகளா?
பெருசாச்
சொல்லுறாங்க‌
தேசியம்!!
ஆனா மறந்துட்டாங்க‌
அது நம்பநாட்டு
தேசிய விலங்கு!!!

தேடித்தான்
அழிப்பாங்க‌
புலிக‌ளை!
பட்டாப்
போடுவாங்க‌
காடுக‌ளை!!
அங்க‌தான்
க‌ட்டுவாங்க‌
வீடுக‌ளை!!!

எலிவ‌ளை
யானாலும்
த‌னிவ‌ளை!
அதுகேட்டாக்க‌
பிடிப‌டுது
குர‌ல்வ‌ளை!!
நாமெல்லாம்
பாக்க‌த்த‌ட்டுது
இன‌த்த‌ளை!!!


வ‌ண‌க்க‌ம்! நாங்க‌ சிறு வ‌ய‌சுல‌ இருக்கும் போது, எங்க‌ ஊர்ப் பக்க‌த்துல‌ இருக்கும் கோட‌ந்தூர் மாரியாத்தா கோயிலுக்குப் போவோம். ம‌லைக‌ளுக்கு உள்ள‌ ந‌ட‌ந்து போக‌ணும். ஒத்தை அடிப் பாதைதான். ப‌ய‌மா இருக்கும். அங்க‌ புலி ந‌ட‌மாட்ட‌ம் நிறைய‌ இருக்கும்னு சொல்வாங்க. கோயிலுக்கும், மத்த மத்த காரியத்துக்காகவும் கூட்ட‌ம் நெற‌ய‌ வ‌ர‌ ஆர‌ம்பிச்ச‌து, மெதுவா அதுகெல்லாம் ஆனை ம‌லைக் காட்டுக்கு ஓடிப் போய்ட்ட‌தாச் சொல்லுவாங்க‌. கிட்ட‌டியில‌ கூட‌, ஆனை ம‌லையில‌ அதுக‌ள‌ப் பாதுகாக்க‌ கூடுத‌ல் க‌வ‌ன‌ஞ் செலுத்த நடவடிக்கை எடுக்குறதாப் ப‌டிச்ச‌ ஞாப‌க‌ம். கோய‌ம்ப‌த்தூர் மாவ‌ட்ட‌த்துல‌ இன்னும் நிற‌ய‌ புலிக‌ள், ச‌த்திய‌ம‌ங்க‌ல‌ம், ஆனைம‌லை, ப‌க்க‌த்துல‌ முதும‌லைல‌ எல்லாம் இருக்குற‌தாச் சொல்லுறாங்க‌.

இந்தியா விடுத‌லை ஆன‌ப்ப‌ 40000 புலிக‌ இருந்த‌தாம். இப்ப‌ வெறும் 1500 தான் இருக்காம். அதுக‌ளை அழிப்பாங்க‌. புலிக‌ளே இல்லையாச்சேன்னு, அதுக‌ இருந்த இடங்களையும் அழிப்பாங்க‌. அப்புற‌ம் இன‌மும் போயி, இட‌ங்க‌ளும் போயி, அடுத்த‌ த‌லைமுறைக்கு எதுவும் இல்லாம‌த்தான் போகும். ஆக‌வே புலிக‌ளை வேட்டையாடுற‌தை நிறுத்த‌ணும், அதுக‌ பாதுகாக்க‌ப்ப‌ட‌ வேணும்.


"மக்கள் இன்றைக்கு வரை புலியை ஒரு பயங்கரமான விலங்கு என்று சொல்லி வருகிறார்கள். உயிரியல் ரீதியான ஆய்வாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், அதை `bio-indicator' என்று குறிப்பிடுகிறார்கள். புலி இருக்கும் காட்டை ஒரு வளமான காடு என்று தைரியமாக அறிவித்துவிடலாம். ஆனால் அந்த ஆனைமலைக்கும், முதுமலைக்கும் இப்போது ஒரு ஆபத்து வந்திருக்கிறது. இது வேட்டைக்காரர்களால் வரும் ஆபத்துமட்டுமல்ல, வேறு சிலராலும் ஆபத்துகள் வருகின்றன. வனவிலங்குகளை மையமாக வைத்து உலக அளவில் பெரிய கள்ளச்சந்தையே செயல்பட்டு வருகிறது."

மேல‌திக‌த் த‌க‌வ‌ல்க‌ளுக்கு!



இருக்குற‌த‌ விட்டுபிட்டு, ஐயோன்னா வ‌ருமா? ஆத்தான்னா வ‌ருமா??

11/09/2008

"ஏழஞ்சு மை" யன்னான்னா என்ன?

வணக்கம். வாரக் கடைசி நாளுங்றபடியால் கணனியில யிருந்து எட்ட இருப்பமெண்டு, காணொளியில முதல் மரியாதை படம் பாத்துக் கொண்டு இருந்தன். நான் இந்தப் படத்தைக் கணதடவை கண்டு இருக்குறன். ஆனாலும் நீர் எத்தினி தரங்கண்டாலும் அலுப்பு அடிக்காதென்ன, அப்பிடி ஒரு படமென்ன.

படத்தக் காணைக்குள்ள மனசு சரியான விசர் பிடிச்சதென்ன. நான் படத்தோட கதையச் சொல்லலே. இந்த இளைய ராசாவும், வைர முத்துவும், பாரதி ராசாவும், செலுவ ராசும் ஏன் பிரிஞ்சிட்டினம்? அவங்கள்டப்பா ஒன்டா இருந்திருந்தா கண படங்கள், நல்ல படங்கள் வந்திருக்குமென்ன. அவிங்கள் இதுக்கும் அடி மட்டத்துல இருந்து வந்தவிங்க என்ன. ஏன் காசு வந்த பொறகு, இப்பிடி ஆனவிகளெண்டு தெரியலை. தமிழண்ட பிரச்சினையே இதுதானென்ன. அவிகளுக்கு பொறுப்பு இருக்கு. இனியெண்டாலாவது ஒன்டு சேந்து படமெடுக்க வேணும். நல்லூர்க் கந்தன் அதுக்கு வழி செய்ய வேணும். என்ன‌ நாஞ்சொல்லுறது சரிதானே?

அந்தப் படம் பாக்கைக்குள்ள எனக்கு ஊர் ஞாபகம் வந்திட்டு என்ன. அந்த வடிவுக்கரசி கதைக்க றெதெல்லாம்டப்பா, ஒரே பேய்க் கதையென்ன. நம்பட ஊர்ல எல்லாம் அப்படித்தான கதைக்குறது. அதுவும் பொம்பளைப் புள்ளைக கொழுவல் எண்டால், நமக்கு ஒரேப் பகிடிதான். பொடியங்க ஏசுறது எப்பிடி யெண்டு தெரியுமே உமக்கு? ஏழஞ்சு மையன்னா எண்டு சொல்லுவினம். ஒன்னே முக்காத் தையன்னா எண்டு சொல்லுவினம். இதெல்லாம் உமக்கு விளங்குதே?! இல்லியே?! சொல்லுறன், கேளுங்கோ!


123456789101001000

ஏழுக்கு தமிழ் எண் வந்து . அஞ்சுக்கு ரு. அதத்தான், எருமையண்டு ஏசுறதுக்கு பதிலா ஏழஞ்சு மையன்னா. ஒண்டாம் எண்ணுக்கு தமிழ் எழுத்தெண் . முக்கால் 3/4 பின்னத்த தமிழ் எழுத்தில ழு மாதிரி இருக்குற எழுத்தில எழுதிவினம். ஆக, கழுதையிண்டு ஏசுறதை ஒன்னே முக்காத் தையன்னா எண்டு ஏசுவினம். இப்ப விளங்கிட்டே?!


குத்து வயித்துக்காரன் தூங்கினாலும்,
குறை வயித்துக்காரன் தூங்க மாட்டான்!


காணொளி: ‍‍ Television
காணைக்குள்ள: ‍ காண்கையில்
விசர்: ‍‍கவலை/வெறி
ஒன்டா: ‍‍ ஒன்றாக‌
கொழுவ‌ல்: ச‌ண்டை/ஊட‌ல்
ப‌கிடி: வேடிக்கை


வாக்களியுங்க மக்களே, வாக்களியுங்க!

11/08/2008

புலிகள் பற்றிய இந்த விபரம் உண்மையா?

அன்பர்களே வணக்கம்! இன்னைக்கு கிடைச்ச கால அவகாசத்துல, நம்ம பெரியவங்க என்ன சொல்லி வெச்சி இருக்குறாங்கங்ற ஒரு ஆர்வத்துல, புறநானூறு படிச்சிட்டு இருந்தேன். அதுல ஒரு விசயம் ரொம்ப ஆச்சர்யமா இருந்த்துச்சு.

அதாவது வேட்டைக்குப் போய் உணவு தேடும் போது, இடது பக்கம் விழற உணவைத் தொடாதாம். அதுக்கு பதிலா, நேரமும் சிரமும் அதிகமானாலும் வலது பக்கம் விழறதையே சாப்பிடுமாம் புலி இனம். இது சரியான தகவலா?

கடுங்கண் கேழல் இடம்பட வீழ்ந்தென
அன்று அவண் உண்ணா தாகி, வழிநாள்
பெருமலை விடரகம் புலம்ப, வேட்டெழுந்து
இருங்களிற்று ஒருத்தல் நல்வலம் படுக்கும்!


மேல‌ சொன்ன‌ பாட்டு, சோழ‌ன் ந‌ல்லுருத்திர‌ன் பாடின‌து. புற‌நானூறுல‌ 190வ‌து பாட்டு இதுங்க‌. ச‌ரின்னு இது ப‌த்தி மேல‌திக‌த் த‌க‌வ‌ல் எடுக்க‌லாம்னு வ‌லையில‌ மேயும் போது அக‌ப்ப‌ட்ட‌து என்ன‌ன்னா, இதே க‌ருத்தை வேற‌ வேற‌ புல‌வ‌ர்க‌ளும் அக‌நானூறு, ந‌ற்றினைன்னு பாடி வெச்சு இருக்காங்க‌ளாம். பெரிய‌வ‌ங்க‌ சொல்லி இருந்தா, அதுல‌ ஏதாவ‌து விச‌ய‌ம் இருக்கும். உங்க‌ள்ல‌ யாருக்காவ‌து மேல‌திக‌த் த‌க‌வ‌ல் தெரிஞ்சா சொல்லுங்க‌.

கதம்பம்!

வணக்கம்! நேற்றைய பதிவைப் பாத்த நம்ம வாசகர்கள், மேலதிகமா சில பாடல்களைத் தெரியப்படுத்தி இருக்காங்க. இதோ, அதுக உங்க கவனத்திற்காக:


தாப்பூ தாமரைப்பூ

தாப்பூ தாமரைப்பூ
தாயார் குடுத்த செம்பகப்பூ
பூ, பூ புளியம்பூ
பொன்னாவரத் தாழம்பூ
அம்மா குத்து
அப்பா குத்து
புள்ளையார் குத்து
புடிச்சுக்கோ குத்து!

பூ, பூ புளியம்பூ

பூ, பூ புளியம்பூ
பொட்டில வெச்சா தாழம்பூ
தாழம்பூவ ரெண்டாக்கி
தங்கச்சி கையில மூணாக்கி
சித்தாத்தா அடுப்புல
கத்தரிக்கா வேகல!
மாமா வர ஜோருல,
மல்லிகைப் பூ பூக்கல!!

டிக் டிக்

டிக் டிக்
யாரது?
திருடன்...

என்ன வேண்டும்?
நகை வேண்டும்...

என்ன நகை?
கலர் நகை

என்ன கலர்?
பச்சைக் கலர்

என்ன பச்சை?
கிளி பச்சை

என்ன கிளி?
பசுங்கிளி

என்ன பசு?
மாடு பசு

என்ன மாடு?
எருமை மாடு

என்ன எருமை?
காட்டெருமை

என்ன காடு?
பூங் காடு

என்ன பூ?
மல்லி பூ

என்ன மல்லி?
குண்டு மல்லி

என்ன குண்டு?
கோலி குண்டு

என்ன கோழி?
ஆண் கோழி

என்ன ஆன்?
ஸ்விச் ஆன்

என்ன ஸ்விச்?
ஃபேன் ஸ்விச்

என்ன ஃபேன்?
உஷா ஃபேன்

என்ன உஷா?
பீ.டி உஷா

என்ன பீ.டி?
ரன்னிங் பீ.டி

என்ன ரன்னிங்?
ஃபாஸ்ட் ரன்னிங்

என்ன ஃபாஸ்ட்?
ப்ரேக் ஃபாஸ்ட்

என்ன ப்ரேக்?
லஞ்ச் ப்ரேக்!


மேற்கண்ட பாடல்களைத் தெரியப் படுத்திய, ஷார்லட் நவசக்தி தமிழ்ப் பண்பாட்டுக் குழுவைச் சார்ந்த செந்தாமரை, ஸ்ரீராம், அமிர்தவர்ஷினி அம்மா ஆகியோருக்கு மிக்க நன்றி!


காணாததை, கண்டு தெரிஞ்சுக்க!
தெரியாத‌தை, கேட்டுத் தெரிஞ்சுக்க!!

11/07/2008

அம்மா!

அன்பர்களே வணக்கம்! வேடிக்கையா எழுத ஆரம்பிச்சோம். அப்புறம் பாருங்க, 1880ல எள்ளுத் தாத்தா எழுதி வைத்த வைத்தியம்னு ஒரு தொடர் ஆரம்பிச்சோம். அப்புறம் கவி காளமேகத்தின் தாக்கம்ங்ற தொடரை ஆரம்பிச்சு, சித்திரகவிப் பாடல்கள (மிறைப்பா) பாத்துட்டு வர்றோம். அண்ணன் மகேசு எடுத்துக் குடுத்த தலைப்பு, கனவில் கவி காளமேகம்ங்றதுல ஒரு தொடர். இது பத்தாதுன்னு, சக பதிவர்களோட தொடர்பதிவுக் கொக்கிகள். அதுல ஒன்னு ரெண்டுக்கு இனியும் ஒலை வெக்கல, அது வேற விசயம். இந்த லடசணத்துல‌, கெடக்கறது எல்லாம் கெடக்கட்டும், கெழவியத் தூக்கி மனையில வ‌ய்யிங்ற கதையா, சமீபத்துல தொடங்கின ஒரு தொடர், நம்ம பக்கத்தோட வாசகர்களுக்கான வாசகர் விருப்பம். இதுலயும் நம்ப மருத்துவர் சாரதி அவிங்களோட விருப்பமும், அண்ணன் குடுகுடுப்பை அவிங்களோட விருப்பமும் பூர்த்தி செய்யப்படலை இன்னும்.

ஆமாங்க, இன்னைக்கு நாம பாக்கப் போறது அமிர்தவர்ஷினி அம்மா அவிங்களுக்கான வாசகர் விருப்பம். இவங்களுக்கு கிராமியம், பழைய விசயங்கள்னா நொம்பப் புடிக்கும் போல இருக்கு. அதான், நாம சின்ன வயசுல பாடின பாட்டு. யாரு எழுதினதுன்னு எல்லாம் கேக்கப் படாது. அது யாருக்குத் தெரியும்?!



காடு காடு!

என்ன காடு?
ஆற்காடு!

என்ன ஆறு?
பாலாறு!

என்ன பால்?
கள்ளிப் பால்!

என்ன கள்ளி?
இலைக் கள்ளி!

என்ன இலை?
வாழை இலை!

என்ன வாழை?
கற்பூர வாழை!

என்ன கற்பூரம்?
இரசக் கற்பூரம்!

என்ன இரசம்?
மொளகு இரசம்!

என்ன மொளகு?
வால் மொளகு!

என்ன வால்?
நாய் வால்!

என்ன நாய்?
மர நாய்!

என்ன மரம்?
மா மரம்!

என்ன மா?
அம்மா!


அப்பன் இல்லன்னா தொழில் மந்தம்!
அம்மா இல்லன்னா வாழ்க்கையே மந்தம்!!
_____________________________________________________

இந்த பதிவைப் பாத்த, எங்க‌ நவசக்தி தமிழ் பண்பாட்டுக் குழுவைச் சேந்த செந்தாமரை அவிங்க அனுப்பின மின்னஞ்சல்:

நாங்க சின்ன வயசில வேற மாறி இந்த பாட்டு பாடுவோம். ரெண்டு ரெண்டு பேரா கை தட்டி இந்த பாட்டு பாடுவோம்(கேள்வி கேட்போம்).

நீ எங்கே போனாய்?
ஊருக்கு போனேன்.

எந்த வூர்?
மயிலாப்பூர்.

எந்த மயில்?
காட்டு மயில்.

என்ன காடு?
ஆற் காடு.

என்ன ஆறு?
பால் ஆறு.

என்ன பால்?
கள்ளிப் பால்.

என்ன கள்ளி?
இலைக் கள்ளி.

என்ன இலை?
வாழை இலை.

என்ன வாழை?
கற்பூர வாழை.

என்ன கற்பூரம்?
ரசக கற்பூரம்.

என்ன ரசம்?
மிளகு ரசம்.

என்ன மிளகு?
வால் மிளகு.

என்ன வால்?
நாய் வால்.

என்ன நாய்?
மர நாய்.

என்ன மரம்?
பலா மரம்.

என்ன பலா?
வேர்ப் பலா.

என்ன வேர்?
வெட்டி வேர்.

என்ன வெட்டி?
பனை வெட்டி.

என்ன பனை?
தாளிப் பனை.

என்ன தாளி?
விருந்தாளி.

என்ன விருந்து?
நிலா விருந்து.

என்ன நிலா?
பிறை நிலா.

என்ன பிறை?
நெற்றிப் பிறை.

என்ன நெற்றி?
பெண் நெற்றி.

என்ன பெண்?
மணப் பெண்.

என்ன மனம்?
பூ மனம்.

என்ன பூ?
மாம்பூ.

என்ன மா?
அம்மா!


இன்னும் இருக்கு இதன் தொடர்ச்சி. எனக்கு ஞாபகம் இருக்குற வரைக்கும் எழுதறேன்.

என்ன அம்மா?
டீச்சர் அம்மா.

என்ன டீச்சர்?
கணக்கு டீச்சர்.

என்ன கணக்கு?
வீட்டு கணக்கு.

என்ன வீடு?
மாடி வீடு.

என்ன மாடி?
மொட்டை மாடி.

என்ன மொட்டை?
திருப்பதி மொட்டை.

அப்பாடி, இவ்வளவுதான் ஞாபகம் வருது. அதுக்கு அப்பறம் மறந்துபோச்சு.

11/06/2008

சின்னம்மினியின் யோகா!






கனவில் கவி காளமேகம் - 8

நம்ம கனவுல வந்துட்டு இருந்த கவி காளமேகம், ரெண்டு வாரமா வரலை பாருங்க. என்ன காரணமா இருக்கும்ன்னு நினைச்சுகிட்டே படுத்தேன். குறிப்பு அறிஞ்சு, நேத்து நம்ம கனவுல வந்தாருங்க. இதுவரைக்கும் நம்ம கனவுல வந்து அவரு சொன்னதைப் படிங்க. படிச்சுட்டு, அவரு இன்னைக்கு என்ன சொன்னாருன்னு மேல படிங்க!

"அப்பிச்சி என்ன நொம்ப நாளாக் காணோம்?"

"இல்லடா பேராண்டி, நீயும் நாலுங் க‌ல‌ந்து எழுத‌ ஆர‌ம்பிச்சுட்டே. கூட‌வே, நீ இருக்குற‌ பக்க‌ம் தேர்த‌லாமாவே?"

"ஆமாங்க‌ அப்பிச்சி. யாரு வ‌ந்தா என‌க்கென்ன‌? என‌க்கு எழுத‌ற‌க்கு நீங்க‌தான‌ எத‌னாச்சும் த‌ந்து ஆவ‌ணும். என்ன‌ சொல்லுறீங்க‌?"

"அட‌, என்ன‌டா ஆச்சு ஒன‌க்கு? நொம்ப‌த் தெளிவாப் பேசுறியே இன்னைக்கு??"

"அது கெட‌க்க‌ட்டும், நீங்க‌ உங்க‌ பினாத்த‌லை ஆர‌ம்பிங்க‌!"

"டேய், பெரிய‌வ‌ங்க‌ளை அப்ப‌டி ஒன்னும் சொல்ல‌ப் ப‌டாதுடா! ச‌ரி, இந்த‌ அக்கு வேரு(று) ஆணி வேரா(றா) அல‌சுற‌துன்னு சொல்லுறாங்க‌ளே, அப்பிடின்னா என்ன‌டா பேராண்டி?"

"ஆணி வேருன்னா தெரியும். பிர‌தான‌மா நெல‌த்துல‌ இருக்குற‌ வேர். ஆக‌, சின்ன‌ச் சின்ன‌ ப‌க்க‌ வேர்க‌ளையும், பிர‌தான‌மா இருக்குற‌ ஆணி வேர‌யும் அல‌சுற‌ மாதிரிங்ற‌ அர்த்த‌த்துல‌ இதைப் பொழ‌ங்க‌லாம்! நாஞ் சொல்லுற‌து ச‌ரிதான‌ அப்பிச்சி?"

"ந‌ல்லாத்தான் யூக‌ம் செய்யுற‌டா, ஆனா அது இல்ல‌!"

"என‌க்குத் தெரியுந் தாத்தா, நீங்க‌ இந்த‌ மாதிரி எதனாச் சொல்லி க‌ழுத்த‌றுப்பீங்க‌ன்னு. ச‌ரி சொல்லுங்க‌, நாந்தூங்க‌ணும்!"

"ச‌லிச்சுக்காத‌டா பேராண்டி. அக்க‌க்காப் பிரிக்கிற‌துன்னு சொல்லுறோம். அப்பிடின்னா, பாக‌ங்க‌ளைத் துண்டு துண்டாப் பிரிக்கிற‌துன்னு அர்த்த‌ம். ஆக‌, அக்குன்னா பாக‌ம், அல்ல‌து ஒரு துண்டுன்னு அர்த்த‌ம். உங்க‌ கால‌த்துல‌தான‌டா ப‌சை வ‌ந்துடுச்சு. ப‌சையில‌ ஒட்டி வ‌லுவில்லாத‌ சாமான்க‌ள‌ உண்டு ப‌ண்ணி ச‌ன‌ங்க‌ த‌லையில‌ மொள‌கா. எங்க‌ கால‌த்துல‌ எந்த‌ ஒரு சாமானும், துண்டுக‌ளை வெச்சி ஆணிக‌ளால‌ வ‌லுவாப் பூட்டி இருப்போம். அப்ப‌ அந்த‌ ஆணிக‌ளையும் அக்குக‌ளையும் த‌னித்த‌னியா பிரிக்குற‌த, அக்கு வேறா ஆணி வேறாப் பிரிக்கிற‌துன்னு சொல்லுவோம்டா! இதையே, ந‌ம்ப‌ ஊரு, கோய‌ம்ப‌த்தூர்ல‌ அச்சு வேற‌யா ஆணி வேற‌யாப் பிரிச்சுடுவேன்னும் சொல்லுவாங்க‌டா பேராண்டி. ச‌ரி, இன்னைக்கு இது போதும். நீ தூங்கு, நான் வாரேன்!"

இன்னைக்கு இதாங்க சொன்னாரு! அடுத்த தடவை என்ன சொல்லப் போறாரோ? வந்து, மனுசன் கேள்வி வேற கேப்பாரு. சும்மா, சொல்லிட்டுப் போகலாமில்ல?? எதுக்கும், மறுபடியும் வருவாருன்னு நம்புவோம்.


(......கனவுல இன்னும் வருவார்......)

11/05/2008

கவி காளமேகத்தின் தாக்கம் - 10

வணக்கம்! ஒரு ரெண்டு மூணு வாரமா நாம தொடர்ந்து எழுதிட்டு வர்ற "கவி காளமேகத்தின் தாக்கம்'ங்ற தொடர் பதிவு நின்னு போச்சு. கால அவகாசம் கிடைக்க மாட்டேங்குது வாழ்க்கைல. என்ன செய்ய? சரி விசயத்துக்கு வருவோம். எப்பவும் சொல்லுறதுதான், இதுக்கு முந்தைய பதிவுகளைப் படிச்சுட்டு, இதைப் படிச்சா மேலும் பயனுள்ளதா இருக்கும்ங்றது என்னோட தாழ்மையான எண்ணம். படிச்சிட்டீங்கன்னா மேல படியுங்க.

சித்திரக்கவி வகைல, நாம அடுத்து பாக்கப் போறது சுழிகுளம். சுழிகுளம்ங்றது ஒரு பாட்டை, வரிக்கு எட்டெழுத்தா நாலு வரி எழுதி, மேல இருந்து கீழ படிச்சாலும், கீழ இருந்து மேல படிச்சாலும் அதே அர்த்தத்துல வர்ற பாட்டு.

வழமையா, என்னோட மகளை வெச்சு பாட்டு எழுதுவேன். ஆனா, இன்னைக்கு ஒரு சரித்திர முக்கியத்துவமான நாள். அதாவது அடிமை இனமாய் இருந்து, தளைகளை ஒடச்சு எறிஞ்சு வல்லரசையே ஆட்சி புரியுற அளவுக்கு மனித நேயம் வளர்ந்த நாள். கடைக்கோடி மனுசனுக்கு மகனாப் பொறந்து, ஆதவனா ஒசந்து இருக்குற ஒபாமாவுக்கான பாட்டுதான் இன்றைய சுழிகுளப் பாட்டு.

காலமறி செயல்நீ
நேயமது கொள்நர்
முயல்வ துறுநர்
திருவழி ந்துமாயா!

பொருள்: காலமறிந்து செயல்பட்டு, மனித நேயம் கொண்டு, முயற்சிதனை உற்று, மாந்தனைய மக்களால் வழிமொழியப் பெற்று, ஆக்கம் கொண்டனையே!

11/04/2008

மனித நேயம் வென்றது!


மனித நேயம் வென்றது!
நிறம் இல்லை,
வன்மை இல்லை,
அழகு இல்லை,
நிதானம் இருந்தது;
நம்பிக்கை குடிகொண்டது!
வல்லரசுக்கு இராசா நீ!
வாழ்த்துகிறோம்!
மனிதம் வெல்லும்!!
வென்றது!!!

"அந்தலை சிந்தலை"க்கான விளக்கம்!

அன்பர்களே வணக்கம்! கால்மாடு தலைமாடுன்னா என்னன்னு கேட்டு பதிவு எழுதியிருந்தோம். நண்பர் அ.நம்பி அதுக்கு விளக்கம் குடுத்து இருந்தாரு. அவருக்கு நன்றி. மற்றும் திண்ணைக்கு வந்துட்டுப் போனவிங்களுக்கும் நன்றி!

மாட வீதிங்றோம். அப்படியின்னா அது மாடம் இருக்குற வீதியா? மாட சாமிங்றோம், அப்ப அவரு மாடத்துக்கு சாமியா?? மாட்டுப் பொண்ணுங்றோம், அப்ப அவ மாடு மாதிரியானவளா?? அது அப்படி இல்லையாம்ங்க. மாடுன்னா பக்கம்ங்றது அர்த்தமாம். ஆக, மாடவீதின்னா கோவில், அரண்மனைன்னு இருக்குற‌ சிறப்பான இடங்களுக்குப் பக்கத்துல இருக்குற வீதின்னு அர்த்தம். மாடசாமின்னா, பக்கத்தில் அருகில் கூடவே இருந்து காப்பாத்துற சாமி. மாட்டுப் பொண்ணுன்னா கூடவே பக்கத்துல இருக்குற பொண்ணு.

அந்த வகையில கால்மாடுன்னா, கால் இருக்குற பக்கம். தலை மாடுன்னா தலை இருக்குற பக்கம். எதிர் எதிரானதுகளை, அதையும் இதையும்னு ஒப்பிட்டுச் சொல்லும் போது தலையும் புரியலை, காலும் புரியலன்னு சொல்றோம். அதே மாதிரி தான், இந்தத் தலைமாடு கால்மாடு.

அந்தலை சிந்தலையும் அதே மாதிரிதாங்க. முரணான ரெண்டை, அல்லது இங்குட்டும் அங்குட்டும், மேல கீழன்னு ஒப்பிட்டுச் சொல்லுற இடத்துல பொழங்குற ஒன்னு. அந்துன்னா, விலகிப் போய் தற்காலிகமா மறையுற ஒன்னு, அல்லது மேல் நோக்கிப் போறது. சிந்துன்னா, கீழ் நோக்கிப் போற ஒன்னு. அதான், தண்ணி சிந்திடுச்சுங்றோம். பக்கவாட்டுல போறத உந்துதல்ங்றோம். ஆக, ஒன்னை இங்குமங்குமா அலைய விட்டு இம்சை பண்ணுறதை அந்தலை சிந்தலை ஆக்குறாங்கன்னு சொல்லுறோம். அதையே, அவன் கீழுக்கும் மேலுக்கும் பேசுறான்னும் சொல்லுறோம்.

இதுக்கு இனியொரு விளக்கமுஞ் சொல்லுறாங்க. அந்தலை, சந்தலைன்னு. அந்தின்னா சூரியன். சந்தின்னா சந்திரன். அதுகளைக் குறிப்பிட்டுச் சொல்லி இருப்பாங்ளோ? தெரியலையே!


கழுதை கோபம் கத்துனாத் தீரும்!
மனுசன் சந்தேகம் பேசினாத் தொலையும்!!

வாக்களியுங்க மக்களே, வாக்களியுங்க!

11/03/2008

குரங்கே, நன்றியுள்ளவரைச் சீண்டாதே!

வாக்களியுங்க மக்களே!

"அந்தலை சிந்தலை" ன்னா என்ன?

அன்பர்களே, வணக்கம்! வந்துட்டேன் மக்களே, இன்னைக்கும் ஒரு ஊர்ப் பேச்சோட வந்துட்டேன். ஆமுங்க, நாம பேச்சு வழக்குல சொல்லுறத அலசிகினு வர்றோம். பாருங்க, பேச்சு வழக்குல‌ "அந்தலை சிந்தலை ஆயிப் போச்சுடா"ங்றோம். "கால்மாடு தலைமாடு" தெரியாமப் பேசுறான் இவன்ங்றோம். ஆகவே நாம இன்னைக்கு அலசப் போறது "கால்மாடு தலைமாடு" "அந்தலை சிந்தலை" ன்னா என்ன?

நீங்க உங்க விளக்கத்தைப் பின்னூட்டமாப் போட்டுத் தாக்குங்க‌.... நான் என்னோடதை நாளைக்கு பதியுறேன்.

அத்திப் பூவ அறிஞ்சது யாரு? ஆந்தக் குஞ்சை பாத்தது யாரு??
ஆனாப் பதிவருங்க நாங்க அல்லாத்தையும் பாப்பம்ல?!

11/02/2008

போடுறானாம் கணக்கு...

நீங்க எல்லாம் இதை ஏற்கனவே பாத்து இருப்பீங்க.... இருந்தாலும் இன்னொருக்காப் பாருங்க.....




ஓட்டுப் போடுங்க மக்களே!

"கூமட்டை"ன்னா என்ன?

அன்பர்களே, வணக்கம்! நாம நேத்தைக்கு கூமட்டை, கோதாரி, இந்தாவுள, வெலக்காரி, வெள்ளனமே, கெழமெராவுங்ற தமிழ் வார்த்தைகளைச் சொல்லி, அதுக்கு வாசகர்களோட கருத்துக்களைக் கேட்டு இருந்தோம். அதன்படி கருத்துக்களைப் பதிவு செய்த அ. நம்பி ஐயா, நண்பர்கள் மோகன் கந்தசாமி, மகேசு, நசரேயன், வசந்தன், தூய தமிழன் எல்லார்த்துக்கும் நன்றி!

கூமுட்டை/கூமட்டை:

நான் கேள்விப்பட்டதுல ஒன்னு அ.நம்பி, மோகன் கந்தசாமி அவிங்க கூட ஒத்துப் போகுது. அது என்னன்னா, கூழ்முட்டை, கூழைமுட்டை என்பன ஒருபொருள் தரும் சொற்கள். அழுகிய முட்டை, கெட்டுப்போன முட்டை என்று பொருள்படும். `கூமுட்டை’ என்பது இச்சொற்களின் திரிபு; அழுகிய முட்டை எதற்கும் பயன்படாது; ஆகவே `கூழ்முட்டை போன்றவன்’ என்று `திட்ட’ இச்சொல் பயன்படுகிறது. அறிவில்லாதவன் என்பது பொதுப்பொருள்.

ரெண்டாவது, நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது கேட்டது. பொள்ளாச்சி வட்டத்துல இருக்குற‌ குண்டலப்பட்டி எல்லைக்கும், லட்சுமாபுர எல்லைக்குமா இருக்குற தென்னந் தோப்பு எங்கம்மாவிங்களோட பாட்டனார் வெண்குடை சுப்பையாவிங்களோட தோப்புதான். இப்ப நாங்கெல்லாம் ஊரைவிட்டு வெளியேறினதுககு அப்புறம், அது பல கை மாறிடுச்சு, அது வேற விசயம். நாம அங்கதான் பொழுதன்னைக்கும் கெடப்போம். மாசம் ஒரு வாட்டி தேங்காயெல்லாம் விழுத்தி, உரிச்சி வண்டியில போட்டு நல்லாம்பள்ளி சுங்கம், பொள்ளாச்சி சந்தைன்னு கொண்டுபோய் வித்துட்டு வருவாங்க.

அப்ப பாருங்க, வேலன் கடப்பாரைய தலைகீழா நட்டு மணிக்கு ஐநூறு காயெல்லாம் லாவகமா உரிச்சுருவாரு. டக் டக்னு மட்டைகளை உரிப்பாரு, ஒரு கை உரிக்கும், அடுத்த கை உரிச்ச காய வண்டில போடும். அப்பப்ப, ஒரு காய கீழ தூக்கி வீசுவாரு. என்ன வேலு, மட்டைய உரிச்சிட்டு, காய வீசுறியேன்னு கேட்டேன். அவர் சொன்னாரு அது கூமட்டைத் தேங்காய்ன்னு. நாம, அப்படின்னா என்ன? அது உனக்கெப்படித் தெரியும்ன்னு கேட்டோம். அவர் சொன்னதிலிருந்து நாம தெரிஞ்சிகிட்டது,

உரிச்சப்புறம் தேங்காய் கன‌மா இல்லைன்னா, அது கூகைங்ற பறவை காய் இளசா இருக்கும் போதே அதுல இருக்குற தண்ணிய உறிஞ்சிட்டதால, மிஞ்சி இருக்குற தண்ணிக்கு மட்டும் உள்சோறு வளந்த தேங்காய், கூமட்டைத் தேங்காய்ன்னு. அவரு ஒடச்சும் காமிச்சாரு, பாத்தா உள்புறம் கொஞ்சமா வெள்ளையாவும், மிச்சம் வெறும் ஓடுமாத்தான் தெரிஞ்சது. ஆக, அரை குறையா இருக்குற கூ(கை)மட்டைத் தேங்காய் போல இருக்குறவன கூமட்டைன்னு சொல்லுவம்ன்னும் சொன்னாரு குண்டலப்பட்டி வேலன்.


கோதாரி:

கோதாரிங்றது ஒருவிதமான நோய்தாங்க. அதனோட தன்மைகள் ஒவ்வொருத்தருக்கும் ஒரு மாதிரியாவும், அந்தக்கால (குசும்புப் பதிவர்களே, அது எந்தக் காலம்ன்னு எல்லாம் கேட்டு இம்சைதரக் கூடாது, சொல்லிட்டேன். அப்புறம் நான் அழுதுருவேன்!) மருத்துவர்களுக்கு, ஒரு புரியாத புதிராவும் இருந்துச்சாம்ங்க. அதனால, புரியாத விளங்கிக்க முடியாததை, கோதாரி கூட‌ ஒப்பிட்டு பேச ஆரம்பிச்சாங்க. அந்தக் கோதாரி தெரீலீங்கோ.... அந்தக் கோதாரி விளங்க மாட்டீங்துங்க... இப்படியெல்லாம் பேசுறது வழக்கம் ஆச்சு.

எனக்குத் தெரிஞ்ச வரைக்கும், தமிழ் நாட்டுல இப்ப இதனோட புழக்கம் கொறைவுதான். ஈழத் தமிழர்கள் நிறையப் பொழங்குறாங்க... ஆனா, அதுல கொஞ்சம் பேர்கிட்ட இது பிறழ்ந்து போச்சு. இந்த சொல்லை இழிவுக்கும், கெட்ட வார்த்தையாகவும் உபயோகிக்க ஆரம்பிச்சுட்டாங்க. (உ-ம்) கோதாரி அவன் வாறானில்ல. இந்த இடத்துல, புரிந்த கொள்ள முடியாத அவன் வரத் தயங்குறான்னு பொருள் படப் பேசியிருந்தா அது சரி. அதுவே, இழிவான அவன் வர மாட்டேனுங்றான்னு பொருள் கொண்டா அது பிறழ்ந்ததுங்றது என்னோட தாழ்மையான எண்ணம். காரணம், எனக்குப் பெருசுக சொன்னது சரியாப் படுது. ஆக‌வே உங்க‌ளை யாராவ‌து கோதாரின்னா, சொல்லுற‌வ‌ர் எந்த‌ அர்த்தத்துல‌ சொல்லுறார்னு பாருங்க‌. ஏன்னா, சொல்லுற‌வரே இந்த சொல்ல வெளங்காத‌ கோதாரியா இருக்க‌லாம்.
மகா ச‌ன‌ங்க‌ளே, என்ன‌க் கோதாரின்னு சொல்ல‌ ஆர‌ம்பிச்சு இருப்பீங்ளே?! இதுதான், த‌ன‌க்குத் தானே ஆப்புங்ற‌தா??

இந்தாவுள:

இந்தா புள்ளைங்ற‌து மாறி, இந்தாவுளன்னு பேச்சு வ‌ழ‌க்குல‌ ஆயிடுச்சு. அதுவே பின்னாடி, பெய‌ர்ச் சொல்லாவும் உருவெடுத்துச்சு. (உ-ம்): அந்த‌ இந்தாவுள‌ இன்னைக்கு வ‌ர‌லை.

வெலக்காரி:

விலைக்காரி என்னும் சொல்லின் திரிபு `வெலக்காரி’. கூடையில காய்கறி, சாமான்களை வெச்சு யாவரம் செய்யுற கூடைக்காரி.

வெள்ளனமே

வெள்ளமென வர்றதுதாங்க மருவி, வெள்ளன ஆயிடுச்சு. ஆமா, அந்தக் காலத்துல வெள்ளம் கண்ணிமைக்கும் நேரத்துல விரைவா வந்துச்சு. இப்ப, அப்படி வருதா? ஆக, சீக்கிரத்துலங்றது இங்க அர்த்தம். (உ-ம்): வெள்ளனப் போயிப் படு.

அடுத்த விளக்கம், வெள்ளனமே என்பது வெள்ளி (முளைக்கும்) கணமே அதாவது அதிகாலை மருவி, வெள்ளன ஆயிடுச்சு. ஆக, விடியற் காலைலயேங்றது இங்க அர்த்தம். (உ-ம்): வெள்ளனப் புறப்பட்டு வந்திரு! (நன்றி: மன்மதக்குஞ்சு)

கெழமைராவு:

அந்தக் காலத்துல சாமி கும்புடுறதுக்கோ ஊர் ஞாயம் பேசுறதுக்கோ, எதுக்கோ ஒரு விசயத்துக்காக வியாழக் கெழமை இராத்திரியில கூடுறத வழக்கமா வெச்சு இருந்தாங்க பெரியவங்க. நாளடைவுல வியாழக் கெழமை இரவுங்றதே மருவி, கெழமைராவு ஆயிப்போச்சுங்க. (உ-ம்): கெழமைராவு அன்னைக்கு, பாப்பாத்திக்கு சீரு கொண்டு போகோனும்.

கழுத்துப் பிடி குடுத்தாலும், எழுத்துப் பிடி குடுக்காதே!
ஆனா, நான் குடுத்துட்டனே?

வாக்கு அளியுங்க மக்களே!

11/01/2008

"கோதாரி"ன்னா என்ன?

வணக்கம் அன்பர்களே! கூமட்டை, கோதாரி, இந்தாவுள, வெலக்காரி, வெள்ளனமே, கெழமெராவுங்ற தமிழ் வார்த்தைகளை சொல்லக் கேட்டு இருப்பீங்க.... அந்த சூழ்நிலையில அதுக்கு ஒரு அர்த்தம் எடுத்துக்குவோம். ஆனா, தனியாக் கேட்டாக்க நமக்கு அர்த்தம், இல்லை அதனோட பின்னணி தெரியாம இருக்கும். காரணம், அதுக பொழக்கத்துல அதிகமா இல்லாமப் போனதுதான். சரி, உங்களுக்கு இதுகளைப் பத்தித் தெரிஞ்சாப் பின்னூட்டத்துல சொல்லுங்க.... நான் எனக்குத் தெரிஞ்சதை நாளைக்கு சொல்லுறேன்.


உண்ணாமத் தின்னாம அண்ணாமலைக்கு அரோகரா!

பதிவுக்கான விளக்கம் இப்ப இங்க...

ஆளுக்கொரு தேச‌மானோம்!

வ‌ண‌க்க‌ம்! அன்ப‌ர் ம‌லைக்கோட்டையார் த‌ன‌க்கும் ஒரு வாச‌க‌ர் விருப்ப‌ம் வேணும்னு சொன்ன‌துக்க‌ப்புற‌ம் சும்மா விட்டுட‌ முடியுமா? அதான், அவ‌ரை வெச்சே ஒரு பாட்டு.

ம‌லைக்கோட்டை பார‌த‌ க‌ன‌ இய‌ந்திர‌த் (BHEL) தொழிற்சாலைல‌ வேலை செய்யுற‌ அவ‌ரோட‌ ஆளு, ஒரு நாள் அந்த‌ ஆலை வ‌ளாக‌த்துல‌ அப்ப‌டியே ந‌ட‌ந்து போய்ட்டு இருக்குறாங்க‌. அப்ப‌டிப் போய்ட்டு இருக்கும் போது, அங்க‌ இருக்குற‌ ம‌ர‌ங்க‌ளைப் பாத்துட்டே போறாங்க‌. ஆனாப் பாருங்க‌ அந்த‌ வேப்ப‌ ம‌ர‌த்தைப் பாத்த‌ ஒட‌னே, ம‌ர‌த்த‌டியில‌ ஒன்னுமொன்னுமா இருந்த‌ நாளுக‌ ஞாப‌க‌த்துக்கு வ‌ருது. ஒரு ஏக்க‌ம். அந்த‌ ஏக்க‌த்துல‌யே, ஆப்பிரிக்கா போன‌ ம‌னுச‌ன‌ நென‌ச்சுப் பாடுறாங்க‌. அந்த‌ப் பாட்டுதான் இன்னைய‌ ப‌திவு.

மலைக்கோட்டை மாமனவன்
கண்டெடுத்தேன் குண்டு முத்து
குண்டுமுத்தைக் காணாமச்
சுண்டுதனே கண்ணீரை
வேப்பம்பூப் பூக்காதோ
விடிஞ்சா அது மலராதோ
நேத்து வந்த நேசருக்கு
நேரந் தெரியாதோ
வேம்பு தளுக்காதோ
வீசுங் கொம்பு ஓடாதோ
வீசுங் கொம்பு மேலிருந்து
வெள்ளை தெரியாதோ
ஈரெலுமிச்சம் பழம் போல‌
இருபேரும் ஒரு வ‌ய‌சு
யாரு செஞ்ச‌ தீவினையோ
ஆளுக்கொரு தேச‌மானோம்!

கழுதைப் புண்ணுக்கு தெருப்புழுதிதான் மருந்து!